இசை என்பது ஒரு பெரிய கடல். அதில் மூழ்கி முற்றாக முத்தெடுத்தவர் யாரும் இல்லை. திரைப்படப் பாடல்கள் இசைக் கடலில் ஒரு சிறு பகுதி! தமிழில் ஆயிரக்கணக்கான பாடல்கள் மலர்ந்துள்ளன.
திரை இசையையே சற்றும் ஒத்துக் கொள்ளாத ஒரு காலமும் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அதன் ஜனரஞ்சகத் தன்மையின் வலிமை நாளுக்கு நாள் வலுப் பெற்றதால் அதை அனைவரும் அங்கீகரிக்க வேண்டிய காலமும் மலர்ந்தது. தமிழ்த் திரைப்படங்களில் வெளிவந்த பல பாடல்களே இசையின் மகிமையைத் தெளிவாக உணர்த்தும் பாடல்களாக அமைந்துள்ளன!
சங்கீத சௌபாக்கியமே என்றும் குன்றாத பெரும் பாக்கியமே!
இசை என்பது ஒரு பெரிய கடல். அதில் மூழ்கி முற்றாக முத்தெடுத்தவர் யாரும் இல்லை. திரைப்படப் பாடல்கள் இசைக் கடலில் ஒரு சிறு பகுதி! தமிழில் ஆயிரக்கணக்கான பாடல்கள் மலர்ந்துள்ளன.
திரை இசையையே சற்றும் ஒத்துக் கொள்ளாத ஒரு காலமும் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அதன் ஜனரஞ்சகத் தன்மையின் வலிமை நாளுக்கு நாள் வலுப் பெற்றதால் அதை அனைவரும் அங்கீகரிக்க வேண்டிய காலமும் மலர்ந்தது. தமிழ்த் திரைப்படங்களில் வெளிவந்த பல பாடல்களே இசையின் மகிமையைத் தெளிவாக உணர்த்தும் பாடல்களாக அமைந்துள்ளன!
'சங்கீத சௌபாக்கியமே என்றும் குன்றாத பெரும் பாக்கியமே' என்று சம்பூர்ண ராமாயணத்தில் ஒலிக்கும் பாடல் சௌபாக்கியம் எது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற வார்த்தைகள், ஸ்வரங்கள் தரும் எண்ணற்ற இசை வடிவங்களைச் சுட்டிக் காட்டுகின்றன.
'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாடல் கீதத்தின் மகிமைகளைக் கூறுகிறது. 'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்' என்ற பாடல் நடனத்தையும் இசையையும் இணைக்கிறது. கல்யாணப் பரிசு படத்தில் 'துள்ளாத மனமும் துள்ளும்' பாடலில் 'துன்பக் கடலைத் தாண்டும்போது தோணி ஆவது கீதம், அன்புப் பொருளை அமுதம் கலந்தே அருந்தத் தருவது கீதம் எங்கும் சிதறும் எண்ணங்களையும் இழுத்து வருவது கீதம் இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர் இருளை மறைப்பதும் கீதம்' என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பொருள் பொதிந்த வரிகள் கீதத்தின் ஆழ்ந்த வலிமையைச் சுட்டிக் காட்டும் வரிகள்!
இசையின் இறைத்தன்மையை 'பாட்டும் நானே பாவமும் நானே' என்ற (திருவிளையாடல் படம்) சிவபெருமானின் கூற்று எடுத்துக் காட்டுகிறது. ஷேக்ஸ்பியரின் “இசைக்கு மயங்காத ஒருவன் கெடுகிறான்" என்றார்.
(The man that hath no music in himself Nor is not moved with concord of sweet sounds Is fit for treasons, stratagems and spoils - Shakespeare)
ஆக, இசையின் ஒரு அங்கமாக இன்று ஆகி விட்ட திரைப்படப் பாடல்களை இனியும் யாரும் ஒதுக்க முடியாது. அதே சமயம் அதில் கலந்திருக்கும் நச்சுக் கருத்துக்களையும் அங்கீகரித்து விட முடியாது.
ஹாலிவுட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் வசனகர்த்தாவும் ஆன பென் ஹெச்ட் ஒரு முறை, "நான் ஒரு ஹாலிவுட் எழுத்தாளர்; ஆகவே எனது மூளையைக் கழட்டி விட்டு ஸ்போர்ட்ஸ் ஜாக்கட்டை அணிந்து கொண்டு விட்டேன்" என்றார்! (Ben Hecht : I'm a Hollywood writer, so I put on a sports jacket and take off my brain.)
