கண்ணாடிக்கு முன்னால் நின்று தலைவாரிக் கொண்டிருந்த மகன் ரூபனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி. இன்னும் இரண்டு தினங்களில் அவனுக்கு பதினைந்தாவது பிறந்த நாள். அமைதியான முகமும், அதற்கேற்றாற்போல சுருண்டு திரண்டிருந்த அழகிய கருங்கூந்தலும் அவள் மகனின் மீது அவளுக்கிருந்த பெருமையை அதிகரித்தன.
" ரூபன், சீக்கிரமே வந்து பிரெக்பாஸ்ட் சாப்பிட உட்காரடா, ஸ்கூலுக்கு நேரமாச்சு " என்று அவனைக் கனிவாக அழைத்தாள்.
" இதோ வந்தடறேம்மா, ஹோம்வார்க் எடுத்து வைச்சுக்க மறந்து போயிட்டேன் " என்றவாறே தனது அறையிலிருந்த மேசையை நோக்கி ஓடினான் ரூபன்.
பிரேக்பாஸ்ட் டேபிளில் உட்கார்ந்த ரூபனைப் பார்த்த மாலதி அவனது நெற்றியில் வந்து விழுந்த அந்தச் சுருள் முடியைக் கனிவாக ஒதுக்கி விட்டாள்.
"ஸ் ...ஸ்" என்று சப்புக் கொட்டிய ரூபனை பார்த்துப் பதைத்தவளாக,
"என்ன ராஜா, என்ன பண்ணுது? " என்ற மாலதியைப் பார்த்துப் புன்னகைத்த ரூபன்,
" பயப்பிடாதீங்க அம்மா, நாக்கைக் கடிச்சுட்டேன் " என்றான் ரூபன்.
ரூபனை ஸ்கூலில் இறக்கி விட்டுவந்து வீட்டின் முன்னே காரைப் பார்க் பண்ணிய மாலதி, வீட்டினுள் நுழைந்து கதிரையில் உட்கார்ந்து பெருமூச்சு விட்டாள். அப்போது டெலிபோன் மணி அடித்தது. போனின் மறுமுனையில் அவளது கணவன் மோகன், ‘ரூபன் ஸ்கூலுக்குப் போய்விட்டானா? என்று விசாரித்தான்.
போனை வைத்து விட்டு மறுபடியும் கதிரையில் சாய்ந்து கண்களை மூடினாள் மாலதி. அவள் மனதில் ரூபனின் முகம் நிழலாடியது. துறுதுறுத்த கண்கள், புன்னகை தவழும் சாந்தமான முகம். ஆமாம் இந்த பூப்போன்ற சின்னஞ் சிறிய உள்ளத்தின் வாழ்வில் எத்தனை பெரிய முள்ளை வைத்து விட்டான், ஆண்டவன்.
அது நடந்து ஒரு மூன்று வருடங்கள் இருக்கும். அருகிலிருக்கும் பார்க்கில் விளையாடுவதற்காக நண்பர்களுடன் போயிருந்த ரூபன் மணி ஆறாகியும் வீடு திரும்பாததால் சிறிது சஞ்சலமடைந்தவளாக பதைபதைத்துக் கொண்டிருந்தாள் மாலதி.
அப்போதுதான் பேரிடி விழும் செய்தியோடு ஓடி வந்தான் ரூபனின் நண்பர்களில் ஒருவனான மார்க்! பார்க்கில் பந்தாடி முடித்து விட்டு வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும்போது, காரில் அடிபட்டு ஹாஸ்பிடலுக்கு ஆம்புலன்ஸில் ரூபனை எடுத்துப் போயிருப்பதாகக் கூறினான்.
"ஜயோ! ஆண்டவனே " என்று கத்தியவள், பலத்த அழுகுரலினிடையே கணவனுக்கு தொலைபேசியில் செய்தியைக் கூறிவிட்டு, உடையைக் கூட மாற்றாமல் ஹாஸ்பிடலுக்கு ஓடினாள்.
தலையில் அடிப்பட்டு இரத்தம் அதிகமாக இழந்திருந்த ரூபனுக்கு இரத்தம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.
ஒரு வாரத்திற்குப் பின்னர் வீடு திரும்பிய ரூபன் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பி ஓடியாடத் தொடங்கி விட்டான். அந்தக் காட்சியைப் பார்த்த பின்னர்தான் மாலதிக்கும், மோகனுக்கும் மறுபடியும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பே ஏற்பட்டது.
