'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து' என்று வள்ளுவர் கூறியது உரிய காலத்திற்காக காத்திருந்து செயலாற்றி வெற்றி பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தியேயாகும்.
உடலில் ஒரு கடிகாரம்
உரிய வேலைகளைச் செய்யும் போது அதற்கான முழு ஆற்றலுடன் செய்தால்தான் நூறு சதவிகித வெற்றியைப் பெற முடியும். ஒவ்வெருவருடைய முழு ஆற்றலும் வெளிப்படும் நேரம் அவரவருடைய உடல் நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது.
சிலர் காலையில் எழுந்தவுடன் வேலை செய்தால் தான் முழு ஆற்றல் இருக்கிறது என்கின்றனர். கலைஞர்களோ, கதாசிரியர்களோ தங்களுக்கு மூட் (MOOD) வரவில்லை என்கிறார்கள். இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் நம் உடலில் ஒரு கடிகாரம் வேலை செய்வதைக் கண்டு பிடித்துள்ளனர். இதை BIO-RHYTHM என்கின்றனர். நன்கு ஆற்றலுடன் வேலை செய்யும் நேரத்தை PRIME TIME என்று கூறுகின்றனர்.
நம்மை நாமே உற்றுக் கவனித்தால் எந்தெந்த நேரத்தில் நம் ஆற்றல் முழுவதுமாக வெளிப்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். இதை உணர்ந்தவுடன் அந்த நேரங்களில் முக்கியமான காரியங்களைச் செய்ய திட்டமிட வேண்டும்.
பொதுவாக வெற்றியாளர்கள் அனைவரும் அதிகாலை எழும் பழக்கம் உடையவர்களாகவே இருக்கிறார்கள்.
டேனியல் வெப்ஸ்டர் தினந்தோறும் இருபது முதல் முப்பது கடிதங்களுக்கு தனது காலை உணவிற்கு முன்பு பதில் எழுதி விடுவாராம். சர்.வால்டர் ஸ்காட் தினசரி காலை 5 மணிக்கு எழுந்து விடுவார். "நேரத்தை சரியாகப் பயன்படுத்து!" என்பதே இளைஞர்களுக்கு அவர் அடிக்கடி கூறும் அறிவுரை!
கோபர்னிகஸ் அதிகாலை எழும் பழக்கம் உடையவர். நெப்போலியன் தனது படையெடுப்புகள் அனைத்தையும் காலை நேரத்திலேயே திட்டமிடுவானாம். கொலம்பஸும் அப்படியே!
மவுண்ட்பேட்டன் கூற்று
மவுண்ட்பேட்டன் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் இது:
அவர் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு முன் தீவிரமாகத் திட்டமிடுவார். நடவடிக்கை முடிந்ததற்குப் பின்னால் தனது திட்டத்தில் ஏதேனும் தவறு இருந்ததா என்று சீர்தூக்கிப் பார்ப்பார்.
ஒரு முறை நார்வே துறைமுகம் ஒன்றைத் தாக்கிவிட்டு திரும்பி வரும்போது தன் வீரர்களை நோக்கிக் கூறினார்: "நமது திட்டத்தில் ஒரு பெரும் தவறு நேர்ந்து விட்டதே! 8.30 மணிக்கு நாம் கரை இறங்க திட்டமிட்டிருந்தோம்! ஆனால் 8.31 - க்கு அல்லவா கரை இறங்கி விட்டோம்!" ஒரு நிமிட நேர தாமதம் அவருக்குப் பெருந்தவறாகத் தோன்றியது! அதில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகக் கூடும் என்பதே அவரின் கவலை!
நெப்போலியன் ஜெயித்த காரணம்
ஆஸ்திரியர்களைத் தான் ஜெயித்ததற்கான காரணத்தை ஒருமுறை விளக்கிக் கூறுகையில் நெப்போலியன் கூறினான்: "அவர்கள் ஐந்து நிமிட நேரத்தின் மகிமையை அறியாதவர்கள்! ஆகவேதான் அவர்களை சுலபமாக ஜெயிக்க முடிந்தது!"
ஒத்திப் போடாதே
ஒரு காரியத்தை ஒத்திப் போடுபவர்கள் முன்னேறுவது கடினம். செய்ய வேண்டுவனவற்றை உரிய காலத்தில் செவ்வனே செய்ய வேண்டும்.
ஒத்திப் போடுவதையும், உரிய காலத்திற்காக காத்திருப்பதையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து' என்று வள்ளுவர் கூறியது உரிய காலத்திற்காக காத்திருந்து செயலாற்றி வெற்றி பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தியேயாகும்.
ஒத்திப் போடுவதற்குப் பல காரணங்கள் உண்டு
1. மனதிற்குப் பிடிக்காத செயல்களைச் செய்ய விருப்பமில்லாததால் 2. விரக்தி மனப்பான்மையுடன் இருப்பதால் 3. உதவி தேவைப்படுகின்ற சூழ்நிலையில் அது கிடைக்காததால் 4. காரியத்தின் பரிமாணத்தை நினைத்து ஏற்படும் மலைப்பால் (இதை நம்மால் செய்ய முடியுமா என்ற ஆதங்கத்தால்) 5. செய்தால் யாருமே செய்ய முடியாத அளவு மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்று பெரிதாக திட்டம் போட்டு ஆரம்பிக்காமலேயே இருப்பதால் 6. காரியத்தை முடிக்க வேண்டிய கால நிர்ணயம் இல்லாததால் 7. செய்யும் காரியத்தில் தோற்று விடுவோமோ என்ற பயத்தால் 8. என்னால் இதைச் செய்ய முடியுமா என்ற தாழ்வு மனப்பான்மையால் 9. யாரேனும் கேலி செய்து விமர்சித்து விடுவார்களோ என்ற பயத்தால்
மேலே உள்ள காரணங்களால் ஒத்திப் போடுதலை நிறுத்த, திட மனதே வேண்டும். அந்த வேலையை முடிக்க தகுந்த உதவிகளை நாட வேண்டும். பெரிய வேலையாக இருப்பின் பல பகுதிகளாகப் பிரித்து பகுதி பகுதியாக முடித்தல் வேண்டும்.
கால வங்கி
ஒவ்வொரு நாளும் நமது கால வங்கியில் 86,400 வினாடிகள் மூலதனமாக போடப்படுகின்றன. இதையே 86,400 ரூபாய்கள் ஒவ்வொரு நாளும் நமது இருப்பில் சேர்கிறது என்றால் அதை நம்மால் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த வினாடிகளையோ அன்றன்று செலவழித்துவிட வேண்டும். இதை உரிய முறையில் உரிய வேலைகளுக்காகப் பயன்படுத்துகிறோமா என்பதே கேள்வி.
ஒத்திப்போடுதல் அல்லது தள்ளிப் போடுதல் இவற்றாலோ, சோம்பேறித்தனத்தாலோ இந்த வினாடிகளை வீணாக்கினால் வெற்றியைப் பெறுதல் கஷ்டம் என்பதை உணர்தல் வேண்டும். இன்றைய மூல தனத்தைச் சரியாக செலவழிப்பதன் மூலம் இன்றைய இரவே லாப நஷ்டக் கணக்கை தெரிந்து கொள்ள முடியும்.
நாள் செல்லச் செல்ல நமது கால வங்கியில் மூலதனத்தை எப்படி பயன்படுத்தினோம் என்பதை நாம் அடையப் போகும் வெற்றி அல்லது தோல்வி புலப்படுத்தும்.