குறுக்கு வழிகளில் பாவத்தை விதைத்து கொள்ளை கொள்ளையாய்ப் பணம் சம்பாதிப்பவன்தான், அதன் மூலம் மன உளைச்சல்களை அறுவடை செய்கிறான். அதை சரி செய்ய என்ன தொகை வேண்டுமானாலும் செலவிடத் துணிகிறான்.
ஹாய் ஃபிரெண்ட்ஸ்,
Domino effect கேள்விப்பட்டிருக்கீங்களா? சங்கிலித் தொடர் போன்ற செயல்பாடு (Chain reaction) என்று சொல்லலாம். ஒரு வினை தொடச்சியாக ஒரு வித ரிதத்தில் நடைபெறுவது என்றும் கூறலாம். குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ச்சியாக நிகழ்வதுதான் இந்த Domino effect.
இவ்வினை நிகழும்போது பெரும்பாலும் அதை நம்மால் தடுத்து நிறுத்த முடிவதில்லை. அது ஏதோ ஒன்றில் தானே முட்டி நிற்கும்போதுதான் நிற்கும். உதாரணத்திற்கு, ஓரிடத்தில் வரிசையாக மிதிவண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக எடுத்துக் கொள்வோம். முதல் மிதிவண்டியைத் தள்ளி விட்டோமானால் சடசடவென அடுத்தடுத்த வண்டிகள் ஒன்றின் மேல் ஒன்று சரிந்து விழுவதைக் காணலாம். அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக் கட்டுகளின் சரிவையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இந்தத் தொடர் நிகழ்வைத் தடுத்து நிறுத்துவது என்பது இயலாததாகவே இருக்கிறது.
மேலும், இதற்கு அறிவியல் ரீதியான நுணுக்கமான விளக்கங்கள் தலையைச் சுற்ற வைப்பதாகவே இருக்கின்றன! அதை எளிமையாகச் சொல்லும் பொறுப்பை டாக்டர். சுப்பிரமணியனிடமோ, டாக்டர் விஜயராகவனிடமோ விட்டு விடலாம்!
அதே போல, Critical mass என்று வேதியியலில் ஒரு வார்த்தை வருகிறது. Mass என்றால் நிறை என்பது பொருள். ஒரு கனமான பொருளை நகர்த்தி விட ஒரு வலுவான நெம்புகோல் தேவை. அந்த கனமான பொருள் தானே நகர்ந்து செல்ல வேண்டுமானால், அந்த நெம்புகோலிலிருந்து ஒரு வலுவான விசை செலுத்தப்பட வேண்டும். அந்த விசை அடுத்தடுத்து செலுத்தப்படும்போது Critical mass எனும் நிலை அவ்விடத்தில் உருவாகிறது. அந்நிலைக்குப் பின் முதலில் சொன்ன தொடர்வினை நடைபெற ஆரம்பித்து விடுகிறது.
ஓகே ஒகே.. உங்கள் பொறுமையை மேலும் மேலும் சோதித்துக் கொண்டே செல்ல மாட்டேன். இந்த Critical massஐப் பற்றி நம்ம எடிட்டரம்மாவிடம்தான் கற்றுக் கொண்டேன். நிலாச்சாரல் தனிநபர்களைச் சார்ந்து இயங்காமல் அது தானே இயங்க வேண்டும். அதற்குத் தேவை ஒரு Critical mass. அதை அடைவதற்கான முயற்சிகள் நமக்கு அவசியம் என்பார்.
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சமீப காலங்களில் - கடந்த பத்து வருடங்களில் - என்று வைத்துக் கொள்ளலாம். இந்த Domino Effect-இன் பதிவு பல இடங்களில் பல துறைகளில் இருப்பது போலத் தோன்றுகிறது. மிக அருமையான உதாரணம், சமீபத்தில் பத்திரிகைகளில் சரமாரியாய் 'அடிபட்ட' ஆன்மிகவாதி. பலரை, பல விஷயங்களை உதாரணம் காட்ட முடியும் என்றாலும், எனக்கென்னவோ அவரை உதாரணம் காட்டத்தான் பிடித்திருக்கிறது!!
பொதுவாக, ஆன்மிக குரு என்பவருக்கு அதிகம் ஆசையிருக்காது என்பர். அப்படி இருப்பவர்தான், ஒரு வித பற்றற்ற நிலையில் இருப்பவர்தான் சிந்தனை தடம் மாறாமல் செல்ல முடியும். மக்களை முக்தி நிலை நோக்கிக் கொண்டு செல்ல முடிகிறவருக்கு, கொண்டு செல்ல வழிகாட்டுபவருக்கு கணக்கில்லாமல் கரன்சிகளை கறக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
Living Enlightened Master என்கிறார்கள். எப்பேர்ப்பட்ட வார்த்தை! வெகு சாதாரணமாய் உபயோகித்து விட்டார்கள்! எனில், புத்தர், மகாவீரர் போன்றோரையெல்லாம் என்னவென்றுரைப்பது!! லௌகீக வாழ்க்கையில் நாம் காணும் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு, சுக போகங்களில் திளைத்துக் கொண்டு வாழ்பவர்கள் எந்த வகையில் மகான்களாகி விடுகிறார்கள் என்பது தெரியவில்லை.
