 |
இதழ் 368 |
 |
ஜூன் 09 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| வீரத்துறவி விவேகானந்தர் (26)
- டி.எஸ்.வெங்கடரமணி |
| | துறவறச் சீடர்கள் இல்லறத்தாரிடம் எந்த நன்கொடையையும் பெற மறுத்து விட்டார்கள். துறவற பக்தர்களிடையே ஒரு நேசமும் நெருக்கமும் மலர்ந்தது. நரேந்திரன் அனைவரும் ஒருமித்து ஏற்றுக் கொண்ட தலைவரானார். பவதி பிக்ஷாம் தேஹி!
ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர் குழுவில் இரண்டு பிரிவினர் உண்டு. ஒரு பக்கம் உள்வட்டமான துறவறச் சீடர்கள். மறு பிரிவில் குடும்பஸ்தர்களான சீடர்கள். இந்த இரு பிரிவினருக்குமிடையே சற்றே கருத்து மாறுபாடும் ஏற்பட்டு விட்டது. காஸிப்பூர் குடும்பத்தின் செலவு அதிகமாகிக் கொண்டே வந்தது. செலவுகளைக் குடும்பஸ்தர்களே ஏற்க வேண்டி வந்தது.
பலராம் போஸ் குருதேவருக்கு ஆகும் சொந்தச் செலவுகளையும் சுரேன் மித்ரா என்ற பக்தர் வாடகை மற்ற இதர செலவுகளையும் ஏற்றுக் கொண்டார்கள். ஜூனியர் கோபால் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டார். ராமச்சந்திரா மற்றும் சிலர் கணக்குகளைச் சரிபார்த்தார்கள். இப்படி சரி பார்த்த பொழுது செலவுகள் அதிகமாகின்றன என்ற வகையில் கொஞ்சம் தடித்த வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப் பட்டன.
காஸிப்பூரில் குருதேவர் கூட இரண்டு பேர் தங்கியிருந்தால் போதாதா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. விஷயம் குருதேவர் காதுக்கு எட்டியது. அவர் தம் உள் வட்டச் சீடர்களிடம் முடிவாகச் சொல்லி விட்டார். ''குடும்பஸ்தர்களே வேண்டாம். நீங்கள் எங்கே போகிறீர்களோ அங்கே நான் வருகிறேன். நீங்கள் என்னை எப்படி வைத்துக் கொண்டாலும் எனக்குத் திருப்திதான்''
துறவறச் சீடர்கள் இல்லறத்தாரிடம் எந்த நன்கொடையையும் பெற மறுத்து விட்டார்கள். காசிப்பூர் இல்லத்துக்கு இல்லறத்தார் வரவும் கூடாது என்று கூறிவிட்டார்கள். இரு குழுவினருக்கு இடையே குருதேவர் சமரசம் செய்து வைத்தார் என்றாலும் உள் வட்ட பக்தர்கள் துறவிகளின் நெறிப் படி பிச்சை எடுத்து வந்த உணவையே சமைத்தார்கள்.
இந்த விஷயங்களினால் ஒரு நன்மையும் உண்டாயிற்று. துறவற பக்தர்களிடையே ஒரு நேசமும் நெருக்கமும் மலர்ந்தது. நரேந்திரன் அனைவரும் ஒருமித்து ஏற்றுக் கொண்ட தலைவரானார். பின்னால் உருவாகப்போகும் ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்திற்கு இந்த விவகாரமே அடித்தளம் அமைத்துத் தந்தது.
கோபால் ஸீனியர் இந்தத் தருணத்தில் பிருந்தாவனத்துக்கு யாத்திரை சென்று வந்தார். வருகையில் சில காவி உடைகளையும் ருத்திராட்ச மலைகளையும் வாங்கி வந்தார். ஒரு மேளாவுக்குச் செல்லும் வழியில் கல்கத்தாவில் வந்து தங்கியிருந்த சில துறவிகளுக்கு அவற்றை வழங்க வேண்டும் என்பது அவர் விருப்பம். குருதேவரோ அவற்றைத் தமது துறவறச் சீடர்களுக்குக் கொடுக்கும்படி பணித்து விட்டார்.
அவற்றைத் தமது கரங்களால் ஸ்பரிசித்து சில மந்திரங்களை ஓதி தமது சீடர்களை அவற்றை அணிய வைத்தார். இது அவர்கள் சந்நியாச தீட்சை பெற்றதற்கான அடையாளம். இப்படி தீட்சை அனுக்கிரகிக்கப் பட்டவர்கள்:- நரேந்திரன், ராக்கால், நிரஞ்சன். பாபுராம், சசி,சரத், காளி, ஜோகன், லாட்டு, தாரக், சீனியர் கோபால் கியோர். கிரீஷுக்கு ஒரு செட் எடுத்து வைக்கப் பட்டது.
துறவி சீடர்களும் உற்சாகமாக வீட்டுக்கு வீடு சென்று இறைவன் நாமத்தை உச்சரித்தபடியே பிச்சை எடுக்கத் தொடங்கினார்கள். (இதை பிக்ஷை என்பார்கள்.) சில வீடுகளில் அரிசி, வாழைக்காய், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் போன்றவை கிடைக்கும். சில வீடுகளில் உபதேசம் கிடைக்கும். ''கை கால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு? உழைத்துப் பிழைக்க வேண்டியதுதானே?'' ''எல்லாம் திருட்டுப் பசங்க; உளவு பார்ப்பதற்காக சாமியார் வேஷத்திலே வந்திருக்காங்க'' என்று சொன்னவர்களும் இருந்தார்கள். இவற்றையெல்லாம் புன்முறுவலோடு ரசித்தவர்கள்தாம் விவேகானந்தரும் அவரையொத்த மற்ற சீடர்களும்.
கிடைத்த உணவை அன்னை சாரதாதேவி சமைத்துப் போட பின்னாள் ராமகிருஷ்ண இயக்கத்தினர் மகிழ்ச்சியோடு உண்பார்கள். குருதேவரும் கொஞ்சம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வார்.
(தொடரும்)
|
| | டி.எஸ்.வெங்கடரமணி அவர்களின் இதர படைப்புகள்.
| ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|