 |
இதழ் 378 |
 |
ஆகஸ்ட் 18 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| வீரத்துறவி விவேகானந்தர் (36)
- டி.எஸ்.வெங்கடரமணி |
| | ஆனால் இறைவன் திருவுள்ளம் வேறு விதமாக அமைந்தது. ஹத்ராஸ் என்ற புகை வண்டி நிலையத்தில் சுவாமிஜி அமர்ந்திருக்கிறார். கடைசி வண்டி போய் விட்டது. முதல் சிஷ்யர்.
தமது நாடோடி வாழ்க்கையில் சுவாமிஜி ஒரு விரதத்தை மேற்கொண்டிருந்தார். தாமாகப் போய் யாரிடமும் உணவு யாசிப்பதில்லை; யாராவது வலிய வந்து கொடுத்தால் மட்டுமே ஏற்பது.
ஒரு நாள், காட்டு வழி நெடுந்தூர நடை. களைப்பு. அதோடு கொட்டும் மழையும் சேர்ந்து கொண்டது. கடும்பசி. மயங்கி விழும் நிலை. திடீரென்று பின்னாலிருந்து யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. "சுவாமி, உணவு கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிடுங்கள்". இறைவனின் சித்தத்தைச் சோதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, சுவாமிஜி ஓடத் தொடங்கினார். அவர் ஓட, பின்னால் வந்தவரும் ஓட, பின்னால் வந்தவர் சுவாமிஜிக்கு முன்னால் வந்து குறுக்கே நின்று விட்டார். வற்புறுத்தி உணவை அருந்த வைத்து மகிழ்ந்தார். இறைவனின் தடுத்தாட்கொள்ளும் கருணை இதுதான் போலும்!
மற்றொரு சுவையான நிகழ்ச்சி. ஒரு முறை குளத்தில் குளித்து விட்டு சுவாமிஜி, படியேறி வந்து தமது ஆடையைத் தேடினார். ஆடை என்ன, ஒரே ஒரு கெளபீனம்! பகீரென்றது, கெளபீனம் காணவில்லை. நிமிர்ந்து பார்த்தார். எதிரில் இருந்த மரத்தின் உச்சியிலிருந்து ஒரு குரங்கு, கொடி போல அதை அசைத்து, அவருக்கு அழகு வேறு காட்டிக் கொண்டிருந்தது. சுவாமிஜி முழு நிர்வாண நிலை. (புத்தரின் 'நிர்வாணம்' இல்லை இது. பிறந்த மேனி.)
என்ன செய்வது என்று புரியாத சுவாமிஜி அடர்ந்த காட்டுக்குள் ஓடத் தொடங்கினார். அடுத்து என்ன செய்வது? உணவுக்கு வழி? அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு மானம் தப்பிக்க வேண்டும்! இறைவனே கட்டளை இட்டது போல யாரோ ஒருவர் பின்னால் வந்து இவருக்கு ஓர் அங்கியும் சுடச் சுட உணவும் அளித்தார்! அளித்து விட்டு அதற்கென்றே வந்தவர் போல உடனே போய் விட்டார். இறைவனின் எல்லையில்லாக் கருணையை எண்ணி எண்ணி சுவாமிஜி மெய்யுருகினார்.
பிருந்தாவனத்திலிருந்து புறப்பட்டு நேரே இமயமலை அடிவாரம் சென்று தவம் இருக்க வேண்டும் என்பது சுவாமிஜியின் நாட்டம். ஆனால் இறைவன் திருவுள்ளம் வேறு விதமாக அமைந்தது. ஹத்ராஸ் என்ற புகை வண்டி நிலையத்தில் சுவாமிஜி அமர்ந்திருக்கிறார். கடைசி வண்டி போய் விட்டது. இருக்க நிழல் கிடையாது.
"சுவாமிஜி, உங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்ய முடியுமா?" என்ற குரல் கேட்டுத் திரும்பினார். கேட்டவர் அந்த நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர். உடைந்த ஹிந்தியில் சுவாமிஜி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். சட்டென்று அந்த அன்பர் கேட்டார், "நீங்கள் வங்காளிதானே?" அவரும் வங்காளிதான். சரத் சந்திரர் என்பது அவர் பெயர். உரையாடல் வங்காளியில் இனிது தொடர்ந்தது.