ஆன்மப் பயிற்சி, தியானப் பயிற்சி, தீட்சை வழங்குதல் போன்றவற்றை வைத்துக் கொண்டு, மீடியாக்களின் மூலம் வெளிச்சம் பெற்று மளமளவென நாலு கால், எட்டு கால், பதினாறு கால் என Exponential ஆக விரிவு பெற்று ஒரு பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டியிருப்பது பிரமிக்க வைக்கிறது. Domino effect என்பதாகத்தான் இதைக் கருத வேண்டியிருக்கிறது.
நேர்மையான வழிகளில் பணம் சம்பாதிப்பவன் எவ்வித மன உளைச்சலுக்கும் இரையாக மாட்டான். அவனது உற்றம் மற்றும் சுற்றத்தின் மூலம் வாழ்வியல் ரீதியான தொடர்பாடல்கள் மூலம் வேண்டுமானால் அவனுக்கு மன அழுத்தங்கள் நேரலாமே ஒழிய, பணம் எவ்விதத்திலும் அவனுக்குப் பாதிப்பைத் தராது.
ஆனால் குறுக்கு வழிகளில் பாவத்தை விதைத்து கொள்ளை கொள்ளையாய்ப் பணம் சம்பாதிப்பவன்தான், அதன் மூலம் மன உளைச்சல்களை அறுவடை செய்கிறான். அதை சரி செய்ய என்ன தொகை வேண்டுமானாலும் செலவிடத் துணிகிறான். அப்படிப்பட்ட நபர்கள் கொட்டும் லட்சங்களிலும், கோடிகளிலும் திளைத்துக் கொண்டிருப்பவர் எப்படி சிறந்த மகான் ஆவார் என்பது புரியவில்லை. அவர் தலைசிறந்த சிந்தனைகளை போதித்திருந்தாலும் கூட, அது டோட்டல் வேஸ்ட் என்பது என் தனிப்பட்ட கருத்து!
கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்று கோடிகளைக் கொட்டி திரைப்படம் எடுக்கிறார்களே அது போன்றதுதான் இது. அக்கோடிகளில் குறிப்பிடத்தக்க பகுதி கறுப்புப் பணமாகத்தான் இருக்கும் என்பது வெள்ளிடைமலை!
ஆன்மிகம் என்பது உள்ளே ஏற்பட வேண்டிய மாற்றம். நம்மையும், நம்மைச் சுற்றியிருக்கும் சமுதாயத்தையும், நம் செயல்கள் ஏற்படுத்தும் விளைவுகளையும் நன்கு அறிந்தவன், அறிந்து உணர்ந்தவன் இது போன்ற ஜிகினாப் பூச்சுகளை நம்ப மாட்டான், விலகியே இருப்பான்!
இது மட்டுமா.. ரியல் எஸ்டேட் பிஸினஸிலும் விலையேற்றம் என்பது இந்த Chain reaction சார்ந்தே இயங்குகிறது. சரியாக விலை பெறாத, விலை உயராத ஒரு பெரும் நிலப்பரப்பை, பிளாட்டுகளாகப் பிரித்து, ஓரிரு வீடுகள் எனும் Critical mass-ஐ ஏற்படுத்தி விட்டால் போதும். வெகு விரைவில் விரிவடையப் போகிற ஏரியா என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி பெரும் விலைக்கு விற்றுத் தீர்த்து விடக் கூடியதுதான் ரியல் எஸ்டேட் பிஸினஸ்.
இதே போன்றதொரு பிஸ்னஸ்தான் மல்டிலெவல் மார்க்கெட்டிங். பணச் சங்கிலியில் தங்களை இணைத்துக் கொள்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கீழே எவ்வளவு தூரம் சங்கிலிகளை இணைத்துச் செல்ல முடிகிறது என்பதைத்தான் பார்ப்பார்கள். தங்களுக்கு மேலே உள்ளவர்கள் அதன் பலனை எவ்வித உழைப்புமில்லாமல் அனுபவிக்கிறார்களே என்ற உணர்வெல்லாம் அவர்களுக்கு இருக்காது.
