விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம்-பகுதி – 2: எது நம் கடமை?

2.5. புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!

கடமையைச் செய்ய வேண்டும்; அறவழியில் நிற்க வேண்டும். இது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் நடைமுறையில் செய்யத் தக்கது எது, செய்யத்தக்க அல்லது எது என்பதைத் தீர்மானிப்பது எல்லா விஷயங்களிலும் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. இதைத்தான் தர்ம சங்கடம் என்பார்கள்.

உதாரணத்துக்கு ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்வோம். Resist not evil – தீமையை எதிர்க்காதே – என்று நமக்கு நன்னெறி புகட்டியிருக்கிறார்கள். இதை நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்போமானால் நாம் வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாய் நிற்கக் கூடிய அபாயம் இருக்கிறது. சமூக விரோதிகள் கோலோச்சுவர். நாட்டில் பலரும் இதே கொள்கையைப் பின்பற்றுவார்கயானால் சமுதாயம் சீர்குலைந்து அராஜகவாதிகளின் வேட்டைக்காடாக மாறிவிடும்.
தீமையை எதிர்க்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. நடைமுறையில் எதிர்க்கவும் செய்கிறோம். இப்போது ஒரு சங்கடம். தீமையை எதிர்க்கக்கூடாது என்று கொள்கை வைத்துள்ள ‘நா’னுக்கும், நடைமுறையில் எதிர்த்து நிற்கும் ‘நா’னுக்கும் இடையே முரண்பாடு! விளைவாக நமக்குள் ஒரு குற்ற உணர்வு; மனப்போராட்டம். நம் மீதே நமக்குக் கழிவிரக்கம் ஏற்படுகிறது. நம்பிக்கை குறைகிறது. நம் மீதே நமக்கு வெறுப்பு ஏற்படுகிறது. நல்ல வண்ணம் வாழ்வதற்குத் தன்னம்பிக்கையும் நம்மை நாமே நேசிப்பதும் அவசியம். தன்னைத் தானே வெறுப்பதை விடக் கொடுமை வேறெதுவும் கிடையாது. தன்னம்பிக்கை அற்றவன் கடவுள் நம்பிக்கை வைத்திருப்பதும் இயலாதது.

இந்த முரண்பாட்டைத் தீர்க்க என்ன வழி? தீமையை எதிர்க்கத்தான் வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காண்டீபத்தைக் கீழே எறிந்து விட்டுப் போரிட மாட்டேன் என்று வாளாயிருந்த அர்ச்சுனனைக் கண்ணபிரான் கோழை என்றும் பொய்யொழுக்கவாதி என்றும் கடிந்து கொண்டார்.

வில்லினை எடடா!-கையில்
வில்லினை எடடா-அந்தப்புல்லியர் கூட்டத்தைப்
பூழ்தி செய்திடடா!
என்று உசுப்பி எழுப்பினார்.

அர்ச்சுனன் அரச குலத்தைச் சேர்ந்தவன். அவன் கடமை நீதிக்காகப் போர் புரிவது. இதில் தவறினால் அவன் தன் மன்னருக்கும் ராஜ்யத்துக்குமான கடமையிலிருந்து வழுவியவன் ஆவான். தீவிர ஆலோசனைக்குப் பின் எண்ணித் துணிந்து இறங்கியபின், போர்க்களத்தில் தனது மூத்தவர்களையும் உறவினர்களையும் கண்டு அவன் மனது சஞ்சலிக்கிறது. தனது மனத்தளர்ச்சிக்கு அன்பு என்று பெயர் கொடுத்து, தர்ம சாஸ்திரங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி நியாயப்படுத்துகிறான். அவன் குழப்பத்தைப் புரிந்து கொண்ட கண்ணனின் அறிவுரையே கீதை மலராகப் பூத்தது.

இப்போது நம் முன் உள்ள கேள்வி Resist not evil என்ற அறவுரை சரியா அல்லது போரிடத் தூண்டிய கண்ணனின் கீதை சரியா?… சுவாமிஜியின் விடை இரண்டுமே சரிதான் என்பது!

எதிர் எதிர்த் துருவமாய் உள்ள உச்ச நிலைகள் இரண்டும் ஒன்று போலவே இருக்கும். நேர்மறையின் இறுதி எல்லையும், எதிர்மறையின் இறுதி எல்லையும் ஒரே இடத்தில் சங்கமிக்கும். ஒளி அலையின் அதிர்வுகள் அதி வேகமாக இருந்தாலும் மிகக் குறைச்சலாக இருந்தாலும் கட்புலனுக்கு ஒளி புலப்படாது. அது போலவே மிக ஓங்கி உயர்ந்த ஒலியும் அளவுக்குக் குறைந்த சன்ன ஒலியும் இரண்டுமே செவிப்புலனுக்கு எட்டாது. அதே போலத்தான் எதிர்த்து நிற்கும் பேராற்றலுக்கும் எதிர்க்காமல் இருக்கும் பேடிமைக்கும் உள்ள உறவு. பலவீனன், கோழை, திராணியில்லாதவன், எதிர்க்கமுடியாமல் கோழைத்தனமாக ஒதுங்கிப் போகிறான். மற்றொருவன் தான் மரண அடி கொடுக்க முடியும் என்று தெரிந்தும், கருணை காரணமாகப் பகைவனுக்கும் ஆசி கூறுகிறான். பயந்தவன் ஒதுங்குவது பாவம். வல்லவன் எதிர்த்து நிற்பது பாவம். புத்தபிரான் தனது ராஜ்யத்தைத் துறந்து திருவோடு ஏந்தியது தியாகம். அன்றாடக் கஞ்சிக்கே வழியில்லாதவன் திருவோடு ஏந்துவதில் சிலாக்கியம் ஏதும் இல்லை. காந்திஜி சொல்லுவார், "எறும்பு யானையை மன்னிக்க முடியாது" என்று!

கர்ம யோகத்தின் மையக் கருத்து இதுவே எதிர்ப்பின்மை -non resistance- அதி உன்னத லட்சியம் என்பதைப் புரிந்து கொண்டவன் கர்ம யோகி. அதே நேரத்தில் non resistance, ஆற்றலின் உச்சக்கட்ட வெளிப்பாடு என்பதையும், அந்த உயரிய லட்சியத்தை நோக்கிய பயணத்தின் ஒரு படியே எதிர்த்துப் போரிடுவது என்பதையும் கர்மயோகி உணர்வான்.
பயந்து ஒதுங்குவது பேடிமை. இன்று போய் நாளை வா என்பது பேராண்மை!

இந்த உயரிய லட்சியத்தை அடைவதன் முன்னம் நம் கடமை தீமையை எதிர்த்து நிற்பதே. தொடர்ந்து செயலாற்றுவோம்! போரிடுவோம்! தீமையைப் போட்டுத் தாக்குவோம்! அப்போதுதான் எதிர்த்து நிற்கும் பேராற்றலைப் பெற்ற பின்புதான், எதிர்த்து நில்லாமை போற்றத்தக்க பண்பாகும்.

இதனால்தான் "பகைவனுக்கருள்வாய்!" என்று தன் நெஞ்சுக்குச் சொன்ன மகாகவி,
"பாதகம் செய்பவரைக் கண்டால்-நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!"
என்றும் பாடினார்.

–பிறக்கும்…

About The Author