நாம் உறக்கத்திலிருக்கும்போதும் நமது உடல் பசி, குளிர், ஈரம் போன்றவற்றை உணர்கிறது; அச்சம், மகிழ்ச்சி போன்ற உள்ளத்து உணர்ச்சிகளையும் கூட நம் உடல் அனுபவிக்கிறது
நாம் கனவு காண்பது ஏன்?
நாம் காணும் கனவுகள் அனைத்தும் நமது உணர்ச்சிகள், ஆவல்கள், ஆசைகள், தேவைகள் மற்றும் நினைவுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. ஆனால் இவற்றுக்கு வெளியே உள்ள சிலவும் கூட நம்முடைய கனவுகளுடன் தொடர்புள்ளவையாகும். ஒருவர் பசி, களைப்பு அல்லது குளிர் ஆகியவற்றால் தாக்குறும்போது அவையும் கூட இவ்வுணர்ச்சிகளுடன் சேர்க்கப்படலாம். நீங்கள் போர்த்திக்கொண்டிருக்கும் போர்வை படுக்கையிலிருந்து நழுவி விழுந்துவிட்டால், உங்களுக்குப் பனிக்கட்டி மீது படுத்திருப்பது போன்ற கனவு ஏற்படக்கூடும். கனவு காண்பது பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் உளப்பகுப்பாய்வாளர்கள் (psychoanalysts) உள்ளனர். அவர்கள் கருத்துப்படி கனவு என்பது நிறைவேறாத ஆசைகளின் வெளிப்பாடு ஆகும். வேறு வகையாகக் கூறுவதெனில் கனவு என்பது நீங்கள் நிறைவேற்ற விரும்பும் ஆசைகளின் வெளிப்பாடு எனலாம். இதன்படி, உறக்கத்தின்போது நமது தடையுணர்ச்சிகளும் உறங்கிக் கிடக்கின்றன எனக் கூறப்படுகிறது.
இரவு நேரக்கனவு என்பது உறக்கத்தில் உண்டாவது. பகல் கனவு என்பது நாம் விழித்துக்கொண்டு இருக்கும்போதே காணும் ஒருவகைக் கனவாகும். ஆனால் இருவகைக் கனவுகளிலும் கனவு காண்பவர் தம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளில் கவனம் செலுத்துவதில்லை.
நாம் உறக்கத்திலிருந்து விழித்துக்கொள்வது எவ்வாறு?
உறக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் ஓர் அதிசய அனுபவமாகும். சில நேரங்களில் உறக்கம் நமக்காகக் காத்திருப்பதில்லை; வேறு சில நேரங்களில் நாம் விரும்பும்போது உறங்க முடிவதில்லை. நம்மை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்வது எது என்பது அறிவியலாளர்களுக்கே இன்னும் புரியாத புதிராகத்தான் உள்ளது. சிந்தித்தல், பார்த்தல், உணர்தல் போன்ற மூளையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நாம் ஏராளமான ஆற்றலைப் பயன்படுத்துகிறோம். எனவே மூளைக்கும் நரம்பு மையங்களுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. போதுமான உறக்கத்தின் காரணமாக களைப்பு நீங்குகிறது; தேவையான அளவு ஓய்வுக்குப்பின் விழிப்புணர்வு ஏற்படுகிறது. மற்றுமொரு முக்கிய காரணம் நாம் உறக்கத்திலிருக்கும்போதும் நமது உடல் பசி, குளிர், ஈரம் போன்றவற்றை உணர்கிறது; அச்சம், மகிழ்ச்சி போன்ற உள்ளத்து உணர்ச்சிகளையும் கூட நம் உடல் அனுபவிக்கிறது. இத்தகைய உணர்வுகள் நமது மூளையைத் தூண்டி உறக்கத்திலிருந்து நம்மை விழித்தெழச் செய்கிறது. இருப்பினும் நாம் போதுமான அளவுக்கு உறங்கிய பின் இயல்பாக விழித்தெழுவது இயற்கையான நிகழ்வு என்பதில் ஐயமில்லை.
நமது உடல் உறங்கும்போதும், நரம்பு அமைப்புகள் சுறுசுறுப்பாக இயங்குவதோடு உடலுள் நடைபெறும் செயல்பாடுகள் மற்றும் வெளியுலக அபாயங்கள் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. மேலும் உறக்கத்தின்போது இதயத்துடிப்பு நிற்பதே இல்லை என்பதும் மெதுவாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதும் நாம் அறிந்த உண்மைகள்.