இதே போலவே சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றபடி தங்களின் விருப்பமின்றியே சில டியூன்களை இசை அமைப்பாளர்கள் அமைத்தனர்; சில பாடல்களை கவிஞர்கள் எழுதினர்; சில பாடல்களை பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பாடினர்.
எலந்தப்பழம் பாடலின் அசாத்திய விற்பனையைக் கேள்விப்பட்டு கண்ணதாசன் மனம் மகிழவில்லை; ரசனை இப்படி இருக்கிறதே என்று மிகவும் மனம் வருந்தினார்! இந்தத் திரைப்பாடல்களில் நல்லனவற்றை வாழ்வின் வளத்திற்காக எடுத்துக் கொண்டு அல்லாதவற்றை விட்டு விடுவதே சாலச் சிறந்தது, பொருத்தமானதும் கூட.
கடந்த பல வாரங்களாக (இந்த இதழுடன் ஒரு வருடம்) பல்வேறு பாடல்களின் சுவையில் திளைத்தோம். இந்தப் பாடல்கள் மட்டுமே சிறந்தவை என்றோ அல்லது இதைப் பாடியவர்கள், பாடல்களை எழுதிய கவிஞர்கள் அல்லது இசையமைப்பாளர்கள் மட்டுமே சிறந்தவர்கள் என்றோ யாரும் தவறாக நினைத்து விடக் கூடாது. பொங்கி வரும் பெரும் கடல் அலைகளில் அனைவரும் ரசித்த அலைகள் இவை. அனைவரும் ரசித்தவற்றில் திரை இசையின் பல்வேறு அம்சங்களைச் சுட்டிக் காட்டும் வண்ணம் இந்தப் பாடல்கள் ஒரு மெல்லிய சூத்திரத்தில் இணைக்கப்பட்டு தரப்பட்டன! தேர்ந்த ரசிகர்கள் இந்த மெல்லிய இழையைக் கண்டு ரசிக்கலாம்!
கர்நாடக இசையில் ஆரம்பித்து மெல்லிசைக்கு மாறி வெவ்வேறு ராகங்களை ஜனரஞ்சகமாக, சுவைக்கும்படியாக இனிய திரைப்படப் பாடல்களாக மாற்றிய மேதைகளின் ஒரு சகாப்தத்தின் ஒரு பகுதியையே இங்கு பார்த்தோம்.
மாறிக் கொண்டே இருந்த தமிழ்த் திரையுலகம் காலத்திற்கேற்ற ஒரு பெரிய மாற்றத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தது. ஏதோ ஒரு புதிய இசை வரவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். மண்ணின் மனத்தை அள்ளிக் கொடுத்து இசை ஞானி இளையராஜா காலச் சுழற்சியில் உதிக்கவே அனைவரும் ஆனந்தமாக புதிய இசை வெள்ளத்தை வரவேற்றனர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன் இனிய குரலுடன் திரை இசை உலகில் நுழைந்தார். ஆக, அடுத்த பொற்காலம் உதயமானது. தொடர்ந்து, இவற்றையும் பார்க்க மனம் விழைவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ஆனால் இப்படி ஒரு தொடர் எழுதும் போது எழுதுபவர் அடையும் சிரமம் பல. முதலில் திரை சரித்திரம் அதிகாரபூர்வமாகத் தொகுக்கப்படவில்லை. அதில் ஈடுபட்ட கலைஞர்கள் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை பேட்டிகளின் போது தங்கள் நினைவுகளை அள்ளித் தெளிக்கின்றனர். இவற்றில் அவர்களுக்கே தெரியாமல் ஏராளமான பிழைகள் வெவ்வேறு காரணங்களால் இடம் பெற்று விடுகின்றன. இவற்றைச் சரி பார்த்துத் தொகுப்பது ஒரு பெரிய வேலை!
இதையும் மீறி இணைய தளத்திற்குப் போனால் அங்கே தவறான தகவல்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதைப் பார்த்து திடுக்கிட வேண்டியதாக இருக்கிறது. வருடத்தில் மாறுதல், பாடகர் பெயர் மாறுதல், பாடலாசிரியர் மாறுதல், பாடல் வரிகளில் மாறுதல் என இப்படிப் பல பிழைகள்! சில பாடல்கள் கிடைப்பதே இல்லை! ஆக முறையான ஒரு தொகுப்பு இன்றியமையாததாகிறது. இந்தப் பெரும் பணியை அரசும் திரையுலகும் இணைந்து செய்தால் அனைவரும் மகிழ்வர்.
