"நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களால் ராமர் காவியம் ஒரு கட்டுக்கதை (mythology) என்று கூறப்பட்டாலும், ராமர் கதை ஒரு இதிஹாசம் - இதிஹாசம் என்றால் அது 'இது இப்படி நடந்தது' என்று பொருள். 'நடந்தது' என்றால், அது கதையல்ல உண்மை"
சீதா எலியா (சீதை அம்மன் கோவில்)
சீதைக்குக் கோவில் அமைந்த இடம். இங்கு அசோகவனத்தில்தான் ராவணன் சீதையைச் சிறை பிடித்த பிறகு காவலில் வைத்திருந்தார். இந்த இடத்தை மரங்கள் அடர்ந்த காடு என்று சொல்ல முடியாது. ஆனால், அழகான பூஞ்சோலைகள் அமைந்த இடம். ராவணன் இந்த அழகிய சூழலில் சீதையை காவல் வைத்திருந்தால் ரம்மியமான சூழ்நிலையில் மனம் மாறி தன்னை மணக்கச் சம்மதிக்கலாம் என்ற எண்ணம்தான். இதற்கு அருகிலேயே ஹனுமானுக்கும் கோவில் உள்ளது.
டுவரும்போலா
டுவரும்போலா என்றால் சபதம் எடுத்த இடம் என்று பொருள். இந்த இடத்தில் சீதை தன்னை அக்னி பரீட்சை செய்து கொண்டாள். ராமன், சீதையை ராவணனிடமிருந்து மீட்ட பிறகு, சீதை ஒரு வருடம் ராவணனின் காவலில் இருந்ததால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூற, சீதை அக்னிப் பிரவேசம் செய்து புடமிட்ட தங்கமாக வெளியே வந்து தன் கற்பை நிரூபித்த இடம். இந்த இடத்தில் அனுராதபுர போதிமரத்தின் கன்று நடப்பட்டது. இதன் கீழே ஒரு சிறு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராமாயண ஓவியங்களைக் காணலாம். இன்றும் இந்தக் கோவிலில் சீதையின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்வது சட்டரீதியாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.
முனேஸ்வரம் கோவில்
இது ராமாயண காலத்திற்கும் முந்தைய சிவன் கோவில். சிவலிங்கம் இங்கே அமைந்துள்ளது. முனேஸ்வரம் என்றால் முன்னு + ஈஸ்வரன் என்று பிரிக்கலாம். இதுதான் சிவபெருமானுக்காக அமைக்கப்பட்ட முதல் கோவில். ராமன் இந்த இடத்திற்கு வரும் முன்பே இங்கு சிவலிங்கம் அமைந்திருந்தது. இந்தக் கோவிலில்தான் ராவணன் சிவபெருமானை வழிபட்டார்.
மானவாரி
ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் போவதற்காக ராமன் சிவபெருமானிடம் வேண்டியபோது, அவர் ராமனை மானவாரி, திருகோனேச்வரம், திருகெதெச்வரம், மற்றும் ராமெச்வரத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கச் சொன்னார். இதில் முதல் லிங்கம்தான் மானவாரி. இந்த லிங்கம் ராமலிங்க சிவன் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
திருகோனேஸ்வரம்
இந்தக் கோவில் ராவணனின் மனைவி மண்டோதரியின் தந்தை அமைத்து பிரதிஷ்டை செய்த சிவன் கோவில். புராதன கோவிலான இது போர்த்துக்கீசியர்களால் 1624ல் அழிக்கப்பட்டு ஐம்பது வருடங்களுக்கு முன் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
கோவிகேலனியாபுத்தர் கோவில்
ராம ராவண யுத்தத்திற்குப் பிறகு விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் நடந்த இடம் இது. இந்த மகுடம் சூட்டும் விழாவிற்கு ராமன் வரவில்லை. அவரது தம்பி லக்ஷ்மணன்தான் நடத்தி வைத்தார். தந்தையின் சொல்படி 14 ஆண்டுகள் காட்டில் வசிக்க வேண்டுமென்பதால் தன் தம்பி லக்ஷ்மணனை தனது சார்பாக அனுப்பி வைத்தார். இந்த இடத்தையும் போர்த்துகீசியர்கள் அழித்து விட, பின்னர் கிறிஸ்தவர்களால் திரும்பக் கட்டப்பட்டது.
விபீஷணனின் மாளிகை இங்கேதான் கேலனி நதிக்கரையில் அமைந்திருந்தது. விபீஷணனிற்காக ஒரு புத்த கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பின்புறம் விபீஷணப் பட்டாபிஷேகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விபீஷணனுக்காக ஒரு தனிக்கோவிலும் அமைந்துள்ளது. அவரை ஸ்ரீலங்காவில் ஒரு அரசனாக, தெய்வமாக வழிபடுகிறார்கள். நான்கு காவல் தெய்வங்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார் விபீஷணன். இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் விபீஷணன் பெயரால் வழங்கப்படும் தீர்ப்பை ‘விபீஷணன் தீர்ப்பு’ என்று முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.
