மகிழ்ச்சி, மனத் தெளிவு, தூய்மையான மனம், கனிவான பேச்சு, நேர்மறை எண்ணங்கள், திறன் கூடுதல், வாழ்க்கையில் திருப்தி - எல்லாவற்றிற்கும் மேல் நிம்மதி.
நாம எல்லோருக்கும் நல்லாத் தெரிஞ்ச கதை, வினாயகப் பெருமான் ஞானப்பழம் பெற்ற கதை. உலகை யார் முதலில் சுற்றி வருகிறாரோ அவருகே பழம் என்ற அம்மையப்பர் கட்டளையின் அடிப்படையில் அப்பாவி முருகப் பெருமான் மயிலேறி ஊர் சுற்றக் கிளம்ப, வினாயகரோ சற்றும் யோசிக்காமல் 'அம்மையப்பரே உலகம்' என்று கூறி அவர்களைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார்.
அண்ணனை வெற்றி கொண்டு, உலகைச் சுற்றி வந்து பழம் வெல்வேன் என்று வேகத்துடன் கிளம்பிய முருகனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அண்ணனோ தம்பியைப் பின் தொடர்ந்து சென்று அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று வரிந்து கட்டாமல், வேறு வழி யோசித்ததன் பலன் - பழத்தைக் கைப்பற்றினார்.
ஆம்! அண்ணன் நிச்சயம் தம்பியை வெற்றிகொள்ள நினைக்கவில்லை! மாறாக, தம்பிதான் அண்ணனை வெற்றிகொள்ள வேண்டும் என்ற வேகத்தில் கிளம்பினார்.
ஓ! அப்படியென்றால் நாம் வெற்றி பெற அடுத்தவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அப்படித்தானே!
அப்படியென்றால் நாம் ஏன் நமது குறிக்கோளை அடுத்தவருடைய குறிக்கோளுடன் ஒப்பிட்டு நோக்கி அமைக்க வேண்டும்?
நமக்கு நாமே வெற்றி இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை அடைவது சாதனைதானே?! அடுத்த முறை நம்முடைய சாதனையை நாமே உடைத்து மீண்டுமொரு சாதனை படைத்தால்?
ம்ம்... சரி.. ஏன் நம் வெற்றியை மற்றவருடைய வெற்றியுடன் ஒப்பிடக்கூடாது என்கிறோம்?
1. அவர்கள் குடும்பச் சூழல் வேறு வேறாக இருக்கலாம்.
2. அவர்கள் கல்வி நிலை வேறு வேறாக இருக்கலாம்.
3. அவர்கள் நட்பு வட்டாரம் வேறு வேறாக இருக்கலாம்.
4. அவர்கள் வளர்ப்பு முறை வேறு வேறாக இருக்கலாம்.
5. அவர்கள் ஆரம்பித்த காலகட்டங்கள் வேறு வேறாக இருக்கலாம்.
6. அவர்களுக்குக் கிடைத்த ஆலோசனைகள் வேறு வேறாக இருக்கலாம்.
7. அவர்களது ஜீன்களிலேயே நம்மிடம் இல்லாத சில பண்புக்கூறுகள் பொருந்தி இருக்கலாம்.
இப்படி பற்பல வேறு-வேறுகள். என்னைப் போல் நீங்கள் இல்லை; உங்களைப் போல உங்கள் நண்பர் இல்லை; உங்கள் நண்பரைப் போல உங்கள் எதிராளி இல்லை; உங்கள் எதிராளியைப் போல் நான் இல்லை. அதுதானே உண்மை?
ம்ம்... சரி.. நாம் பிறரை ஜெயிக்க நினைக்காவிடில் கிடைக்கும் பலன்கள் என்ன?
1. அவர்கள் நமக்கு நண்பர்களாவார்கள். (எதிரியை நண்பனாக்கிக் கொண்டால் அவனை வெற்றி கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது ஆபிரகாம் லிங்கன் கூற்று!)
2. நம்மைப் பற்றிய நல்லெண்ணம் உருவாகும். (இவன் இவன் வழியைப் பார்த்துப் போயிட்டிருப்பான்; யார் வம்பு தும்புக்கும் போக மாட்டான்; இவனுக்கு என்ன ஹெல்ப் பண்ணாலும் அது தகும்! பேச்சு கேட்கிறதல்லவா!)
3. கூட்டு முயற்சி மூலம் குழு அமைப்புகள் உருவாக வழியேற்படும். (வலிமை குறைந்த நான்கு எருதுகள் ஒன்று சேர்ந்தால் சிங்கமும் எதிர்க்க அஞ்சும்தானே! ஒன்றாம் வகுப்புப் பாடம்!)
4. இன்ன பிற: மகிழ்ச்சி, மனத் தெளிவு, தூய்மையான மனம், கனிவான பேச்சு, நேர்மறை எண்ணங்கள், திறன் கூடுதல், வாழ்க்கையில் திருப்தி - எல்லாவற்றிற்கும் மேல் நிம்மதி.
பட்டியல் இதோடு முடிவதில்லை. பலன்களை அனுபவத்தில் உணர்ந்து பார்க்கும்போது கிடைப்பவற்றை, அவற்றை வார்த்தைப் படுத்தாமல், அந்த அனுபவத்தில் உழல்வது அலாதியான ஆனந்தத்தைக் கொடுக்கும்.
'யாரையுமே ஜெயிக்க வேண்டாம் என்று, என் கடன் பணி செய்து கிடப்பதே என்று' தேமே என்று உட்கார்ந்திருந்தால் வாழ்க்கை போரடித்துவிடுமே!
எந்த வேலையைச் செய்தாலும், எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் ஒரு அளவுகோலை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதில் அடுத்தடுத்த லெவல்களை குறித்து வைத்துக் கொண்டு, அவற்றை அடைய நீங்கள் எடுக்கும் முயற்சிகளை நீங்களே ரசியுங்கள்; அவற்றை அனுபவித்துச் செய்யுங்கள்; அடைய நினைக்கும் கால அளவையும் மனதில் கொள்ளுங்கள்; அடைந்து விட்டால் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். அடையா விட்டாலோ, பாதகம் ஒன்றுமில்லை.. அதையே அடைய புதிய சிந்தனை; மீண்டும் முயற்சி; வெற்றி. அவ்வளவுதான்!
உதாரணத்திற்கு, B.E. படிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு அடுத்த லெவல் என்று பார்த்தால் அது,
1. M.E. மேற்படிப்பாக இருக்கலாம்.
2. துறை சார்ந்த நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்வதாக இருக்கலாம்.
3. துறை சார்ந்த தொழிலை நடத்துவதாக இருக்கலாம்.
4. போட்டித் தேர்வுகள் எழுதி அரசு வேலைக்குச் செல்வதாக இருக்கலாம்.
5. விரிவுரையாளராகச் செல்வதாக இருக்கலாம்.
உங்களுக்கு எது பிடிக்கிறது.. எது உங்களுக்கு சரியான சாய்ஸ் என்பதைத் தெளிந்து தேர்ந்தெடுங்கள். பிறரோடு, பிறர் எடுக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டு நோக்க வேண்டாம்.