உண்மையான, தூய்மையான அன்பை நாம் வழங்கும்போது அதைப் பெறுபவரும் அதை ஆழ உணர்ந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
ஹாய் ஃபிரெண்ட்ஸ்!
வாராவாரம் நாம எழுதுறதுக்கு தோதா ஏதாவது ஒரு மேட்டர் அமையும். இந்த வாரம் அப்படி அமையலையே.. என்ன எழுதலாம்னு யோசிச்சிக்கிட்டே வலைப் பக்கங்களை சுவாரஸ்யமில்லாமல் மேய்ஞ்சிக்கிட்டே இருந்தப்போதான் அந்த சுயவிவரம் கண்ணில் பட்டது. மெக்கானிக்கல் எஞ்சினியரான அவர் அமெரிக்காவில் வடிவமைப்புப் பொறியாளராக பணியாற்றுகிறார். அவரது சுயவிவரத்தில் இளங்கலை படித்து விட்டு பணியிலிருந்து கொண்டே முதுகலைப் பட்டம் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அவர் படித்ததோ பொறியியல். ஆனால் 'கலை' என்று குறிப்பிட்டிருக்கிறார். Bachelor என்றால் 'இளம்' என்றும், Arts என்றால் 'கலை' என்றும் தமிழில் எழுதுவோமானால், ஆர்ட்ஸ் படிப்புகளைத்தானே இளங்கலை, முதுகலை என்று கூறவேண்டும். Bachelor of Science என்பதை இளம் அறிவியல் என்று சொல்ல வேண்டும். அதேபோல Bachelor of Engg. என்பதை இளம் பொறியியல் பட்டம் என்றுதானே சொல்ல வேண்டும். இதே பிழை பலருக்கும் வாகாய் வருகிறது. யாரும் அதை அறியவில்லை போலும்!
அப்புறம் ஆங்கிலத்தில் ஒரு குறுங்கதை படித்தேன். (நாங்கல்லாம் இங்கிலீசு கதைகள், டால்ஸ்டாய் நாவல்கள்தான் படிக்கறது வழக்கம்!!!) கதையைப் படிக்கும் போது அந்தக் கதையின் சம்பவத்துடன் மட்டும் ஒன்றிப் படித்தேன், மனதில் எந்த வித முன் எண்ணங்களையும் கொண்டு வராமல். இதோ அக்கதை:
அங்கே ஒரு பெண் இருந்தாள். பார்வையற்றவள் அவள். அதன் காரணமாய் தன்னையே வெறுத்தாள் அவள். தான் இவ்வுலகில் வாழ லாயக்கற்றவள் என்பது அவளது எண்ணம். பிறரையும் வெறுத்தாள், ஒருவனைத் தவிர. அவன் அவளை உயிருக்குயிராய் காதலிக்கும் ஆண்மகன்.
அவன் எவ்வளவுதான் அன்பு செலுத்தி நன்கு கவனித்துக் கொண்டாலும் தனக்கு பார்வை இல்லாதது அவளுக்குப் பெரும் குறையாகத் தெரிந்தது. பார்வை கிடைத்தால்தான் தனக்குத் திருமணம் என்று அவள் உறுதியாகக் கூறிவிட்டாள்.
ஒருநாள், கண் தானம் செய்த ஒருவர் மூலமாக அவளுக்குப் பார்வை கிடைத்தது. பார்வை கிடைத்தவுடன் தன் காதலனைக் காணச் சென்றாள் அவள். ஆனால் தன்னைப் போலவே அவனும் ஒரு பார்வையற்றவன் என்பதை முதன்முதலாய் அறிந்ததும் அவளுக்கோ மிகுந்த அதிர்ச்சி. அதனால் அவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று ஆணித்தரமாய் அடித்துக் கூறிவிட்டாள்.
தலை குனிந்த அவன், கண்ணீருடன் அவளிடமிருந்து விடை பெற்றான். செல்லும் முன் அவளை நோக்கித் திரும்பினான் அவன், கடைசியாக சில வார்த்தைகளை உதிர்க்க. "என் கண்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள் அன்பே! அதன் மூலமாய் இவ்வுலகைப் பார்த்து ஆனந்தம் பெறு."
