கீரிப்பிள்ளை

வழக்கம் போல் முழு ஆண்டு விடுமுறைக்குக் கிராமத்தில் இருக்கும் தன் தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சுபிக்ஷா, தன் சந்தேகத்தைப் பாட்டியிடம் கேட்டாள்.

"ஏம்பாட்டி! பிள்ளைனா என்ன?"

"ம்ம்! பிள்ளைன்னா, சின்னக் கொழந்தை, அதாவது பாப்பா-ன்னு அர்த்தம்" என்றாள் பாட்டி.

"அப்பறம் ஏன், கிளிப்பிள்ளை, கீரிப்பிள்ளை, அணில்பிள்ளை, தென்னம்பிள்ளை-ன்னெல்லாம் சொல்றாங்க?"

பதில் சொல்லாவிட்டால் இன்று தன்னை ஒரு வேலையையும் செய்யவிடமாட்டாள் சுபிக்ஷா என்பது அந்தப் பாட்டிக்குத் தெரியும். தனக்குத் தெரிந்தவரை, தன் பாட்டி தனக்குச் சொன்ன கதைகளை தன் பேத்திக்கும் சொல்ல ஆரம்பித்தாள்.

"சுபிக்ஷா கண்ணு! நீ கேட்ட கேள்வி ரொம்ப அருமையான கேள்விடா செல்லம். பாட்டி இதோ சொல்றேன், சமத்தாக் கேட்டுட்டு, ஒங்க ஸ்கூல்ல உள்ள சினேகிதிங்ககிட்ட எல்லாம் போயி சொல்லணும் என்ன?" என்று ஆரம்பித்தாள்.

"பிள்ளைன்னு எல்லாத்தையும் சொல்ல மாட்டோம். பொதுவாக் குழந்தைங்களையும், குழந்தைங்க மாதிரி கூடவே வளர்க்கிற பிராணிகளயும் மட்டுந்தான் பிள்ளைன்னு சொல்லுவாங்க. பிள்ளைங்க அவங்க வளந்து பெரியவங்களானதும், தங்களோட அம்மா அப்பாவ நல்லா கவனிச்சுக்குவாங்க. தாத்தா பாட்டி ஆனதும் அவங்களுக்கு ஓடி ஆடி வேலை செய்ய முடியாது, யாராச்சும் உதவிக்குத் தேவைப்படும். அப்படிப்பட்ட நேரங்கள்ல பிள்ளைங்கதான் அவங்களுக்கு ஒத்தாசையா இருப்பாங்க. நீ சொன்ன, கிளிப்பிள்ளை, கீரிப்பிள்ளை, அணில்பிள்ளை, தென்னம்பிள்ளை எல்லாம் வயசான காலத்துல அவங்களுக்கு உதவியா இருக்கும். அதுனாலதான் அதுங்களயெல்லாம் ‘பிள்ளை’னு சொல்றோம் கண்ணு!"

"அதுங்கல்லாம் எப்படி பாட்டி உதவி செய்யும்?" சுபிக்ஷா

"நாம எப்படி கோழி, நாய், பூனை, வாத்து இதெல்லாம் வளக்கிறமோ, அதே போல நீ சொன்ன இதெல்லாம் வளத்தாலும் பிற்காலத்துல பிள்ளைங்க உதவுறது மாதிரி உதவுமாம், அதுனாலதான்டா அப்படிச் சொல்றோம். விளக்கமாச் சொல்றேன் கேளு! ஒரு கிராமத்துல ஒரு அம்மா அப்பா இருந்தாங்களாம். அவங்களுக்கு ஒரே பையன். அவனை நல்லாப் பெரிய படிப்பெல்லாம் படிக்கவச்சு வேலைக்காகப் பட்டணத்துக்கு அனுப்பி வச்சாங்களாம் அந்த அப்பா அம்மா. அவங்க பையனுக்கு சின்ன வயசா இருக்கும்போதே, அவங்க வீட்டுல ஒரு சின்னத் தென்ன மரம் நட்டு வச்சுத் தண்ணி ஊத்திகிட்டே வந்தாராம் அந்த அப்பா. இப்போ அந்த மரமும் பெரிய மரமாயிருச்சாம். அவங்க பையன் பட்டணத்துல வேலை பாக்குறதால அடிக்கடி வந்து அப்பா அம்மாவை வந்து கவனிச்சுக்க முடியலை. அந்த மாதிரி நேரங்கள்ல எல்லாம் அந்தத் தென்னைமரம்தான் பிள்ளையாம். அது பெருசா வளந்து, காய் காச்சு, இளநீர், தேங்காய், மட்டை எல்லாமே குடுத்துச்சாம். டெய்லி, அதை வித்து, அந்தக் காசு வச்சு அவங்க சாப்பிடுவாங்க. இளநீர் குடிப்பாங்க, மட்டை, ஓலை எல்லாமே அவங்களுக்கு உபயோகமா இருந்துச்சாம். அதுனாலதான் பெத்த பிள்ளைங்க தன்னோட அம்மா அப்பாவுக்கு உபயோகமா இருக்கற மாதிரியே அந்தத் தென்னை மரமும் அவங்களுக்கு உபயோகமா இருந்ததால அதுக்குப் பேரும் ‘தென்னம்பிள்ளை’ அப்படீன்னு சொல்றோம், புரிஞ்சுதா?" பாட்டி சொல்லி முடித்தாள்.