"என் வீட்டுக்கு வாருங்கள்" என்று அழைத்தார் சரத். "வந்தால் என்ன தருவாய்?" என்றார் சுவாமிஜி.
"அன்பரே. என் இதயத்தைப் பிழிந்து இன்சுவைப் பண்டம் ஒன்று செய்து தருவேன்." என்றார் சரத். இது ஒரு பிரபல பாரசீகக் கவிதையின் வரி. சுவாமிஜி அக மகிழ்ந்து போனார். இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள். சுவாமிஜி சரத் சந்திரரின் வேண்டுகோளின்படி, பிரம்மசாரியான அவர் வீட்டிலேயே அவரது உபசரிப்பில் சில நாட்கள் தங்கியிருந்தார்.
ஒரு நாள். சரத் சுவாமிஜியின் முன் வந்து நின்று, "சுவாமிஜி எனக்கு 'வித்யா' (ஞானம்) வேண்டும்": என்றார். சுவாமிஜி, "வித்யா வேண்டும் என்றால் உன் அழகிய முகத்தில் சாம்பலைப் பூசிக்கொண்டு வா" என்றார். இது நகைச்சுவையாகச் சொன்னது. இது ஒரு வட மொழி நாடகத்தில் "வித்யா" என்ற பெண்ணை விரும்புபவரிடம் சொல்லப்படும் வசனம். சரத் இதை நிஜமாகவே எடுத்துக் கொண்டு விட்டார். முகத்தில் மட்டுமென்ன, மேனியெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு வந்து நின்றார். சரத்தின் சிரத்தையை எண்ணி வியந்தார் சுவாமிஜி.
சுவாமிஜி கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். "ஏன் இந்த சோகம்?" என்று வினவினார் சரத்.
"மகனே, நான் ஆற்ற வேண்டிய மகத்தான பணி ஒன்று உள்ளது. என் குருநாதரின் கட்டளை. நமது தேசம் புத்துயிர் பெற்று எழ வேண்டும். ஆன்மிகத்தின் அதல பாதாளத்துக்குப் போய், பசியால் வாடிக்கொண்டிருக்கும் நமது மக்கள் துடிப்பும் எழுச்சியும் பெற வேண்டும். நம்மிடம் உள்ள ஆன்மிக பொக்கிஷத்தை உலகத்துக்கெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும். அவ்வளவு மகத்தான பொறுப்புக்கான சக்தி என்னிடம் இல்லையே என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் சுவாமிஜி..
"என்னையே உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்" என்றார் சரத்.
"பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு போய் ஒவ்வொருவரிடமும் உன்னால் பிச்சை எடுக்க முடியுமா?" என்றார் சுவாமிஜி.
"முடியும்" என்று தயங்காமல் சொன்னார் சரத்.
"அப்படியானால், திருவோட்டை ஏந்திக்கொள். உனது ஸ்டேஷனில் பணியாற்றும் போர்ட்டர்களிடம் சென்று பிச்சை எடுத்து வா" என்றார் சுவாமிஜி.
க்ஷண நேரமும் நிற்காமல், தமது போர்ட்டர்களிடமே சென்று பிச்சையெடுத்து வந்து சுவாமிஜியிடம் சமர்ப்பித்து ஒரு விண்ணப்பத்தையும் முன் வைத்தார் சரத்.
"சுவாமிஜி! தாங்கள் என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்"
சுவாமிஜிக்கு இந்த வேண்டுகோளை மறுப்பதற்கான எந்தக் காரணமும் இல்லை. சரத்தை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு உபதேசம் செய்தார். பின்னர் ராமகிருஷ்ண மடத்துக்கு வந்து சதானந்தராய் மிளிரப் போகும் துறவி இவர்தான். சக துறவி அல்லாது, விவேகானந்தர் கையால் துறவறம் பெற்ற முதல் துறவி இவர்தான். ராமகிருஷ்ணரின் நேரடி சீடராக இல்லாது ராமகிருஷ்ண மடத்தில் துறவியான முதல் சன்னியாசியும் இவரே.
(தொடரும்) |
| | டி.எஸ்.வெங்கடரமணி அவர்களின் இதர படைப்புகள்.
| ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|