<<<<சென்ற
வாரம்
அவினாஷ் பூஜாவை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தான்.
கமலா பூஜாவின் தாயாரை விமான நிலையத்தில் அழைக்கப்
போயிருப்பதால் இந்த வேண்டாத வேலை இவன் தலையில்
விழுந்திருக்கிறது. பூஜாவிற்கு மருத்துவன் என்ற முறையில்
அத்தனை செய்தவன் கணவன் என்ற பொறுப்பு ஏற்கும் போது மனம்
முழுவதும் வெறுப்புத்தான் மண்டிக் கிடந்தது. அவள் தன்னை
வார்த்தைகளாலும் செயல்களாலும் காயப்படுத்தியதை மறக்க
முடியவில்லைதான்
அது போதாதென்று பூஜாவின் அருகாமை அவனை எப்போதும் போல
என்னன்னவோ செய்தது. ஸ்டியரிங்கை இறுக்கிப் பிடித்திருந்தன
அவன் கைகள். எங்கே தன்னை அறியாமல் அவை பூஜாவின் கூந்தலைத்
தடவி விடுமோ என்றிருந்தது அவனுக்கு. இப்போது
அப்படி எதும் முட்டாள்தனமாய் செய்யாமல் இருப்பது தான் நல்லது.
அன்று ஏதோ உணர்ச்சி வேகத்தில் அவளை முத்தமிட்டு விட்டானே
தவிர அவன் மனம் இன்னும் உலைக்களமாய் உள்ளுக்குள் கொதித்துக்
கொண்டு தான் இருந்தது.
பூஜாவின் மேல் அவன் காட்டும் அன்பு அவனை ஏமாளியாகத்தானேக்
காட்டியிருக்கிறது.
ஆசைக் கணவனாக நடந்து கொள்வதற்கு அவன்தான் தினம் தினம் தண்டனை
அனுபவிக்கிறான். தாடைகள் இறுக சாலையில் கவனம் செலுத்தினான்.
இரண்டு வாரமே மருத்துவமனையில் இருந்து விட்டு வந்திருந்தாலும்
வெளிப்புறத்தை ஆவலாகப் பார்த்தாள் பூஜா. அதுவும் இப்போது
அவினாஷிடம் மனம் விட்டுப் பேச வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி
அவள் மனம் துள்ளியது.
ட்ராவிஸ் என்ற தடையை கடவுளே அகற்றி விட்டார். . தோழி என்று
நினைத்திருந்த வாண்டாவும் அவளை தவறாக நினைத்துக் கொண்டு
இருக்கிறாள்.அவினாஷிடமாவது
மனம் விட்டுப் பேசி தன் மனதைத் திறந்து காட்ட இது
தான் நல்ல சந்தர்ப்பம்
திரும்பி அவனைப் பார்த்தாள்.
தசைகள் இறுக அவன் பல்லைக் கடித்துக் கொண்டு இருப்பதைப்
பார்த்ததும் அவன் கோபத்திலிருக்கிறான் என்று புரிந்தது.அவன்
கோபத்தைத் தன்னுடைய வார்த்தைகள் சமாதானப்படுத்தி விடும் என்ற
நம்பிக்கையோடுஆரம்பித்தாள் "அவினாஷ் நான் எப்போது நடப்பேன்?
சக்கர நாற்காலியில் உட்காரவே பிடிக்கவில்லை" என்று அவன்
தோளில் கைவைத்து அவன் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றாள்.
அவளின் கை அவினாஷின் முதுகை எரித்தது. தோளை அசைத்து அதைத்
தள்ளி விட்டான் . அவன் முகம் எந்த வித சலனமும்
இல்லாமலிருப்பதைப் பார்த்த பூஜா தன் முயற்சியைத் தொடர்ந்தாள்
"நீ என்னைக் காப்பாற்றியதற்கு நான் நன்றியே சொல்லவில்லையே
என்று என் மேல்
கோபமா? உனக்கும் எனக்கும் நடுவில் நன்றிக்கெல்லாம் அவசியமா
என்ன? இல்லை தானே? அதனால் தான் நான் சொல்லவில்லை.
அதற்கெல்லாம் கோபித்துக் கொள்கிறாயே? இப்போதே நன்றி
சொல்கிறேன். நன்றி நன்றி ஆயிரமாயிரம் நன்றி என்னை
காப்பாற்றியதற்கு மிக்க நன்றி" என்று நாடக பாணியில் நன்றி
சொல்லி சிரித்தாள். ........
"என்ன அவினாஷ் என்னுடன் பேச பிடிக்கவில்லையா?நான்
திருந்திவிட்டேன் என்று
புரியவில்லையா? நாம் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டும்
என்பது விதி.அதனால்தான் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து
நான் மீண்டும் பிழைத்த வந்திருக்கிறேன். அதுவும்
நீயே எனக்கு சிகிச்சை செய்து இருக்கிறாய்.
நினைத்தாலே பரவசமாய் இருக்கிறது தெரியுமா? உன்னைப் பற்றி
மருத்துவப் பணியாளர்கள் எப்படிப் பேசிக் கொண்டார்கள் தெரியுமா?
உன் மனைவி என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு அவ்வளவு
பெருமையாக இருந்தது" அவினாஷைப் பேச வைத்து விடும் முயற்சியில்
பூஜா பேசிக் கோண்டே போக அவினாஷுக்கு எரிச்சல்தான் வந்தது.
இந்த பூஜா என்ன இப்படி விளையாட்டுத்தனமாகவே இருக்கிறாள்?
