 |
இதழ் 456 |
 |
பிப்ரவரி 15 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (47)
- ச.நாகராஜன் |
| | ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணை கட்டலாமோ கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே!
ஒருமுறை பிரம்மாண்டமான காட்சி ஒன்றிற்காக ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் வந்து சேர்ந்து அவரவர் இடத்தில் இருந்தனர். படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கும் தருணத்தில் சிசில் பி டெமிலி ஓகே சொல்வதற்கு முன்னர் துணை நடிகர்கள் கூட்டத்தை நோக்கி ஒரு கண்ணோட்டம் விட்டார். திடீரென்று படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டாம் என்று கூறி கூட்டத்தில் இருந்த இரு நடிகர்களின் ஆடைகளைச் சுட்டிக் காண்பித்து "என்ன இது?" என்றார்.
அந்த பிரம்மாண்டமான காட்சியில் காமரா நிச்சயம் அந்தத் துணை நடிகர்களை முழுவதுமாகக் காட்டப் போவதில்லை. உடை பற்றாக்குறை காரணமாக, இருப்பதை வைத்து இந்த ஷாட்டை முடித்து விடலாம் என உதவியாளர்கள் திட்டம் தீட்டி அவர்களை சுமாரான ஆடைகளில் நிறுத்தி வைத்திருந்தனர். சிசில் பி டெமிலி அந்த இரு துணை நடிகர்களுக்கும் ஏனைய நடிகர்களைப் போல உடைகள் இருந்தால்தான் ஷாட் எடுப்பேன் என்று கண்டிப்பாகக் கூறி விட்டார். உடைகளும் தைக்கப்பட்டன. ஷாட்டும் ஆரம்பமானது.
இன்னொரு சம்பவம்!
இதுவும் ஏராளமான துணை நடிகையர் இடம் பெற்ற படப்பிடிப்புதான். படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிசில் பி டெமிலி காட்சி அமைப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கிப் பேச ஆரம்பித்தார். அனைவரும் அவரது பேச்சை உன்னிப்பாகக் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் எங்கோ இருந்து சிறிய சப்தம் வந்தது. டெமிலி பேச்சை நிறுத்தினார். குரல் வந்த திசையை நோக்கினார். ஒரு துணை நடிகை பக்கத்தில் இருந்த தனது தோழியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரையும் "வாருங்கள் இங்கே" என்று அதட்டிக் கூப்பிட்டார் அவர். பயந்து நடுநடுங்கிய அவர்கள் தயங்கித் தயங்கி அவர் அருகே வந்து நின்றனர். கூட்டத்தில் ஒரே நிசப்தம். என்ன நடக்கப் போகிறதோ என்று இனம் புரியாத கலக்கம் அங்கு நிலவியது.
"காட்சி அமைப்பை விளக்கி நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இதையும் மீறி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால் எனது காட்சி அமைப்பு சம்பந்தமான பேச்சை விட உங்கள் பேச்சு இன்னும் முக்கியமானதாகத்தான் இருக்க வேண்டும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த உங்கள் பேச்சை எல்லோரும் கேட்கட்டும். சொல்லுங்கள், என்ன பேசினீர்கள்" ஒரு பெரிய டைரக்டரின் உரத்த குரலில் நடுநடுங்கிப் பொடிப் பொடியானார்கள் அந்த இருவரும்! வாயே திறக்கவில்லை. "உம், சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் வரை இந்தக் காட்சியின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவே ஆரம்பிக்காது" அவர் கண்டிப்பாகக் கூறினார்.
தயங்கித் தயங்கியவாறே, முதல் நடிகை, "நான்தான் பேசினேன். இந்தப் பயல் பேசிக் கொண்டே இருக்கிறானே! நீண்ட நேரம் ஆகிறதே, பசிக்கிறதே! எப்போது உணவுக்காக இடைவேளை விடப் போகிறானோ" என்று சொன்னேன் என்றாள். உண்மையை அடுத்த நடிகையிடம் சரிபார்க்கத் தேவையில்லாதபடி தான் கூறிய சொற்களையே அவர் அப்படியே கூறி விட்டார். கூட்டம் அப்படியே ஸ்தம்பித்து விட்டது.
ஒரு நீண்ட நிசப்தம் நிலவியது.
