"என்னக்கா, ரெண்டு நாளா ஆளையே காணோம். ஊருக்குப் போயிருந்தீங்களா?" தண்ணீருடன் வந்த பாலு கேட்டான்.
"ப்ச்" என்றபடி தலையாட்டினேன், அவன் கொடுத்த தண்ணீரை அருந்திக் கொண்டே.
"வழக்கம் போல ஸ்ட்ராங்க் காபி தானேக்கா? வேற எதுனா வேணுமா?"
"டிபன் இன்னிக்கி இங்கதாண்டா! சொல்லிடு" என்றேன்.
மனமும் உடலும் சோர்ந்திருந்தது. மேனேஜருடன் இன்றைக்கும் தகராறு. என்னவோ அவனுக்குச் சேவை செய்யவே என் வீட்டில் பெற்றது போல.
பொதுவாகவே அவனுக்குத் தான் பெரிய ஆள் என்று எண்ணம். பெண்கள் வேலை செய்வதே பொறுக்காதவன். இதற்கு மேல், அவனுக்குக் கீழே வேலை செய்பவர்கள் என்றேனும் நல்ல பெயர் வாங்கிவிட்டால், அப்படியே கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும்.
போன வாரம் எங்கள் கிளைக்கு வந்திருந்த எம்.டி. ஏதோ சின்ன வேலையை ஒழுங்காக முடித்து விட்டேன் என்று பாராட்டி விட்டார். அதிலிருந்து ஏதோ இஞ்சி தின்ற குரங்கு போல் முகத்தை வைத்துக் கொண்டு என்ன செய்தாலும் குறை சொல்லிக் கொண்டு திரிகிறான்.
வழக்கமாகவே, சின்னச் சின்ன வேலையெல்லாம் அவன் எடுத்து முடித்து விடுவான். பெரிய, கடினமான வேலைகள் வரும்போது என் நினைவும் கூடவே வந்து விடும். நல்ல வேலை செய்வது விருப்பமான ஒன்றுதான். ஆனால், அந்த வேலை செய்து முடித்த பின், "தாங்க்ஸ் மீனா" என்று சொல்லிவிட்டு, அதை அவன் பெயரில் மேலிடத்திற்கு அனுப்பும்போது தான் எரிச்சலாக வரும். போன வாரம் அப்படிச் செய்ய முடியாமல் எங்கள் மேலாளர் அவனுக்கு முன்னாலேயே அமர்ந்திருந்தார். நான் தான் செய்தேன் என்ற போது மேனேஜரால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று. அதெல்லாம் சேர்த்து வைத்துத் தான் இந்த வாரம் காண்பிக்கிறான்.
ஏதோ எக்கேடாவது கெட்டுப் போகட்டும், நமக்குத் தேவை இந்தச் சம்பளப் பணம் தானே என்று இத்தனை நாள் பொறுத்துக் கொண்டு தான் இருந்தேன். இன்று கொஞ்சம் காட்டமாகப் பேசி விட்டான். அதிலும், உடல் நிலை சரியில்லாமல், இரண்டு நாள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து விட்டு அலுவலகம் செல்லவும், உடனே ஒருவன் திட்டினால் எப்படி இருக்கும்?
நான் போகாத நாளாகப் பார்த்து, தரக் கட்டுப்பாட்டு ஆய்வு வந்து விட்டதாம். இது வரை, தரமாவது, கட்டுப்பாடாவது, அது சம்பந்தப்பட்ட டாகுமென்டுகளாவது, எதுவும் தெரியாமல் இருந்த மேனேஜருக்கு இது ஒரு பெரிய கறுப்புப் புள்ளியாகி விட்டது. அது தான் அவனுக்கு ஒரே கோபம். பெண்கள் எல்லாரும் இப்படித் தானாம். வேலைக்கு முக்கியத்துவம் தரத் தெரியாதாம். அதிலும் எனக்குப் போன வாரம் எம்.டி.யே பாராட்டி விட்டார் என்று தலைக்கனமாம். என்னைப் போன்றவர்களை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் அவனுக்கு இருந்தாலும் அதற்கு அவன் இளகிய மனம் அனுமதிக்கவில்லையாம்.
இந்தக் கடைக்கு வந்து பாலு அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்வதையும், வரும் வாடிக்கையாளர் எல்லாரிடமும் நைச்சியமாகப் பேசுவதையும் பார்த்தாலே பாதிச் சோர்வு போய்விடும். அதனால் தான் இன்றைக்கு இங்கு வந்தேன்.
