நாம் காணும் கனவுகள் நேரில் நடப்பதைப்போல அவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் இருப்பதுதான் இந்த சந்தேகத்திற்குக் காரணம்.
கனவு காணுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?
நமது பயமோ அல்லது மனஅழுத்தமோ நாம் காணும் கனவுகளுக்கு அடிப்படையான காரணங்களாக அமைகின்றன. இதைத் தொடர்ச்சி அனுமானம் என்று சொல்கிறார்கள். பரீட்சைக்குப் போகும்போது 'ஐயோ, எப்படி எழுதப்போகிறோமோ!' என்று பயத்துடன் இருந்தால் உங்கள் கனவுகள் அது சம்பந்தமானதாக இருக்கும்.
எதைப்பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவை கனவுகளில் வருகின்றன. நீங்கள் கிரிக்கெட் விளையாடுபவராக அல்லது ரசிகராக இருந்தால் உங்கள் கனவுகள் அதைச் சுற்றியே பெரும்பாலும் அமையும். யாரிடமாவது நாம் மிக அன்பு செலுத்தினாலோ அல்லது யாரையாவது காதலித்தாலோ அவர்களைப் பற்றிய கனவு காண்பீர்கள். (டூயட் கூடப் பாடலாம்!)
அடுத்து எழும் கேள்வி, போதை மருந்துகள் கனவுகளைத் தூண்டுமா என்பது.
'தூண்டும்' என்று சொல்ல முடியாவிட்டாலும் அவைகள் கனவுகளைப் பயமானதாகவும், விரிவாகவும் ஆக்குகின்றன என்று சொல்லலாம். எல்.டோபா என்ற மருந்தைப் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தபோது இந்த உண்மை அறியப்பட்டது.
ஆனாலும், போதை மருந்துகளுக்கும் கனவுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய முழுமையான ஆய்வு இதுவரை நடைபெறவில்லை.
யாரெல்லாம் கனவு காண்கிறார்கள்?
மிருகங்கள் கனவு காணுமா என்ற கேள்விக்கு நிச்சயமான பதில் இல்லை. ஆய்வில் சொல்ல முடிவதெல்லாம் மிருகங்களுக்கும் விரைவுக் கண்ணசைவுகள் இருக்கின்றன என்பதுதான். இந்தக் கண்ணசைவு நேரங்களில் நமக்குப் பெரும்பாலும் கனவுகள் வருகின்றன.
குட்டி போட்டுப் பால் கொடுக்கும் இனம் எல்லாவற்றிற்கும் இந்த விரைவுக் கண்ணசைவுகள் உண்டு. ஆனால் இதை மட்டும் வைத்து அவைகள் கனவு காண்கின்றன என்று உறுதிப்படுத்த முடியாது. மனிதர்களுக்கும் இந்த மாதிரியான நேரங்களில் கனவு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை அல்லவா!
அடுத்து எழும் வினா, கண்பார்வையில்லாதவர்கள் கனவு காண்பார்களா? அவர்கள் கனவுகள் எப்படியிருக்கும்?
நாம் காணும் கனவுகள் நேரில் நடப்பதைப்போல அவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் இருப்பதுதான் இந்த சந்தேகத்திற்குக் காரணம். நிச்சயம் கண்பார்வை இல்லாதவர்களும் கனவு காண்கிறார்கள்.
குழந்தைகள் காணும் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?
தூக்கப் பரிசோதனை செய்தபோது அவர்கள் அடிக்கடி கனவு காண்பதில்லை மற்றும் அவர்கள் காணும் கனவுகள் சுவாரசியமற்றதாக, உப்புச் சப்பில்லாதவையாகவே அமைகின்றன என அறிய முடிந்தது.
ஐந்தாவது படிக்கும் வயது வரும்போது சிறுவர்கள் நன்றாகவே கனவு காண்கிறார்கள்.
கனவுகள் ஏன் நினைவில் நிற்பதில்லை?
நாம் தூக்க நிலையில் கனவு காண்பதால் அந்தக் கனவிற்கு அப்போது அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது கிட்டத்தட்டப் பழக்கமானவர்கள் காரை டிரைவ் செய்து கொண்டுபோவது போலத்தான். மனம் எங்கேயோ இருந்தாலும் அனிச்சையாக செயல் நடந்து கொண்டிருக்கும். அதனால்தான் நாம் நமது கனவுகளில் 95 லிருந்து 99 சதவிகிதம் வரை நினைவில் வைக்க முடிவதில்லை.