இரு கரங்களையும் துப்பட்டாவுக்குள்ளேயிருந்து வெளியே எடுத்து வணக்கம் சொன்னாள். அந்தக் கைகளையும் எங்களால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. அவள் ஒரு இளம் பட்டாசுத் தொழிலாளி
எத்தனையோ கட்டுரைகளை எழுதியிருந்தாலும் இந்த அரட்டைக் கச்சேரிப் பக்கம் வருவதென்றால் மனதுக்குள் என்னவோ ஒரு அலர்ஜி. இளைய தலைமுறைகள் புதுப் புது விஷயங்களைபடு சுவாரஸ்யமாகச் சொல்லி வரும்போது வான் கோழி போல் இந்தப் பெரிசு என்ன அரட்டை எடுப்பது என்ற தயக்கம். ஆனாலும் நிலா கொடுத்த தைரியத்தில் எழுத வந்துவிட்டேன்.
சமீபத்தில் தேக்கடியில் நடந்த படகு விபத்து பற்றி உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். நாள்தோறும் கார் விபத்து, ரயில் விபத்து, தீ விபத்து என்று எத்தனையோ விபத்துக்கள் நடக்கின்றன. பத்து பேர், நூறுபேர் இறந்தார்களென்று செய்திகள் வருகின்றன. அந்த விபத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நமக்கு உறவினர்களாகவோ அல்லது தெரிந்தவர்களாகவோ இல்லாத வரை அந்த செய்திகள் நம்மைப் பெரிதும் பாதிப்பது இல்லை. பத்தோடு பதினொன்று என்று 'உச்' கொட்டிவிட்டு அடுத்த வேலைக்குப் போய் விடுகிறோம். இந்தத் தேக்கடி விபத்தையும் அப்படித்தான் நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது எனது பெண்ணுடன் கூட என்ஜினீரிங் கல்லூரியில் படித்த செந்தில் குமாரி என்ற 36 வயதுப் பெண், அவரது ஆறுவயது மகள் ஐஸ்வர்யா, கணவர் ராஜசேகர் (ஒரே கல்லூரியில் படித்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்) அந்த விபத்தில் பலியானார்கள் என்று. இதனை அறிந்தபோது அந்த சோகத்தின் தாக்கத்தை உணர முடிந்தது. செந்தில் குமாரியின் பிறந்த நாளன்று நடந்தது இந்த விபத்து என்பது கூடுதல் சோகம். எனது மகள் அந்த சோகத்திலிருந்து இன்னும் வெளிவர முடியவில்லை. ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பர்கள் - இவர்களுக்கு சாவு ஆ(ற்)றிலேயே நிகழ்ந்திருக்கிறது. படகில் பாதுகாப்பு பெல்ட் இல்லை என்று சொல்கிறார்கள் - அளவுக்கு அதிகமாகாக ஆட்களை ஏற்றியதுதான் காரணம் ன்று சொல்கிறார்கள். எது எப்படியோ மந்திரி வருத்தம் தெரிவித்து விட்டார். அது போதும்! எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல "இதனால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படாது" என்று தைரியம் வேறு சொல்லியிருக்கிறார். கொஞ்ச நாளைக்குப் பேச்சு அடிபடும் - அப்புறம் பழைய குருடி கதவைத் திறடிதான். மனித உயிருக்கு நம்மூரில் அவ்வளவுதான் மதிப்பு.