"என்னண்ணே, நீங்க வழக்கமா அழைச்சிட்டு வருவீங்களே அந்த அக்கா இன்னிக்கு வரலையா?" யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தவன் என்னைப் பார்த்துவிட்டு என்னை நோக்கி வந்தான்.
"மீனாக்கா, என்ன மொகமெல்லாம் வாடிக் கெடக்கு?"
"ஒண்ணுமில்லை பாலு, உடம்பு கொஞ்சம் சரியில்லை"
"என்னக்கா, பறவைக் காய்ச்சலா? அது பறவைக்குத் தானே வரணும்? நீங்கதான் சுத்த சைவமாச்சே"
லேசான புன்னகையுடன் சொன்னேன், "இல்லடா, எனக்குத் தான் காய்ச்சல்"
"அப்போ மீனாக் காய்ச்சலா?" என் முகம் இன்னும் மலர்ந்தது.
"என்னக்கா, உங்க முகத்துல சிரிப்பே இல்லை. ஏதோ பிரச்சனை, வீட்ல யாருக்காவது உடம்பு சரியில்லியா?"
"இல்லடா.."
"ஆபீஸ்ல உங்க மானேஜர் ஏதாவது சொல்லிட்டாரா?"
இல்லை என்று நான் தலை அசைத்தாலும், என் முகம் ஏதோ சொல்லி இருக்க வேண்டும்.
"அதானே பார்த்தேன், அதெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்கக்கா, என்ன பெரிய மானேஜர்? அவங்க திட்டறது எல்லாம் பெரிசா எடுத்துகிட்டா நாம எங்க தான் வேல பாக்க முடியும். இப்போ என்னையே எடுத்துக்குங்களேன். மாஸ்டர் என்னனென்னவோ சொல்லித் திட்டுவாரு. ஒரு நாளைக்காவது திட்டு வாங்காம இருந்ததில்லை. ஆனாலும் அப்படியே தொடைச்சுப் போட்டுட்டுப் போக வேண்டியது தான்."
சின்ன வயதிலிருந்தே பொறுத்துப் போக வேண்டும் என்று யாராவது சொன்னால் சட்டென்று கோபம் வந்து விடும் எனக்கு. இப்போதும் வந்தது. எனக்கிருந்த கோபத்துக்கு பாலுவை அப்படியே கடித்துக் குதறி இருப்பேன். அப்போது பார்த்து என் செல்பேசி அழைத்தது.
யார் என்று பார்த்தேன், என் அம்மா. இப்போதுள்ள மன நிலையில் அவரிடம் பேச முடியாது.
"அக்கா, போன் அடிக்குது."
"அடிக்கட்டும்" கொஞ்சம் கோபமாகவே சொன்னேன். அடித்து ஓய்ந்த பின் தவற விட்டது மூன்று அழைப்புகள் என்றது செல்பேசி.
"என்னக்கா, மூணு தடவைக கூப்பிட்டுட்டாங்க போலிருக்கு"
"மூணு நாளாக் கூப்பிடறாங்க. எடுத்தா ஜுரம்னு சொல்லணும். அதான்"
அடுத்த முறை அடிக்கத் தொடங்கியது. நானே எதிர்பாராத போது, என் செல்லை எடுத்துப் பேசத் தொடங்கினான் பாலு,
"அலோ! யாரு?"
"...."
"மீனாக்காவா? அவங்க நம்பர் தான்ங்கா இது. ஆனா அவங்க செல்லைக் கடைல விட்டுட்டுப் போய்ட்டாங்க."
எல்லாரும் இவனுக்கு அக்காவா? நானும் அக்கா, என் அம்மாவும் அக்கா. ஹ்ம்..
"...."
"ரெண்டு நாள் இருக்கும்"
"ம்ம். வந்தா சொல்றேன், இன்னிக்கோ நாளைக்கோ கடைக்கு வருவாங்க"
".."
"எம் பேரு பாலுக்கா. நிச்சயம் சொல்றேங்கா! கவலைப் படாதீங்க. நெறைய வேலை இருக்குன்னு சொன்னாங்க. அதான் உங்களுக்குப் பேசி இருக்க மாட்டாங்க."
அதற்கு மேல் எனக்குப் பொறுக்கவில்லை.
"போதுண்டா!" போனைப் பிடுங்கி அணைத்தேன்.
"அக்கா, ரொம்பக் கோபமா இருக்கீங்க. ஜூஸ் கொண்டு வரவா?"
"ஒண்ணும் வேண்டாம். இது வரைக்கும் நீ கொடுத்த உபதேசமே போதும். எவ்வளவு ஆச்சு?"
