இந்த வாத்தியாரைய்யா பத்திச் சொல்லலியே.. அவர் நம்ம காதைப் பிடிச்சி திருகினார்னா.. நம்ம முகம் உலக வரைபடத்துல இருக்கற மாதிரி வளைவு நெளிவுகளாயிடும்!! அய்யோ.. அவரைப் பார்த்தாலே பயம்.
ரிஷி ராக்ஸ் (முதல் 25 பகுதிகள்) மின்னூலாகப் பெற:
என் இனிய நண்பர்களே!
எப்படி இருக்கீங்க..? கோடை வெயில் போட்டுக் கொளுத்துகிறதா?
நம்ம ஊரு சும்மாவே கந்தக பூமி. வறட்சியான பிரதேசம். இதுல வெயில் படுத்தற பாடு..ஸ்ஸ்.. அப்பப்பா.. இப்பவே வியர்க்க விறுவிறுக்கத்தான் டைப்பிக்கிட்டிருக்கேன். சனிக்கிழமை மதியம் மூன்று மணி. கரண்ட் வேறு இல்லை. யூ.பி.எஸ். புண்ணியத்தில்தான் உங்களோட பேச முடியுது! இங்கு இப்பவே ஐந்து மணி நேர பவர் கட் நடக்குது. வழக்கம்போல நமக்கும் ஆற்காட்டார் அவர்களை 'வாழ்த்தி' துதி பாடாவிட்டால் அப்புறம் தூக்கமே வராதே!
சிவகாசி, விருதுநகர் ரெண்டுமே கிட்டத்தட்ட பாலைவனமாகிக் கொண்டிருக்கின்றன. பட்டாசுத் தயாரிப்பினால் காற்றில் கலக்கும் கரி மருந்துகள் வளிமண்டலத்தில் அப்படியே செட் ஆகி சூரியனின் உக்கிரத்துடன் கலந்து நம்மைப் போட்டுத் தாக்குவது போன்றதொரு தோற்றம் ஏற்படுகிறது. மழையப்பா.. கருணை காட்டுமப்பா!
விருதுநகரில் கவுசிகா நதி(!!)யைக் காணவில்லை என்று நோட்டீஸ் அடிச்சு ஒட்டியிருக்கிறார்கள். வடிவேலு ரசீதைக் கையில் வைத்துக் கொண்டு ''என் கிணறு.. என் கிணறு.. காணோம்.. ஐயா..'' என்று கிணற்றைத் தேடிய கதைதான்!! முட்புதர்களின் ஆக்கிரமிப்பும், சாக்கடைக் கழிவுகளின் தாராள வருகையும் ஜீவ நதியை ஜீவனில்லாமல் செய்து விட்டன. வெளிப்பார்வைக்கு இது பத்துக் கூவங்களில் பதினோறாவது கூவம்.. அவ்வளவுதான்!
விருதுநகரில் பாதாள சாக்கடைத் திட்டம் நடந்து வருவது உங்களுக்கெல்லாம் சொல்லியிருக்கிறேன். மன்றக் கூட்டத்தில் இந்தச் சாக்கடையை எங்கு போய் விடுவது என்ற பேச்சு வரும்போது, கவுசிகா நதியில் கொண்டு போய் சேர்த்து விடலாம் என்று தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறார்கள்!! அதிலும் ஒருவர் தீர்மானத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்க, ''அடடா! இவர் ஒருவராவது ஆற்றின் மீது கரிசனம் காட்டுகிறாரே..'' எனப் பார்த்தால், கடைசியில், ''அதை ஏற்கெனவே அங்குதானே திருப்பி விட்டிருக்கிறோம். அப்புறம் எதற்கு தீர்மானம் போட்டுச் சொல்ல வேண்டும்... அதெல்லாம் வேண்டாமப்பா..'' என்று கூறி நகைக்கிறார்!
ஆட்சியாளர்களின் தொலைநோக்குப் பார்வைகள் வாழ்க!
போதும்.. போதும்.. சொந்த ஊர் புராணம்.. அறுக்காம வேற ஏதாவது இன்ட்ரெஸ்டிங்கான விஷயத்துக்கு வாய்யான்னு நீங்க சொல்றதும் கேட்காம இல்லை.. வர்றேன்.. வர்றேன்.
இதையும் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். நான் பொறந்தது ஒரு ஊரு, வளர்ந்தது ஒரு ஊரு, இருக்கறது ஒரு ஊருன்னு. வளர்ந்த ஊரு நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில். வயித்துப் பாட்டுக்கு வழி காட்டின ஊரு.
