ஆசை வென்றது. தன் படிப்பு, உதவி, சம்பளம், சுயமாய் முடிவெடுக்கிற சக்தி, கடைசி வரை கண் கலங்காமல் வைத்து காப்பாற்றக்கூடிய திடம். ஞாயிறு காலை எட்டுமணிக்கு மீனாட்சி மெஸ்ஸில் எதுவும் கிடைக்காது என்று சின்னக் குழந்தைக் கூடத் தெரியும்.
இருந்தாலும் சங்கர் மெஸ் வாசலில் வந்து நின்றான்.
ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தொங்குகிற வாசல் திரைச் சீலை பற்றாக்குறையாய் காற்றில் ஆடியது.
"ஸா... ர்"
"வாய் 'ஸாரை' அழைத்தாலும் மனசு நந்தினிக்காக ஏங்கியது.
"யா... ரு?"
ஆண் குரல் கேட்டது. நடராஜன், நந்தினியின் அண்ணன்.
மெஸ்ஸுக்குச் சொந்தக்காரன் ..
"நான்தான்..."
"நான்தான்னா யாரு... ஏய் நந்தினி.. போய்ப் பாருடி..." நடராஜனின் இரைச்சல் வாசலுக்குக் கேட்டது.
"ஹாய்...!"
கிசுகிசுப்பாய் கையாட்டினான்.
"என்ன...?"
இன்னிக்கு ஊருக்குப் போகலே. மீல்ஸ் வேணும்."
நந்தினி திரும்பி உள்ளே போனாள்.. மறுபடி வந்தாள்.
"பத்தரை மணிக்கு வாங்க.."
"வரேன்..." என்றான் மலர்ச்சியாய்.
ஊஹும். நந்தனி பேசாமல் திரும்பிப் போய் விட்டாள்..
தன்னுடைய சைகைகள். பார்வை, தவிப்பு... இது எதுவுமே அவளுக்குப் புரியவில்லையா!
சங்கர் வேலை கிடைத்தது வந்ததும் முதல் கவலை, தங்குமிடம்
ஆபீஸ் நண்பன் கைகொடுத்தான்.
"கவலைப்படாதீங்க . பேச்சிலருக்கு உதவும் ஓனர் இருக்காரு. எங்க கூட ரூம்ல தங்கிக்கலாம்..."
"சாப்பாடு?" என்றான் இரண்டாவது கவலையாய்.
"நம்ம மீனாட்சி..."
"மீனாட்சி...!"
"ம்... மீனாட்சி மெஸ். வாரம் ஆறு நாளும் காலை, இரவு டிபன், மதியம் மீல்ஸ்... மொத்தமா பணம் கட்டி... ஒரு டிபன் கேரியரும் வாங்கிக் கொடுத்தா போதும். மீல்ஸ் ஆபிசுக்கு வந்துரும் .."
"ஓஹோ..." என்றான் நிம்மதியாய்.
"ஆனா ஒண்ணு. சண்டே எதுவும் கிடையாது. அவங்களுக்கு ரெஸ்ட், ஒரு வேளை, நீங்க ஊருக்குப் போகலேன்னா... போய் அட்வான்சா சொன்னா.. மதியம் சாப்பாடு மட்டும் கிடைக்கும். அதுவும் நாலஞ்சு பேருக்குத்தான்... ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி... இப்பதான் ரெண்டு மாசாமா இந்தச் சலுகை..."
"நான் பெரும்பாலும் திருச்சி போயிருவேன்... சனி, ஞாயிறு ரெண்டு நாளும்" என்றான் சங்கர்.
"திருச்சில எங்கே...?"
"வயலூர் ரோடு... குமரன் நகர்... நீங்க...?"
மணியும் அவனும் 'நீ... வா... போ' லெவலுக்குப் பிறகு நெருங்கி விட்டார்கள்.
நந்தினியை முதல் தடவை பார்த்த நினைவு பசுமையாய் நிற்கிறது.
பரிமாறுவதற்குப் பெரும்பாலும் நடராஜனும், வேலைக்கு வைத்திருந்த ஒரு சிறுவனும் தான் வருவார்கள்
ஒரு நாள் சிறுவனைக் காணோம். காலில் அடி பட்டு விட்டதாய் தகவல் சொன்னார்கள்.
ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தான் மெஸ் நடத்திக் கொண்டிருந்தான் நடராஜன். ஹாலில் தரையில் அமர்ந்து தான் சாப்பாடு.
நந்தனி வந்து சட்னி, சாம்பார் உற்றிவிட்டுப் போனாள்.
தோசை விள்ளல் அப்படியே கையில் நின்றது. மணி அவனை கிள்ளினான்.
"எ... ன்ன?"
"ஸ்ஸ்... சாப்பிடு..."
வெளியே வந்ததும் மணி எச்சரிக்கை விடுத்தான்.
"உங்க ஊர்ல பொண்ணே இல்லியா...? காலேஜ் வாசல்ல நின்னிருப்பியே...?"
"இல்லே மணி... இவ... சம்திங்.ஸ்பெஷல்.!"
"இங்கே . பாரு இப்பவே வார்ன் பண்றேன். நடராஜன் ருத்ர தாண்டவம் ஆடிவருவான். போன மாசம் ஒருத்தன் செம அடி வாங்கினான்... அப்புறம் இங்கே வர்றதே இல்லை... இந்த பொட்டைக் காட்டுல... தோல் நாத்தத்துக்கு நடுவுல... டீசன்ட்டா சாப்பாடு கிடைக்கிற ஒரே இடம் இது தான்.. கெடுத்துக்காதே... ஹோட்டல்ல மசால அரைச்சுக் குளிப்பாட்டி இருப்பான்... ரெண்டு நாள் சாப்டா போதும்... ஆஸ்பிடல் தான்..."