ரூபனும் ஒரு மாதிரிச் சிறுவனாக வளர்ந்து வந்தான். அவன் படிப்பில் மிகச்சுட்டியாக அனைத்துப் பரீட்சைகளிலும் தேர்வுற்று மிகவும் சிறந்த பாடசாலைக்கு அனுமதி பெற்றான்.
வீட்டில் இருந்து அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த மாலதிக்கு, கணவன் மோகனிடம் இருந்து போன் கால் வந்தது.
" நம்ப பாமிலி டாக்டர்கிட்ட இருந்து , அவசரமாப் பாக்க வேணும் என போன் கால் வந்தது " என்றான்.
சாயந்தரம் அவர்கள் டாக்டரிடம் போனபோது கிடைத்த அடுத்த இடி அவர்கள் வாழ்வையே சிதைத்தது. டாக்டர் கொடுத்த கடித்தைப் படித்த மோகனுக்கு நம்பவே முடியவில்லை. ஆமாம், ரூபன் காரில் அடிப்பட்டு ஹாஸ்பிடலில் இருந்தபோது ஏற்றப்பட்ட இரத்தம் மாசுபட்டதாம். கவனக்குறைவால் ஹெச்.ஐ.வி. எனப்படும் எயிட்ஸ் கிருமி கலந்திருந்த இரத்தம் ரூபனுக்கு ஏற்றப்பட்டு விட்டது என்றும், நடந்த தவறுதலுக்காக ஹாஸ்பிடல் கணிசமான தொகையை நஷ்ட ஈடாகக் கொடுப்பதாகவும் எழுதியிருந்தது.
பதைபதைத்துப் போனார்கள் இருவரும். டாக்டர் அவர்களுக்கு இதனால் ஏற்படக்கூடிய விளவுகளை விளக்கினார். அத்தோடு ரூபனின் உடலில் எச்.ஐ.வி. வைரஸ் இருக்கின்றதேயழிய, அவனுக்கு எயிட்ஸ் எனும் நோய் ஏற்படவில்லை என்றும் ஆறுதல் கூறினார்.
பலவிதமான மருந்து வகைகள் இந்நோயைக் குணப்படுத்துவதற்காக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன என்றும், ரூபன் காலத்தில் இதற்கான நிவாரண மருந்து கூட கண்டுபிடிக்கப்பட்டு விடலாம் என்றும் கூறினார்.
என்னதான் ஆறுதல் கூறினாலும் அவர்கள் மனதை ஆற்ற முடியவில்லை. மாலதி பித்துப் பிடித்தவள் போலானாள். மோகன் கொஞ்சம் துணிச்சலாக அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை எதிர்நோக்கினான்.
"ஏய், நம்ப மகன் இன்னும் எத்தனை நாளைக்கு நம்பகூட இருப்பானோ தெரியாது, அவன் இருக்கும் காலம் வரையாவது, சந்தோஷமாக இருக்க வேண்டாமா? நீ இப்பிடி பைத்தியம் பிடித்தவளைப் போல் இருந்தால், அவன் தாங்குவானா?" எனக் கேட்டதும்தான் தன்னைக் கொஞ்சம் தைரியமாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைத்தாள் மாலதி.
டாக்டரின் ஆலோசனையின் பேரில் ஒரு நாள் ரூபனுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி விட்டார்கள். அது மட்டுமின்றி அவன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிலையையும் கூறிவிட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்ததை விட இலகுவாக எடுத்துக்கொண்டான் ரூபன்.
தன் உடலில் இந்த நிவாரணமற்ற வைரஸ், அதுவும் தன்னை விரைவில் அழித்து விடக்கூடிய வல்லமை பொருந்திய வைரஸ் இருக்கின்றது என்பதை விட, தன்மீது உயிரையே வைத்திருக்கின்ற தாய் வேதனையின் உச்சத்தில் வாழ்கின்றாளே என்பதுதான் ரூபனை வாட்டியது.
கொஞ்சம், கொஞ்சமாக அந்தப் பாசதீபங்கள் மூன்றும் மங்கலாக என்றாலும் எரியத் தொடங்கி விட்டன. ரூபன், இந்த மூன்று வருட காலத்தில் அதிகமாகவே அறிவில் முதிர்ச்சியடைந்து விட்டான் என்றே மாலதிக்குத் தோன்றியது. தன்னுடைய நோயின் காரணமாகவோ என்னவோ அதிகமாக வாசிக்கத் தொடங்கி விட்டான்.
கடவுள் கிருபையால் இந்த வைரஸின் தாக்கம் அவனுக்கு வேறு ஒரு மாறுதலையும் ஏற்படுத்தவில்லை.