காட்டுமேட்டுல வேளாண்மை செஞ்சும் பழகியாச்சு, தீப்பெட்டி அடிப்பெட்டி ஒட்டற குடிசைத் தொழில் பார்த்தாச்சு, தீக்குச்சிகளை பெட்டி சேர்க்குற, கட்டை அடுக்குற வேலைகளையும் பார்த்தாச்சு, பொறவாட்டி பெரிய தீப்பெட்டி ஆபிஸையே நடத்தியும் பார்த்தாச்சு, அல்வா கிண்டி யாவாரமும் பார்த்தாச்சு. எல்லாம் போயி, காய்கறிக் கடையும் வச்சு, மளிகைக் கடையும் வச்சுப் பார்த்தாச்சு.
வேலைகளும், தொழில்களும் மாறி மாறி, தோல்விகளும் வெற்றிகளும் மாறி மாறி உருவெடுக்க, வாழ்க்கைப் போராட்டத்தில் கரை கண்ணில் படாமலேயே மனந்தளராமல் நீந்தி ஓரளவு கரை சேர்ந்தாச்சு இப்போ. மனம் பக்குவப்பட்டுவிட்டால் வாழ்வென்ன.. போராட்டமென்ன..!!
சுயபச்சாதாபம் அடைந்ததும் கிடையாது, பிறர் பச்சாதாபத்தை சட்டை செய்ததும் கிடையாது. அச்சாணி இல்லாத வண்டியை ஓட்டிக்கிட்டே, நம்பிக்கைங்கிற சாட்டையை மட்டும் சுழட்டிக்கிட்டே, இத்தனைக்கும் நடுவில நானும் தம்பியும் படிச்சு நல்ல மார்க் வாங்கி ஓரளவு பேர் சொல்ற நிலைமைக்கும் வந்தாச்சு. இதோ.. ரிஷின்னா எல்லாருக்கும் பிடிச்சிருக்குதானே!!?
சொந்த விஷயங்களை இது மாதிரி பகிர்ந்துக்கறதுல தப்பில்லைன்னு நினைக்கிறேன். சுய புராணம் பாடுதல் அல்ல, சொந்த விஷயங்களின் பகிர்தல்தான் இது. என்னோட பள்ளிப் பருவ போட்டோ பார்க்குறீங்களா.. இதோ.. இரண்டாம் வகுப்பு போட்டோ! இதுல ரிஷி யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்.
சங்கரன்கோவில் தோசைக்கல்லுப் பள்ளிக்கூடம் இது! அதென்ன தோசைக்கல்லு? மணியடிக்கறதுக்கு ஒரு இரும்புப் பட்டை வச்சிருப்பாங்களே.. அதுக்குப் பதில் இந்த பள்ளியில ஒரு தோசைக் கல்லைக் கட்டித் தொங்க விட்டிருப்பாங்க. அதிலதான் நாங்க மணியடிப்போம்! அதனால இந்த நகராட்சி ஆரம்பப்பள்ளிக்கு தோசைக்கல்லுன்னு பேர் வச்சாச்சு!
கொஞ்ச பேரோட பெயர்கள் மட்டும்தான் ஞாபகம் இருக்கு. இவனுங்களையெல்லாம் ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு நான் பார்த்ததே இல்லை. இருபது வருஷத்துக்கு மேலாச்சு பார்த்து!! சில பயல்கள் வாழ்க்கை ஓட்டத்துல ஜீவிக்கிறதுக்கே போராடற குடும்பங்களைச் சேர்ந்தவங்க. போட்டோ பார்த்தாலே தெரியுமே..!!!
வீராச்சாமி, தர்மராஜ், கணேசன், கல்யாணசுந்தரம், செல்வம், மாரியப்பன், கதிரவன், முத்துச்சாமி, கோமதி, சங்கரி - இவங்க பேருதான் ஞாபகத்துல இருக்கு.. மற்றவங்க ஸாரி.. என்னோட படிச்ச இவங்க யாராவது இதைப் பார்த்து என்னைத் தொடர்பு கொண்டால் மிக மகிழ்வேன். எல்லோரும் படிச்சு பெரிய பெரிய பதவிகள்ல(!!) இருப்பாங்க.. எங்கே நிலாச்சாரல் படிக்கறதுக்கெல்லாம் நேரம் இருக்கப் போவுது!!
இந்தக் கூட்டணி ஐந்தாம் வகுப்பு வரைதான் கூட வந்தது. அப்புறம் வேறு வேறு பள்ளிகள். செல்வம் கலக்கலாப் பாடுவான். புது வசந்தம் படத்துல வர்ற ''பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா...'' அவனோட ஃபேவரிட்.
