இனிமையாக எப்படி மற்றவருடன் பழகுவது, அனைவரையும் வயப்படுத்துவது எப்படி என்பதைக் கற்று உணர நல்ல புத்தகம் ஒன்று இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக லட்சக்கணக்கானவகளுக்கு வழி காட்டிய இந்தப் புத்தகம் இன்று உங்களுக்கும் வழியைக் கற்றுக் கொடுக்கக் காத்திருக்கிறது. (வெற்றிக்கலை நூலிலிருந்து)
அபெல்லஸ் படைத்த ஓவியம் :
கிரேக்க நாட்டைச் சேர்ந்த அபெல்லஸ், எழில் தேவதையை ஓவியமாகத் தீட்டுமுன்னர் கிரீஸ் முழுவது பல வருடங்கள் சுற்றி அலைந்து அழகிய பெண்களை உற்றுக் கவனித்தானாம். அவர்களது எழில், நடை, உடை, பாவனை, சாயல், நளினம் இவற்றைக் கவனித்து, தான் கண்ட சிறப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து வீனஸ் தேவதைக்கு உருக்கொடுத்தானாம்!
நாகரீகமுள்ள கிரேக்கப் பெண்களின் பண்பாட்டின் வெளிப்பாடே அவன் படைத்த வீனஸ்ஓவியம் ஆயிற்று அழகுடன் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தை விட்டு விட்டு அகஒளியை வளர்க்கும் வழியைப் பார்த்தாலே போதும். அதற்காக ஆடை அணிகலன்கள் வேண்டாம் என்று அர்த்தம் இல்லை. "ஆடைபாதி ஆள்பாதி" என்பது முதுமொழி. குண்டா, ஒல்லியா, உயரமா, குட்டையா, கறுப்பா, சிவப்பா, தன்னிடம் உள்ள சிறப்பு அம்சம் என்ன என்று இவற்றை எல்லாம் கவனித்து, உடையை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அணியத்தக்க ஆடை எது என்பதை நல்ல டெய்லரோ, அழகு நிலையப் பணியாளரோ சுலபமாகக் கூறிவிடுவர்.
நாசம் விளைவிக்கும் நச்சு குணங்கள் :
நல்ல குணங்களைக் கூட்டுவதோடு, தன்னிடமுள்ள எதிர்மறைக் குணங்களைப் பட்டியலிட்டு அவற்றைக் களையவும் வேண்டும். நாசம் விளைவிக்கும் நச்சுக்களாக விளங்கும் இவைகளைப் பட்டியலிட்டுப் பார்க்கலாமா?
பொய் புரட்டு செய்தல், நாணயமின்மை, பேராசை, வெறுப்பு, பொறாமை, கோபம், பயம், பழிவாங்கும் மனப்பான்மை, அடுத்தவரைக் குறை கூறுதல், கிசுகிசுக்களைப் பரப்புவது, தேவையற்ற அதிக உற்சாகம், நழுவும் மனப்பான்மை, எதையும் அளவுக்கு மீறி கூட்டி உரைத்தல், தன் தவறுகளை அடுத்தவர் மீது சுமத்தல், நான் என்ற அகம்பாவம், வறட்டுப் பிடிவாதம், சுயநலம்.உங்களின் நல்ல பண்புகளை உங்கள் நடத்தை மூலம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கணமும் கவனித்து கொண்டே இருக்கிறார்கள். இல்லத்தில் கணவன், மனைவி, குழந்தைகள், தெருவில் அண்டை அயலார், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், இவர்கள் அனைவரும் இடைவிடாது உங்களை எடைபோட்டுக் கொண்டே இருப்பதை மறக்க வேண்டாம். ஒவ்வொரு செய்கையும் ஒரு மனிதனின் நிழலின் நீட்டிப்பே. எமர்ஸன்
ராணிக்கு மூடப்பட்ட கதவு :
விக்டோரியா மகாராணிக்கும் அவரது கணவர் பிரின்ஸ் ஆல்பர்ட்டுக்கும் ஒருமுறை விவாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராணியாரின் பேச்சினால் மனம் புண்பட்ட ஆல்பர்ட், தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். ஐந்து நிமிடம் கழித்து அறையைத் தட்டும் சத்தம் கேட்டது. "யார் அது?" வினவினார் ஆல்பர்ட். "நாந்தான் மகாராணி வந்திருக்கிறேன்" கதவு திறக்கப் படவில்லை. சற்று நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டினார் விக்டோரியா. "நாந்தான் உங்கள் மனைவி விக்டோரியா வந்திருக்கிறேன்" உடனே கதவைத் திறந்தார் ஆல்பர்ட், சமாதானம் ஏற்பட்டது.
