 |
இதழ் 393 |
 |
டிசம்பர் 01 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| | | கண்ணன், ராதா மற்றும் கோபியர்களுடன் ஆடும் இதில் காமத்திற்கு இடமில்லை. உடல் உணர்ச்சியைத் தூண்டும் நடனமும்
இல்லை. தென்னிந்தியாவில் கிருஷ்ணன் கோயில்கள் பல இருக்கின்றன. குழலூதும் கண்ணன், ருக்மிணி சத்யபாமாவுடன் கல்யாணக் கோலமாக எழுந்தருளி அருள் புரிகிறார். அர்ச்சகரும் "ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ணாய நம:" என்று சொல்லி அர்ச்சனையை முடிப்பார்.
ஆனால் ’ராதா’ என்ற பெயர் அநேகமாக எங்கும் வருவது இல்லை. ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களிலும் கூட ராதாவைப் பற்றி வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் குழந்தைக்குப் பெயர் வைக்கும் போது ருக்மிணி கிருஷ்ணன் என்றோ, சத்யபாமா கிருஷ்ணன் என்றோ வைப்பதில்லை. அங்கு ‘ராதா‘ வந்து விடுகிறாள். ராதா மாதவன், ராதாகிருஷ்ணன், ராதாலோலன், ராதாமனோஹர், ராதேஷ்யாம், ராதாமோஹன், ராதாபியாரே என்று பல பெயர்களை நாம் பார்க்கிறோம்.
ஆனால் வடநாட்டிலோ ருக்மிணி, சத்யபாமாவை விட ராதாவே அதிகம் வருகிறாள். அவளுக்குத்தான் மஹத்துவம் அதிகம். மதுரா பிருந்தாவன், துவாரகா போன்ற இடங்களில் எங்கு சென்றாலும் "ராதே கிருஷ்ணா" நாமம்தான்.
தமிழ்நாட்டில் மிகவும் புகழ் வாழ்ந்த மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமியின் திருக்கோயிலிலும், மதுரை மதன்கோபால ஸ்வாமி கோயிலிலும்கூட ராதாவைக் காண முடிவதில்லை. இதேபோல் கேரளாவில் ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலிலும், கர்நாடகாவில் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணன் கோயிலிலும் ராதா இல்லை.
ஆனால் வடநாட்டில் எல்லா பிர்லாமந்திர் கோயில்களிலும் பளிங்குக் கற்களில் ராதா கிருஷ்ணன் சிலைகளைக் காணலாம். தவிர, மற்ற எல்லா ஸ்ரீகிருஷ்ணன் கோயில்களிலும் ராதாவுக்கு மிகவும் முக்கியமான இடம் வழங்கப்பட்டிருக்கிறது.
கண்ணன் ஆவணி மாதம், கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில், நடு இரவில் பிறந்தான். ராதாவோ சுக்லபக்ஷ அஷ்டமியில் பகல் 12 மணிக்கு மதுராவில் பிறந்தாள். கிருஷ்ணனின் நட்சத்திரம் ரோஹிணி. ராதையின் நட்சத்திரம் விசாகம். அவளது தந்தையின் பெயர் விருஷபானு. தாயின் பெயர் கீர்த்திதா. அவர்கள் இருந்த இடம் கோவர்த்தன மலைக்கு அருகில் பர்சானா என்ற கிராமம். கோகுலாஷ்டமி என்று கொண்டாடுவது போல் ராதை பிறந்த தினத்தை ராதாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள் வடநாட்டவர்கள்.
எப்படி ஹனுமான் கோயிலில் "ராமா ராமா" என்றால் ஹனுமார் வந்துவிடுகிறாரோ அதே போல் வடநாட்டில் அதுவும் ராஜஸ்தான் மதுரா பிருந்தாவனில் "ராதே ராதே" என்று சொன்னால் கண்ணன் ஓடி வந்து நிற்பாராம்.
கிருஷ்ணரின் இடது பாகத்திலிருந்து தோன்றியவள்தான் ராதை என்கின்றனர். கண்ணனின் ஹ்லாதினி சக்தி என்று சொல்லப்படும் ஆன்மீக சக்தியை அளிப்பவளே ராதைதானாம்.
