ஆவணி மாதம் வரும் பஞ்சமி
திதியில் "நாகபஞ்சமி" என்ற திருநாள் வருகிறது. மகாராஷ்ட்ராவில் இதை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். நாக்பூரில் நாகதெய்வத்தை அலங்கரித்து எல்லாத் தெருவிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
நம் நாட்டில் பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடி பூஜித்து வரும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பல கோயில்களில் அரசமரத்தின் கீழ் பெரிய நீளமான கற்களில் பாம்பு உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அதற்கு மக்கள் மஞ்சள், குங்குமம் இட்டு, பால் அபிஷேகம் செய்து பூசிப்பார்கள். ராகு கேது தோஷம் இருப்பவர்களும் இதைப் பூசிக்கின்றனர். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற ஊர்கள் நாகபூஜைக்கு மிகப் பிரபலமானவைகள்.
நாகத்திற்காக சிறப்பு பூஜை செய்யும் நாளொன்றும் உண்டு. ஆவணி மாதம் வரும் பஞ்சமி திதியில் "நாகபஞ்சமி" என்ற திருநாள் வருகிறது. மகாராஷ்ட்ராவில் இதை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். நாக்பூரில் நாகதெய்வத்தை அலங்கரித்து எல்லாத் தெருவிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
நம் பாம்பாட்டிச் சித்தரும் பாம்பின் சிறப்பைப்பற்றி பாடல்கள் இயற்றியிருக்கிறார்.
மும்பைக்கு சுமார் 400 கிமீ தூரத்தில் பட்டிசிராலா என்ற ஒரு கிராமம் உள்ளது. இது கோலாப்பூரிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. காட்டுப்பகுதி வழியேதான் செல்லவேண்டும். இங்கு சிறு குழந்தைகள் கூட பாம்புடன் விளையாடுகின்றனர். பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கின்றனர்.
இந்தக் கிராமத்தில் நாகச்சிலை என்பது தேவையே இல்லை. நிஜப்பாம்பையே பிடித்து வந்து பூஜைகளைச் செய்கின்றனர்! என்ன மாயமோ என்ன மந்திரமோ, பாம்புகள் ஒருவரையும் கடித்ததில்லை.
நாகபஞ்சமி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பாம்பு இருக்கும் இடத்திற்குப் படை எடுக்கின்றனர். மழைக்காலம் என்பதால் பல பாம்புகள் பொந்திலிருந்து வெளியே வந்து நடமாடுகின்றன. நாகப்பாம்பிலிருந்து பலவிதமான பாம்புகளைப் பார்க்க முடிகிறது. மலைப்பாம்பும் அசையாமல் படுத்துக் கிடக்கிறது.
பாம்பு பிடிக்கும் இந்தச் சம்பவத்தைப் பார்க்க வெளிநாடுகளிலிருந்து பலர் கூடுகின்றனர். பாம்பைப் பிடிக்க காட்டுப்பகுதியிலோ அல்லது மலையடிவாரத்திலோ போய் மகுடி வாசிக்கின்றனர். பாம்பு அந்த இசையை உணர்ந்து வெளியே வருகிறது என்கின்றனர். பல பாம்புகளை சாக்கில் போட்டுக் கட்டி பின் கிராமம் திரும்புகின்றனர். விஷப்பாம்புகளும் இருக்கின்றன. ஒருவரும் பாம்புகளுக்குத் தொந்தரவு தருவதில்லை. அவர்களுக்கு அந்தப் பாம்புகள் தெய்வமாகின்றன.
கிராமத்தில் பானைகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, பல பாம்புகளை உள்ளே அடைக்கின்றனர். பின் நாகபஞ்சமி அன்று அந்தப் பானையைத் தலைகளில் சுமந்துகொண்டு தெருவில் பவனி வருகின்றனர்.
விடியற்காலையிலேயே எழுந்து ஸ்நானம் செய்து, தாரை, தம்பட்டம், ஷெனாய் முழங்க பாம்பு அடைத்த பானைகளுடன் ஊர்வலம் வர, பின்னால் பஜனை கோஷ்டியும் தொடருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதித்துக்கொண்டும், கும்மாளம் அடித்துக்கொண்டும் ‘நாக்ராஜ் கி ஜெய்’ என்று கோஷம் போட்டுக்கொண்டு செல்கின்றனர்.
பின் ஊருக்கு வெளியில் இருக்கும் கோயிலுக்குச் செல்கின்றனர். அங்கு பிரசாதம் படைத்து விட்டு, ஒரு பெரிய அரங்கத்திற்கு வருகின்றனர். ஒரே நேரத்தில் எல்லாப் பானைகளையும் திறந்து விடுகின்றனர். ஒரே நேரத்தில் பல தினுசான நாகங்கள் வெளியே வளைந்து வளைந்து வந்து ஓடுகின்றன. ஆஹா! அந்தக் காட்சியே அருமை! சில அங்கேயே நின்று படமெடுத்து ஆடுகின்றன. அதன் ஆட்டத்திற்கேற்ப சிலர் பானையில் கூழாங்கற்களைப் போட்டுக்கொண்டு தாளத்துடன் குலுக்குகின்றனர். ஏகப்பட்ட பாம்புகள் ஒரு அடி உயரத்தில் எழும்பி தலையைச் சாய்த்துப் படம் எடுக்கும் அழகே அழகு!.
சில குழந்தைகள் பாம்பைத் தம் கழுத்தில் போட்டுக்கொண்டு முத்தமும் கொடுக்கின்றனர் . பாம்பின் முன் சப்பாத்தி, சாதம், தேங்காய், தால் முதலியவற்றைப் படைக்கிறார்கள்
முன்னொரு காலத்தில் புரோகிதர் ஒருவர் இருந்தாராம். அவர் ஒரு சிவபக்தர். ஒருநாள் அவர் கனவில் சிவன் வந்து "இங்கு பாம்புகள் நிறைய இருக்கின்றன. நான் இந்த கிராமத்தைக் காப்பேன். நாகபஞ்சமி அன்று நாகங்களை மனதாரப் பூஜியுங்கள்’’ என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாராம். அந்த ஊர் மக்கள் வெளியே செல்லும் போது ‘டார்ச்’ விளக்கும், கையில் தடியையும் எடுத்துச் செல்கின்றனர். பாம்பை மிதிக்காமல் இருக்கத்தான் இந்த டார்ச் விளக்கு ஏற்பாடு.
உத்தரபிரதேஷ் மற்றும் பீஹாரில், நாகபஞ்சமி அன்று விரதம் இருந்து, களிமண்ணால் செய்த பாம்பு சிலைக்குப் பூஜை செய்கிறார்கள். பின் பால் வார்க்கிறார்கள். தென் இந்தியாவில் சில இடங்களில் சாணியினால் பாம்பு வரையப்பட்டு வீட்டு வாசலில் நாகதெய்வத்தை வரவேற்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், ராகுதோஷம் உள்ளவர்களும் நாகபஞ்சமி விரதம் இருந்து, நாக காயத்ரியும சொல்ல, உடனே பலன் கிடைக்கும்.
i saw ur articles .instead of doing like this u can post some poojas & slokas now this month is famous for thrupathi so can tel poojas & slokas it will be useful for more person