 |
இதழ் 378 |
 |
ஆகஸ்ட் 18 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது
- ஜ.ப.ர |
| | 2000 ஆண்டிலிருந்து பல போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடிய பிந்த்ராவிற்கு மணி மகுடமாக அமைந்துள்ளது இந்த மாபெரும் சாதனை. தங்க மகன் பிந்த்ரா
உலகில் கோடிகள் புரளும் பல போட்டிகள் நடந்தாலும், அவைகளில் பல கோடிகள் வென்றாலும் விளையாட்டு வீரர்களின் கனவுப் பந்தயம் என்னவோ ஒலிம்பிக்ஸ்தான்! இதில் பதக்கம் பெறுவதைப் பல கோடி பணம் பெறுவதைவிடப் பெரும் பேறாக நினைக்கிறார்கள். காரணம் இதன் தொன்மையான வரலாறு.
பல உலக நாடுகளும், நமது இந்தியாவும் நாலு வருஷங்களுக்கொரு தடவை கனவுகளைப் புதுப்பித்துக்கொண்டு செல்வதும் 'கை வீசம்மா கை வீசு' என்று வெறுங்கையுடன் திரும்புவதும் வாடிக்கை. 100 கோடி மக்கள் இருந்தும் ஒரு தங்கப் பதக்கம் பெற முடியாததைப் பற்றி 'தங்க'கலாய்த்துக்கொள்வோம்! விளையாட்டுகளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவங்கள் பற்றி ஆசிரியருக்குக் கடிதம் எழுதிவிட்டு குறட்டை விடத் துவங்கிவிடுவோம், அடுத்த நாலு வருஷங்கள் வரை.
பீஜிங்கில் நடந்துவரும் இந்த ஒலிம்பிக்சிற்கும் 'விளையாட்டாக' வீரர்களைஅனுப்பி வைத்தோம். அப்போது நாம் நம்பவில்லை, அபினவ் பிந்த்ரா என்ற 25 வயது இளைஞர் நம் இந்தியக் கனவுகளை மெய்ப்படுத்தப்போகிறார் என்று.
1980ல் ஹாக்கிப் போட்டியில் தங்கம் வென்ற பிறகு இந்தியா இதுவரை தங்கம் வென்றதில்லை. அதுவும் தனி நபர் போட்டியில் ஒலிம்பிக்சின் ஆரம்ப காலத்திலிருந்து யாருமே தங்கம் வென்றதில்லை. ஒரு நூற்றாண்டைக் கடந்த வெற்றிடத்தை வெற்றிக்களனாக மாற்றி அந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் அபினவ் பிந்த்ரா.
சென்ற இதழில் நம் சுதந்திர இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தின் பங்கினைக் கூறியிருந்தோம். இதோ, அதே ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் தங்க மகன் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
'ஒரு தங்கத்திற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்..' என்று தோன்றலாம். குட்டிநாடுகள்கூட போட்டிகளில் தங்கத்தை அள்ளும்போது, ஒரு நூற்றாண்டுக்கு மேல் காத்திருந்த நமக்கு வாராதுபோல் வந்த மாமணி இது. இந்தத் துவக்கமே வரும் காலத்தில் பல வெற்றிகளுக்கு வித்திடலாம்.
2000 ஆண்டிலிருந்து பல போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடிய பிந்த்ராவிற்கு மணி மகுடமாக அமைந்துள்ளது இந்த மாபெரும் சாதனை.
அபினவ் பிந்த்ராவின் இந்த வெற்றிக்குப் பிறகு குடியரசுத்தலைவர், பிரதம மந்திரி என்று பிரபலங்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்துக்களைச் சொரிகின்றனர். பிந்த்ராவோடு சம்பந்தமில்லாத ஒவ்வொரு மாநிலமும் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு பண முடிப்புகளை அளிக்கின்றன.
ஆனால் கிரிக்கெட்டைத் தவிர ஒவ்வொரு விளையாட்டிற்கும் சிறந்த தகுதி உள்ளவர்கள்கூட போட்டிகளில் பங்கு பெற எத்தனை தடைகள்? எந்த அரசாங்கமும் அல்லது தனியார் நிறுவனமும் அவர்களுக்கு போதுமான உதவிகளைச் செய்வதில்லை. தகுந்த பயிற்சிகளை அளிப்பதில்லை. தாங்களே முயற்சி செய்து, வெளிநாடுகளில் போட்டிகளில் கலந்துகொள்ள ஒவ்வொரு ஸ்பான்சராகத் தேடிப் பிடிக்க வேண்டிய நிலை.
அபினவ் அதிர்ஷ்டசாலி - அவருக்கு ஒரு பணக்காரத் தந்தை இருக்கிறார். அவர் தனி முயற்சி எடுத்து மகனை உலக அரங்கில் ஒளிர்விடச் செய்தார். எத்தனைபேர் அபினவ் போல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் இருக்கிறார்கள்? எத்தனை தகுதி பெற்றவர்கள், நிதி பற்றாமையால் குடத்திலிட்ட விளக்காக இருக்கிறார்கள்? இன்று அவரைப் பாராட்டுபவர்கள், பணமுடிப்பு கொடுப்பவர்கள், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தகுதியானவர்களுக்குத் தகுந்த ஊக்கமளித்து உதவி செய்தால் இந்தியா தங்கங்களைக் குவிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
பல சாதனையாளர்களை தலைமேல் வைத்துக் கூத்தாடும் நாம் நாளடைவில் அவர்களையும் அவர்களது சாதனைகளையும் மறந்து விடுகிறோம்.
குத்துச் சண்டை வீரர் கசாபா ஜாடவ் மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். முதல் தனி நபர் வெங்கலப் பதக்கத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தவர். அப்போது பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால், அவரும் அவரது குடும்பமும் தங்கள் வாழ்க்கையின் இறுதி நாட்களில் வறுமையில் போராடி வருந்த நேரிட்டது. அவர் 1984ல் இறந்தபோது அரசாங்கம் அவருக்கு எந்த மரியாதையும் தரவில்லை என்பது சோகமான செய்தி.
பாராட்டுகளை இன்றோடு நிறுத்தாமல், 'ஒரு தங்கம் வாங்கினால் நூறு தங்கம் வாங்கினா மாதிரி' என்று ஓய்ந்து விடாமல், இந்த வெற்றிப் பயணம் தொடருவது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது. |
| | ஜ.ப.ர அவர்களின் இதர படைப்புகள்.
| ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|