<<<<சென்ற வாரம்
Time is a test of trouble
But not a remedy.
-Emily dickinson
ஆர்த்தி அதிர்ச்சியிலிருந்து மீண்டவுடன் கேட்டாள். "என்ன
பாட்டி சொல்றீங்க?....இதையேன் இவ்வளவு நாள் சொல்லாமல்
வச்சிருந்தீங்க?"
பார்வதி குற்ற உணர்ச்சியுடன் தன் பார்வையைத்
தாழ்த்திக் கொண்டாள். "உன் தாத்தா உன் கிட்ட சொல்லவே
கூடாதுன்னு முதல்ல இருந்தே பிடிவாதமாய் இருக்கார்.
உனக்கு தான் உன் தாத்தாவோட குணம் தெரியுமே. உண்மையை
சொன்னா உனக்கு அதிர்ச்சியாகும்னு நினைச்சார். இன்னொரு
பக்கம் உன்னை இழந்துடுவோமோன்னு பயப்பட்டார்...."
"என்னை இழந்துடுவோம்னா?...."
"நீ உங்கப்பா கிட்ட போயிடுவாயோன்னு பயந்தார்..."
ஆர்த்தி திகைப்புடன் தன் பாட்டியைப் பார்த்தாள்.
பார்வதி தலை குனிந்தபடியே சொன்னாள். "உன் அம்மா
ஆனந்தி தான் உன் மூணாம் வயதில் இறந்தாலே ஒழிய உன்
அப்பா உயிரோட தான் இருக்கார்....."
ஆர்த்திக்கு தலை சுற்றியது. தன்னுடைய சிறு வயதிலேயே
பெற்றோர் இருவரும் ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும்
அதனால் தான் தன்னுடைய தாய்வழி தாத்தா பாட்டியுடன்
வாழ்ந்து வருவதாகவும் நம்பி வந்திருந்த அவளுக்கு
இந்தப் புதுத் தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தந்தன.
"எல்லாத்தையும் தெளிவாய் ஆரம்பத்தில் இருந்து
சொல்லுங்க பாட்டி"
பார்வதி தன் கணவன் வருவதற்கு முன் சொல்லி முடித்து
விட எண்ணி சுருக்கமாய் சொன்னாள். "உங்கப்பா பெரிய
பணக்காரர். ஊட்டியில் பெரிய எஸ்டேட்டும்,
கோயமுத்தூரில் பல கம்பெனிகளும், ஃபேக்டரிகளும்
அவங்களுக்கு இருக்கு. அப்ப நாங்களும் கோயமுத்தூர்ல
இருந்தோம். உன் அம்மாவும், அவரும் ஒரே காலேஜில்
படிச்சாங்க. காதலிச்சாங்க. கல்யாணம் செய்துகிட்டாங்க.
உன் அம்மா ஆரம்பத்தில் சந்தோஷமாய் தான் இருந்தாள்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த சந்தோஷம் வடிஞ்சு போனதை
நாங்க பார்த்தோம். என்னன்னு கேட்டதுக்கு அவள் பதிலே
சரியாய் சொல்லலை."
"உனக்கு மூணு வயசு இருக்கறப்ப ஊட்டி பக்கம் விடாம
பேய் மழை அடிச்சு பல இடங்கள்ல நிலச்சரிவு ஆயிடுச்சு.
உங்கம்மா ஆனந்தியும் அப்ப ஊட்டி எஸ்டேட் பங்களாவில்
இருந்ததால் நாங்க கவலையோட போன் செஞ்சு கேட்டோம்.
வீட்டாளுங்க யாரும் இருக்கலை. உங்கம்மாவைக்
காணோம்னும் தேடிகிட்டிருக்கிறதாகவும் ஒரு வேலைக்காரன்
தான் சொன்னான். நாங்க பதறிப் போய் அங்கே உடனே போனோம்.