வீராச்சாமி நகைச்சுவையாய்ப் பேசுவதில் வல்லவன். வகுப்பில் வாத்தியார் வரவில்லையென்றால் அவனைச் சுற்றி கூட்டம் கூடி விடும். எட்டுக் கட்டி எல்லா விஷயங்களையும் கிண்டலடித்துக் கதையடிப்பதில் அவனுக்கு நிகர் அவன்தான்.
முத்துச்சாமி எம்.ஜி.ஆர். ரசிகன்.. ஜெயலலிதாவின் விசுவாசி. தி.மு.க. தேர்தலில் தோற்றுவிட்டால் அவனைக் கையில் பிடிக்க முடியாது. அவனது அப்பா அதிமுக விசுவாசி என்பதுதான் காரணம்.
கல்யாணசுந்தரம் அமைதியான ஆள். குடிக்கறதுக்கு பள்ளியில் தண்ணியே இருக்காது. கல்யாணசுந்தரம் வீட்டுக்குத்தான் ஓடுவோம். அவன் வீட்டில் மட்டும்தான் தண்ணீர் கேட்டவுடன் திட்டாமல் எடுத்துக் கொடுப்பார்கள்!!
இந்த வாத்தியாரைய்யா பத்திச் சொல்லலியே.. அவர் நம்ம காதைப் பிடிச்சி திருகினார்னா.. நம்ம முகம் உலக வரைபடத்துல இருக்கற மாதிரி வளைவு நெளிவுகளாயிடும்!! அய்யோ.. அவரைப் பார்த்தாலே பயம். இருந்தாலும் ரெண்டாங்கிளாஸ் வாலுகளை அப்படி மிரட்டி உருட்டி வைக்காட்டியும் நாங்க அடங்க மாட்டோம்ல..! இப்போ வயசாகி ஓய்வு காலத்தை எட்டியிருக்கக் கூடும். வணக்கம் சார்!
நினைத்தாலே இனிக்கும் இம்மலரும் நினைவுகள் இப்போதும் வாசம் வீசும்.. எப்போதும் சுவாசத்தில் நீடித்திருக்கும்!
அப்புறம் மக்களே.. ஒரு விஷயம் சொல்லி இந்த வாரத்தை முடிச்சிடலாம்.
வாசகர்களின் இதமான வாசிப்பனுபவத்திற்காக எவ்வளவோ எழுதறோம்.. என்னென்னவோ எழுதறோம். அதற்கான பரிசாக மக்களின் மனந்திறந்த பாராட்டை விட சன்மானம் வேறில்லை என்று சொன்னாலும், அது மட்டுமே போதுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை!
இந்தக் குறை தீர்க்கவென்றே 'இலக்கியம் வளர்ப்போம்' என்று ஒரு புதிய பகுதி நிலாச்சாரலில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உங்கள் மனங்கவர்ந்த எழுத்தாளரை நீங்கள் விரும்பும் வகையில் ஊக்குவிக்கவும், கௌரவிக்கவும் முடியும்.
நானும் இதெல்லாம் செய்து தூள் பன்னியிருக்கேன். அந்த நாள் நினைவுகளை கண் முன் நிறுத்தியதற்க்கு நன்றி ரிஷி. என்னுடய கனிப்பும் வலப்புறத்திலிருந்து ஜந்தாவதாக நிற்பதுதான் நீங்கள் என்பது சரியா? அப்புறம் ஒன்னு சொல்லிகொள்கிறேன், இந்த போட்டோ வாங்குற அளவு வசதி கூட அந்த காலத்தில் எனக்கு இல்லை அதை நினைத்தால் மனம் இப்போதும் வலிக்கிறது.
அண்ணே, மிக அருமை. பல ஆறுகள் காணாம போய்டுச்சு. வைகை ஆறும் அப்டித்தான். எங்க பள்ளி வைகை ஆற்று கரைல இருக்கு அப்பப்போ பெரிய மழை பெஞ்சு வெள்ளம் வந்து லீவு விடுவாங்க. இப்போ மழை பெஞ்சா தண்ணீ கூட நிக்க மாட்டேங்குது. அட இவ்வளவு எதுக்கு, அழகர் ஆத்துல எறங்குறதுக்கே தண்ணீ லாரி வந்து தண்ணீ ஊத்துது ஆத்துல.