எல்லாமே இவளுக்கு விளையாட்டுத்தானா? இல்லை அப்படி நடிக்கிறாளா?
பட்டென்று ஏதாவது அவளுக்கு வலிக்கும்படி சொல்ல வேண்டுமென்று
நாக்குத் துடித்தது. பல்லைக் கடித்துத் தன்னைக்
கட்டுப்படுத்திக் கொண்டான். இவனின் உணர்ச்சிகளிடம் விளையாடிப்
பார்க்கிறாளே இவனைக் கோபப்படுத்தாமல் விடமாட்டாளா?என்று
உள்ளுக்குள் எண்ணியவன் "உங்கள் அம்மா வந்து இருக்கிறார்கள்.
எமர்ஜென்ஸி அடிப்படையில் அவர்களுக்கு விசா கிடைத்திருக்கிறது
என்று நினைக்கிறேன்" என்று பேச்சை மாற்றினான்.
"அப்பாடா வாயைத் திறந்து விட்டாயா? அம்மா வந்தது
இருக்கட்டும். நம் இருவருக்கும் இடையில் பேசுவதற்கு
எவ்வளவு இருக்கிறது? இத்தனை நாள் நடந்ததை எல்லாம்
மறந்து விடுவோம். இனி ஒரு நல்ல வாழ்க்கையை ஆரம்பிப்போம்,
அவினாஷ். உனக்கு என்மேல் அளவு கடந்த காதல் என்று
எனக்குத் தெரியும். அதனால்தான் என்னை நீ காப்பாற்றியிருக்கிறாய்.
இப்போது நீ கோபமாக நடித்தாலும் நான் நம்ப மாட்டேன்.
அன்று மருத்துவ மனையில் எனக்கு நீ முத்தமிட்டபோதே
உன்னை நான் புரிந்து கொண்டேன். என் மனதையும் நான்
புரிந்து கொண்டேன். இனி நாம் இனிதே வாழலாம்" என்றவள்
மந்தகாசப்
புன்னகையுடன் தொடர்ந்தாள்.
"நினைவிருக்கிறதா அன்று பலூனில் வானத்தில்
ஏற்றிச் சென்றாயே அது போல
இன்னும் ஒரு முறை உன்னுடன் செல்ல வேண்டும். உன்
தோளில் சாய்ந்து கொண்டு
அந்த பரந்த வானத்தைத் தொட்டு ரசிக்க வேண்டும் என்று
ஆசையாய் இருக்கிறது"
என்று தன் கனவுகளை கணவனிடம் விழி விரிய விவரித்தாள்
பூஜா.
வீடு வந்து விட்டதை அவள் கவனிக்கவில்லை.
அவள் சொன்ன நாளை அவினாஷால் மறக்க முடியுமா? அன்றுதானே
நெருப்பாய்
வார்த்தைகளைக் கொட்டி இதயம் வலிக்க இரத்தம் சிந்த
வைத்தாள். இன்று இவனும் வேண்டுமாம்? இவனுடன் மீண்டும்
வானத்தில் பறக்க வேண்டுமாம். நேற்று வரை அந்த ட்ராவிஸுடன்
சுற்றினாள். அவன் இல்லை என்று ஆனதும்....
அருவருப்புடன் தலையை அசைத்துக் கொண்டான்.
வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திய அவினாஷ் இதுவரை இழுத்துப்
பிடித்து
வைத்துதிருந்த கோபத்தை பெரிய மூச்செடுத்து வெளியேற்றினான்.
வண்டியின்
பின்னால் சென்று சக்கர நாற்காலியை வெளியே எடுத்தான்.
காரிலிருந்து அவனைத் திரும்பி பார்த்த பூஜா, வரட்டும்
வரட்டும் இப்போது சக்கர நாற்காலியில் உட்காரவைக்க அவளைத்
தொட்டுத் தூக்கத்தானே வேண்டும் என்று மனதுக்குள் கறுவியபடியே
உட்கார்ந்திருந்தாள். என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத்
தெரியும். ஒருவித எதிர்பார்ப்போடு காத்திருந்தாள்.
சக்கர நாற்காலியைத் தூக்கி வந்த அவினாஷ் ஒரு இயந்தரத்தனமாக
அவளைத் தூக்கி நாற்காலியில் உட்கார வைக்க முயல அவன்
கன்னத்தில் தன் இதழ் பதித்தாள் பூஜா.
அவளை நிதானமாக நாற்காலியில் உட்காரவைத்த அவினாஷ், மண்டியிட்டு
அவள் முன் உட்கார்ந்தவன் "உன் முத்ததை நான் திருப்பிக்
கொடுத்தால் நீ ஒரு வேசி என்று நான் ஒத்துக் கொள்ள வேண்டியதாய்
இருக்கும். நேற்று ட்ராவிஸ் இன்று நான். நாளை யாரோ என்று
இருப்பவள் நீ . ஒரு வேசி தேவைப்பட்டால் எங்கு செல்ல வேண்டும்
என்று எனக்குத் தெரியும். மனைவியே வேண்டாம் என்று இருக்கும்
என்னை வேசியைத் தேடிப் போக வைத்து விடாதே. இறந்து போன
ட்ராவிஸிற்காகவாவது உண்மையாக இரு" என்றுவிட்டு எழுந்தான்.
பேயறைந்தது போலானாள் பூஜா. அவினாஷிற்கு அவள் பதில் சொல்லும்
முன் "பூஜா" என்று அழைத்தபடி அவளை வந்து கட்டி அணைத்தார் அவள்
தாயார்.
(தொடரும்)