ரெண்டு நாள் அங்கேயே இருந்தோம். அப்பவும் அவளை
தேடிகிட்டு தான் இருந்தாங்க. ரெண்டு நாள் கழிச்சு
அவங்க எஸ்டேட் பக்கத்தில் நிலச்சரிவு ஆகியிருந்த
இடத்தில் சிக்கி செத்திருந்ததாய் சொல்லி அவள் பிணத்தை
எடுத்துட்டு வந்தாங்க. எங்களை முகத்தைப் பார்க்கக்
கூட விடலை..... முகம் சிதிலமாயிடுச்சு, பார்த்தா
தாங்க மாட்டீங்கன்னு சொல்லி மூடி எடுத்துகிட்டு வந்த
பிணத்தை அவசர அவசரமாக அப்படியே எரிச்சுட்டாங்க.....
எங்களுக்கு சந்தேகம் வந்தாலும் அந்த சமயம் ஒண்ணும்
சொல்ல முடியலை.... அப்புறமாய் உனக்கு தொடர்ச்சியாய்
வந்த கனவு உங்கம்மா மரணம் பத்தி முதல்ல எங்களுக்கு
வந்த சந்தேகம் பொய்யில்லைன்னு நிரூபிச்சிடுச்சு...."
பார்வதி சொல்ல சொல்ல அழுதாள். அவள் கடந்த காலத்துக்கே
போய் விட்ட மாதிரி இருந்தது.
பின் தன்னை சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள். "அந்த
நாள் அந்த ஊட்டி பங்களாவில் உன் அம்மா கூட இருந்தது
நீயும் ஒரு வேலைக்காரியும் மட்டும் தான். அந்த
வேலைக்காரி என்ன ஆனான்னு யாருக்கும் தெரியலை. பிரமை
பிடிச்ச மாதிரி அங்கே அழக்கூட முடியாமல் நீ மட்டும்
நின்னுட்டுருந்தாய். உங்கம்மாவை எரிச்ச மறு நாளே
உன்னை கொஞ்ச நாள் வச்சிகிட்டிருந்து பிறகு
அனுப்பறோம்னு சொல்லி எடுத்துகிட்டு வந்த நாங்க பிறகு
அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கலை. "
பாட்டி சொன்னதை ஜீரணிக்க ஆர்த்திக்கு நிறைய நேரம்
தேவைப்பட்டது. ஏதோ இரவல் வாங்கிக் கொண்டு வந்த
புத்தகத்தைத் திருப்பித் தரவில்லை என்பது போல பார்வதி
சொன்னது அவளுக்கு திகைப்பை ஏற்படுத்தியது. திகைப்போடு
ஆர்த்தி கேட்டாள். "எங்கப்பா பிறகு என்னைத்
தேடிகிட்டு வரலையா?"
பாட்டி குற்ற உணர்வோடு சொன்னாள். "கோயமுத்தூரில்
உங்க தாத்தாவுக்கு ஒரு ஸ்கூல்ல வாத்தியார் வேலை
இருந்தது. உன்னை எடுத்துட்டு வந்த பிறகு அவர் நிறைய
யோசிச்சார். உன்னை அந்த கொலைகார குடும்பத்துக்கு
திருப்பி அனுப்ப அவருக்கு மனசு வரலை. வேலையை ராஜினாமா
செய்துட்டு, இருந்த வாடகை வீட்டையும் காலி செஞ்சுட்டு
யாருக்கும் சொல்லிக்காம அங்கிருந்து என்னையும்
உன்னையும் கூட்டிகிட்டு கிளம்பிட்டார். எங்க
போறதுன்னு முடிவு செய்ய முடியலை. மனசெல்லாம் ரணம்,
குழப்பம். அரவிந்தாஸ்ரமத்து அன்னை மேல் இருந்த
நம்பிக்கைல, இங்கே வழி கிடைக்கும்னு இந்தப்
பாண்டிச்சேரிக்கு வந்தோம். அவருக்கு டியூஷன்
ரூபத்தில் பிழைப்புக்கு வழி கிடைச்சது. பிறகு
லைப்ரரியில வேலையும் கிடைச்ச பிறகு
சுதாரிச்சுகிட்டோம். நாங்க இங்கே இருக்கிறோம்னு
உங்கப்பாவுக்குத் தெரிவிக்கலை. அவங்களுக்குத்
தெரியாமல் இங்கே நாம ஒளிஞ்சு வாழ்ந்திட்டிருக்கிறோம்...."
