நம்மிடையே படிந்துள்ள யோசனைகளைக் கடந்தும் நாம் ஏதேனும் செய்யவேண்டும். காலம் காலமாக நம்மில் படிந்திருக்கும் வாழ்க்கைக்கு வேண்டியதைச் சம்பாதிப்பது, சௌகரியங்களைத் தேடுவது, கடன்களை அடைப்பது, சேமிப்பது, சொத்துக்களையும் வாய்ப்புக்களையும் பெருக்குவது, மற்றும் அதற்கு வேண்டிய முயற்சிகள்... தமிழில் : ஜெயந்தி சங்கர்
(மூலம் : ஆர்னால்ட் பென்னெட்)
"ஆனா, எதற்கு இருபத்துநான்கு மணி நேரத்தைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறான் இவன்? இருபத்துநான்கு மணிநேரமும் வாழ்வதில் எனக்கொன்றும் பிரச்சனையில்லையே. நான் செய்யத் திட்டமிடுவதையெல்லாம் செய்கிறேன். அதே நேரத்தில் சில போட்டிகளுக்கும் போக முடிகிறது என்னால். இதெல்லாம் சின்ன விஷயம். ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரம் மட்டும் தான் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டு திருப்திப் பட்டாப் போச்சு. இதற்குப்போய்..." என்று முக்கிய செய்தியை விட்டுவிட்டு ஒரு சிலர் இதைச் சாதாரணமாகக் கூட நினைக்கலாம்.
ஐயா, என்னை மன்னியுங்கள். உங்களைப் போன்ற ஒருவரைத்தான் நாற்பது ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தேன். உங்களின் முகவரி, தொலைபேசி எண் எல்லாவற்றையும் அவசியம் கொடுங்கள். வாழ்க்கையில் அப்படி எப்படி உங்களால் திருப்திப்பட்டுக் கொண்டிருக்க முடிகிறது என்று தெரிந்துகொள்ள எனக்கும் ஆசை. விரிவாக எனக்குச் சொல்ல என்ன கட்டணம் என்றும் சொல்லி விடுங்கள். நான் உங்களிடம் பேசுவதை விட நீங்கள்தான் என்னிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். முன்னால் வாருங்கள். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஒருவித சந்தேகமுமில்லை. ஆனால், இங்கே ஏராளமான பாவப்பட்ட ஆன்மாக்கள் வருடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோடுவதைப் பார்த்தபடியே இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை ஒரு சீரான ஓட்டத்துக்குக் கொண்டு வர முடியவில்லையே என்ற ஒருவிதமான வலியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்முன்னால் வரும்வரை நான் இவர்களுடனேயே பேசிக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.
அவ்வுணர்வைப் பற்றி நாம் விரிவாக யோசித்தால் மேலும் நன்றாகப் புரியும். ஒரு வித அசௌகரியமும், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும், முன்னோக்கிய அகப்பார்வையும் ஊக்கமும் கலந்த ஓர் உணவு அது. தீராத தொடர் சௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியது. அது. நமது அனைத்து மகிழ்ச்சிகளையும் தின்று, கோரமாக இளிக்கும் ஓர் எலும்புக்கூடு போலச் செயலாற்றும். திரையரங்கத்திற்குப் போய் நாம் சிரித்து மகிழ்வோம். ஆனால், அது தனது தீனமான ஒரு விரலைச்சுட்டி நம்மைக் குற்றம் சாட்டும். நாம் கிடுகிடுவென்று கடைசிரயிலைப் பிடிக்க ஓடுவோம். அங்கே தளமேடையில் ரயிலுக்குக் காத்திருக்கும் போதும் நம்மை விடாது பின்தொடர்ந்து, "உன் இளமையை எல்லாம் என்னப்பா செஞ்ச? இந்த வயசுல நீ இப்ப என்ன செஞ்சிகிட்டிருக்க?" என்று கேட்டுத் துளைக்கும். இவ்வகையான உணர்வுகள் வாழ்க்கையில் சகஜம் என்றும் அத்துடன்தான் வாழ்ந்து தீர்க்க வேண்டும் என்றும் நீங்கள் நினைக்கலாம். உண்மை!
ஆனால், ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறு கட்டங்கள் உண்டு. ஒருவருக்கு மெக்காவுக்குப் போய்வரும் ஆசை இருக்கலாம். மெக்காவுக்குப் போகவேண்டும் என்று இடைவிடாது அவரின் மனசாட்சி சொல்லிக் கொண்டிருக்கும். சுற்றுப்பயண அலுவலகத்தின் துணையுடனோ சுயமாகவோ ஒருமுறை மட்டுமே முயன்றால் போதாது. அதற்குப் பல்வேறுகட்ட முயற்சிகள் தேவையாக இருக்கிறது. நினைத்த மாதிரியே மெக்காவுக்குப் போய்ச் சேரவும் சேரலாம். செங்கடலை எட்டும் முன்னரே அவர் இறக்கவும் இறக்கலாம். அவரது ஆசையோ நிறைவேறாமலே இருக்கும். ஆனால், மெக்காவுக்குப் போக நினைக்கும் அவர் தன்னுடைய ஊரைவிட்டே கிளம்பாமல் இருப்பதுதான் பெரும்பாலும் நடக்கும் வேடிக்கை.
