 |
இதழ் 350 |
 |
பிப்ரவரி 04 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| வீரத்துறவி விவேகானந்தர்(9)
- டி.எஸ்.வெங்கடரமணி |
| | ஒருநாள் ஏக்கத்தோடு தம்மையே மாய்த்துக் கொள்ள அவர் வாளை உருவிக் கொண்டபோது, துளிக்கூடக் கலப்பற்ற பரிபூரண ஆனந்தம் அவருக்கு அனுபவமாயிற்று. இறைவன் ஒருவனே; பாதைகள் பல
அப்படி ஒன்றும் லேசாக ஒத்துக் கொண்டு விடவில்லை, நரேந்திரன் ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்திப்பதற்கு. துடுக்குத்தனமாகத்தான் சொன்னார், “வரேன், வரேன், அவர் ஒரு முட்டாள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; நான் ஸ்பென்சர், ஹாமில்டன், லாக் மற்றும் பல மேனாட்டு அறிஞர்களின் தத்துவங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறேன். அந்த நிரட்சர குஷியிடம் எனக்கு சொல்லித் தர என்ன இருக்கப் போகிறது? இரண்டு ரசகுல்லாவாவது தருவாரா? இல்லையென்றால் அவர் காதைப் பிடித்துத் திருகி விட்டுத்தான் வருவேன்.” என்று சொன்னபடிதான் வந்தார். நரேந்திரனின் இந்த மன நிலையைப் புரிந்து கொண்டால்தான் குருநாதர் ஸ்ரீராமகிருஷ்ணர் அவரில் ஏற்படுத்திய ரசவாத மாறுதலைப் புரிந்து கொள்ள முடியும்.
சீடனின் வரலாற்றைப் படிப்பதற்கு முன்பு, குருவைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாக இங்கே!
ஸ்ரீராமகிருஷ்ணர் 1836, பிப்ரவரி 18ம் தேதி வங்காளத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் கமார்புகூர் என்னும் சிறு கிராமத்தில் அவதரித்தார். அவரது பிள்ளைத் திருநாமம் கதாதரன் என்பது. பள்ளிக்கூடம் போய்ப் படித்தது கொஞ்ச நாட்கள்தான். கோவிலுக்குச் சென்று வழிபடுவது, பக்திக் கதைகளைக் கேட்பது, சன்னியாசிகளுடன் பழகுவது இது போன்ற விஷயங்களிலேயே ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார்.
தகப்பனார் மரணம் அடையவே, குடும்பம் வறுமையில் ஆழ்ந்தது. அண்ணன் ராம்குமார் கல்கத்தா நகருக்கு வேலை தேடிச் சென்று விட்டார். சில நாட்களில் ஸ்ரீராமகிருஷ்ணரையும் அங்கு அழைத்துக் கொண்டார். அங்கு அவரைப் படிக்க வைக்க முயன்ற அண்ணனிடம் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார் ஸ்ரீராமகிருஷ்ணர், “சோற்றுக்காகப் படிக்கும் படிப்பு எனக்கு வேண்டாம்” என்று.
இந்தச் சமயத்தில்தான் பிரபஞ்சத்தை இயக்கும் மகாசக்தி ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையைச் செதுக்கி அமைக்கத் திட்டமிட்டது. ராணி ராஸமணி என்பவர் கல்கத்தாவுக்கு வடக்கே காளி அன்னைக்கு ஒரு கோவில் எழுப்பினார். அதற்கு ராம்குமார் பூசாரியாக நியமனம் ஆனார். காலக் கிரமத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரும் அதே பணியில் சேர்ந்து கொண்டார். புனித கங்கையின் சமீபம், ஆலயத்தின் அமைதி நிறைந்த சூழ்நிலை, காளி தேவியின் சாந்நித்யம், இத்தனையும் அவருள் கடவுளை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டி விட்டன. தாம் வழிபடுவது வெறும் கல் அல்லவே? அதற்குள் காளி என்னும் மகாசக்தியின் பேராற்றல் அல்லவா இருக்கிறது? மனம் கசிந்து பிரார்த்தித்தால் அவள் தரிசனம் தர மாட்டாளா?
வேத ஆகமங்களில் ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பரிச்சயம் கிடையாது. பூஜை செய்யும் வழி முறைகளும் தெரியாது. காளியைப் பற்றிப் பாடுவது, தன் இஷ்டப்படி வழிபடுவது, இறை நினைப்பில் அந்தியிலும் சந்தியிலும் மெய்மறந்து நடை பயில்வது இவற்றையே வழக்கமாகக் கொண்டார். உலகில் எல்லாமே அவருக்கு அற்பத்தனமாகப் பட்டது.
யாதுமாகி நின்றாய்-காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மையெல்லாம்-நின்றன் செயல்கள் அன்றி இல்லை போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கை எல்லாம் ஆதி சக்தி தாயே-என் மீது அருள் புரிந்து காப்பாய்
என்ற பாரதியின் பாடல் ஸ்ரீராமகிருஷ்ணரின் மன அவசத்தைப் புரிந்து கொள்ள உதவும்.
இப்படி 12 வருடங்கள். அவரது மனசுக்குள் புயல் வீசிக் கொண்டிருந்தது. சாதாரண வார்த்தைகளால், அதை விவரிப்பதோ புரிந்து கொள்வதோ கடினம்தான். இப்படி ஒருநாள் ஏக்கத்தோடு தம்மையே மாய்த்துக் கொள்ள அவர் வாளை உருவிக் கொண்டபோது, துளிக்கூடக் கலப்பற்ற பரிபூரண ஆனந்தம் அவருக்கு அனுபவமாயிற்று. காளியின் புனித சந்நிதானத்தை முழுமையாக அவரால் உணர முடிந்தது. அன்று முதல் காளி என்னை விட்டு அகலவே இல்லை என்கிறார் அவர்.
