தான் ஓடிய பாதையில் ஆறு ஒன்று குறுக்கிட்டதும் திகைத்துப் போனான் குண்டன். திரும்பிப் பார்த்தால் ஆடு, மாடு, கழுதை மூன்றும் அவனருகில் நெருங்கி விட்டன. (மூலம்: இங்கிலாந்து)
ஒரு குடிசையில் தனியே வசித்து வந்த மூதாட்டி ஒருவர், தான் உண்பதற்காக கொழுக்கட்டை செய்ய விரும்பினார். மாவைப் பிடிக்கையில் அது ஒரு கொழு கொழுவென்ற மனிதன் உருவில் வந்தது. அதனை ரசித்த மூதாட்டி, அதற்குக் கண்களாக காய்ந்த திராட்சையையும் வாயாக முந்திரிப்பருப்பையும் வைத்து அழகு பார்த்தார். பின்பு அந்த கொழுக்கட்டை குண்டனை பானையிலிட்டு ஆவியில் வேக வைத்தார். நேரமானதும், பானையைத் திறந்து கொழுக்கட்டையை எடுக்கப் போனார். ஆனால் அந்த கொழுக்கட்டை குண்டன் உயிர் பெற்று பானையிலிருந்து குதித்து வேகமாக ஓட ஆரம்பித்தான்.
அதனைக் கண்ட மூதாட்டி, "ஓடாதே, கொழுக்கட்டையே, எனக்கு பசியாக இருக்கிறது" என்றபடி அதன் பின்னாலேயே ஓடினார்.
அதற்கு கொழுக்கட்டை குண்டன், "ஓடி வா... ஓடி வா... ஓயும் வரை ஓடிவா... என்னைப் பிடிக்கத்தான் முடியாது" என்றபடி ஓடியே போனான்.
போகிற வழியில் ஆடு ஒன்று அதனைக் கண்டது.
"ஓடாதே, கொழுக்கட்டையே... உன்னை நான் உண்ணப் போகிறேன்" என்று கூவியது.
கொழுக்கட்டை குண்டன் ஏளனமாக நகைத்தபடியே, "ஓடி வா... ஓடி வா... ஓயும் வரை ஓடிவா... என்னைப் பிடிக்கத்தான் முடியாது" என்றபடி இன்னும் வேகமாக ஓடினான். ஆடும் விடாமல் அவனைத் துரத்தியது.
கொழு கொழுவென்றிருந்த கொழுக்கட்டைக் குண்டான் உருண்டு உருண்டு ஓடியதைப் பார்த்த மாடு அவனை வழி மறித்து, "எங்கே ஓடப் பார்க்கிறாய்? உன்னை நான் தின்னப் போகிறேன், கொழுக்கட்டையே!" என்றது. மாட்டின் கால்களின் வழியாகப் புகுந்து ஓடிய குண்டான் சிரித்தபடி, , "ஓடி வா... ஓடி வா... ஓயும் வரை ஓடிவா... என்னைப் பிடிக்கத்தான் முடியாது" என்றபடி இன்னும் வேகமாக ஓடினான். மாடு அவனைத் துரத்தி அவன் பின்னே ஓடியது. அதற்குப் பின்னால் ஏற்கெனவே துரத்தி வந்த ஆடு ஓடியது.
இந்த அணி வரிசையை தூரத்திலிருந்தே கவனித்த கழுதை கொழுக்கட்டை மனிதனின் மேலே பாய்ந்து அவனை உண்ண முயன்றது. இலாவகமாகத் தப்பித்த குண்டன், கழுதையைப் பார்த்து, "ஓடி வா... ஓடி வா... ஓயும் வரை ஓடிவா... என்னைப் பிடிக்கத்தான் முடியாது" என்றபடி தலைதெறிக்க ஓடினான். அவனது வேகத்துக்கு ஈடுதர முடியாமல் விலங்குகள் திகைத்தன. ஆனால் ஒரு சிறிய கொழுக்கட்டையிடம் தோற்க மனமில்லாமல் தொடர்ந்து துரத்தின.
தான் ஓடிய பாதையில் ஆறு ஒன்று குறுக்கிட்டதும் திகைத்துப் போனான் குண்டன். திரும்பிப் பார்த்தால் ஆடு, மாடு, கழுதை மூன்றும் அவனருகில் நெருங்கி விட்டன. "ஐயோ, இந்த ஆற்றை எப்படிக் கடப்பேன்? இல்லாவிட்டால் என்னைத் தின்றுவிடுவார்களே!" என்று வாய்விட்டுக் கதறியது.
மரத்தின் பின்னாலிருந்து சத்தமில்லாமல் வெளிவந்த நரி, "நான் உனக்கு உதவி செய்யட்டுமா?" என்று கேட்டது.
"நீயும் என்னைத் தின்னத்தான் போகிறாய்" என்று பின் வாங்கினான் குண்டன்
"இல்லவே இல்லை. என்னை நம்பு, நண்பா. என் வாலைப் பிடித்துக் கொள். நான் நீந்தி உன்னை அக்கரையில் சேர்க்கிறேன்" என்று வலியுறுத்தியது.
கொழுக்கட்டை குண்டனும் வேறு வழியில்லாமல் நரியின் வாலைப் பிடித்துக் கொள்ள, நரி நதியில் குதித்து நீந்த ஆரம்பித்தது. வால் நதியில் மூழ்கியதால் குண்டன் நீரில் கரைய ஆரம்பித்தான். எனவே அவன் நரியின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டான். முக்கால்வாசி தூரம் கடந்ததும், "நீ மிகவும் பாரமாக இருக்கிறாய். என் முதுகு வலிக்கிறது. உன்னைக் கீழே போட்டுவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது, இன்னும் கொஞ்ச தொலைவுதான். என் மூக்கில் அமர்ந்து கொள். எப்படியாவது கஷ்டப்பட்டு உன்னைக் கரை சேர்த்து விடுகிறேன்" என்றது நரி
குண்டனும் அவ்வாறே நரியின் மூக்கில் அமர்ந்து தன் பயணத்தைத் தொடர்ந்தான். கரை ஏறியதும் நரி, குண்டனை மூக்கிலிருந்து அலேக்காக அந்தரத்தில் வீசியது. அவன் கீழே விழுமுன் பாய்ந்து கவ்வி சுவைத்துத் தின்றது.
கொழுக்கட்டை குண்டனின் வாழ்க்கை இவ்வாறாக முடிந்து போயிற்று.
(முற்றும்)
|