தமது ஆராய்ச்சியில் ஃபிஷர், மனிதர்களின் மூளையின் ஒரு பகுதி அவர்கள் தங்கள் காதலர்களின் புகைப்படத்தைக் கண்டபோது ஒளிர்ந்ததைக் கண்டறிந்தார்.
பலகோடிப் பேருக்குக் கனவுக் கன்னியாகத் திகழும் ஒரு இளம் நடிகை யாரும் எதிர்பாராத விதத்தில் ஏற்கெனவே திருமணமான, அவரைவிட வயதில் மிகவும் மூத்த ஒருவரை மணக்கும் போது 'ஏன் அவர்?' என்று நமக்குத் தோன்றுகிறதுதானே? பல இளம் நடிகைகளுடன் நெருக்கமாய்ப் பழக வாய்ப்பிருந்த போதும் அவர்களிடமல்லாது முதல்முறை சந்திக்கும் ஒரு ரசிகையிடம் சாக்லேட் கதாநாயகர்கள் மனதைப் பறிகொடுப்பதை அறியும்போது, 'அப்படி என்ன இருக்கிறது அந்தப் பெண்ணிடம்?' என்று மற்ற பெண்கள் தலையைப் பிய்த்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறதுதானே? நீங்கள் ஆழமாய் நேசிக்கும் ஒருவரை ஏன் காதலிக்கிறீர்கள் என்று உங்களால் கூற முடியுமா?
'அவள் அழகாய் இருக்கிறாள்' 'அல்லது 'அவரின் மென்மையான குணம் எனக்குப் பிடித்திருக்கிறது' என்று கூறினால் கூட, அழகாய் இருக்கும் ஏராளமான பெண்களுக்குள் ஏன் அவள் மட்டும், மென்மையான குணம் கொண்ட பல்லாயிரக்கணக்கான மனிதருள் ஏன் அவர் மட்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
ஏன் குறிப்பிட்ட இருவர் மட்டும் காதலில் விழுகிறார்கள் என்ற புதிரை பேராசிரியர் ஹெலன் ஃபிஷர் தனது 'ஏன் அவன்? ஏன் அவள்?' (Why him? Why her?) என்ற நூலில் அவிழ்க்க முனனந்திருக்கிறார். இருவருக்குள் ஏற்படும் கவர்ச்சிக்குக் காரணம் மனித உடலிலுள்ள வேதிப்பொருட்களே என்கிறார் இவர். காதல் தெய்வீகமானது என்ற நம் நம்பிக்கை ஆட்டம் காணத்தான் செய்கிறது.
இந்த ஆராய்ச்சியின் தேவைதான் என்ன? பிரிட்டனில் கிட்டத்தட்ட 15 மில்லியன்; அமெரிக்காவில் 100 மில்லியன் - தங்களின் காதலர்களைத் தேடிக் கொண்டிருக்கிற மனிதர்களின் எண்ணிக்கைதான் இது. பொதுவாகவே தனிமை மனிதர்களுக்கு வேதனையளிப்பதாக இருக்கிறது. நமது சமுதாயத்தில் பெரும்பாலும் பெற்றோர் பொறுப்பெடுத்து தகுந்த துணையைத் தக்க பருவத்தில் தேடிக் கொடுத்துவிடுவதால் இந்தப் பிரச்சினை குறித்து நாம் அதிகம் கவலைப்பட வேண்டி இருப்பதில்லை. ஆனால் மேலை நாடுகளில் துணை தேடும் பொறுப்பு அவரவர்க்கு இருப்பதால் இது அவர்களது வாழ்க்கையின் பெரும் கவலையாகவே இருக்கிறது. அதிகமான எதிர்பார்ப்பும் தவறு செய்துவிடுவோமோ என்ற பயமும்தான் இத்தனை பேரைத் தனிமையில் வாட வைக்கிறது. அதுவும் பொதுவாக பெண்களிடம் தனக்கே தனக்கான, தன் ஆன்மாவின் மறுபாதியான தன் ஆன்ம சிநேகிதனை அடைந்துவிடவேண்டும் என்ற விருப்பம் மிகுந்திருப்பதால் தமது துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் எளிதில் திருப்தி அடைவதில்லை.