நம் ஊரைவிட்டே கிளம்புவதில்லை நாம். பக்கத்தில் இருக்கும் சுற்றுலாப் பயண அலுவலகத்திற்குப் போய் சுற்றுப்பயண விவரங்களைக் கூடக் கேட்பதில்லை. நமக்கு இருக்கும் காரணம் என்ன தெரியுமா? அதைக் காரணம் என்றுகூடச் சொல்ல முடியாது. சால்ஜாப்பு என்றோ சப்பைக்கட்டு என்றோ தான் சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரம் மட்டுமே இருக்கிறது என்பதுதான் அந்த ஒரே அங்கலாய்ப்பு.
நாம் நமது தெளிவற்ற குறிக்கோளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அது, அந்தச் சோம்பேறி மடம் கட்டிய கதை, சால்ஜாப்பு கிளம்பிய வேர் நமக்குப் புலப்படும். அதாவது, அதைச் செய்ய வேண்டும் என்ற குறிப்பிட்ட யோசனையில் ஆரம்பித்திருக்கிறது. நம்மிடையே படிந்துள்ள யோசனைகளைக் கடந்தும் நாம் ஏதேனும் செய்யவேண்டும். காலம் காலமாக நம்மில் படிந்திருக்கும் வாழ்க்கைக்கு வேண்டியதைச் சம்பாதிப்பது, சௌகரியங்களைத் தேடுவது, கடன்களை அடைப்பது, சேமிப்பது, சொத்துக்களையும் வாய்ப்புக்களையும் பெருக்குவது, மற்றும் அதற்கு வேண்டிய முயற்சிகள்... என்பதுபோன்ற எழுதப் பட்டதும் படாததுமான விதிகள் எல்லாமே, மாற்றியெழுதப் படாமல் இருக்கின்றன. இந்த வேலைகள் கடினமானவை தான்! நம்மில் வெகு சிலரே சாதித்திடும் வேலைகள்! நம்மை மீறியவையாகத் தோற்றம் காட்டும் வேலைகள்! இருந்தும், நாம் அவற்றில் வென்றாலும் தோற்றாலும் மேற்கூறிய 'எலும்புக்கூடு' மட்டும், அனுபவப் பாடம் என்கிறாப்போல. நம்முடனேயே இருக்கும்.
நம் திறனையும் மீறிய செயல் என்று நமக்குத் தெரிந்தாலும். நம் சக்தியால் முடியாதவை என்று தெரிந்திருந்தாலும், நாம் எளிதில் திருப்தியடையக் கூடாது. செலவிட்டுக் குறைந்து போயிருக்கும் நமது சக்திக்கு மேலும் கொஞ்சம் செய்ய வேண்டியிருக்கிறது.
ஆமாம், இது சத்தியம். எல்லோரையும் போல தினசரி செயல் திட்டங்களைக் கடந்தும் ஏதேனும் சாதிக்கும் ஆசை வாழ்க்கையில் குறிப்பிட்ட கட்டத்தைக் கடந்தவர் அனைவருக்குமே வரும்.
அந்த ஆசையை நிறைவேற்றிடும் முயற்சியை மேற்கொள்ளும்வரை மேற்கூறிய அசௌகரியமான காத்திருப்பு இருக்கும். அது நம் ஆன்மாவின் அமைதியைக் குலைத்தபடியே இருக்கும். அந்த ஆசைக்கு எண்ணற்ற பெயர்கள் உண்டு. அறிவுத்தேடல் எனும் பிரபஞ்ச ஆசை என்பது அவற்றில் ஒன்று. இந்த ஆசை மிகவும் உறுதியானது. எந்த அளவிற்குத் தெரியுமா? வழக்கமான தினசரி வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த ஆசையால் உந்தப்பட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும், அறிவை மேலும் அதிகமாகத் தேடவும் நினைக்கிறார்கள். ஹர்பெர்ட் ஸ்பென்ஸர் உலகிலேயே மகத்தான மனம் கொண்டவர் என்றறியப் படுபவர். அவரே இந்த ஆசைக்குள் அடிக்கடி விழுந்தபடியிருந்தார்.
வழக்கமான திட்டமிட்டதுபோன்ற வாழ்க்கையைக் கடந்தும் வாழ ஆசைப்படும், இந்த ஆசைகுறித்த புரிதல் இருக்கும் நிறைய ஆசாமிகள் பெரும்பாலும் அறிவுப்பசி கொண்டவர்கள். அவர்கள் நிறைய வாசிக்கவும் தெரிந்துகொள்ளவும் விரும்புகிறார்கள். இவர்கள் இலக்கிய ஆர்வம் மிகுந்தவர்களாகவும் உருவாகிறார்கள். ஆனால், இலக்கியம் மட்டுமே அறிவுலகைத் தன்னுள் அடக்கியதல்ல என்பதை நான் இங்கே சொல்லியே ஆகவேண்டும். இலக்கியத்தைக் கடந்து அப்பாலும் சுயமுன்னேற்றத்துக்கான, அறிவுப்பசியைத் தீர்க்கும் ஓர் உலகம் விரிகிறது. அவற்றைப்பற்றி நான் பிறகு விரிவாகச் சொல்வேன். இலக்கிய ஈடுபாடு இல்லாதவர்களுக்கு இங்கு ஒன்றே ஒன்றைச் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.
அறிவுதாகத்தைத் தீர்க்க இலக்கியக் கிணறு மட்டும் தான் உதவும் என்று நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டாம்!
|