 |
இதழ் 368 |
 |
ஜூன் 09 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (16)
- ஜ.ப.ர |
| | சுவாமி விவேகானந்தர் ஒருமுறை சொன்னார். “ஒருவன் தொடர்ந்து 12 ஆண்டுகள் உண்மையே பேசி வந்தால், அவன் எது சொன்னாலும் அது உண்மையாகும்” என்று. உண்மை சொல்வேன்...
"உண்மை உடையணிந்து தயாராவதற்குள், பொய் பாதி உலகைச் சுற்றி வந்துவிடுகிறது" - வின்ஸ்டன் சர்ச்சில்
அண்மையில் கவின் ஹாரிஸன் என்பவர் எழுதிய “புத்தரின் மடியில்” (In the lap of Buddha) என்ற புத்தகத்தைப் படித்தோம். அதில் அவர் கெளதம புத்தரின் Right Speech என்ற தத்துவத்தை விளக்குகிறார்.
1) கடுமையாகப் பேசாதே 2) வம்பு பேசாதே 3) வெட்டிப் பேச்சுப் பேசாதே (நகைச்சுவை விலக்க வேண்டியது அல்ல.) 4) பொய் பேசாதே இதை நம் இளம் சிநேகிதி புவனாவிடம் பகிர்ந்து கொண்டோம். அவர் சொன்னார், “ஆகக்கூடி என்னை வாயைத் திறக்காதே என்கிறீர்கள்!”
இன்னும், பேசுவதற்கான சில விதிகளை இந்த நூல் பட்டியலிடுகிறது.
தீமை பயப்பதும் உண்மையற்றதுமான ஏதாவது உனக்குத் தெரிந்தால் - அதைச் சொல்லாதே.
தீமை பயப்பதும் உண்மையானதுமான ஏதாவது உனக்குத் தெரிந்தால் - அதைச் சொல்லாதே.
பிறருக்கு உதவக்கூடியதும் உண்மையற்றதுமான ஏதாவது உனக்குத் தெரிந்தால் - அதைச் சொல்லாதே.
பிறருக்கு உதவக்கூடியதும் உண்மையானதுமான ஏதாவது உனக்குத் தெரிந்தால், அதை சரியான தருணத்தில் சொல்லத் தவறி விடாதே.
எல்லாம் சரி, “பிறருக்கு உதவக் கூடியதும் உண்மையற்றதும் சொல்லாதே” என்கிறாரே! நெருடுகிறதே? ‘பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பிறக்குமெனின்” என்று வள்ளுவர் சொன்னது என்னாச்சு என்கிறீர்களா? இந்தப் ‘பொய்மையும் வாய்மையிடத்த’ தான் எல்லாருக்கும் வசதியாகப் போய் விட்டது.
வள்ளுவர் பொய்யாமொழிப் புலவர், ஒரு சித்த புருஷர் என்கிறார்கள். நமது வசதிக்கு ஏற்ப மிக சுலபமாகக் கையாளுவதற்காக இப்படி ஒன்று எழுதி வைப்பாரா? பின், அந்தக் குறளுக்கு என்ன அர்த்தம்?
ஒரு நடந்த கதை சொல்கிறோம்.
மகாகவி பாரதியார் புதுச்சேரியில் இருந்த நேரம். அவரது நெருங்கிய குடும்ப நண்பர் பொன்னு முருகேசம் என்பவர். அவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரது மகன் வெளிநாட்டிலிருந்து வந்துகொண்டிருந்த கப்பல் கடலில் மூழ்கி அவன் இறந்து விட்டான் என்று தந்தி வந்தது. பெரிதும் அதிர்ச்சியாகி விட்டது அவருக்கு.
படுத்த படுக்கையில் இருக்கும் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை மாற்ற வேண்டி அவர் குடும்பத்தார் ஒரு பொய்த் தந்தி ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார்கள், “முன்னால் அனுப்பிய தந்தி தவறு. கப்பல் மூழ்கவில்லை. மகன் பத்திரமாக இருக்கிறான். விரைவில் வருவான்.” என்று.
பொன்னு முருகேசம் இந்தத் தந்தியை நம்ப மறுத்து விட்டார். “பாரதி வந்து சொல்லட்டும்; நம்புகிறேன்.” என்று கூறி விட்டார். இப்போது குடும்பத்தார் பாரதியாரை அணுகினார்கள்.
நல்லதுக்காக ஒரு பொய் சொல்ல வேண்டும். பாரதியார் ஒரு நிமிஷம் யோசித்தார். பீடு நடை போட்டபடி, பொன்னு முருகேசத்தின் படுக்கை அருகே வந்தார். கம்பீரமாகச் சொன்னார், “ஓய், பொன்னு முருகேசம், கப்பல் முழுகியது உண்மைதான். ஆனால், உம் மகன் உயிரோடு இருக்கிறான். இரண்டு நாட்களில் வந்து விடுவான். இதை நான் சொல்லவில்லை, பராசக்தி சொல்கிறாள்” இப்படிச் சொல்லி விட்டு விரு விருவென்று சென்று விட்டார்.
ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! பொன்னு முருகேசத்தின் மகன் சொன்னபடியே இரண்டே நாட்களில் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை சொன்னார். “ஒருவன் தொடர்ந்து 12 ஆண்டுகள் உண்மையே பேசி வந்தால், அவன் எது சொன்னாலும் அது உண்மையாகும்” என்று.
நாமும் கூட முயற்சி செய்து பார்க்கலாம், தடையில்லை!
சிநேகிதன் ஒருவன் தனக்கு body language தெரியும் என்று பீற்றிக் கொண்டான். “உன் முகத்தைப் பார்த்தே நீ பொய் சொல்கிறாயா என்பதைக் கண்டு பிடித்து விடுவேன்” என்றான்.
“எப்படி?” என்று ஆச்சரியத்துடன் கேட்டோம்.
அவன் சொல்கிறான், “நீ வாயைத் திறந்து கொண்டிருந்தால் பொய் சொல்கிறாய் என்று அர்த்தம்.”
கையை ஓங்குமுன் விட்டான் ஜூட்!
|
| | ஜ.ப.ர அவர்களின் இதர படைப்புகள்.
| ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|