இந்த நினைவுகளில் விடுபட்டு எழுந்த மாலதி, மளமளவென்று காரியங்களை ஆற்றத் தொடங்கினாள். வாஷிங் மெஷினில் உடைகளைப் போட்டு அதை இயக்கி விட்டு சமையலறையில் பாத்திரங்களைக் கழுவி அடுக்கத் தொடங்கினாள்.
மணி மூன்றாகியது. இன்னும் ஒரு அரைமணி நேரத்தில் ரூபன் ஸ்கூலில் இருந்து வந்து விடுவான். ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டு வரும் மாலதி சாயந்தரத்தில் ரூபனை நண்பர்களுடன் நடந்து வர விட்டுவிடுவாள், அதுவே அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்னும் காரணத்தினால்.
காலிங் பெல் அடிக்கவும் கதவைத் திறந்த மாலதி, வாசலில் ரத்தம் தோய்ந்த முகத்துடன் நின்ற ரூபனைப் பார்த்ததும்,
"ஜயோ" என்று கத்தினாள்.
" அம்மா, ஒண்ணும் இல்லேம்மா, கத்தாதீங்க " என்றவாறு உள்ளே வந்தான் ரூபன்.
கதிரையில் அமர்ந்த ரூபனின் முகத்தை ஈரத்துணியால் ஒற்றியவாறே என்ன நடந்தது என்று கேட்டாள் மாலதி. பாடசாலை முடிந்ததும், புட்பால் விளையாடும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவனுடன் ஒரே வகுப்பில் படிக்கும் கண்ணன் என்னும் மாணவனுக்கும் இவனுக்கும் கைகலப்பு ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட காயங்கள் என்று விளக்கினான் ரூபன்.
மோகன் மாலை வீடு திரும்பியதும் நடந்ததைக் கேள்வியுற்று பதைபதைத்தான், இரவுச் சாப்பாடு முடிந்ததும் மூவரும் ஹாலில் உட்கார்ந்திருந்த போது,
"ரூபன், அந்தப் பையனுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டதா?" என்றான்
"ஆமா, நான் என்ன சும்மா விட்டிடுவேனா நானும் நல்லாப் போட்டேன், அவனுக்கும் நெத்திலேருந்து ரத்தம் வந்திச்சு" என்றான்
"மாலதி, ரூபனோட ரத்தம், கண்ணனோட ரத்தத்தோட மிக்சாயிருக்கக் கூடிய சான்ஸ் இருக்கு, ரூபனோட நிலையை அவங்களுக்குச் சொல்ல வேண்டாமா?" என்றான் மோகன் மிகவும் கவலையாக.
"இல்லீங்க தேவையில்லை, எனக்கு கண்ணனோட அம்மாவைப் பத்தித் தெரியும். அப்புறம் அவள் ஊரெல்லாம் பரப்பி விட்டிடுவாள் " என்றாள் மாலதி.
ரூபன் மட்டும் ஒன்றுமே பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
இரவு ரூமில் கட்டிலில் படுத்திருந்தார்கள். மோகனும், மாலதியும். அப்போது கதவைத் தட்டியவாறு உள்ளே நுழைந்தான் ரூபன்.
" அப்பா, அம்மா எனக்கு இப்போ பதினைந்து வயதாகின்றது. எனது நோயால் ஏற்படும் விளைவுகளையும், அதுக்கு மத்தவங்க காட்டுற ரியாக்சனையும் எதிர்கொள்ளக் கூடிய தைரியம் எனக்குண்டு. ஆனா என்னைப் போல கண்ணனுக்கும் இந்த நோய் வரக்கூடிய சந்தர்ப்பத்தைக் கண்டும் அதை அவங்களுக்குச் சொல்லாம விட்டு, என்னோட பெற்றோர் நீங்க மனம் வருந்திறது போல கண்ணனோட பெற்றோரும் மனம் வருந்திறதைப் பார்க்கிற மனத்தைரியம் எனக்கு இல்லை " என்றான்.
பேச முடியாமல் திகைத்தவாறு கண்ணனைப் பார்த்த மோகனின் கண்களும், மாலதியின் கண்களும் பெருமையால் பூத்தன.
அவர்களின் நெஞ்சங்கள் மட்டுமா பெருமையில் பூத்தன? இல்லை அந்த பொய்யாமொழிப் புலவன் வள்ளுவனின் நினைவும் துள்ளிக் குதித்தது.
"பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற."
ஒருவன் எத்தனை பேறுகளை பெற்றிருந்தாலும் அறிய வேண்டியவைகளை அறிந்த நல்ல மக்களைப் பெறுவதைப் போல சிறந்தது வேறெதுவுமில்லை.
*****