 |
இதழ் 368 |
 |
ஜூன் 09 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| வெற்றிக்கலை (21) : சகிப்புத்தன்மை (2)
- ச.நாகராஜன் |
| | வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் வெற்றியாளர்கள் அனைவரும் அடைய வேண்டிய குணாதிசயம் சகிப்புத் தன்மை; மற்றவரின் குறைகளைச் சுட்டிக் காட்டி அடையும் கொடூர இன்பத்தை ஒருபோதும் மனமுதிர்ச்சி உடையவன் விரும்ப மாட்டான். மனமுதிர்ச்சியின் குணாதிசயங்கள்
1. சுதந்திர உணர்வு: சுதந்திரமாகத் தனது பொறுப்பை ஏற்றுத் தானே வளர்வது மனமுதிர்ச்சியின் முதல்படி. மற்றவரைச் சார்ந்தே இருப்பவன் பின்னால் மிகுந்த கஷ்டத்தை எதிர்நோக்க நேரிடும்.
2. மற்றவரிடமிருந்து பெறுவதைவிட அனைவருக்கும் கொடுப்பதை விரும்புவதே மனமுதிர்ச்சிக்கு அடையாளம். அடுத்தவரை எப்படி சந்தோஷப் படுத்துவது என்பதே இவர்களின் குறிக்கோளாக இருக்கும். அதன்மூலம் பெறும் இன்பத்தைப் பெரிதும் விரும்புவர்! ஈத்துவக்கும் இன்பம் இணையில்லா இன்பம் அன்றோ?
3. அகங்காரத்தை விட்டு அனைவருக்கும் மதிப்புக் கொடுப்பது மனமுதிர்ச்சிக்கான அடுத்தபடி. தன்னை ஒவ்வொரு விஷயத்திற்கும் மற்ற ஒவ்வொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பவன் துன்பமயமான மனிதன்! ஒப்பிடுவது ஒரு அளவு வரை சரிதான். அளவுக்கு மீறும் போது இது நஞ்சாக மாறி வாழ்க்கையை நஞ்சாக்கி விடுகிறது.
4. பாலியல் முதிர்ச்சி: செக்ஸில் முதிர்ச்சி இல்லாமல் இருப்பதற்கு இருவித காரணங்கள் உள்ளன. ஒன்று அதைப்பற்றிய பயம்; இன்னொன்று செக்ஸ் மட்டுமே வாழ்க்கை என்ற அணுகுமுறை. இரண்டுமே தவறு. சரியான முறையில், சரியான அறிவோடு செக்ஸை அணுகுவதே முதிர்ச்சிக்கான அடையாளமாகும்.
5. கோபம் போன்ற கீழான உணர்ச்சிகளுடன் கூடிய பரபரப்பான வாழ்க்கையை மீறி நிதானமாக இருத்தல் வேண்டும். கோபம், வெறுப்பு, கொடூர மனப்பான்மை இவற்றைத் தனது வலிமையாக நினைப்பவர்கள் மனமுதிர்ச்சி இல்லாதவர்கள்.
6. நிதரிசமான உண்மைகளைப் பகல் கனவுகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கத் தெரிவது முதிர்ச்சியின் அடையாளம். மாயாஜால உலகங்களில் வாழ்வது குழந்தையின் இயல்பு. கனவுலகிலிருந்து நனவுலகை வேறுபடுத்திப் பார்த்து உணர்ந்து அறிவதே முதிர்ச்சி.
7. எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்து மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்துப் போகும் இயல்பும் முதிர்ச்சிக்கான அடையாளமாகும்.
மேலே கண்ட ஏழு உரைகற்களில் நம்மைத் தீட்டிப் பார்த்து நாம் எவ்வளவு மனமுதிர்ச்சியுடன் இருக்கிறோம், இன்னும் முதிர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்பட வேண்டும்.
கிரேக்க புராணம்
கிரேக்க புராணத்தில் வரும் நர்ச்சிசஸைப் போல் இருக்கக் கூடாது. தெளிவான பளிங்கு போன்ற நீரைக் கொண்டுள்ள குளத்தில் தன் பிம்பத்தைப் பார்த்துத் தன் மீதே காதல் கொண்டானாம் அவன். அளவுக்கு மீறிய நான் என்ற மனப்பான்மையால் வரும் வியாதி இது.
