பாபா பதில்கள் – நாமமும் நாம சங்கீர்த்தனமும்

ஓர் உருவம் ஓர் நாமம் இல்லாதானுக்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ!- ஒரு பெயரும் இல்லாத, ஒரு உருவமும் இல்லாத கடவுளுக்கு நாம் ஆயிரம் திருநாமம் பாடி- சஹஸ்ர நாமம் பாடி கொண்டாடுகிறோம். ஏன் இவ்வாறு செய்கிறோம்? பகவானுக்கு இதனால் ஒரு லாபமும் இல்லை. ஏன்னா பகவான் தான் இந்த உலகத்தில் எல்லாமே. ஓசை, ஒலி எல்லாம் ஆனாய் நீயே! ஓசை, ஒலி, இந்த உலகத்தில் இருக்கிற எல்லாமே பகவான்தான். So, அவனுக்குத் தெரியாத ஓசையும், ஒலியும் இல்லை.

ஒரு புல்லாங்குழல் வெறும் மூங்கில் மரமாக இருக்கிற வரைக்கும் ஒன்றும் லாபம் இல்லை. ஆனால், அதன் வழியாக காற்று செல்கிறபோது சப்த ஸ்வரங்களும் அதிலிருந்து உற்பத்தி ஆகின்றன. அந்த மாதிரி ஒரு மனிதன் மரமாக இருக்கிறவரையில் அதனால் லாபம் இல்லை. அவனுக்குள் அந்த பகவான் சப்தமாகவும் புகுந்து வருகிறபோது அவன் பயனுள்ள வஸ்துவாக மாறுகிறான்.

ஏது அவன் ஊர்? ஏதவன் பேர்? அவனுக்கு ஊரும் இல்லை; அவனுக்குப் பேரும் இல்லை. அப்போ எதற்காக இதெல்லாம் சொல்கிறோம் என்றால், ஆழ்வார் அழகாகச் சொல்கிறார்- உன்னையே சிந்தை செய்து செய்து, உன் நெடு மாமுடி பாடி ஆடி, உன்னையே சிந்தை செய்து செய்து- உன்னைப் பற்றியே நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். உன் நெடுமாமுடி-அதாவது explain ஏ பண்ண முடியாது. அவ்வளவு கீர்த்தியான வார்த்தைகள். உன்னை சிந்தை செய்வதும், உன் நெடு மாமுடி பாடி ஆடுவதும் – நாடி நாடி நரசிங்கா என ஆடி ஆடி அகங்குளிருவது என்பதோ-அல்லது பாடினேன் ஆடினேன் பரவசமாக என்று கந்த சஷ்டி கவசத்தில் வருகிற நிலையோ எதற்காக என்றால், முன்னை தீவினைகள் முழு வேரறிந்தனம் யாம்- நான் என்னவெல்லாம் பாவம் செய்தேனோ, எத்தனை ஜன்மங்களில் செய்தேனோ, அதையெல்லாம் ஆணிவேரோடு நான் போக்கிக் கொள்வதற்கு இது அருமருந்தாக இருக்கிறது இந்த நாமம் என்பதும், நாம சங்கீர்த்தனம் என்பதும்.

முன்னை தீவினைகள் முழுவேரறிந்தனம்- முழுவேர்-அதுதான் ரொம்ப முக்கியம். சரி, நான் இப்போ ரொம்ப peaceful ஆக இருக்கிறதாலே இந்த பாட்டு எல்லாம் பாட முடிகிறது. இல்லைன்னா வாழ்க்கையிலே பல பிரச்சனைகள் இருக்கும், பலவிதமான tension இருக்கும்-அந்த நேரத்திலே கூப்பிட்டு, ‘பகவானைப் பற்றி பாடு’ன்னு சொன்னால் யாரும் பாடப் போவதில்லை. அப்போ பிரச்சனைகள் இல்லாத போதுதான் நமக்குப் பாடுவதற்கு எல்லாம் அவகாசம் கிடைக்கும். பிரச்சனைகள் இருக்கிற போது நம்மாலே பாட முடிவதில்லை.

ஒரு யானை அதனுடைய காலை முதலை பிடித்தபோது ‘ஆதி மூலமே’ என்று அரற்றுகிற, அழுகிற வித்தையை கற்று வைத்திருந்தது. அதனாலே பகவான் அந்த கஜேந்திரன் என்ற யானைக்கு மோட்சம் கொடுத்துவிட்டார். அந்த யானைக்கு ஆதிமூலமே என்று அலறத் தெரிந்திருந்தது.

நாம் எப்படி இருக்கிறோம் என்றால் உல்டாவாக இருக்கிறோம். கஷ்டம் இல்லாதபோது கடவுளை ரொம்ப கும்பிடுகிறோம். கஷ்டம் வருகிறபோது ஒரு சலிப்பு வந்து, விரக்தியோடு கடவுளை கும்பிடுவதை விட்டுவிடுகிறோம். இதுதான் நம்முடைய பிராப்ளம்.

About The Author