"நான்" என்ற அகம்பாவமும், பெண்மைக்கு ஒவ்வாத சொற்களும் இனிய ஆளுமைக்கு எதிரானவை.
வெப்ஸ்டரின் எளிமை :
வாஷிங்டன் நகரிலிருந்து ஒரு அரசியல்வாதி டேனியல் வெப்ஸ்டரைப் பார்க்க அவரின் இருப்பிடமான மார்ஷ்பீல்டு என்னும் இடத்திற்கு வந்தார். வழியிலே ஒரு நீரோடை. அதைத்தாண்ட அவரால் முடியவில்லை. அருகே கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஒரு விவசாயி வேலை செய்வதைப் பார்த்த அவர் "அப்பா, என்னை அக்கரை சேர்த்துவிடு. உனக்கு கொஞ்சம் மதுபானம் தருகிறேன்" என்றார். அந்த விவசாயி அரசியல்வாதியைத் தன் தோள்மீது தூக்கி வைத்துக் கொண்டு அனயாசமாக அக்கரை வந்தார். வெகுமதியாகத் தரப்பட்ட மதுபானத்தையும் வாங்கவில்லை. வெப்ஸ்டரின் வீட்டையும் சுட்டிக் காட்டினார். சற்று நேரம் கழித்து வெப்ஸ்டர் வீட்டுக் கதவைத் தட்டியவுடன் கதவை திறந்து கொண்டு வந்தவரைப் பார்த்தவுடன் "விருந்தாளி" திகைத்தார். கதவைத் திறந்தது வேறு யாருமில்லை, விவசாயியாக இருந்த வெப்ஸ்டர்தான்!
ஜெபர்சனின் பாடம் :
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜெபர்சன் ஒரு முறை தன் பேரனுடன் குதிரை சவாரி செய்யும்போது வழியிலே ஒரு நீக்ரோ அடிமை அவர்களைப் பார்த்தவுடன் தனது தொப்பியை மரியாதை நிமித்தம் எடுத்துத் தலைகுனிந்து வணங்கினான். ஜனாதிபதி உடனே பதில் மரியாதை தெரிவிக்கத் தன் தொப்பியை எடுத்தார். ஆனால் பேரனோ அந்த அடிமையை அலட்சியமாக நோக்கினான். 'தாமஸ்'! என்று பேரனைக் கூப்பிட்ட ஜெபர்ஸன் "அந்த அடிமை உன்னைவிடச் சிறந்த கனவானாக இருக்க நீ அனுமதிக்கலாமா?" என்று கேட்டார். வெட்கிய பேரன் தன் தொப்பியை எடுத்து பதில் வணக்கம் கூறி தானும் ஒரு கனவானே என நிரூபித்தான். நல்ல பண்புகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
அரிஸ்டாட்டிலின் விளக்கம் :
அரிஸ்டாட்டில் கனவான் (‘GENTLEMAN’) என யாரைக் குறிப்பிடுகிறார் தெரியுமா?
"நல்லது கெட்டது எது வந்தபோதிலும் நடுநிலையில் பெருந்தன்மையுடன் நடப்பவனே கனவான். தன்னை உயர்த்தவோ, தாழ்த்தவோ அவன் அனுமதிப்பதில்லை. வெற்றியில் மகிழ்ச்சியோ, தோல்வியில் வருத்தமோ அவன் அடைவதில்லை. அபாயத்தை அவன் தேர்ந்தெடுப்பதுமில்லை. அணுகுவதுமில்லை. தன்னைப் பற்றித் தானாக பேசுவதுமில்லை. மற்றவரைப் பேச விடுவதுமில்லை. தன்னைமட்டும் புகழ வேண்டும், மற்றவரை இகழ வேண்டும்" என்று அவன் நினைப்பதில்லை.
ஒரு கனவான் கனவான்தான். இதற்கு மேல் எதற்கு விளக்கம்? ஆம், A GENTLEMAN IS A GENTLEMAN அவ்வளவுதான்.
ஒவ்வொருவரும் தன்னுடன் தனது ஆளுமையைச் சூழ்ந்து சுமந்து செல்கிறான். ஒரு சூழ்நிலையை உருவாக்கியவாறே இருக்கிறான். இதில் அவனது ஆளுமையின் நல்ல, கெட்ட குணங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நல்லதைப் பெருக்குங்கள், நச்சுகளை அகற்றுங்கள்.