இது தவிர இன்னொரு முக்கியமான வினா - திரைப்படப்பாடல்கள் இலக்கிய அந்தஸ்தைப் பெற முடியுமா என்பதுதான்! உதட்டைப் பிதுக்கி ஏளனமான பார்வையோடு இப்படி ஒரு கேள்வி கூடக் கேட்கலாமா என்று அபிநயம் பிடிப்போர் ஏராளம்! இலக்கிய அந்தஸ்தைக் கொடுக்க வழி இருக்கிறதா என்று பார்க்க விழைபவர் வெகு சிலர்! ஆனால் விருப்பு வெறுப்பின்றி திரைப்படப் பாடல்களில் கவிதை ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தால், கவிதைக்கான உரைகல்லை வைத்துத் தேய்த்துப் பார்த்தால், நல்ல திரைப்படப் பாடல்களும் இலக்கியத்தின் ஒரு பகுதியே என்பதை உணர முடியும். சந்த சாஸ்திரமும் யாப்பு இலக்கணமும் இல்லாத பாடல்களை எப்படி இலக்கியம் எனக் கூற முடியும் என்ற சர்ச்சை எப்போதும் இருந்து வரும் ஒன்று!
ஆனால் அந்த இலக்கியத் திறனாய்வு ஒரு நல்ல முயற்சியாக இருக்கும்; பல்வேறு விதங்களில் திரை இசை ஆராய்ச்சி இதே இதழில் நிச்சயம் தொடரும்.
வாசகர்களின் ஆதரவிற்கும் நிலாச்சாரல் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று முகம் பார்க்காத நிலையிலும் வெவ்வேறு நாடுகளில் இருந்து நன்கு ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர் குழுவினருக்கும் நிலாச்சாரல் ஆசிரியர் நி லாவிற்கும் நன்றி, நன்றி ,நன்றி என்று உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.
விரைவில் புதிய இசை பிரவாகத்தில் மீண்டும் சந்திப்போம்.
Through Nilacharal Thiru S. Nagarajan has written a Ph.D submittal on Tamil Thirai Isai Paadalgal. We, the readers, expected that at least this will go further, but to our dismay it has ended now. We hope Mr.Nagarajan will continue this in a new dimension about this Subject soon.
Likewise, another unique dimension that has adopted Comedy as a part and parcel of the Tamil Films. We can easily notice that our Tamil Film Industry has given an importance place to Comedy which no other Film Industry in the World has not given. Mr.Nagarajan has to compile about the Comedy and Comedy Artors/Actors.
Another separate two books he can write especially on Kavignar Kannadasan and Kavignar Vaali.
Awaiting another interesting subject soon in Nilacharal.
மறக்க முடியாத எத்தனையோ பாடல்களை இந்தக் கட்டுரைத்தொடர் தொட்டுக் காட்டியுள்ளது. வலைத்தளத்தில் பல திரைப்பாடல்கள் பிழையுடனே உள்ளன என்பது உண்மைதான். பொறுமையாகவும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடனும் திரு.ச.நாகரஜன் தம்மோடு நம்மை அழைத்துச் சென்ற திரை இசைப் பயணம் ஒரு மாபெரும் வெற்றிப் பயணம் என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மைதான்!
மிகுந்த மெனக்கெடலுடன் திரையிசைப் பயணத்தைத்தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும். பாடல்கள் இல்லாத தமிழ் சினிமாவைக் கற்பனை செய்யவே இயலவில்லை. அந்த அளவுக்கு பாடல்கள் நம் வாழ்க்கையுடன் ஒன்றியுள்ளன. சந்தோஷமோ, துக்கமோ, நல்ல தமிழ்ப்பாடல்களைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்வது உண்மை. உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துகள்.
மிகவும் பயனுள்ள தொடர். தாமதமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன், ஆனால் படிக்க ஆரம்பித்ததும் முழுதும் படிக்காமல் இருக்க முடியவில்லை. இத்தோடு முடிந்து போகிறது என்றதும் வருத்தமாக உள்ளது. எண்பதுகளின் திரை இசையைப் பற்றி இன்னொரு தொடரை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
நம் நினைவில் சுழலும் திரைஇசை கானங்களைப் பற்றிய ச,நாகராஜனின் இந்த தொடர் தமிழ்திரை இசை ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெகுமதி. என்னை போன்ற வானொலி கலைஞர்களுக்கு ஈடற்ற பொக்கிசம். இந்த இசை பயணம் என்றென்றும் தொடரட்டும்! கே.பிரபாகரன்,காரைக்கால். prabak78@gmail.com