சுபிக்ஷாவுக்குத் தெரியும், பாட்டி மீதியையும் சொல்லி முடித்துவிடுவாள் என்று. மிகவும் சீரியஸாக உட்கார்ந்து ‘ம்’ போட்டுக் கொண்டிருந்தாள். "அப்பறம், ஏன் அணில் பிள்ளைன்னு சொல்றோம்னா, இராமர்னு ஒரு கடவுள், அவரு ரொம்பக் களைப்பா இருக்கறப்போ, குடிக்கவே தண்ணி கெடைக்காத அந்த நேரத்துல, ஒரு அணில் தென்னைமரத்துல ஏறி, அங்கேருந்து ஒரு இளநீர் பறிச்சு அவருக்குக் கொண்டுபோயி குடுத்துச்சாம், அதுனால அவரு ரொம்பச் சந்தோசப்பட்டு, நன்றியுணர்வோட, அதைப் பாசமா முதுகுல தடவிக் குடுத்தாராம். அதுனாலதான் அதோட முதுகுல மூணு கோடு இருக்கு. அதுலயிருந்து அதுவும் மனுசங்க இருக்குற இடத்துலயே சேந்து இருக்கறதால அணில்பிள்ளைன்னு பேரு".

"ஏம்பாட்டி! ஒரு அணில்தானே தண்ணி குடுத்துச்சு, அந்த அணில்மேல மட்டுந்தானே கோடு இருக்கணும்! எப்படி எல்லா அணில் மேலயும் கோடு இருக்கு?"

"ஏன்னா! கோடு போட்டது கடவுளாச்சே! அப்படி ஒரு அணில்மேல மட்டும் கோடு இருந்து மத்த அணில்மேல கோடு இல்லாட்டி மனுசங்க மத்ததத் துன்புறுத்தலாம் இல்லயா? அதுக்காகத்தான் எல்லா அணில் மேலயும் கோடு இருக்கு. பெரும்பாலும் நாம இருக்கற இடத்துலதான் அணிலும் இருக்கும். ம்ம்..அப்பறம் வேற என்ன பாக்கி?" பாட்டி.

"கிளிப்பிள்ளை" சுபிக்ஷா. "சமத்துக்குட்டிடி நீ. சரி! எதுக்காக கிளிப்பிள்ளைனு பேரு தெரியுமா? ஏன்னா! அது அழகா குழந்தைங்க மாதிரியே கொஞ்சிக் கொஞ்சிப் பேசும், வீட்ல அதைவளத்துப் பேசக் கத்துக் கொடுத்தோம்னா, யாரு வந்தாலும் கொஞ்சிப் பேசும். உங்க தாத்தா பாட்டி மாதிரி தனியா இந்தக் கிராமத்துல இருக்கறவங்களுக்கு ஒரு பிள்ளை மாதிரி பேச்சுத் துணைக்கு சௌகரியமா இருக்கும். வெளி ஆட்கள் யாரு வந்தாலும், வந்ததை நமக்குக் கத்திச் சொல்லிரும். அதுனாலதான் அதுக்குக் கிளிப்பிள்ளைனு பேரு".