இந்த ஆன்ம உறவு குறித்த ஒரு கதை கூட உண்டு. ஆதியில் மனிதன் நான்கு கால்களுடனும் நான்கு கைகளுடனும் ஒரு தலை ஆனால் இரு முகங்களுடனும்தான் இருந்தானாம். அவனது ஆற்றலினால் அச்சுறுத்தப்பட்ட கடவுளர்கள் கூடி விவாதித்தனராம். பின் ஸீயஸ் கடவுளின் ஆலோசனைப்படி, மனிதன் இருபாதியாக வெட்டப்பட்டு அவன் தன் மறுபாதியைத் தேடி அலைவதிலேயே தன் ஆற்றலைச் செலவிடும்படி சபிக்கப்பட்டானாம்.
இந்தத் தேடலை எளிதாக்கும் பொருட்டு பொருத்தமான காதலரை அறிமுகப்படுத்தவென்றே பல டேடிங் ஏஜென்ஸிகளும், ஆலோசகர்களும் மேலை நாடுகளில் உண்டு. ஆனால் இப்போது டேடிங் இணையதளங்கள்தான் இந்த வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருவரது விபரங்களை வைத்து அவரையும் அவரது விருப்பங்களையும் மதிப்பிட்டு அவருக்குப் பொருத்தமான பயனர்களை டேடாபேஸிலிருந்து இறக்கித் தருகின்றன இத்தளங்கள். அப்படி ஒரு இணையதளமான கெமிஸ்ட்ரி.காம்தான் ஹெலன் ஃபிஷரின் ஆராய்ச்சிக்கு நிதியளித்திருக்கிறது.
ஃபிஷரைப் பொறுத்தவரை ஒருவரின் மனோபாவத்தை நிர்ணயிப்பது அவரது இயல்பு மற்றும் குணாதிசயம். இயல்பு என்பது பரம்பரையாகத் தொடர்வது; பெற்றோரிடமிருந்து நமக்கு வருவது. குணாதிசயம் நாம் வளரும் சூழலையும் வளர்ப்பு முறையையும் பொறுத்தது. இயல்பு இயற்கையாய் அமைவது. குணாதிசயம் நமக்கு ஊட்டப்படுவது அல்லது நாம் விரும்பி ஏற்றுக் கொள்வது. ஒருவரது இயல்புக்கும் அவரது காதலுக்குமுள்ள தொடர்பை உயிரியல் ரீதியில் புரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவுகிறது என்கிறார் ஃபிஷர்.
தமது ஆராய்ச்சியில் ஃபிஷர், மனிதர்களின் மூளையின் ஒரு பகுதி அவர்கள் தங்கள் காதலர்களின் புகைப்படத்தைக் கண்டபோது ஒளிர்ந்ததைக் கண்டறிந்தார். இந்தப் பகுதி சன்மானத்தை நோக்கிய விருப்பத்தையும், முனைப்பையும், ஊக்கத்தையும் குறிக்கும் பகுதி. எனவே காதல், ஆரம்ப கட்டத்தில் மட்டுமாவது கலவியைக் குறித்த உந்துதலே என்கிறார் இவர்.
ஃபிஷர் தனது நூலில் டெஸ்டோஸ்டீரான், எஸ்டோரஜன் என்ற இரு ஹார்மோன்களுடன் டோபமைன் மற்றும் செரோடோனின் என்ற இரு வேதிப் பொருட்களுமே நாம் யாரால் கவரப்படுகிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன என்கிறார். இந்த வேதிப் பொருட்களை ஏற்கெனவே நடத்தப்பட்டிருந்த ஆய்வறிக்கைகளின் வாயிலாக தனிமைப்படுத்திய ஃபிஷர், இவை மனித இயல்பில் செய்யும் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு கேள்விகளை வடிவமைத்து அவற்றைத் துணைதேடும் 40000 பேர்களிடம் கொடுத்து பதிலளிக்கச் செய்திருக்கிறார். அந்த பதில்களின் அடிப்படையில் (பதில்கள் இந்த நான்கு வேதிப் பொருட்களின் அளவைப் பொறுத்திருக்கும் என்கிறார்) மனிதர்களை நான்குவிதமாகப் பிரிக்கிறார்:
கட்டுனர்: குடும்ப அமைப்பையும் பாரம்பரியத்தையும் நேசிப்பவர்கள். இவர்களுக்கு மனிதர்கள் மிக முக்கியம். எ.கா: எலிசபெத் ராணி, டைகர் உட்ஸ். இயக்குநர்: கூர்மையான புத்திசாலிகளான இவர்கள் ஆளுமை உணர்வு மிக்கவர்கள். இவர்களுக்கு தகவல்கள் அத்தியாவசியம். எ.கா: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஹிலாரி கிளிண்டன் ஆராய்ச்சியாளர்: சாகசம் மற்றும் புதுமை விரும்பிகள். இவர்களின் அடையாளம் செயல் திறன். எ.கா: டயானா, ஜான் கென்னடி. சமாதானர்: கருணை உணர்வுள்ள இலட்சியவாதிகள். இவர்கள் தங்கள் உணர்வுகளின் மூலம் வாழ்பவர்கள். எ.கா: காந்தி, பில் கிளிண்டன் (மற்றும் நிலா)
இந்த நான்கு வகை மனிதர்களும் காதலை வெவ்வேறு விதங்களில் உணர்கிறார்கள்; வெளிப்படுத்துகிறார்கள். இயக்குநரில் பெரும்பாலோர் ஆண்களாகவும் சமாதானர்களில் பெரும்பான்மையாகப் பெண்களும் காணப்படுகிறார்கள்.
