வாரம் ஒரு பக்கம் (14)-வாழ்க்கைக்குத் தேவையான ஐந்து!

நீங்கள் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்வார்கள். ஒருவர், தனக்குப் பிடித்த உணவை ருசித்துச் சாப்பிடுவதால் என்பார்; இன்னொருவரோ நன்றாக உடுத்துவதால் மனதிற்கு சந்தோஷம் கிடைக்கிறது என்பார். பிறர் படும் துன்பத்தைப் பார்த்துக் கூட சந்தோஷப்படும் ஒரு சிலர் இருக்கும் இவ்வுலகில் எனக்குத் தெரிந்த சில விஷயங்களை ஐந்தைந்தாகப் பட்டியலிட்டுள்ளேன்.

வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க ஐந்து ஆலோசனைகள்:

1. மற்றவர் செய்யும் தவறுகளை மன்னித்தல்.

2. இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் எளிய வாழ்க்கை வாழ்தல்.

3. நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் கவலை கொள்ளாமல் இருத்தல்.

4. தினமும் குறைந்தது ஒருவருக்காவது உதவி செய்தல்.

5. அளவுகடந்த ஆசை கொள்ளாமல் இருத்தல்.

வாழ்வில் ஆரோக்கியத்துடன் இருக்க ஐந்து ஆலோசனைகள்:

1. தினமும் அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் உறக்கத்திலிருந்து மீண்டுவிடுதல்.

2. தினமும் குறைந்தபட்சம் இரு வேளை (காலையும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பும்) பல் துலக்குதல்.

3. தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நடத்தல்.

4. பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்த்துக் காய்கறி, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்.

5. இரவு முடிந்த வரை சீக்கிரமாகப் படுக்கைக்குச் செல்லுதல்.

வாழ்வில் பேணப்பட வேண்டிய ஐந்து:

1. மனதை ஒருமுகப்படுத்தி இறைதியானம் புரிதல்.

2. சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இன்முகத்துடன் முகமன் கூறல்.

3. யாரையும் துச்சமெனக் கருதாமல், பிறர் கூறும் கருத்துக்களையும் செவி கொடுத்துக் கேட்டல்.

4. எந்தச் செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன் அதனால் விளையும் பயன், கெடுதல் இரண்டைக் குறித்தும் சிந்தித்தல்.

5. முடிந்த வரை தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்து மௌனம் கடைப்பிடித்தல்.

வாழ்வில் தவிர்க்கப்பட வேண்டிய ஐந்து:

1. ஒருவர் இல்லாதபோது அவரின் தவறுகளை மற்றவரிடம் கூறுதல்.

2. அனுமதியின்றி மற்றவரின் வீடுகளினுள் நுழைதல்.

3. எதிர்பாலருடன் அவசியமின்றி உரையாடுதல்.

4. மற்றவர்களின் பொருட்களை அனுமதியின்றிப் பயன்படுத்துதல்.

5. தவறு செய்கிறார்கள் எனத் தெரிந்த பின்பும் அதை அவர்களுக்கு உணர்த்தாமல் அவர்களோடு நட்புக் கொண்டாடுதல்.

நன்றி: நண்பர் கே.எல்.என் அனுப்பிய இணையச் செய்தி.

About The Author