அவனை ஏமாளி என்று சொல்வதா அல்லது தன்னை அழித்துக் கொண்டு தன் காதலை வாழச் செய்தான் என்று சொல்வதா! தூய்மையான அன்பும் காதலும் எதையும் எதிர்பாராதது அல்லவா! அப்படி உண்மையான, தூய்மையான அன்பை நாம் வழங்கும்போது அதைப் பெறுபவரும் அதை ஆழ உணர்ந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! பேரன்பும், சகிப்புத்தன்மையும், விட்டுக்கொடுத்தலும், சமாதானமுமாக வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாய் நகரும்! உண்மைதானே?
அன்பைப் பற்றிப் பேசும் இச்சமயத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டத்தைப் பற்றியும் பேசலாமா?
மறுபடியும் ஒரு கதை சொல்லப்போறேன். நோ.. யாரும் ஓடி ஒளிய வேண்டாம். தலைநகரம் வடிவேலு அளவுக்கெல்லாம் இருக்காது!!
ஜாக் என்று ஒருவன் இருந்தான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவதில் அவனுக்கு விருப்பமில்லை. குறுக்கு வழி இருந்தால் விரைந்து ஓடி விடலாமே என்ற சிந்தனைதான் அவனுக்கு. அதையாவது சரியாகச் செய்தானா என்பதே இக்கதையிலிருந்து பிறக்கும் கேள்வி. கதை கேளுங்க!
அன்றைய நாளிதழை வேகமாகப் புரட்டினான் ஜாக். லாட்டரியில் பக்கத்து மாநிலத்தில் ஒருவருக்கு ஒரு கோடி பரிசு விழுந்திருப்பதாகக் கண்டவுடன் பரவசமடைந்தான். "ஆஹா! இது போல நமக்கு விழுந்தால் எப்படி இருக்கும்!" கற்பனையில் மூழ்கிப் போனான்.
அடுத்த நாள் மீண்டும் நாளிதழை வேகமாகப் புரட்டினான். இம்முறை லாட்டரியில் அவனது மாநிலத்திலேயே உள்ள ஒருவருக்கு ஒரு கோடி பரிசு விழுந்திருக்க, சொக்கிப் போனான். "ஆஹா! இதுபோல அதிர்ஷ்டம் நமக்குக் கிடைக்க வேண்டுமே! கடவுளே...எப்படியாவது என் விருப்பம் போல நடத்திக் கொடு" என்று வேண்டினான்.
அடுத்த நாள் மீண்டும் நாளிதழை வேகமாகப் புரட்டினான். இம்முறை லாட்டரியில் அவனது பக்கத்து ஊரைச் சேர்ந்தவருக்கே பரிசு விழுந்திருக்க, ஆனந்தக் கூத்தாடினான். "நிச்சயம் நமக்கு இது போல ஒரு அதிர்ஷ்டம் கிடைக்கும். நிச்சயம் நமக்கு கடவுள் ஏதாவது வழி செய்வார்" என்று சந்தோஷத்தில் ஆழந்தான்.
அடுத்த நாள் மீண்டும் நாளிதழை வேகமாகப் புரட்டினான். இம்முறை லாட்டரியில் அவனது பக்கத்து வீட்டுக்காரருக்கே ஒரு கோடி பரிசு விழ, பெரும் பொறாமையுற்றான். "இந்தக் கடவுளுக்குத்தான் எத்தனை ஓரவஞ்சனை! எத்தனை நாளாய் நமக்கு இதுபோல கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கோம்.. கடவுள் கருணை காட்டினாரா.. இல்லையே! இதே பரிசு எனக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்" அப்படியே கற்பனையில் ஆழ்ந்தான் ஜாக்.
கனவில் வந்தார் கடவுள். "ஐயா! எனக்கு அதிர்ஷ்டம் அடிக்க ஏதாவது சூ.. மந்திரகாளி.. வேலையைச் செய்யுங்களேன்!” கெஞ்சினான் அவன், கடவுளிடம்!
அவனை நெருங்கிய கடவுள், ஓங்கி ஓர் அறை விட்டார். "கடவுள் கருணை மயமானவராச்சே.. அவர் இப்படி அடிக்கலாமா?" என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். அவர் அடித்ததில் நியாயமிருந்தது.