பள்ளி பருவம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத ஒன்று..... நினைத்தான் (வலியுடன்) இனிக்கும்... இந்த போட்டோல நீங்க இருக்கீங்களா? எனக்கு தெரியும் நீங்க கட் அடிச்சிருப்பீங்கன்னு அதான் தேட முயர்சி பண்ணல.
வலப்புறத்திலிருந்து இரண்டாவதாக அந்த ஊதா நிறக் கட்டம் போட்ட சட்டைதான் எங்க தலை. சரியா ரிஷி? பால்ய கால நினைவுகளை யாரும் மறந்து விட முடியாது. அது ஒரு பக்கம் நெருஞ்சி முள்ளாய் இதமாய் குத்திக் கொண்டிருக்கும். அது ஒரு சுகமான வலி.
ரிஷி, \\அப்போ நீங்களூம் நம்மள மாதிரித்தானா!!// ஆமா, நான் உங்க ஊரு பக்கம் தானே நம்ம கை தொழிலை எல்லாம் மறக்க முடியுமா? பள்ளிக்கு போய்ட்டு வந்து (அழுது கொண்டே) தீப்பெட்டி அடிப்பெட்டி ஒட்டுவேன். மத்த நண்பர்கள் எல்லோரும் விளையாடும் போது அழுகை வராத பின்ன? ஆனா ரொம்ப நல்லா படிப்பேன். படிப்பு, தீப்பெட்டி செய்றது எல்லாமே சிறு மண்ணெண்ணெய் விளக்கில் தான். முதன் முதலில் வீட்டிற்க்கு மின்சார விளக்கு போட்டது மறக்க முடியாத ஒன்று.
வணக்கம் பிரேம்ஸ். பால்ய கால நினைவுகளை மட்டுமா.. பருவ கால நினைவுகளையும் காலங்கள் கடந்த பின்னும் மறக்க முடியாது! நினைவுகளை திரும்பிப் பார்ப்பதே ஒரு சுகம்தான்.
கொ.ப.சே.வே சரியாச் சொன்ன பிறகு.. இதுக்கு மேல சஸ்பென்ஸ் வைக்க விரும்பலை. வலது பக்கமிருந்து இரண்டாவது தான் நான். லதாவும் கூட சரியா சொல்லிட்டாங்க...
இந்த ட்ரெஸ் பார்த்திட்டு வாத்தியார் சூப்பரா இருக்குடான்னு பாராட்டினார்னா பார்த்துக்குங்களேன். அந்தக் காலத்தில் இது புது டிசைன்!!!!
பரவாயில்லையே தேவிகா. இம்புட்டுப் பக்கத்தில வந்துட்டீங்க... நாலைஞ்சு கட்டைகளை தூக்கி செமந்துக்கிட்டு தீப்பெட்டி ஆபிஸ் போறதுதான் கழுத்து ஒடிஞ்சு போற நிலை.. இப்போ மெஷின்லாம் வந்த பிறகு நிறைய மேனுவல் வொர்க் குறைஞ்சிடுச்சினு நெனக்கிறேன். நான் பண்ணும்போது ஒரு கட்டை அடுக்க 60 பைசா. என்னுடைய வொர்க்கெல்லாம் கண்ணுல ஒத்திக்கற மாதிரி அழகா இருக்கும்.. உடைஞ்ச குச்சி எதுவும் நடுவில இல்லாம..
நான் செம வேகமா அடிபெட்டி ஒட்டுவேன். ஆனா கட்டை மெதுவாதான் அடுக்குவேன். நான் பள்ளிக்கு போய்ட்டு வந்து 5 கட்டு ஒட்டுவேன்(2.30 - 3.00 மணி நேரம் ஆகும்). விடுமுறைல 14 கட்டு ஒட்டனும் . ஒரு கட்டுக்கு 185 பெட்டி வரும், அதுக்கு வெறும் 75 பைசா தான். கடைசியா நான் ஒட்டினது ஒரு ருபாய் ஆன வரை தான் இப்பொ எவ்வளவுனு தெரியல. ரொம்ப அறுத்துட்டேனா?? இத உங்ககிட்ட பகிர்ந்தது மனசுக்கு நிம்மதியா இருக்கு. நன்றி ரிஷி.
உங்க கட்டுரை அருமை. எல்லோரையும் பின்னோக்கி இழுத்துட்டுப் போய்டுச்சு. நான் ஒரு புத்தகப் புழு. கொஞ்ச நேரம் பாட புத்தகம். பாதி நேரம் கதை புத்தகம். மீதி நேரம் விளையாட்டு. ஆனா வீட்டுல ஊர்ப்பட்ட வேலை பார்ப்போம்.