அந்த தினம் முதல் அவரால் பூஜைகளை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. பைத்தியம் போல் ஆகி விட்டார். தன் தலையிலேயே பூவைப் போட்டுக் கொள்வார். அழுவார். விழுவார். பின் எழுவார். நைவேத்தியம் செய்கையில் காளியே அமுதுண்பது போலப் பாவித்து ஊட்டுவார். தீபாராதனை காட்டுவார், காட்டுவார், காட்டிக் கொண்டே இருப்பார். இவருக்கு பைத்தியம்தான் என்று நிர்ணயம் செய்து கொண்டு, பணியாளர்கள் கோவில் நிர்வாகியான மாத்துர் என்பவரிடம் புகார் செய்தார்கள். அவர் வந்து பார்த்தார். அவருக்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் நிலை ஓரளவு புரிந்து விட்டது. “அவர் போக்கில் விட்டு விடுங்கள்” என்று சொல்லி விட்டார். அவருக்கு யாரும் தொல்லை கொடுக்கக்கூடாது என்று கட்டளையும் இட்டு விட்டார்.
என்றாலும் இந்தப் போக்கால் ஸ்ரீராமகிருஷ்ணரின் உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. வயிற்றுப் போக்கு நோய் கண்டது. அவரது அம்மா இது பற்றிக் கேள்விப்பட்டு சொந்த ஊரான கமார்புகூருக்கு அவரை வரவழைத்துக் கொண்டார். “கல்யாணம் ஆனால் பைத்தியம் தெளியும்” என்று கருதி அவருக்கு 1859ல் ஆறு வயதுச் சிறுமியான சாரதையைத் திருமணம் செய்து வைத்தார்கள். ஸ்ரீராமகிருஷ்ணரே அந்தப் பெண்ணைக் குறிப்பிட்டுச் சொல்லித் தேர்ந்தெடுத்ததாக வரலாறு உண்டு. ஒன்றரை வருஷம் கமார்புகூரில் இருந்து விட்டு தட்சிணேஸ்வரத்துக்குத் திரும்பி விட்டார் ஸ்ரீராமகிருஷ்ணர். அங்கு அவருக்கு முறையான ஆன்மிகப் பயிற்சி அளிக்க அவ்வப்பொழுது குருமார்கள் வந்து சேர்ந்தார்கள். பல பாவங்களிலும் அவர் கடவுளை வழிபடத் தொடங்கினார். “அழுதல், மெய் விதிர்த்தல், தொழுது எழுதல்” இப்படி வைணவம் சொல்லும் மஹாபாவம் அவருக்கு எளிதில் கை வந்தது. மேலும் தாஸ்ய பாவத்தில் அனுமனாகப் பாவித்து இறைவனை வழிபட்டார். இந்தக் கால கட்டத்தில் அவருக்கு வால் போன்ற ஒரு சிறு இணைப்பு தோன்றியதாகவும் செய்தி உண்டு.
அடுத்து நாயக நாயகி பாவம். தம்மை மீராவைப் போல், ராதையைப் போல், பெண்ணாகவே பாவித்துக்கொண்டு உருகுவார். அத்வைத ஞானத்தை தோதாபுரி என்ற ஆசிரியரிடம் பயின்றார். குருவுக்கு 40 ஆண்டுகளில் சித்தித்த நிர்விகல்ப சமாதி என்ற நிலை ஸ்ரீராமகிருஷ்ணருக்கு உடனடியாகக் கிடைத்து விட்டது. தோதாபுரி ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர் ஆகி விட்டார்.
இந்த நிலையில் இறைவன் ஒருவனே, பாதைகள் தாம் பல என்று உணர்ந்து கொண்ட ஸ்ரீராமகிருஷ்ணர், இஸ்லாமிய, கிறிஸ்துவ மார்க்கங்கள் மூலமாகவும் இறைவனைத் தரிசிக்க விழைந்தார். சூஃபி ஞானி ஒருவரிடம் உபதேசம் பெற்றார். அல்லாவின் நாமத்தை ஜெபித்தார். வேளை தவறாமல் தொழுகை நடத்தினார். இஸ்லாமியர்களைப் போலவே நடை உடை பாவனைகளை மேற்கொண்டார். ஆலயத்தில் விக்கிரக வழிபாடு செய்வதையும் நிறுத்திக் கொண்டார். மூன்றே தினங்களில் மிகக்கண்ணியமான தோற்றமுடைய ஒளி வீசிப் பிரகாசித்த பெரியவரின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது. அவர் கிறிஸ்துவ முறையில் வழிபாடு நடத்தியது இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு.
1874ல், கிறிஸ்துவராக மதம் மாறிய சம்புநாத் மல்லிக் என்பவர் பைபிளைப் பற்றி விரித்துரைக்கக் கேட்டுக் கொண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர். மெல்ல மெல்ல பழைய கருத்துகள் விலகி கிறிஸ்துவைப் பற்றிய சிந்தனைகளே அவர் மனதில் நிரம்பின. ஒரு நாள் அதிகாலையில் நடை பயில்கையில் அன்னிய நாட்டவர் போலத் தோற்றம் அளித்த ஒருவர் தம்மை உற்றுப் பார்ப்பதை அவர் உணர்ந்தார். மனுஷ புத்திரன் இயேசுநாதர்தான் அவர் என்று அவருக்கு உணர முடிந்தது. இயேசுநாதர் ஸ்ரீராமகிருஷ்ணரை ஆரத் தழுவிக் கொண்டு அவரில் ஐக்கியமானார்.
(தொடரும்)
|
| | டி.எஸ்.வெங்கடரமணி அவர்களின் இதர படைப்புகள்.
| ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|