"என் மகள் இறந்ததுல எனக்கு துக்கம் இல்லாமல் இல்லை.
ஆனா உன்னை உங்கப்பாகிட்டே இருந்து பிரிச்சு
எடுத்துகிட்டு வந்ததில் எனக்கு ஒப்புதல் இல்லை. உன்
தாத்தா கிட்டே அப்பவே இதை சொன்னேன். அப்ப நான்
சொன்னதுக்கு அதுக்கு பதிலாய் விஷத்தை சாப்பாட்டுல
கலந்து கொடுக்கச் சொன்னார். இந்த மாதிரி பேசினா நான்
என்ன செய்ய முடியும் சொல்லு. உன் தாத்தாவுக்கு
உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுத்துட்டு, பிறகு அது
தான் சரின்னு சாதிக்கிறது எப்பவுமே இருக்கிற கெட்ட
பழக்கம். உன்னை எடுத்துகிட்டு வந்தது தான் உனக்கு
செஞ்ச நல்ல காரியம்கிறது அவர் எண்ணம். ஆனா உங்கப்பா
குடும்பம் போலீசு மூலம் எங்களைத் தேடிகிட்டு எப்ப
நம்ம வீட்டு வாசலில் நிற்குமோன்னு நான் ஆரம்பத்தில்
நிறையவே பயந்துகிட்டிருந்தேன்..."
பார்வதியின் கண்களில் லேசாய் நீ கோர்த்தது. "பணம்,
செல்வாக்குன்னு ராணி மாதிரி இருக்க வேண்டிய உன்னை
இந்த தீப்பெட்டி மாதிரி சின்னதாய் இருக்கிற மூணு ரூம்
வீட்டில் வச்சு வளர்த்தினதில் எனக்கு நிறையவே
வருத்தம் ஆர்த்தி. எமன் எப்ப கூப்பிடுவான்னு
தெரியாமல் காத்துகிட்டிருக்கிற இந்த சமயத்தில் கூட
நாங்க உன் கிட்ட உன் அப்பா பத்தி சொல்லாமல்
இருக்கிறது சரியில்லைன்னு தான் உன் கிட்டே இதை
சொன்னேன். எங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா உனக்கு
யாரிருக்காங்கன்னு நான் பயப்படறேன்...."
ஆர்த்திக்கு பாட்டி சொன்னதையெல்லாம் ஜீரணிக்க இன்னும்
கஷ்டமாகவே இருந்தது. எப்போதும் அர்த்தமில்லாமல் வரும்
கனவு என்று அவள் நினைத்திருந்த அந்தக் கனவில் வரும்
அந்தப் பெண்ணின் முகத்தை நினைவுக்குக் கொண்டு வர
முயற்சித்தாள். அந்த பெண்ணின் உருவமே மங்கலாகத்
தெளிவில்லாமல் இருந்ததால் தான் தினமும் பார்க்கும்
தாயின் புகைப்படத்திற்கும் அந்தப் பெண்ணிற்கும்
சம்பந்தம் இருக்கலாம் என்கிற சந்தேகம் கூட அவளுக்கு
இத்தனை நாள் வரவில்லை என்பது புரிந்தது.
எத்தனையோ கேள்விகள் ஒருசேர மனதில் எழுந்தாலும்
ஆர்த்தி ஒரு கேள்வியை முதலில் தேர்ந்தெடுத்தாள். "அம்மாவை
யார் கொன்னாங்க பாட்டி?"
(தொடரும்)