அமெரிக்காவிற்கு வந்து ஐந்து மாதங்களுக்கு மேல் ஆயிற்று. இந்த அரட்டை வரும் போது இந்தியாவை அடைந்திருக்கலாம். எல்லா வசதியும் இருந்தாலும் 'என்ன அமெரிக்கா?' என்று தோன்றுகிறது. "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா?" என்று ராமராஜன் பாடுவார். அதுபோல சிங்காரச் சென்னையில் கூவத்தின் மணத்தை ரசிக்காமல், பஸ்சில் தொங்கிக் கொண்டு செல்லாமல் ஆட்டோக்காரரிடம் ' மங்கள' வார்த்தைகள் கேட்காமல் என்ன அமெரிக்கா? எங்கேயாவது வெளியில் போக வேண்டுமென்றால் எப்போது சனி ஞாயிறு வரும் என்று மகள், மருமகனின் காருக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். நம் காலை நம்பி நாம் ஹாயாக இருக்க முடியாது. பேரன் பேத்திகளொடு நேரத்தை செலவிடும் ஒரே சந்தோஷம்தான் மற்ற எல்லாவற்றையும் மறக்கச் செய்யும்
இந்தியாவில் ஜட்ஜ், கலெக்டர் செக்ரடரி போன்று பெரிய பதவிகளில் இருந்து விட்டு இப்போது அமெரிக்க குடிமகன்களாக இருக்கும் பலரை இங்கு நான் சந்தித்தேன் - இந்தியா கம்யூனிட்டி மையமென்னும் இடத்தில். பலமுதியவர்கள் குடும்பத்தோடு சந்திக்கும் இடம் இது. இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளை குறிப்பாக தேர்தல் அரசியல் பற்றி, அலசுவார்கள். அவரவர்கள் தாங்கள் படித்த அல்லது தாங்கள் எழுதிய கதைகள், கட்டுரைகளைப் படிப்பார்கள். சின்ன அளவில் பாட்டுக் கச்சேரி, கலை நிகழ்ச்சிகளும் இருக்கும். அவரவர்கள் தங்கள் வீட்டில் மருமகள், மாப்பிள்ளை தொல்லைகள் பற்றிய ஆதங்கங்ளைக் கொட்டித் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வடிகாலாகவும் இருக்கும்.
கலிஃபோர்னியாவிலிருந்து தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் ஒரு பண்பலையும் இருக்கிறது. ஸ்ரீ எனும் இளைஞர் தனது தனி முயற்சியில் சிறப்பாக நடத்துகிறார். என்னைக்கூட நான் நிலாச்சரல் குழுவைச் சேர்ந்தவன் என்ற முறையில் ஒரு நிகழ்ச்சி செய்ய அழைத்தார். எனக்கு உள்ளுர பயம்தான். சரி, கலந்து கொண்டுதான் பார்ப்போமே என்று தீர்மானித்த வேளையில் சந்தர்ப்பம் சரியாக அமையாததால் முடியாமல் போயிற்று. தப்பித்தார்கள் அமெரிக்கா வாழ் தமிழ் நேயர்கள்!
முதல் முதலாக அமெரிக்காவிற்குப் போகிறவர்களுக்கு ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் இருக்கும். அதில் ஒன்று எந்த மருத்துவ காப்பீடு கம்பெனியில் இன்ஸ்ஷ்யூரன்ஸ் எடுப்பது என்பது. இந்தியாவில் எந்தஒரு காப்பீட்டுக் கம்பெனியில் எடுத்தாலும் அவசரத்திற்கு அமெரிக்காவில் மருத்துவம் பார்த்தால் பணத்தைத் திரும்பப் பெறுவதற்குள் பெரும்பாடாகிறது - இந்த முறை அமெரிக்காவிலேயே உள்ள GIG என்ற கம்பெனியில் இன்ஷூசுரன்ஸ் எடுத்தேன். முதுகில் ஏற்பட்ட ஒரு கட்டிக்காக அவசரமாக சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இன்சூரன்ஸ் அடையாள அட்டையை மட்டும் மருத்துவரிடம் கொடுத்துவிட்டு கவலைப்படாமல் சிகிச்சை செய்துகொள்ள கொள்ள முடிந்தது -.மருத்துவர் பாடு -கம்பெனி பாடு என்று. நான் ஒன்றும் இந்த கம்பெனி ஏஜன்ட் இல்லை. யான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெறட்டுமே என்று ஒரு சிறு தகவல்தான்.
சேம்பியன் ட்ராஃபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா வழக்கம் போல அரை இறுதி ஆட்டத்துக்கான தகுதியை இழந்தது. யுவராஜுக்குக் காயம், சேவாக் இல்லை என்று நொண்டிச் சாக்குகள் சொல்லி நம்மைத் தேற்றிக் கொள்ளலாம். இந்தியா எப்போதுமே தன் ஆட்டத்தை நம்பி இந்த மாதிரி பந்தயங்களில் வெற்றி அடைவதில்லை. ஆஸ்திரேலியா பாகிஸ்தானிடம் தோற்று மேற்கிந்தியத் தீவுகள் விளையாடும்போது மழை வந்து, பாகிஸ்தான் ரன் ரேட் அதிகம் எடுத்து - அத்தைக்கு மீசை முளைத்தால் இந்தியாவுக்கு அரை இறுதிக்குச் செல்லும் வாய்ப்பிருக்கிறது என்று ஏகப்பட்ட ifs and buts. நம் திறமையை நம்பி நாம் எப்போது ஜெயிக்கப்போகிறோம்?
