அகஸ்தியரும் அந்த தேவ ரகசியத்தைச் சொன்னார். "எருக்கிலையில் தயிரன்னம் புசிப்பதால் அதன் சாரம் அன்னத்துடன் கலந்து தொழுநோய்க்கு மருந்தாகும்"
காலவ முனிவர் தன் முன் காலம் பற்றியும், வருங்காலம் பற்றியும் சிந்தித்தார். முன் ஜன்மத்தில் தான் நண்டுகளின் கால்களை முறித்த பாவத்தினால் எதிர்காலத்தில் தொழுநோய் வந்து கஷ்டப்படப் போகும் நிலைமையை அறிந்தார். இதை நினைத்து வருந்திய அவர் எல்லோரிடமும் அதைப் பற்றிச் சொல்ல எல்லோரும் அவருக்காக வருந்தினர். காலவ முனிவரின் மனக்கவலையைத் தெரிந்து கொண்ட மற்ற முனிவர்கள்,
"முனிவரே முக்காலமும் அறிந்த உங்களுக்கு இதற்கான பரிகாரமும் தெரிந்திருக்கும். ஏதாவது பரிகாரம் இருக்கிறதா என்று பாருங்கள். நம் முன் வினைப் பயனைத் தருபவர்கள் நவகிரக நாயகர்கள். அவர்களை நோக்கித் தவம் செய்து இந்த வினையிலிருந்து விடுதலை பெற முயற்சி செய்யுங்கள்" என்றனர்.
ஒரு நல்ல நாளில் விந்திய மலைச்சாரலுக்கு வந்து காலவ முனிவர் அக்னி வளர்த்து அதன் நடுவில் இறங்கி நின்று கடும் தவம் மேற்கொண்டார். உஷ்ணத்தைத் தாங்க முடியாத நவகிரக நாயகர்கள் ஒரே நேரத்தில் காலவ முனிவரிடம் தோன்றினர்.
“காலவ முனிவரே, என்ன வரம் வேண்டும்? கேளுங்கள்.. தருகிறோம்"
"நவகிரஹ நாயகர்களே.. வணங்குகிறேன். எனக்குத் தொழு நோய் வராமல் அருள் புரிய வேண்டும்."
"அப்படியே அருளுகிறோம்."
இந்தச் செய்தி பிரம்ம தேவருக்கு எட்டியது. மிகவும் கோபமடைந்து "எல்லோரும் அவரவர் வினைப் பயனை அடைந்துதான் ஆக வேண்டும். நீங்கள் அதை மீறி உங்கள் இஷ்டப்படி வரம் அளித்து விட்டீர்கள். ஆகையால் அவருக்கு வரவேண்டிய தொழுநோய் ஒரு கால வரையில் உங்களுக்கு வந்து கஷ்டப்பட பூலோகத்திற்குப் போவீர்கள்" என்றார்.
நவகிரகர்கள் மன்னிப்புக் கேட்டு சாப விமோசனம் வேண்டும் என்றும் யாசித்தனர்.
மனம் இறங்கிய பிரம்ம தேவர் "நீங்கள் காவிரி ஆற்றின் அருகில் இருக்கும் அர்க்கவனம் என்ற காட்டில் தவம் செய்யுங்கள். கார்த்திகை மாதம் ஞாயிறு 12 மணிக்குத் தொடங்கி 78 நாட்கள் வரை தவம் இயற்றுங்கள். காலை சூரியோதயம் முன் நீராடி அங்கு கோயில் கொண்டிருக்கும் பிரணவ வரதரையும் மங்கள நாயகியையும் வழிபடுங்கள். பின் வெள்ளெருக்கு இலையில் மூன்று பிடி தயிரன்னம் வைத்துப் பூஜித்து அதைப் புசிக்க வேண்டும்" என்றார்.
பூலோகம் வந்த நவகிரக நாயகர்கள், அங்கு அகஸ்திய முனிவரைக் கண்டு நடந்ததைச் சொன்னார்கள். பின் வெள்ளெருக்கு இலையில் தயிரன்னம் புசிக்கும் தத்துவம் பற்றிக் கேட்டனர்.
அகஸ்தியரும் அந்த தேவ ரகசியத்தைச் சொன்னார். "எருக்கிலையில் தயிரன்னம் புசிப்பதால் அதன் சாரம் அன்னத்துடன் கலந்து தொழுநோய்க்கு மருந்தாகும்"
நவகிரகங்களும் நோன்பு ஆரம்பித்து ஒழுங்காக எல்லாம் செய்ய, பிரணவ வரதரும் மங்கள நாயகியும் தோன்றி "உங்கள் தவத்தை மெச்சினோம். மனம் மகிழ்ந்தோம். நீங்கள் தவம் புரிந்த இடத்தில் உங்களுக்கு தனித்தனி கோயில்கள் உண்டாகி உங்களுக்கு உரிய ஸ்தலங்களாக விளங்கட்டும். அங்கு வந்து வேண்டுவோருக்கு நீங்கள் சுதந்திரமாக அருள் புரிய வரம் தந்தோம்" என்று அருளினர்.
அப்படி உருவாகியதுதான் சூரியனார் கோவில். அவர்கள் வணங்கிய வினாயகர், ‘கோள் தீர்த்த வினாயகர்’ என்பதாக அங்கு அருள் பாலிக்கிறார். முதலில் இவரைப் பார்த்த பின்தான் மற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும். அங்கு வெள்ளெருக்குதான் முக்கிய விருட்சம் ஆக இருக்கிறது.
எல்லோரும் இந்தக் கோயிலுக்கு சென்று நவக்கிரகர்கள் அருள் பெற்று வரலாம்.