சங்கர் தலையாட்டினான். ஆனாலும் மனசு ஒத்துழைக்கவில்லை. மணியைத் தவிர்த்து தனியே சாப்பிடப் போனான். பொய்க் காரணங்கள். சனி, ஞாயிறு ஊருக்குப் போகாமல் தவிர்த்தான்.
எப்படியாவது புரியவைத்து விட வேண்டும். நந்தனி... நந்து...
ஞாயிறு மாலை ராஜேஸ்வரி தியேட்டரில் நடராஜன் அண்ட கோவைப் பார்த்ததும் சிலிர்த்தது அருகில் போனான். சிரித்தான்.
"என்ன.. சினிமாவுக்கா...?"
நடராஜன் அத்தனை சுலபமாய் இவனிடம் பேசிடவில்லை. நந்தனி குனிந்த தலை நிமிராமல் நின்றாள்.
தியேட்டரில் முன் வரிசையில் அவர்கள். பின்னால் அமர்ந்து மெலிதான வெளிச்சத்தில் திரையைத் தவிர்த்து உத்தேசமாய் நந்தினியைப் பார்த்துக் கொண்டிருந்தான். இவனுக்குப் பின் வரிசைக்காரர் அடிக்கடி உறுமி இவன் தலை மறைத்ததை அதிருப்தியுடன் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். கடைசி வரை 'எந்தப் படம்' என்று புரியாமல் பார்த்துவிட்டு வந்தான். இடை வேலையில் பழியாய்க் கிடந்ததில் ஊடுடலாய் நந்தினி தரிசனம்.
படம் விட்டதும் ஆட்டோ பிடித்து உடன் மறைந்து விட்டார்கள். காய்ந்த சாப்பாத்தியும் மட்டமான குருமாவும் சாப்பிட்டபோதும் மணியன் நினைவு வந்தது."நிஜமாகவே மீனாட்சி மெஸ் சொர்க்கம்!'
மணி நேரடியாய் ஆபீசுக்கு வந்து விட்டான்.
"எப்படி பொழுது போச்சு...?"
"காலை லேட்டா எழுந்தேன். மெஸ்ல சாப்பாடு. அப்புறம் மறுபடி தூக்கம். சாயங்காலம் ராஜேஸ்வரி..."
நேரடியாய் பார்க்காமல் பதில் சொன்னான்.
"சர்த்தான். அடுத்த அடி உனக்குத்தான்..."
"ஏய்..."
" வந்த புதுசுல... திருச்சி சொர்க்கம்... ஊருக்கு கட்டாயம் போயிரு வென்னு சொன்னே...!"
" செலவுப்பா... எதுக்கு... வீணா... அலைச்சல்... ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை போனாப் போதும்... எங்க வீட்டுலயும் அடிக்கடி வர வேணாம்னு சொல்லிவிட்டாங்க ."
"ஹை... எப்படி எல்லாம் கற்பனை சிறகடிக்குது.நானும் லவ் பண்றவங்களைப் பார்த்திருக்கேன்.. எப்படி பிஹேவ் பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியும்..."
மணியின் சீண்டல் பிடித்திருந்தது. தன்னை நந்தினியுடன் தொடர்பு படுத்திய கேலி.
மணி மீண்டும் எச்சரித்தான்.
"வேணாம்... நடராஜன் ரொம்ப பொல்லாதவன். ஸ்மெல் பண்ணாக் கூட போச்சு. சாப்பாட்டுல மண்ணு. ப்ளீஸ், உடம்பு முழுக்க பிளாஸ்திரிதான்!"
சரி' தலையாட்டினான் வழக்கம் போல.
பலமுறை யோசித்து - வார்த்தைகளுக்காவும், அந்தச் செயலுக்காகவும், - பிறகு நிறுத்தி, நிதானமாய், அழகாய் அந்தக் கடிதத்தை எழுதினான்!'.
உள்ளூற உதைப்புத்தான். கடிதம் எப்போதும் டேஞ்சர். 'இல்லை' யேன்று தப்பித்துக் கொள்ள முடியாத எவிடென்ஸ்.
ஆசை வென்றது. தன் படிப்பு, உதவி, சம்பளம், சுயமாய் முடிவெடுக்கிற சக்தி, கடைசி வரை கண் கலங்காமல் வைத்து காப்பாற்றக்கூடிய திடம். பார்த்த முதல் வினாடி தொட்டு இந்த நிமிடம் வரை தழைத்து வளர்ந்திருக்கிற காதல் எல்லாம் தேனில் தோய்த்து போனாவால் எழுதி அழகான அச்சிட்ட கவரில் வைத்து ஓட்டினான்.
கொடுக்க வேண்டும். எப்படி... எப்போது...
நேரம் வாய்த்தது. அன்றிரவு கூட்டம் இல்லை. சனிக்கிழமை. பெரும்பாலானவர்கள் ஊருக்குச் சென்று விடுகிற தினம். சனி அரை நாள் மட்டும் அலுவலகம் இருப்பவர்கள் அப்படியே பஸ் ஏறிப்போய் விடுவார்கள்.
சங்கர் போன பொது வேறு ஒரு நபர் மட்டும். உட்கார்ந்ததும் இலை போட்டு தோசை, சட்னி பரிமாறப்பட்டது.
பார்வை அலை பாய்ந்தது. சிறுவன் தான் வந்தான். நடராஜனைக் காணோம்.
கூட அமர்ந்திருந்தவனுக்கு அகோரப் பசி போலும். 'இன்னொரு தோசை' என்று கேட்டு விட்டுக் காத்திருந்தான்.
சங்கர் கை கழுவி விட்டு வந்தான்.
(தொடரும்) |