எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு அபூர்வமான குரல்! குழந்தையின் குரல் அவருடையது. இன்று வரை அவரைப் போலக் குரல் வளம் உடைய இன்னொருவரை தமிழ் சினிமா பார்க்கவில்லை.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில், தமிழ் சினிமாவில் புராண மோகம் விடுபட்டு சமூக அடிப்படையிலான கதைகள் உலா வரத் தொடங்கின. இந்தக் கதைகளில் வரும் சமூக நிகழ்வுகளுக்குத் தக்கபடி பாடல்கள் எழுதப்பட்டு இசை அமைக்கப்பட வேண்டிய புதிய சூழ்நிலை உருவானது.
இதன் விளைவாக இன்று வரை ஆயிரக்கணக்கான நிலைக்களன்களில், ஏராளமான ராகங்களில் இசை அமைக்கப்பட, நூற்றுக்கணக்கான நடிகர்கள் அந்த இசைக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தனர்.
அபூர்வமான குரல் வளம் கொண்டவர்கள் திரைத்துறையில் வரலாயினர். அதில் ஒருவர்தான் குழந்தைக் குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி.
1955ல் வெளியான ‘டவுன் பஸ்' திரைப்படத்தில் கவி கா.மு.ஷெரீப் எழுதிய ஒரு பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். பாடல் இதோ:-
சிட்டுக்குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சி போன கணவன் வீடு திரும்பல
பட்டு மெத்தை விரிச்சு வச்சேன்; சும்மா கெடக்குது பசும் பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன்; ஆறிக் கிடக்குது
தலையை வாரி பூ முடிச்சேன்; வாடி வதங்குது சதா தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது வழியை வழியைப் பார்த்துப் பார்த்து கண்ணும் நோகுது - அவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது
படம் எடுத்தவர் எம்.ஏ.வேணு; இயக்கியவர் கே.சோமு; கதை வசனம் ஏ.பி.நாகராஜன்; கதாநாயகன் என்.என்.கண்ணப்பா; கதாநாயகி அஞ்சலி தேவி.
கதாநாயகி பாடுவது போலப் பாட்டு இருந்தாலும் சிறியவர் பெரியவர் அனைவரும் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் வண்ணம் பாட்டின் இசை இருக்கவே, இது பெரும் ஹிட் ஆனது. இதே பாட்டு சோகமாக ஒரு முறை பாடப்படும். அதனால் இந்தப் பாடலின் வரிகளும் இசை அமைப்பும் தனிப் பொலிவைப் பெற்றன. இதற்கு முன்னர் பல படங்களுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தாலும் இதையே தனது முதல் படம் என்று கூறிப் பெருமைப்படுவார்.
எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு அபூர்வமான குரல்! குழந்தையின் குரல் அவருடையது. இன்று வரை அவரைப் போலக் குரல் வளம் உடைய இன்னொருவரை தமிழ் சினிமா பார்க்கவில்லை.
குட்டி பத்மினிக்காக ‘குழந்தையும் தெய்வமும்' படத்தில், ‘கோழி ஒரு கூட்டிலே” என்ற என்றும் இனிக்கும் பாடலையும் இவர் பாடியுள்ளார். ‘மகாதேவி' படத்தில் சாவித்திரிக்காக “காக்கா காக்கா மை கொண்டா” மற்றும் “மண்ணுக்கு மரம் பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்)”, “மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே" போன்ற பாடல்கள் இவரது தனித்துவத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.
பராசக்தி படத்தில், “ஓ, ரசிக்கும் சீமானே”, “புதுப் பெண்ணின் மனதைத் தொட்டு விட்டுப் போனவரே” ஆகிய பாடல்கள் மூலம் ஜனரஞ்சகமான இதர பாடல்களையும் பாட வல்லவர் இவர் என்பது நிரூபணமானது.
படிக்காத மேதை படத்தில் சௌகார் ஜானகி பாடிய “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு” பாடல் படத்திற்கு களை கூட்டியது.
ஏராளமான சிறப்பான பாடல்களை, குறிப்பாக குழந்தைக் குரலில் பாடிய சிட்டுக் குருவி குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு தமிழ் சினிமா இசை வரலாற்றில் நிச்சயம் தனி இடம் உண்டு!