<<<<<சென்ற வாரம்
For all sad words of tongue and pen, The saddest are
these, 'It might have been'.
- John Greenleaf Whittier
அம்பலவாணனுக்குத் தாரா போன் செய்த விஷயத்தை அருணிடம் சொல்ல
மனம் துடித்தாலும் தாராவுக்குக் கொடுத்த வாக்கை மீற அவரால்
முடியவில்லை. அருண் அந்த அலுவலகத்திலேயே வேறொரு வேலையில்
மும்முரமாக மூழ்கிக் கிடக்க அவர் தாராவின் வரவுக்காகக்
காத்திருந்தார். தாரா வரும் போது சபாபதி இருப்பது ஈஸ்வரனுக்கு
நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சமானம் என்பதால் சற்று முன் தான்
அவர் சபாபதியை ஒரு வேலை சொல்லி வெளியே அனுப்பி இருந்தார்.
இண்டர்காம் ஒலித்தது. தாரா வந்திருப்பதை அவரது செகரட்டரி
தெரிவித்தாள். "அனுப்பும்மா" என்றார்.
அசப்பில் தாமிராவின் அச்சாக தாரா இருந்தாள். ஓரிரு நரைமுடிகள்
அங்கங்கே பளிச்சிட்டன. மகளிடம் இல்லாத ஒருவித கம்பீர அழகு
தாயிடம் இருந்தது. முகத்திலும், நடையிலும் ஒருவித மென்மை
பிரதானமாக இருந்தது. "நமஸ்காரம்" அவள் அவரைப் பார்த்துக் கை
கூப்பினாள். அம்பலவாணன் தன்னையும் அறியாமல் எழுந்து நின்றார்.
ஒரு மிக நல்ல பெண்மணி தன் முன்பு நிற்பதாக மனப்பூர்வமாக
உணர்ந்தார். "வணக்கம். உட்காருங்கம்மா"
தாரா அவர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அமர்ந்தவள்
அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். அறைச் சுவரில் தங்க
முலாம் தகட்டில் எழுதி இருந்த "சத்யமேவ ஜெயதே" மீது அவள்
பார்வை ஒரு கணம் தங்கியது. பின் அவரைப் பார்த்து அவள்
புன்னகைத்தாள். அம்பலவாணன் அவ்வளவு அழகான புன்னகையை இது வரை
பார்த்ததில்லை என நினைத்தார். நேரடியாக அடுத்தவர் மனதை
தொடர்பு கொள்ளக் கூடிய புன்னகை. மற்றவர்களை உடனே தனக்கு
ஆதரவாக ஆக்கிக் கொள்ளும் புன்னகை.....
"தாமிரா உங்களைப் பற்றியும் அருண் பற்றியும் உயர்வாய்
சொன்னாள்...."
"உயர்ந்தவங்க அடுத்தவங்களையும் அப்படியே பார்க்கிறாங்க..."
அம்பலவாணன் சொன்னார்.
அவரது வார்த்தைகளை மனதினுள் மெச்சியபடி மறுபடி புன்னகைத்தாள்.
"இல்லை. உங்களைப் பத்தி மத்தவங்களும் அதே தான் சொல்றாங்க.
இந்தக் காலத்திலும் இவ்வளவு நேர்மையாய் பத்திரிக்கை
தர்மத்துடன் நீங்க பத்திரிக்கை நடத்தறீங்க. அப்படிப்பட்ட
நீங்க ஒரு காலத்தில் மூன்று நாள் ஜெயிலில் இருந்தீங்கன்னு
ரெண்டு நாள் முன்னால் தான் கேள்விப்பட்டேன். எனக்கு ரெண்டு
நாளாய் சரியாய் தூக்கம் வரலை...." சொல்லச் சொல்ல அவள்
கண்களில் லேசாய் நீர்த்திரை போட்டது. குரல் கரகரத்தது.
இந்த வார்த்தைகளை அவளிடம் இருந்து சற்றும் எதிர்பார்த்திராத
அம்பலவாணன் திகைத்துப் போனார்.
அவள் தன்னிரண்டு கைகளையும் கூப்பினாள். "உங்களை மாதிரி ஒரு
நல்ல நேர்மையானவருக்கு ஒரு தப்பும் செய்யாம ஜெயில்ல இருந்த
அந்த மூன்று நாள்ல ஒவ்வொரு நிமிஷமும் எப்படி
இருந்திருக்கும்னு என்னால உணர முடியுது. அப்படி யாரால
ஆச்சுன்னு நீங்க பின்னால் தெரிஞ்சிருப்பீங்க. மன்னிச்சுடுங்க.
அந்த சமயத்தில் நான் கொஞ்சம் மனநிலை சரியில்லாம இருந்தேன்.
