இரகசியம் தெரிந்துகொள் தம்பி! (2)

மனோசக்தி

எப்படி மின்சாரத்தைப் பற்றிப் படித்து மின்சார விசிறியும், மின்சார ரெயிலும் ஓட்டுகிறோமோ, அதைப்போல மனதைக் கட்டுப்படுத்தும் மார்க்கங்கள் கற்றுக்கொண்டோமானால், நம் மனோசக்தியின் மூலம் நாம் விரும்பும் பல்வேறு காரியங்களை சாதிக்கலாம்.

நமது நாட்டில் பலர் ஏழைகளாக இருப்பதற்கும், சிலர் சுகமாக எல்லா வசதிகளுடன் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.

அந்தப் படிப்பைப் பெற்றவர்கள்கூட படிப்பிலே எது முக்கியம் என்று தெரிந்து கொள்வதில்லை. அந்த முக்கியமான விஷயம்தான் தியானம். இன்று அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களில் இது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஊருக்கு ஊர் தியானம் சொல்லிக் கொடுக்கும் சங்கங்கள் இருக்கின்றன.

ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாகவும் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்கள், ஆசைகள்தான் என்று மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேபோல அந்த ஆசைகளை எப்படி சீர்படுத்தி, வாய்க்கால் வெட்டி, பாத்தி கட்டி செலுத்துகிறோம் என்பது அதைவிட முக்கியம். இதைத்தான் மனதை ஒருமுகப்படுத்துதல் என்பார்கள்.

பூதக் கண்ணாடியைப் பார்த்திருப்பீர்கள். கீழே ஒரு தாளை வைத்து பூதக் கண்ணாடியை சூரியனுக்கு எதிராகப் பிடித்தால், சூரியக் கதிர்கள் ஒருமுகப்பட்டு தாள் எரியத் தொடங்குகிறது. பூதக் கண்ணாடி சூரிய சக்தியை ஒருமுகப்படுத்துகிறது. ஒருமுகப்படுத்தும்போது சக்தி அதிகமாகிறது. வலிமை, எரிக்கும் சக்தி அதிகமாகிறது.

இப்படி நம் மனசக்தியை ஒருமுகப்படுத்தும் மார்க்கங்களைத்தான் ‘ஜெபம்’ என்றும் ‘தியானம்’ என்றும் சொல்கிறோம். உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை ‘ஜெபம்’ என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை ‘தியானம்’ என்றும் சொல்கிறோம். யோகிகள் மனதை ஒருமுகப்படுத்த சில மந்திரங்களை இரகசியமாகச் சொல்லிக் கொடுப்பார்கள். எந்த எண்ணமும் மனதிற்குள் இரகசியமாக வைக்க வைக்க, அதற்கு வலிமை அதிகமாகிறது. இதுதான் இரகசியமாகச் சொல்வதன் காரணம்.

மந்திரம்

மந்திரம் என்று எதைச் சொல்கிறார்கள்? "ஓம் நமசிவாய" என்று சைவர்கள் சொல்வார்கள். "ஓம் நமோ நாராயணா" என்று வைணவர்கள் சொல்வார்கள். "மணி பத்மே ஹம்" என்று புத்த மதத்தினர் சொல்வார்கள்.

"ஓம்" என்ற வார்த்தை மந்திரங்களிலே உயிர் போன்றது. ‘ஓம்’ என்ற நாதம் இந்தப் பிரபஞ்சம் எழுப்புகின்ற உயிர் ஒலி. அதை நாம் சொல்லும்போது அந்தப் பிரபஞ்ச மூலத்துடன் நம்மை ஐக்கியப்படுத்துகிறது. வானொலிப் பெட்டியில் திருச்சியைத் திருப்ப ஒரு குறிப்பிட்ட ஒலி அலையில் நாம் முள்ளை வைத்தோமானால் தான் திருச்சி நிகழ்ச்சியை நாம் கேட்க முடியும். அதேபோல மூலத்துடன் ஐக்கியமாக, அதனுடன் தொடர்புகொள்ள இந்த ‘ஓம்’ என்ற மந்திர ஒலியை எழுப்பினால்தான் முடியும்.

‘ஓம்’ அத்தகைய வலிமை வாய்ந்ததா, உண்மைதானா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கத் தேவையில்லை. இன்று உலகில் சிறந்த ஹார்வர்டு பல்கலைக் கழக பேராசிரியர்கள், அறிஞர்கள் எல்லாருமே இதை அறிவியல் முறையில் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இன்று நம் வேலை, அதைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வதுதான். ‘நமசிவாய’ என்று சைவர்கள் சொல்லும் மந்திரம் மனதை அமைதிப்படுத்துகிறது. "சிவபெருமானே, உன்னை வணங்குகிறேன். எனக்கு வழிகாட்டு" என்று பொருள்படும் வாசகம் அது.

ஆழ்மனம்

திரும்பத் திரும்பச் சொல்வதுதான் மந்திர சக்தியை ஏற்படுத்துகிறது. எதைத் திரும்பச் சொல்கிறோமோ அதன் பொருள் நம் ஆழ்மனதில் பதிந்து நமக்கு எப்போதும் மந்திர சக்தி உதவத் தயாராயிருக்கிறது.

"வழிகாட்டு" என்று முறையிட்டோமானால் நமக்கு வழிகாட்டும். அதனால்தான் ஏசுபிரான் –

"கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும்" என்றார்.

திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் விஷயங்கள் ஆழ்மனதிற்குப் போகின்றன. ஆழ்மனதில் போடப்பட்ட விஷயங்களை ஆழ்மனம் நிறைவேற்றி வைக்கிறது. இதுதான் உண்மை.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரான்சு நாட்டு மருத்துவர், "நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும் முன்னைவிட ஆரோக்கியமானவனாக இருக்கிறேன்" என்று நோயாளிகள் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்ததன் மூலம் அவர்களது நோயைக் குணப்படுத்தினார். இது இன்னும் "நமக்கு நாம் சொல்லிக் கொள்ளுதல்" என்ற தத்துவத்தின் கீழ் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
இப்படியாக மனதை ஒருமுகப்படுத்தும் பழக்கந்தான், நாளைக்கு நாம் ஒரு வேலையைச் செய்யும்போது மனதை அந்த விஷயத்தில் ஒருமுகப்படுத்துவது எளிதாகிறது. இதனால் முயற்சிகள் வெற்றியடைகின்றன.

ஜெபம், தியானம் மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும், நம் ஆசைகளை, இலட்சியங்களை, ஆழ்மனதிற்கு அனுப்பி வைக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறோம்.

சுயகட்டுப்பாட்டின் முக்கியமான பாடம் இதுதான். இதை விடாது நீங்கள் பயிற்சி செய்து பார்த்தீர்களானால், அதி ஆச்சரியமான நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்வில் நேர்வதைப் பார்ப்பீர்கள்; வெற்றி உங்கள் கைக்குள் வந்து சேரும். இதுவே இத்தனை நாள் அதிகம் பேருக்கு சொல்லிக் கொடுக்கப்படாத இரகசியமாக இருந்தது!

About The Author

3 Comments

Comments are closed.