"இடைவேளை" என்று உரத்த குரலில் கூவி விட்டு சிசில் பி டெமிலி அங்கிருந்து நகர்ந்தார்! பிரம்மாண்டமான காட்சிகளால் தயாரிப்பு செலவு கூடிக் கொண்டே போகிறதே என்று தயாரிப்பாளர்களின் முணுமுணுப்பு அவர் காதிற்கு வந்த போது, "என்ன செய்வது, செலவுக்குப் பயந்து டென் கமாண்ட்மென்ட்ஸிற்கு பதிலாக, ஃபைவ் கமாண்ட்மென்ட்ஸுடன் படத்தை அரை குறையாக முடிக்க என்னால் முடியாதே!" என்று கூறினார் அவர்.
ஆக, பிரம்மாண்டமான செட் என்றால் அதனுடன் கூடவே ஏராளமான நடிக, நடிகையர், கூடுதலான செலவு, கூடுதலான நேரம், கூடுதலான உழைப்பு என்று எல்லாமே கூடத்தான் வரும்! இந்த கனவுத் தொழிற்சாலையை நம்பி வயிறு வளர்ப்போருக்கு சிறிது "காசு பார்க்க" வாய்ப்புத் தருபவை இத்தகைய காட்சிகளே!
இந்த வகையில் பிரம்மாண்டமான படப்பிடிப்புகளை தமிழகத்தில் நடத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த ஜெமினி எஸ்.எஸ். வாசனின் 'வஞ்சிக் கோட்டை வாலிபன்' (1958) படத்தில் வந்த நடனக் காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்தது.
நடனம் ஆடியோர் சாதாரணமான நடனப் பெண்மணிகள் இல்லை, நாட்டியப் பேரொளி பத்மினி ஒரு புறம்; நடனத்திற்கு இலக்கணம் கற்பிக்கும் வைஜயந்திமாலா இன்னொரு புறம். இதில் நடனப் போட்டி என்று காட்சி அமைப்பு இருந்தது. யார் வென்றாலும், படப்பிடிப்பில்தான் என்றாலும் கூட இன்னொருவருக்கு "ஈகோ" பிரச்சினை வந்து விடும். ஆகவே வெற்றி தோல்வி இன்றி வேறொரு சம்பவம் மூலம் கதை நகர்ந்து செல்வதாக அமைக்கப்பட்டது. "சபாஷ், சரியான போட்டி" என்று பி.எஸ். வீரப்பா பேசும் வசனம் இன்றும் அனைவராலும் பேசப்படும் பஞ்ச் டயலாக்காக ஆனது!
பாடலைப் பார்ப்போம் :-
பத்மினி: ஏனோ இன்பமே புதுமையாய் காண்பதேன் காதல் என்பது இதுதானோ இதுதானோ அறியேனே
பத்மினி: கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே கன்னி என்றேனடி கைகளைப் பிடித்தார் காதலி என்றென்னை கொஞ்சியே அழைத்தார்
வைஜயந்திமாலா: ஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே கலகல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய் ஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே கலகல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய் ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி ஆடுவேன் பாரடி இனி அனைவரும் மயங்கிட கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாரடி
பத்மினி: ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும் அன்பின் பாதையில் அணை கட்டலாமோ ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும் அன்பின் பாதையில் அணை கட்டலாமோ பேதைமையாலே மாது இப்போதே காதலை வென்றிட கனவு காணாதே
வைஜயந்திமாலா: சாதுரியம் பேசாதடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி சாதுரியம் பேசாதடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
பத்மினி: ஆடும் மயில் எந்தன் முன்னே எந்த ஆணவத்தில் வந்தாயடி பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி - நீ படமெடுத்து ஆடாதேடி
வைஜயந்திமாலா: இன்னொருத்தி நிகராகுமோ எனக்கின்னொருத்தி நிகராகுமோ இடி இடித்தால் மழை ஆகுமோ பேதைப் பெண்ணெ இன்னொருத்தி நிகராகுமோ
பத்மினி: மின்னலுக்கு அஞ்சேனடி வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி இந்த மின்னலுக்கு அஞ்சேனடி வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி
இந்தப் பாடல் தமிழகத்தில் ஏற்படுத்திய பரபரப்பு திரைப்படச் சரித்திரத்தில் தனி இடம் பெறும்!
(தொடரும்)
|
| | ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள்.
| திரைச்சாரல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|