 |
இதழ் 393 |
 |
டிசம்பர் 01 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| அழகிய மிருகம் (12)
- நிலா |
| | அவள் வார்த்தைகளால் சொல்லாததை அவள் உடல் மொழி காட்டிக் கொடுத்துவிட, அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், "ஒரு குழந்தையை உனக்குப் பிடிச்சிருந்ததுன்னா இப்படித்தான் சங்கடப்படுவியா, அஞ்சு?" என்றான் மென்மையான குரலில். வாசுவைக் கண்டதும் பெருக்கெடுத்த உணர்ச்சி வெள்ளத்தின் நடுவில் எழுந்த தீர்மானம் பிரசவ வைராக்யமாகத்தானிருந்தது அஞ்சனாவுக்கு. இதோ... பாரம் தாளாமல் மேசையில் தலை சாய்த்து சுவரை வெறித்துக் கொண்டிருக்கிறாள்.
கதவு மெலிதாய்த் தட்டப்பட்டது. 'இந்த நேரத்தில் யாரேனும் மாணவனாய்த்தானிருக்கும்.' அஞ்சு யாரையும் பார்க்கும் மனநிலையில் இல்லை.
"கமின்" என்று தீனமாய் சொல்லி முடிக்குமுன் கதவு திறக்க, நுழைந்தது வாசுவென உணர்ந்து கொள்ளுமுன்னே தயாராய் வைத்திருந்த வாசகம் வந்து விழுந்தது:
"அப்புறமா வாங்களேன்"
"இல்லை. இப்போ பேசியாகணும்" கதவைச் சாத்திவிட்டு அவள் எதிரில் அமர்ந்தான். தயக்கம், தடுமாற்றம் எல்லாம் மறைந்து அவனின் இயற்கையான சுபாவம் திரும்பிவிட்டாற்போலிருந்தது. குழந்தைக்குக் கூட முதலடி எடுக்கும் வரைதானே அச்சம்! அதன்பின் அதுவே இயல்பாகிவிடுகிறதே!
அவனைச் சற்றும் எதிர்பார்த்திராத அஞ்சுவுக்கு உடம்பின் இரத்தமெல்லாம் முகத்தில் குவிந்துவிட்டாற்போன்ற உணர்வு.
"என்னாச்சு?" அவன் அவள் கண்ணுக்குள் பார்த்துக் கேட்டபோது அவனின் தவிப்பையெல்லாம் அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அஞ்சுவுக்கு உடம்பு உதறியது. அவளின் நடுங்கிய கரங்களைப் பார்த்து, "விழுங்கிடமாட்டேன். எதுக்கு இத்தனை பயம்?" என்றான் மெலிதான புன்னகையோடு.
"இப்போ என்ன வேணும் உங்களுக்கு?" உதடுகள் நடுங்கக் கேட்டாள். கோபம், ஏமாற்றம், அச்சம் கலந்த கலவையாயிருந்தது அவளது குரல்.
"தெளிவு" அவன் ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான்.
அஞ்சனா விரல்களைப் பிரித்தும் கோத்தும் தன் பதட்டத்தைத் தணித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள்.
"உனக்கது வேண்டாமா?" சுவாதீனமாய் ஒருமையில் இறங்கினான்.
வேண்டும்தான்... எப்படித் தெளிவது என்று தெரியாமல்தானே அவள் சேறு போல கலங்கிக் கிடக்கிறாள்!
ஆமென்று தலையசைத்தாள்.
"ஒருவேளை ரொம்ப அர்த்தம் பண்ணிக்கறோமோ, அஞ்சு?" என்றான் வாசு சிநேகத்துடன்.
அவன் அஞ்சுவென அவளை உரிமையாய், சகஜமாய் அழைத்தது அவளுக்குள் ஒரு சிலிர்ப்பை ஓட்டிற்று. ஆனால் அவன் கேட்ட கேள்வி புரிந்து பட்டிருக்கவில்லை.
அவள் கேள்வியுடன் அவனை நோக்கியதும், "எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு..." என்று ஏதோ சொல்ல வந்தவன் நிறுத்தி, "பிடிச்சிருக்குதானே?" என்றான் கொஞ்சம் சந்தேகத்துடன்.
அஞ்சனா பதில் சொல்லாமல் தலை கவிழ்ந்து கொண்டாள். 'இவனைப் போல இப்படிச் சுதந்திரமாய்ச் சொல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!'
"ஏனிந்த கிறுக்குத்தனம்னுதான் புரியலை" தலையில் கைவைத்தபடி விசனத்தோடு சொன்னாள் அஞ்சு. இப்போது இறுக்கம் தளர்ந்து பேச முடிந்தது.
"எது கிறுக்குத்தனம்?" அவனது கேள்விக்கு நெற்றி சுருக்கிய அஞ்சனா, "பின்னே இது கிறுக்குத்தனமில்லையா?" என்றாள் அவர்களிருவரையும் விரலால் சுட்டி.
வாசு உடனே பதில் சொல்லாமல் அவளைக் கூர்மையாய்ப் பார்த்தான். அஞ்சனா சட்டென்று பார்வையைத் தழைத்துக் கொண்டாள். 'இந்தப் பார்வை... இது... இதுதானே அவளை இம்சிக்கிறது!'
அவள் வார்த்தைகளால் சொல்லாததை அவள் உடல் மொழி காட்டிக் கொடுத்துவிட, அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், "ஒரு குழந்தையை உனக்குப் பிடிச்சிருந்ததுன்னா இப்படித்தான் சங்கடப்படுவியா, அஞ்சு?" என்றான் மென்மையான குரலில்.
அஞ்சனா உள்ளங்கையில் முகத்தைத் தாங்கிப் பெருமூச்சு விட்டாள்.
"குழந்தையும் நீங்களும் ஒண்ணா?"
"ஏன், என்ன வித்தியாசம்?"
வாசுவின் தத்துவார்த்தமான கேள்விக்கு அவளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.
"ஒரு குழந்தையைப் பார்க்கும் போது, ஒரு அருவியைப் பார்க்கும் போது, ஒரு பறவையைப் பார்க்கும் போது வர்ற பரவசம் தப்பில்லை, ஆனா அதே ஆண்டவன் படைச்ச என்னைப் பார்க்கும்போது சந்தோஷமா இருந்தா தப்பா? அதெப்படி?"
'ராமா! இவன் கனவுலகத்தில் வசிப்பவன்' என்று எண்ணிக் கொண்டாள்.
"உலகம் அப்படிப் பார்க்காதில்லையா?"
"உலகத்தை விட்டுத் தள்ளு. சொல்லு உனக்கு ஏன் இது மட்டும் வித்தியாசமாப் படணும்?"
அஞ்சனா நகம் கடித்தாள்.
"நான் ஒரு ஆண், நீ ஒரு பெண்கறதுன்னால அநியாயத்துக்கு செக்ஸ் சாயம் பூசிடறோமோ?"
அவன் அப்படிக் கேட்டதும் அஞ்சு தர்மசங்கடமாய் நெளிந்தாள்.
"சொல்லு... எங்கிட்டருந்து என்ன வேணும் உனக்கு?" என்றான் சுற்றி வளைக்காமல்.
(தொடரும்)
|
| | நிலா அவர்களின் இதர படைப்புகள்.
| தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|