விரல் தொட்ட வானம் (9)-எப்போது

எப்போது

கொட்டும் மழையில்
நனையாதிருக்க
தலைக்கு மேலே
விரிக்கும் போதெல்லாம்
கேள்வியில்
நனைகிறது மனது
எல்லோரும்
ஒரே குடையின் கீழ்
வருவது எப்போது…?

சொர்க்கம்

என் உலகத்தில்
குயில்களுடன் பாடினேன்;
மயில்களுடன் ஆடினேன்;
ஓடை மீன்களுடன்
நீந்தி விளையாடினேன்;
பச்சைக் கீற்றுப் படலுக்குள்
தள்ளும் வரை
என்னோடு இருந்தது
சொர்க்கம்!

நாட்களை எண்ணிக்கொண்டு

அமரும் என நினைத்திருந்த
பட்டாம் பூச்சி
பறந்து விட்டது.
அமர்தலில் தரும் கிறுகிறுப்பை
அனுபவிக்க நினைத்த மலர்
தன் நிறத்தையும்
மணத்தையும்
காலவெளியில்
கரைத்துக் கொண்டிருக்கிறது
நாட்களை எண்ணிக்கொண்டு.

–தொட்டுத் தொடரும்…

About The Author