கண்ணன் சொல்கிறார்: "ராஸப்தம் குர்வத தரஸ்தோ ததாமி பக்திம் உத்தமம் தா ஸப்தம் குர்பத பஸ்சாத யானி ஸ்ரவண் லோபத "
"எவனது வாயில் ரா சப்தம் வருகிறதோ அவனுக்குச் சிறந்த பிரேமபாவ பக்தியை அளிக்கிறேன். ஆனால் "தா" சப்தம் கேட்க அந்தப் பெயரைக் கேட்க பின்னாலேயே செல்வேன்."
ராதா என்றாலே ராஸலீலையும் நம் முன்னால் வருகிறது. ராஸலீலை என்பது மிகப் புனிதமான நடனம் - கண்ணன், ராதா மற்றும் கோபியர்களுடன் ஆடும் இதில் காமத்திற்கு இடமில்லை. உடல் உணர்ச்சியைத் தூண்டும் நடனமும் இல்லை. அந்த நடனம் ஆழ்மனதில் புகுந்துபோய் ஆன்மா பரமாத்மாவுடன் சேரும் நடனம்.
ராதா கண்ணனை விட வயதில் மிகப் பெரியவள். அவள் கண்ணனை இடுப்பில் வைத்துக் கொஞ்சியும் இருக்கிறாள். கண்ணன் மதுரா போகும் போது ஏழு வயதுதானாம்.
பிருந்தாவனம் நுழைந்தால் எங்கும் ‘ராதே’ என்ற முழக்கம்தான். நம் திருவல்லிக்கேணி போல் நெருக்கமான சந்துகள். அதிகம் கூட்ட நெரிசல் வேறு. அத்துடன் சைக்கிள்கள், மாட்டுவண்டிகள் என்று இடத்தை அடைத்துக் கொள்கின்றன. சைக்கிளில் வருபவர்கள் மணி அடிப்பது கிடையாது. அதற்கு பதிலாக "ராதே ராதே" என்று கத்துகிறார்கள். மக்களும் வழி விடுகின்றனர்.
அருகிலேயே யமுனை சலசலவென்று ஓடுகிறது. அதில் ஓட சவாரியும் உள்ளது. அதில் ஏறி அமர்ந்தால் அந்தப் படகோட்டி ஒரு பஜன் பாடலை எடுத்துப் பாட ஆரம்பிக்கிறான். நம்மையும் பாட வைக்கிறான். வழி முழுவதும் "ராதே ராதே ஷ்யாம் ஸே மிலா தே" என்று பாடுகிறான். அதாவது “ஓ.. ராதா என்னைக் கண்ணனிடம் சேர்த்து வை" என்று பொருள். கண்ணன் ராதா பக்தியை ஒவ்வொரு மூலையிலும் நாம் காண்கிறோம்.
யமுனைக் கரையில் நந்தகாம் என்ற இடத்தில் சிறு கோயில் இருக்கிறது. அங்கு இருக்கும் கண்ணன் பெயர் பிரும்மாண்ட பிஹாரி. அங்குதான் யசோதை மண்ணை உண்ட கண்ணனின் வாயைத் திறக்கச் சொல்லி உள்ளே எல்லா லோகங்களையும் பார்த்தாளாம். அங்கு எல்லோருக்கும் மண்தான் பிரசாதம். பலர் அதை வாயிலும் போட்டுக் கொள்கிறார்கள். அதை வாயில் போட்டாலே கரைந்து போய்விடுகிறது, ருசியாக இருக்கிறது என்கிறார்கள்!
அங்கு இருக்கும் வீட்டின் பெயர்களும், ஹோட்டல் மற்றும் கடைகளின் பெயர்களும் ராதாவைச் சார்ந்தே இருக்கின்றன. ராதேகிருஷ்ணா ஸ்டோர், ராதே கிருஷ்ணா ஸ்வீட் ஸ்டால், ராதாமனோஹர் லாட்ஜ் என்று. ராதாஷ்டமி நேரத்தில் வடக்கில் சென்று அனுபவித்து ஆனந்தம் அடைய கொடுத்து வைக்க வேண்டும்.
|
| | விசாலம் அவர்களின் இதர படைப்புகள்.
| ஆன்மீகம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|