மற்றவர்களின் தர்மங்களை மதித்து நடப்பதே பெரிய தர்மம் என்று கூறுகிறார் ஜோஷ் பில்லிங்ஸ் என்னும் அறிஞர். ஹென்றி வாண்டைக் என்னும் அறிஞர் மற்றவர்களின் சிறந்த தன்மைகளைப் பார்த்து அவர்களை எடை போடு; அவர்களின் மோசமான தன்மைகளை வைத்து எடை போடாதே என்றார். சகிப்புத்தன்மை மற்றவர்களின் பலவீனத்தை நோக்காது, பலத்தையே நோக்கும்.
சகிப்புத்தன்மை மதம், இனம், நாடு, அந்தஸ்து, பால், படிப்பு இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. எல்லோருடனும், எதை வேண்டுமானாலும் விவாதித்துப் பெருமையை நிலை நாட்ட முயல்வது அறிவீனம்.
குறை கூறாதே
"ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கில் பின் தீதுண்டோ மன்னுயிர்க்கு" என்பார் வள்ளுவர். மற்றவரின் குறைகளை சுட்டிக் காட்டும் முன்னர் உன் குறைகளைக் களைந்து கொள். சுட்டு விரலால் மற்றவரின் குறைகளை சுட்டிக் காட்டும்போது மீதி மடக்கப்பட்டிருக்கும் நான்கு விரல்களும் உன்னை அல்லவா சுட்டிக் காட்டுகின்றன? மற்றவரின் குறைகளைச் சுட்டிக் காட்டி அடையும் கொடூர இன்பத்தை ஒருபோதும் மனமுதிர்ச்சி உடையவன் விரும்ப மாட்டான்.
பெஞ்சமின் பிராங்களினின் வழி
எப்போதுமே எதிரிகளை வாதுக்கும் அழைத்து, அவர்களைத் தோற்கடிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்த பெஞ்சமின் பிராங்களின் இந்த வழி தவறு என்பதை உணர்ந்து கொண்டார். தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டதை அவர் குறிப்பிடுகையில், "பின்னர் ஒரு விதி செய்து கொண்டேன். பிறர் கூறும் விஷயங்களை நேரடியாக எதிர்த்துப் பேசுவதில்லை. நான் கூறுவதே சரி என்று அறுதியிட்டு உறுதி செய்வதில்லை. அச்சமயம் 'சந்தேகமின்றி', நிச்சயமாக' என்ற வார்த்தைகளைத் தவிர்த்து, 'நான் நினைப்பது என்னவென்றால்' என்றோ 'எனக்கு இப்போது இப்படித் தோன்றுகிறது" என்றோ உபயோகிக்க ஆரம்பித்தேன். நான் தவறு என்று நினைக்கக் கூடியதை மற்றவர் கூறினால், அது தவறு என்று உடனே சுட்டிக் காட்டி, பேச்சை வெட்டி விடும் கெட்ட பழக்கத்தை நிறுத்திக் கொண்டேன்" என்கிறார்.
இந்த வழி மூலம் விவாதத்தை நிறுத்திய அவர் உலகப் புகழ் பெறும் அளவு உயர்ந்தார். இது ஒரு புறமிருக்க மனமுதிர்ச்சி அடையாமல் இருப்பவரோடு வாழ நேர்ந்தவர்கள், அவர்கள் மேல் இரக்கப்பட்டு சகிப்புத் தன்மையுடன் வாழ்ந்ததற்கு உதாரணமாக சாக்ரடீஸ், மில்டன் ஆகியோரைக் கூறலாம்.
கடுசொற்கள் வீசி எறிவதையே வழக்கமாக கொண்ட மனைவியுடன் வாழ்ந்த சாக்ரடீஸ், கடும் ஏச்சுப்பேச்சுக்களைக் கூறும் மகள்களுடன் வாழ்ந்த மில்டன் ஆகியோரை சகிப்புத்தன்மைக்கு நல்ல எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் வெற்றியாளர்கள் அனைவரும் அடைய வேண்டிய பதினோறாவது குணாதிசயம் சகிப்புத் தன்மை ஆகும்.
(தொடரும்) |
| | ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள்.
| சுயமுன்னேற்றம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|