 |
இதழ் 483 |
 |
ஆகஸ்ட் 30 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| | | "நீ என் ரோஜாச் செடியைக் காயப்படுத்திவிட்டாய். அதற்கு பதிலாக உன் உயிரை என்னால் எடுக்க முடியும். ஆனால் நீ உன் கடைசி மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்க வாக்குத் தந்தால் உன்னை விடுவிப்பேன்" என்று கூறியது தவளை. (மூலம்: ஜெர்மனி)
மிகப் பெரும் செல்வந்தனான ஒரு வணிகனுக்கு மூன்று மகள்கள் இருந்தார்கள். அவனது மனைவி இறந்து ஒராண்டு ஆகி இருந்தது. அவள் இறந்த துக்கம் காரணமாகவும் தன் குழந்தைகளைத் தனியே விட்டுச் செல்ல விருப்பமில்லாமலும் அவன் கடல் கடந்து வியாபாரத்துக்குச் செல்லாமல் இருந்து வந்தான்.
ஆனால் அதற்கு மேலும் காலம் தாழ்த்துவது அவனுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துமாதலால, பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்யலானான். அவனது மூன்று மகள்களும் தந்தையைப் பிரிய விரும்பாமல் கண்ணீர் வடித்தார்கள். அவர்களைச் சமாதானப் படுத்திய வணிகன், "வருந்தாதீர்கள், மக்களே! நான் திரும்ப வருகையில் உங்களுக்கு அழகான வஸ்துக்களைக் கொண்டு வருகிறேன். உங்களது விருப்பத்தைக் கூறுங்கள்" என்றான்
மூத்த மகள், "தந்தையே எனக்கு பட்டுடை வாங்கி வாருங்கள். இந்த ஆடை மூன்றுவிதமான பட்டுத் துணிகளால் செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்றாள்
இரண்டாமவள், "எனக்கு மூன்று வண்ணங்கள் கொண்ட முத்து மாலை வேண்டும், தந்தையே" என்றாள்
கடைசி மகள், "எனக்கு மூவண்ண ரோஜா வேண்டும்" என்றாள்
வணிகன் தன் பயணத்தின் போது சென்ற நாடுகளில் தேடித் தேடி மூன்று விதமான பட்டுத் துணிகளாலான ஆடையையும், கண் கவரும் அழகுடைய மூவண்ண முத்து மாலையையும் வாங்கிவிட்டான். ஆனால் அவன் எங்கு தேடியும் மூவண்ண ரோஜா மலர் மட்டும் கிடைக்கவே இல்லை. பெரும் தொகை தருவதால் அறிவிப்பு செய்தும் அவனால் அத்தகைய ரோஜாவைப் பெற முடியவில்லை.
அவன் மன வருத்தத்தோடு கப்பலில் தன் நாடு திரும்பிக் கொண்டிருந்தான். நடுக்கடலில் இருந்த ஒரு சிறிய தீவு முழுவதும் ரோஜாச் செடிகளால் நிறைந்திருந்ததைக் கண்ட அவன், அங்கு இறங்கி மூவண்ண ரோஜாவைத் தேடலானான். ஆளரவமற்ற அந்தத் தீவின் நடுவிலிருந்த குளக்கரையில் மூவண்ண ரோஜாவைக் கண்டதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தான் வணிகன். அதனைப் பறித்துக் கொண்டு திரும்ப முனைகையில் அவனது தலையைத் தவிர உடல் முழுவதும் கற்சிலை போலாகி அப்படியே உறைந்து நின்றான்.
அப்போது குளத்திலிருந்து ஒரு பெரிய தவளை ஒன்று தோன்றி, "என் தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டது.
வணிகன் தன் கடைசி மகளின் விருப்பத்தைப் பற்றிக் கூற, "நீ என் ரோஜாச் செடியைக் காயப்படுத்திவிட்டாய். அதற்கு பதிலாக உன் உயிரை என்னால் எடுக்க முடியும். ஆனால் நீ உன் கடைசி மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்க வாக்குத் தந்தால் உன்னை விடுவிப்பேன்" என்று கூறியது தவளை.
வணிகன் தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கதறினான். ஆனால் தவளை பிடிவாதமாகத் தன் நிபந்தனையைத் தளர்த்த மறுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் தன் மகளைத் திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக் கொண்டு வீடு திரும்பினான் வணிகன்.
வணிகன் வீடு திரும்பிய இரு தினங்களில் அழகான ரதம் ஒன்று அவன் வீட்டு முன்னால் வந்து நின்றது. தவளையின் சேவகர்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள். வணிகனின் கடைசி மகள் இதனைக் கேள்விப்பட்டு கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டாள். ஆனால் வீடு முழுவதும் தேடி அவளைக் கண்டுபிடித்து இழுத்துச் சென்றார்கள் சேவகர்கள்.
அவளைத் தீவுக்கு அழைத்துச் சென்று தவளையின் முன் நிறுத்திய போது பயந்து மயங்கி விழுந்தாள் அவள். மீண்டும் அவள் கண்விழித்த போது அவள் சொகுசான ஒரு படுக்கையில் படுத்திருந்ததையும் அந்த அறை வெகு அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்ததையும் கண்டாள். அங்கிருந்த நீர்த் தொட்டியிலிருந்து மிக இனிமையான பாடல் ஒன்று வந்ததைக் கேட்டு எட்டிப் பார்த்த அவள் பாடியது தனது தவளைக் கணவன் என்றறிந்து அமைதியாகத் திரும்பி வந்து படுக்கையில் அமர்ந்தாள்.
தவளை நீர்த் தொட்டியிலிருந்து வெளியில் வந்து அறையை விட்டு வெளியேறியது. அறைக்கு வெளியிலிருந்து அதன் இனிமையான பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தப் பாடலிலிருந்த சோகம் அவன் மனைவியை உலுக்கியது. அவள் வெளியில் வந்து தவளையின் அருகில் அமர்ந்து அன்புடன் அதனைத் தடவிக் கொடுத்தாள்.
அவளது கை பட்டதும் தன் சாபம் தீர்ந்து அழகிய இளவரசனாக மாறியது தவளை. அதன் பின் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.
(முற்றும்)
|
| | நிலா அவர்களின் இதர படைப்புகள்.
| பூஞ்சிட்டு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|