நான் மட்டும் நல்லபடியாய் இருந்திருந்தா நானே நேர்ல
வந்திருப்பேன். உங்க கிட்ட அது ஒரு நிஜக் கதை, சிலரோட
தனிப்பட்ட விஷயம், அதனால் தயவு செஞ்சு இதை விட்டுடுங்கன்னு
கெஞ்சிக் கேட்டிருப்பேன். நீங்களும் அதைப்
புரிஞ்சுகிட்டிருப்பீங்க..... ஆனா நடந்ததை மாத்த முடியாதப்ப
மன்னிப்பு கேட்கறதைத் தவிர எனக்கு வழி தெரியலை"
அவள் முகத்திலும் வார்த்தைகளிலும் தெரிந்த வலி அவர் மனதை
நெகிழ்த்தியது. அதே நேரத்தில் அவளுடைய சாதுரியத்தையும் அவரால்
கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அன்றே அது சிலரின்
தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என்று உங்களுக்குத் தெரிவித்து
இருந்தால் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று சொல்லும்
போது, அதே நிலை இன்றும் இருக்கிறது, புரிந்து கொள்ளுங்கள்
என்று சொல்லாமல் சொல்கிறது போல் இருந்தது.
அவர் சொன்னார். "இன்னொருத்தர் செஞ்சதுக்கு நீங்க என்ன செய்ய
முடியும்? நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை"
"அன்றைக்கு என் சார்பில் செய்யப்பட்டது தான் அது. அதனால் நான்
மன்னிப்பு கேட்கிறது தான் முறை.... உங்களை நான் ஒரு கேள்வி
கேட்கலாமா?"
"கேளுங்க"
"நீங்க ஒரு நேர்மையான மனிதர். உங்க பத்திரிக்கைக்கு 'உண்மை'ன்னு
பேர் வச்சிருக்கீங்க. உங்க ஆபிஸ் ரூமில் 'சத்யமேவ ஜெயதே'யை
பிரதானமாய் வச்சிருக்கீங்க. ஆனால் நீங்க எல்லா உண்மைகளையும்
வெளியே சொல்லியிருக்கீங்களா?"
"நான் உண்மையை மட்டும் சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்."
"என் கேள்வி அதல்ல சார். எல்லா உண்மைகளையும் வெளியே
சொல்லியிருக்கீங்களான்னு கேட்கிறேன். வெளியே விடுங்க. உங்க
மனைவி, குழந்தைகள் கிட்ட உங்களைப் பத்தின எல்லா உண்மைகளையும்
சொல்லியிருக்கீங்களா? சொல்லத் தயங்கின, தேவையில்லைன்னு
நினைச்சு சொல்லாமல் விட்ட உண்மைகள் எதுவும் இருக்காதா?"
அம்பலவாணன் அசந்து போனார். இந்தக் கேள்விக்கு இல்லை என்று
பதில் சொல்லக்கூடிய மனிதன் இது வரை இந்த உலகில்
வாழ்ந்திருக்கிறானா என்று யோசித்தார்.
அவர் மௌனமே பதிலாக அமைந்தது. அதை அவளும் அப்படியே எடுத்துக்
கொண்டு தொடர்ந்தாள். "இந்த நாவல் கதையும் சிலரோட அந்தரங்க
வாழ்க்கை சார். கற்பனையை விட அழகான ஒரு காதலை பக்கத்தில்
இருந்து பார்த்த சேதுபதிக்கு அதை எழுதாமல் இருக்க முடியலை.
ஆனால் இப்ப அந்தக் கதாபாத்திரங்கள் யார்னு வெளியே வர்றது
சிலருக்கு தர்மசங்கடத்தையும், சிலருக்கு துக்கத்தையும்
கொடுக்கும். சார், மத்தவங்களோட அந்தரங்க விஷயங்களை வெளியே
கொண்டு வர்றதை ரசிக்கிறீங்களா? இதை இத்தோட விட்டுடுங்களேன்,
ப்ளீஸ்"
அவள் கெஞ்சிக் கேட்ட விதம், அவள் முகத்தில் தெரிந்த துக்கம்
எல்லாம் சேர்ந்து அவர் மனதை என்னவோ செய்தது. உறுதியாக
சொன்னார். "நான் நடத்தறது மஞ்சள் பத்திரிக்கை அல்ல. நீங்க
இவ்வளவு தூரம் சொன்னதுக்கப்புறம் சிலரை கஷ்டப்படுத்தப் போகிற
தனிப்பட்டவர்களின் ரகசியங்களை நான் மேற்கொண்டு துருவப்போறதும்
இல்லை. என்னைப் பொருத்தவரை நான் உறுதியாய் இதை சொல்றேன்.
ஆனால் இதில் நான் மட்டும் இல்லை. அருணும் இருக்கிறான். இதை
தயவு செய்து அவன்கிட்டயும் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.
கண்டிப்பாய் அவனும் என் முடிவுக்கே வருவான். அவனும் நல்ல
நாகரிகமான பையன்....அவன் பக்கத்து ரூமில் தான் இருக்கான்.
கூப்பிடட்டுமா?"
அவனைக் கூப்பிடும் யோசனையே அவள் முகத்தில் பெரும் கலவரத்தை
ஏற்படுத்தியது. "ஐயோ, வேண்டாம்...." என்று மறுத்தாள். அவள்
முகத்தில் லேசாக வியர்வைத் துளிகள் பளிச்சிட்டன. பதட்டத்துடன்
தன் முகத்தை அவள் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்.
அம்பலவாணனுக்குத் தன்னுடைய பழைய சந்தேகம் ஊர்ஜிதம் ஆனது.
அருண் அவனுக்கே தெரியாமல் ஏதோ விதத்தில் இவர்களுடன்
சம்பந்தப்படுகிறான். அது எந்த விதத்தில்...?
(தொடரும்)