'ஆராய்ச்சியாளர்கள் தன்னைப் போன்ற ஆராய்ச்சியாளரையே விரும்புவர். அது போல்தான் கட்டுனரும். இயக்குநர் சமாதானரையும் சமாதானர் இயக்குநரையும் விரும்புவதே இயல்பாக இருக்கிறது' என்று கூறும் ஆசிரியர், இதற்கான காரணங்களையும் விரிவாகவே விளக்குகிறார். உற்றுக் கவனித்தால் இத்தகைய தேர்வின் மூலம் இயற்கை மூன்று விதங்களில் மனித இனத்தினை வளப்படுத்துகிறது; ஆராய்ச்சியாளர்கள் மூலமாக விதவிதமான மனிதர்களையும், கட்டுனர் மூலமாக நிலையான தன்மையையும், இயக்குநர் - சாமாதானர் மூலமாக கூட்டமைப்பையும் வெளிக்கொணர்வதாகக் கருதுகிறார் ஆசிரியர்.
கெமிஸ்ட்ரி.காம், ஃபிஷரின் கேள்விகளுக்கு பயனர் தரும் பதில்களின் அடிப்படையில் அவர்களின் வகையை நிர்ணயித்து அந்த வகைக்குப் பொருத்தமானவர்களின் விபரங்களைத் தந்து தனது பயனர்கள் விரைவாகவும் எளிதாகவும் தமக்குப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுக்க உதவி புரிவதாகக் கூறுகிறது. டேடிங் தளங்களில் முன்னணியில் நிற்கும் இத்தளம் இந்த ஆராய்ச்சிக்காக விருது கூடப் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த வழிமுறை வெற்றி விகிதத்தை எவ்வாறு அதிகரித்திருக்கிறது என்ற தகவலேதுமில்லை.
தவிர, இந்த வழிமுறையின் நம்பகத்தன்மை ஓபரா வின்ஃப்ரேயின் ஓ பத்திரிகையின் மூலம் 500 மணமான தம்பதிகளிடம் நடத்தப்பட்ட சர்வே முடிவுகளால் கேள்விக்குறியதாகி இருக்கிறது. 25% தம்பதிகள் கட்டுநர் - இயக்குநராகவும், 1% தம்பதியினரே ஆராய்ச்சியாளர் - ஆராய்ச்சியாளராகவும் இருந்திருக்கிறார்கள். இது ஃபிஷரின் முடிவுகளுடன் ஒத்துப் போகவில்லை என்பது குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. ஃபிஷரின் இந்த ஆராய்ச்சி முடிவுகளுக்குப் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்ற வாதமும் எழுந்திருக்கிறது. காதல் உறவுகளில் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட பல்வேறு சமூகங்களுக்கு இந்த முறை எவ்வாறு ஒத்துப்போகும் என்பதுவும் தெளிவாக இல்லை.
ஆனால் தக்க துணையைத் தேர்ந்தெடுப்பதை எளிதாக்க இது போன்ற பல ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. துணை தேடுவதற்கு மட்டுமல்ல, நமது துணையைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்தவும் இவ்வாராய்ச்சிகள் உதவலாம் எனினும் காதலைக் கூட இப்படிக் கூறு போட்டு மூலக்கூறுகளுடன் சம்பந்தப் படுத்தமுடியுமென்றால் மனிதனுக்கும் இயந்திரங்களுக்குமான வேறுபாடு குறைந்து கொண்டே வருகிறதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X