உங்களின் சங்கேத மொழி என்ன?
இரண்டாம் உலக மகாயுத்தத்தில் மெக்ஸிகோவில் ஜெர்மன் அரசு ஒரு ஒற்றர் படையை அமைத்திருந்தது. ஒற்றர்கள், ரகசியமாகத் தங்கள் செய்திகளை பெர்லினுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சங்கேத மொழி (CODED MESSAGE) இருந்தது.
அமெரிக்க நிபுணர்களுக்கு அந்த சங்கேதமொழி ஒரு சவாலாக இருந்தது. தீவிரமான ஆராய்ச்சிக்குப் பின்னர் அந்த சங்கேத மொழிக்கு ஆதாரம் ஏதோ ஒரு அகராதி தான் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது.
எந்த அகராதியாக இருக்கக்கூடும் அது? கடைசியாக அதை கண்டே பிடித்துவிட்டனர். அவர்கள் மேஜையின் மீது இருந்த அகராதிதான் அது! அது ஜெர்மனியின் ராணுவ ரகசியங்களை அமெரிக்காவிற்கு விளக்கிவிட்டது.
நான் விரும்பாத ஒரு மனிதனை இதுவரை நான் சந்திக்கவே இல்லை - யாரோ
நாம் நமது ஆளுமையை உயர்த்த நமக்குத் தடையாக இருக்கும் சங்கேத மொழியை உடைத்து சிக்கலை அவிழ்க்க வேண்டும். நாம் வெற்றி பெறாமல் இருக்க எந்த சங்கேத மொழியை நம்மை அறியாமல் அனுப்புகிறோம்? இதை அறிந்து தவறைத் திருத்தினால் சரியான செய்தியை அனுப்பினால் வெற்றிபெறுவது எளிது.
இன்னும் அதிகப்படுத்துங்கள் :
இரண்டே வார்த்தைகளில் நமது ஆளுமையை உயர்த்திவிடலாம் "இன்னும் அதிகப்படுத்துங்கள்" ஆம்! நல்லவற்றை "இன்னும் அதிகப்படுத்துங்கள்" நல்ல நண்பர்களை இன்னும் அதிகப்படுத்துங்கள். தீய குணங்களை ஒழிப்பதை இன்னும் அதிகப்படுத்துங்கள். இந்த ஒரே ஒரு உத்திமட்டும் போதும். உங்களுக்கு அளப்பரிய முன்னேற்றத்தைத் தர!
இன்றே ஆரம்பியுங்கள் :
ஒரு விளக்கு அதன் ஒளியின் தீவிரத்தைப் பொறுத்தே தனது பிரகாசத்தைத் தரும்!! அதுபோலவே ஒரு மனிதனின் மனோசக்தியே அவனது சூழ்நிலையில், வாழ்க்கையில் பிரகாசத்தைத் தரும். அவனது செல்வ நிலைக்கும் சேர்த்து! இந்த பிரகாசத்தை உயர்த்தி வெளிப்படுத்த இனிய ஆளுமை இன்றியமையாத தேவையாகும். இதை என்றிலிருந்து உயர்த்த ஆரம்பிப்பது? இன்றே! இப்பொழுதே! இக்கணமே!
உங்கள் குழந்தையிடம், மனைவியிடம் அல்லது கணவரிடம் இதை ஆரம்பிக்கலாம். அட நன்றாகச் சமைத்திருக்கிறாயே என்று மனைவியிடமோ அழகாகப் படிக்கிறாயே என்று குழந்தையிடமோ கூறினால் ஏற்படும் சூழ்நிலையே தனிதான்!
நல்ல ஒரு வழிகாட்டி :
இனிமையாக எப்படி மற்றவருடன் பழகுவது, அனைவரையும் வயப்படுத்துவது எப்படி என்பதைக் கற்று உணர நல்ல புத்தகம் ஒன்று இருக்கிறது.
ஆண்டாண்டு காலமாக லட்சக்கணக்கானவகளுக்கு வழி காட்டிய இந்தப் புத்தகம் இன்று உங்களுக்கும் வழியைக் கற்றுக் கொடுக்கக் காத்திருக்கிறது.
டேல் கார்னிகி எழுதிய HOW TO WIN FRIENDS AND INFLUENCE PEOPLE என்ற புத்தகம் அது.
இனிமையான ஆளுமையை வெற்றி பெறத் துடிப்பவர் அடைய வேண்டிய நான்காவது குணாதிசயமாகும்.
|