ரூமசாலா
பாணங்களால் கட்டுண்ட ராமனையும், லக்ஷ்மணனனையும் உயிர்ப்பிக்க ஹனுமான் சஞ்சீவனி மலையை பெயர்த்துக் கையில் சுமந்து பறந்து வந்தார். அப்போது பாதையில் சில கற்கள் ஐந்து இடங்களில் விழுந்தன. அவற்றில் ஒன்றுதான் ரூமசாலா எனும் இடம். இந்த இடம் இலங்கையின் தென்புறத்தில் உள்ளது. இங்கே ஹனுமாருக்குக் கோவில் உள்ளது. புத்த பிக்குகள் இந்தக் கோவிலைக் கட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹாவம்சம்
இது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழம்பெரும் புத்த நூல். இந்த நூலில் ராமாயண நிகழ்வுகள் பற்றி 49 இடங்களில் குறிப்பிடப்படுகின்றன.
வானரங்கள் பற்றி கூறும்போது, ”வானரத்தையும், குரங்குகளையும் பிரித்துப் பார்க்க வேண்டும். ‘வா நரா’ என்றால் நரனைப் போன்றவர்கள்; அதாவது மனிதர்களைப் போன்றவர்கள்” என்று சொல்லும் ஹரி, “ராட்சஷர்கள் என்பதையும் ராட்சஷர்கள் என்றால் ரட்சிப்பவர்கள் - அவர்கள் வயிற்றை ரட்சிப்பவர்கள்” என்று விளக்கம் கொடுக்கிறார்.
ஸ்ரீலங்கா அரசும் அங்குள்ள பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களுமே ராமாயணம் என்ற இதிஹாசத்தின் ஒரு முக்கிய பகுதி இலங்கையில் நடந்ததை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து, சுற்றுலாவாசிகளையும் தம் பக்கம் ஈர்க்கும்போது நமது இந்திய அரசு ஏனோ இதை ஒப்புக்கொள்ளத் தயக்கம் காட்டுகிறது என்று சொல்கிறார் ஹரி.
ராமசேது பற்றி கேட்ட போது, அங்கு இதை நிரூபணம் செய்ய நாணயங்கள் இருக்கின்றன. மற்றும் ஸ்ரீலங்காவில் சேது காவலன் என்ற ஒரு பரம்பரையே இருக்கிறது. இன்று வேண்டுமானால் அவர்கள் கிறிஸ்தவ மதத்தினராக ஃபெர்னான்டஸ் சேது காவலன் என்ற பெயரில் இருக்கலாம். ஆனால் சேது காவலர்கள் இருந்திருக்கிறார்கள். இது தவிர, அங்குள்ள நூலகத்தில் சேது பாலம் கட்டுவதற்கான வரைபடங்கள் முப்பது ஆண்டுகள் முன் வரை இருந்ததாக சொல்லப்படுவதாகக் கூறினார்.
ராமரை தெய்வம் என்று சொல்லப்படுவதைப் பற்றி கேட்டபோது, அவர், "ராமன் ஒரு வரலாற்று மனிதன்; அடுத்து அவர் மனிதன்; பிறகு அவர் ஒரு ராஜா; அதற்கும் மேல் அவர் ஒரு தெய்வம். இந்த நாலு படிகளில் நாங்கள் எங்கள் ஆராய்ச்சியில் அவரை பதினாறு குணநலன்களுடன் விளங்கிய மனிதனாகத்தான் பார்க்கிறோம். ராமன், ராவணனை வென்றபோது அங்குள்ள மக்கள் ராமனை தெய்வமாகப் பார்த்தார்கள். அப்போது ராமன், தான் தசரத புத்திரன் எனவும், தெய்வமில்லை என்றும் சொல்கிறார். தெய்வமாகப் பார்ப்பது அவரவர் சொந்த விருப்பம்" என்று சொல்கிறார் ஹரி.
"நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களால் ராமர் காவியம் ஒரு கட்டுக்கதை (mythology) என்று கூறப்பட்டாலும், ராமர் கதை ஒரு இதிஹாசம் - இதிஹாசம் என்றால் அது 'இது இப்படி நடந்தது' என்று பொருள். 'நடந்தது' என்றால், அது கதையல்ல உண்மை" எனக் கூறுகிறார் ஹரி.
ஹரி தம்பதியினரின் ஆராய்ச்சிகள் தொடர நம் வாழ்த்துக்கள்!
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X