"இனியென்ன பாக்கி இருக்கு? கீரிப்பிள்ளைதானே! கிராமங்கள்ல நெறய மரம் செடி கொடி எல்லாம் இருக்கறதால, நெறைய பாம்பும் இருக்கும் இல்லையா? பாம்பு கீரிக்கு மட்டுந்தான் பயப்படுமாம், கீரி இருந்தா, பயந்துகிட்டு அந்த வீட்டுக்குப் பாம்பு வராதாம். சரியா? ஒரு கிராமத்துல ஒரு அம்மா அப்பாவுக்கு ரொம்ப நாள் குழந்தையே இல்லையாம். அவங்க ஒரு கீரியைப் பாசமா வளத்தாங்களாம். அந்தக் கீரி, நல்லா நேரா நேரம் சாப்பிட்டுத் தூங்கி இங்கயும் அங்கயும் ஓடி விளையாடுமாம். இப்படி இருக்கும்போது அவங்களுக்கு ஒரு தம்பிப் பாப்பாவும் பொறந்துட்டானாம். அதுனால அவங்க அந்தக் கீரியை ரொம்ப ராசியான கீரி அப்படீன்னு நெனச்சுத் தன்னோட பிள்ளை மாதிரியே அதையும் இன்னும் அதிகப் பாசமாவே வளத்தாங்களாம். அந்தக் கீரியும் தம்பிப் பாப்பாகூட நல்லா வெளையாடுமாம். அந்தக் குழந்தையைப் பாத்துக்கறதுக்கு வீட்ல வேற யாருமே இல்லாததால கீரியைக் காவலுக்கு வச்சுட்டு, ஒரு நாள் அந்த அம்மா குழந்தையைத் தொட்டில்ல போட்டுத் தூங்க வச்சுட்டு, பக்கத்துல இருக்கற குளத்துல தண்ணி எடுக்கப் போயிட்டாங்களாம்.

தண்ணி எடுத்துட்டு வர்றதுக்குள்ள இந்தக் கீரி வீட்டுல இருக்காம அந்த அம்மாவைத் தேடிக் குளத்தங்கரைக்குப் போயி, அந்த அம்மாவைப் பாத்த ஒடனே, தன்னோட வாயைத் தொடச்சுத் தொடச்சு ஏதோ சத்தம் குடுத்திருக்கு. ஒண்ணும் புரியாத அந்த அம்மா, கீரியோட வாயில நெறய ரத்தம் இருந்ததைப் பாத்துட்டு, அதிர்ச்சியாகி, இந்தக் கீரி, அந்த அம்மா இல்லாத நேரமாப் பாத்து, அந்தத் தம்பிப் பாப்பாவைக் கடிச்சுத் தின்னுருச்சோன்னு நெனச்சு, தாங்க முடியாத கோபத்துல தலையில இருந்த தண்ணிக் குடத்த அப்படியே அந்தக் கீரி தலையில போட்டுட்டாங்களாம். கீரி "கீச்"-னு சத்தத்தோட அந்த இடத்துலயே செத்துப் போச்சு. வேகமா அந்த அம்மா வீட்டுக்கு ஒடி வந்து பாத்தப்போ, தம்பிப் பாப்பா நல்லா அசந்து தொட்டில்ல தூங்கிட்டு இருந்தான். அந்த அம்மாவுக்கு ஒண்ணுமே புரியல. பக்கத்துல பாத்தா, ஒரு பெரிய பாம்பு. அதைத் துண்டு துண்டாக் கடிச்சுப் போட்டுருக்கு அந்தக் கீரிப்புள்ள. பாம்பு வீட்டுக்குள்ள வந்ததும் அது தம்பிப் பாப்பாவை கடிச்சுருமோன்னு பயந்து, அதைக் கடிச்சுக் கொன்னுட்டு, இந்தச் சேதியச் சொல்லத்தான் அந்தக் கீரி அம்மாவைத் தேடிப் போயிருக்கு. இது புரியாம அவசரப்பட்டு அந்த அம்மா கீரியக் கொன்னுட்டாங்க. அப்பறம் தன்னோட தப்பை நெனச்சு ரொம்பக் கதறி அழுதாங்களாம். அதுனால அந்த நாள்லேருந்து புள்ளயைக் காப்பாத்தின அந்தக் கீரிக்கும் கீரிப்பிள்ளைன்னு பேராம். ஏய்! ஏய்! நீ ஏன்டி செல்லம் அழற?"

"போ பாட்டி, பாவம் அந்தக் கீரி".

"ஆமடா! கோபத்துல அந்த அம்மா தப்புப் பண்ணிட்டாங்கடா! அதுக்கப்பறம் யாருமே அப்படிச் செய்யறதில்ல. கூட வளக்குற பிராணிகளோட நாம எப்பவும் பாசமா இருக்கணுன்டா செல்லம்! அதுங்களுக்கு நம்மளவிட்டா யாருமே இல்லேல்ல! சரி சரி வா! நாம, நம்ம வீட்ல இருக்கற கோழி, கிண்ணிக்கோழி, வாத்துங்களுக்கெல்லாம் தீனி போடப்போவோம்."

குறிப்பு : எனக்கு என் பாட்டி சொன்னது.

About The Author

1 Comment

  1. Karthikeyan Sankaravadivel

    இந்த கதை ஆராம்பதில் இருந்து நல்ல எதிர்பார்பை எர்படுதியது. முக்கியமாக கேரிபில்லைகு கொடுத விலகம் நல்ல இருந்தது.

Comments are closed.