கிரிக்கெட் எனும் விளையாட்டை வைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் பிஸினஸாக ஆக்கியிருப்பது அடேங்கப்பா போட வைக்கிறது! ஐ.பி.எல்லைப் பற்றித்தான் சொல்கிறேன். ஐ.பி.எல். பிராண்டின் மதிப்பு இன்றைய தேதியில் 19000 கோடியாம்!! தலை கிறுகிறுக்கிறது! Domino effect????
ஆன்மிக வியாபாரமும் இப்படித்தான் ஆகிறது!! விழித்துக் கொள்பவர்கள் மட்டுமே உண்மை நிலையைக் காண்பார்கள். இறைத்தன்மை அடைய விரும்புவோருக்கு இடைத்தரகர்கள் தேவையே இல்லை! சரிதானே?
கனமான விஷயங்களைப் பேசும்போது இழுத்துக்கொண்டே போகக்கூடாது. உங்கள் சிந்தனையையும் சுழல விட வேண்டுமல்லவா...!
காற்று வரட்டுமே என்று கதவைத்திறந்தால் கண்ட கஸ்மாலங்கள் வருகிறதே?சுவாமிகளின் ஆனந்த நித்திரையை ரஞ்சித மலரின் மோகமுத்தம் கலைத்துவிட்டது போலும்.போலி சாமியார்கள் உருவாவதற்கு போலி பக்தர்கள் தான் காரணம் என்பதை யாரும் மறக்க கூடாது.ஒரு விஷயம் எனக்கு அடங்காத வியப்பு ரிஷி,ஊழலில் சிக்கும் அரசியல்வாதியாகட்டும் லீலைகளில் மாட்டும் ஆன்மீகவாதியாகட்டும் பிடிபட்டு தன் பிம்பம் கலைந்த பிறகும் எப்படி அவர்களால் அகல அகலமாக சிரிக்கமுடிகிறது?
ரொம்ப கரெக்ட் ரிஷி. இன்னமும் எத்தனியோ குழந்தைகள் ரோடு ஓரங்களிலும் சாப்பாட்டுக்கும் கல்விக்கும் கஷ்டப்படும் போது அவர்களுக்கு உதவாத மக்கள் இந்த மாதிரி ஆன்மீகம் என்ற போர்வையில் வாழும் இவர்களை பார்க்க ஐந்தாயிரம் பத்தாயிரம் என பணத்தை கட்டி போகின்றனர். என்று திருந்தும் இந்த மக்களின் மனம்.
அண்ணே, ரொம்ப அருமையான கட்டுரை. மக்கள் குறுக்கு வழியிலயே போய் பழகிட்டதால ஆண்டவனையும் குறுக்கு வழியில அடைய ஆசைப்படுகின்றனர். இவர்கள் திருந்தும் வரை இது போன்ற சாமியார்கள் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள்.
வாங்க மாலீக். ஏரியாக்குள்ள எப்போதாவதுதான் வர்றீங்க..!! முகமூடி இல்லாத மனிதர்களே இல்லை மாலீக். அப்படி யாரேனும் இருந்தால் அவர்களை அவர்களால் மட்டுமே உணர முடியும். பிம்பம் எப்போது வேண்டுமானாலும் கலையக் கூடும் என்பதை அறிந்திருப்பதனாலேயேதான் அதன் வலியை அவர்கள் உணர்வதில்லை.
லதா, தம் நேர்மையான உழைப்பில் நம்பிக்கை வைத்து அதற்கேற்ற வகையில் வரும் வெகுமதியை மட்டும் விரும்பி ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே எப்போதும் ஆனந்தத்தில் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அதைத் தவிர்த்த வேறு எவ்வழியும் மன சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி அது கொடுத்தால் பின்னால் வேறு ஏதோ ஒரு வகையில் மனக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடும் என்றும் தோன்றுகிறது!!
தம்பி, இறைவன் உறைந்திருப்பதாகக் கூறப்படும் ஆலயத்திலேயே அவனை விரைவாக சந்திக்க குறுக்கு வழிகள் உள்ளனவே! சப்ளை என்பது டிமாண்ட் இருக்கும்வரை மட்டுமே..! மனக் கஷ்டம் நீங்க வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்ற மனநிலையில் உள்ளவர்கள் இருக்கும்வரை, "அதைப் போக்குகிறேன் பேர்வழி" என்று சப்ளையர்கள் உருவாகத்தான் செய்வார்கள்!! காலம் பலவற்றைக் கற்றுத் தருகிறது. புரிதலும், உணர்தலும்தான் நமக்கு வேண்டும்!
வணக்கம் ரிஷி. கட்டுரை அருமை. ஒவ்வொரு வாரமும் நாட்டில் நடக்கு அவலங்களை கட்டுரை வாயிலாக வெளிப்படுத்தி உங்களையும் ஆசுவாசப் படுத்தி வாசகர்களின் குமுறல்களையும் இதன் மூலம் வெளிப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.