தீபாவளி நெருங்கிவிட்டது. பணத் தேக்கம் என்றாலும் அது என்னவோ ஜவுளிக் கடைகளிலும் நகைக் கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது - ஏதோ இனாமாகக் கொடுக்கிறார்களளோ என்று சந்தேகம் எழுகிறது. அந்தக் காலத்திலெல்லாம் தீபாவளி என்றால் காலை மூன்று மணிக்கே எழுந்து தண்ணீர் வராத குழாயில் கங்கா ஸ்நானம் செய்து பெற்றோர்கள் கையால் புது உடைகள் வாங்கிப் போட்டுக் கொண்டு பட்டாசுகளை வெடிப்பதே தனி ஆனந்தம்தான். இன்று காலை ஏழு மணிக்கு முன்னால் யார் எழுந்திருக்கிறார்கள்? எழுப்பிவிடுவதே தொலைக்காட்சியில் ஏதாவது நடிகையின் பேட்டிதானே!
எனது அப்பா, தீபாவளியின் போது சகோதரர்கள் எங்கள் ஐந்துபேருக்கும் மொத்தம் ஐந்து ரூபாய்க்கு வாணங்கள் வாங்கிக் கொடுப்பார் - வெடிகள் கிடையாது. அதிகபட்சமாக 'கேப்' வாங்கித் தருவார். அதை இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே மொட்டை மாடியில் காயவைத்து தீபாவளிக்கு முதல் நாள் இரவு எங்கள் ஐந்து பேருக்கும் பங்கு போட்டுத் தருவார். ஒரே சமயத்தில் ஐந்து பேரும் சேர்ந்தாற்போல் கம்பி மத்தாப்போ வேறு வாணமோ விடக்கூடாது, ஒரே சமயத்தில் இரண்டு கைகளிலும் கம்பி மத்தாப்பை ஏற்றக்கூடாது என்று பல விதிகள். குறைந்த செலவில் நீண்ட நேரம் வாணங்கள் விடும் வித்தையை அவர்தான் கற்றுக் கொடுத்தார். கொஞ்சம் பாக்கி இருக்கும்போதே கார்த்திகைக்கு இருக்கட்டும் என்று வாங்கி வைத்து விடுவார். தீபாவளி என்றாலே தீபாவளி பட வெளியீடுகளும் ஆனந்தவிகடன், கல்கி தீபாவளி மலர்களும்தான் நினைவுக்கு வரும். நிச்சயமாக ஒரு தீபாவளிக்கு வந்து அடுத்தவீட்டு தீபாவளி வரை வீட்டை விட்டு நகராத மாப்பிள்ளைகள் பற்றிய ஜோக்குகள் இடம் பெறும்.
எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைச் சொல்லும் நேரத்தில் 'யார் சிரித்தால் தீபாவளி?' என்ற தலைப்பில்நான் படித்து நெகிழ்ந்த ஒரு வலைய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்:
"சந்தனக்கலரில் பூப்போட்ட சுடிதாரும் துப்பட்டாவும் அணிந்து அவள் மேடையேறினாள். மேடையில் அமர்ந்திருந்த நாங்கள் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தோம். ஒரு நிமிடத்துக்கு மேல் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. இரு கரங்களையும் துப்பட்டாவுக்க்குள்ளேயிருந்து வெளியே எடுத்து வணக்கம் சொன்னாள். அந்தக் கைகளையும் எங்களால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. அவள் ஒரு இளம் பட்டாசுத் தொழிலாளி."
பட்டாசு தொழிலாளர்களின் சோகத்தை ஒரு வரியில் விவரித்துள்ளீர்கள். அருமையான விளக்கம்.
படகு விபத்து என்று இல்லை, கும்பகோணம் பள்ளி குழந்தைகள் தீ விபத்து, சுனாமியால் ஏற்பட்ட மரணம், இவற்றிற்கு விடிவுகாலம் எப்போது வரும்.? நல்ல பண்பட்ட நேர்மையன ஆட்சியளர்கள் தேவை. மேகலா, பெங்களூர்.56
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X