அறை விட்ட கடவுள், பின் அமைதியாய் கேட்டார். "ஏண்டா! கடைஞ்செடுத்த வாழப்பழ சோம்பேறி! இவ்வளவு வேண்டுதல் வேண்டிக்கிட்டியே.. காசு கொடுத்து ஒரு லாட்டரிச் சீட்டை வாங்கி வச்சியாடா? நான் என்னடா செய்வேன்!"
*****
கிணத்துல பம்ப்செட்டுல குளிச்சிட்டு தோப்புல உட்கார்ந்து விளையாடறதெல்லாம் சுகமான அனுபவம்! அனுபவிச்சுப் பார்த்தாத்தான் தெரியும். முற்பகலில் குளிச்சிட்டு செஸ் விளையாடிக்கிட்டே நாங்கள் இருக்க, வீட்டுக்குக் கிளம்பும் அம்மாவிடம் "கறிக்குழம்பும் சோறும் குடுத்து விடுங்க.. இங்க வச்சு நாங்க சாப்பிடறோம்" என்று தம்பி வேண்டுகோள் விடுக்க, "இவனுங்களுக்கு நகட்டுவசத்தைப் பாரு.. பாக்கறது வெட்டிவேலை.. இதுல பந்தா வேற!" என்று அவர்கள் அலுத்துக் கொண்டு செல்ல.. ஆன போதிலும், சற்று நேரத்தில் வந்து சேர்ந்தது தூக்குவாளி. சுடச்சுட இருந்தது கறிக்குழம்பும், பொன்னி அரிசிச் சோறும் கலந்து பிரட்டிய கலவை, நன்கு வதங்கிய சிக்கன் துண்டுகளுடனும், சிக்கன் வறுவலுடனும்!
சரி..சரி.. எச்சிலை முழுங்கிக்கோங்க. வீட்டுல சமையல் ஆயிடுச்சா? அம்மா அம்மாதான்! பாசமாய் பசங்களுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்வதில் அம்மாவுக்கு நிகர் அம்மாதான்! அம்மன் புராணம் பாடினால் முக்தி கிட்டுதோ இல்லையோ, அம்மா புராணம் பாடினால் ருசியான சாப்பாடு நித்தம் நித்தம் நிச்சயம் கிட்டும்! அது போதுமே இந்த ஜென்மத்துக்கு!
மலையடிவார கிராமத்தில், பசும்புல்வெளியில், இதமான நிழலில், பக்கத்தில் நெற்பயிர்கள் பசுமையாய் விரிந்திருக்க, தென்னை ஓலைகள் காற்றில் சலசலக்க, பம்ப்செட் தண்ணீர் இரைச்சலாய் ஓடிக் கொண்டிருக்க, தூரத்தில் மயில்கள் பறந்து தானியங்களைக் கொத்திக் கொண்டிருக்க, வேப்பந்தோப்பு வாசம் இதமாய் காற்றில் கலந்து வர, மென் காற்று குளுமையை வாரியிறைத்துச் செல்ல.. இயற்கை தரும் இந்த அற்புத கணங்களை ரசித்து அதில் லயித்தபடி இருப்பதே அழகிய அனுபவம்தான்!
வணக்கம் ரிஷி. எல்லையில்லாமல் அன்பை கொடுப்பதும் அதே அன்பை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெறுவதும் ஒரு தனி சுகம்தான். எப்படியோ இயற்கை தரும் அற்புத கணங்களை நீங்கள் ரசிப்பதற்கு வாய்ப்புகள் வருகின்றன. எங்களுக்கு அப்படியா? இனியாவது வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். உங்களைப் போல். வடிவேலு அளவிற்கு கதை இல்லை. எங்கள் தலைவர் சொன்னால் அதன் அழகே தனிதான் போங்கள்.
இன்சினிரிங் முடித்த பட்டதாரியை "பொறியியல் இளையர்" என்று அழைப்பது வழக்கம். அதேபோல் இந்த படிப்பை "இளனிலை பொறியியல்" பட்டயம் என்றும் சொல்வது சிறப்பு.(யாரும் என்னை தமிழ் அகராதி ப(பி)டித்தவன் என நினைக்கவேண்டாம்).
ரிசிக்கு எனது வழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிற்ப்படைய. உங்கள் கதைக்கு உயிர் கொடுத்ததுபோல் ஒரு படகாட்சி இதோ....