"இல்லக்கா. நீங்க கவலையா இருந்தீங்களேன்னுதான்.."
"போதுண்டா, நான் கிளம்பறேன். இதுல நூறு ரூபா இருக்கு. மிச்சம் இருந்தா வச்சிக்க. அடுத்த முறை சாப்பிடும் போது பாக்கலாம்" சொல்லிவிட்டுப் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.
அவன் அத்து மீறி என் செல்லை எடுத்ததனால் கோபமா? இல்லை, என் மானேஜருக்குப் பரிந்து பேசியதா? எது என்று எனக்குப் புரியவில்லை. கோபம் மட்டும் இருந்தது.
மீண்டும் நான் நாயர் கடைக்குப் போக ஒரு வாரம் ஆகி விட்டது. கடையில் பாலு இல்லை.
"சேட்டா, பாலு இல்லையா?" என்றேன். நாயரானாலும், அவருடைய பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் தமிழ்தான்.
"அவன் போயாச்சு" என்றார் அவர்.
"எங்கே? ஊருக்கா? " என் கண்களில் ஒளிர்ந்த கலக்கத்தைப் பார்த்ததும் கேட்டார்,
"ஏன், பணம் ஏதும் கொடுத்தோ?"
"ஆமாம்" என்றேன்.
கவனிக்காமல், "பக்கத்து சௌக்ல நோக்கியோ? அங்க தனிக் கடை உண்டு சாருக்கு இப்போ" என்றார்.
தனிக் கடையா?!! வியந்தபடி பக்கத்து நாற்சந்திக்கு நடந்தேன்.
"வாங்கக்கா!!!" என்றான் பாலு.
சின்ன டீக்கடை தான். இட்லி, தயிர்சாதம், புளி சாதம், தோசை என்று மெனு எழுதி வைத்திருந்தான். இரண்டு பேர் தாராளமாக அமரலாம். நான்கு பேர் கொஞ்சம் சுருக்கிக் குறுக்கி அமரலாம். "சொர்ணம் டீ ஸ்டால்" என்ற போர்டு, அவன் அம்மா பெயர் என்று நினைவு.
"என்னடா இதெல்லாம்? திடீர்னு?"
"காபி சொல்லவாக்கா?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே போய்க் காஃபி போட ஆரம்பித்தான். "நீங்க அன்னிக்குக் கோபிச்சிகிட்டு போய்ட்டீங்க இல்லைக்கா. அப்புறம் எனக்கு மனசே சரியில்லை. லீவு குடுங்க, வெளியில போய்ட்டு வந்துர்றேன்னு சொன்னேன். மாஸ்டர் முடியாதுன்னுட்டாரு. அது கூடப் பரவாயில்லை. எனக்கு எப்பவுமே விளையாட்டு நெனப்புத் தானாம். வேலை எதுவும் சரியா செய்ய மாட்டேங்கறேனாம். இன்னும் என்னென்னவோ சொன்னாரு. தெனைக்கும் சொல்றது தான். ஆனா, அன்னிக்கு ரொம்பக் கோபம் வந்துடுச்சு. உடனே போங்க நீங்களும் உங்க வேலையும்னு சொல்லி வேலையை விட்டுட்டு வந்துட்டேன்."
"அன்னிக்கு என்னவோ எனக்கு அறிவுரை சொன்ன? மானேஜர் சொன்னா கேக்கணும் அது இதுன்னு?"
"ஏங்கா, அன்னிக்கு நீங்க இருந்த மன நிலைல நான் என்ன சொன்னாலும் தப்பாத் தான் தெரிஞ்சிருக்கும். அதிலும், உங்களுக்கு அந்த சம்பளப் பணம் வேணும்னு எண்ணம் இருந்தது. என்ன செய்ய? அதுனால தான் அப்படி சொன்னேன். உங்களுக்கு என்ன வேணும்ங்கறதை நீங்க தானேக்கா முடிவு செய்யணும்?"
அவன் சொன்ன போது எனக்கு என்னவோ புரிந்தது போல் இருந்தது.
"ஏதுடா உனக்குத் தனியா கடை போடற அளவு பணம்?"
"நாயர் கொடுத்த சம்பளம் எல்லாம் எடுத்து வச்சிருந்தேன். அன்னிக்கு நீங்க இருந்தப்போ வந்தாங்களே திலக் அண்ணா, அவர் கொஞ்சம் பணம் கொடுத்தாரு. இந்த வீட்ல தானே ஒரு போர்ஷன்ல இருக்கேன். வீட்டுக்காரத் தாத்தா ஒண்ணும் ஆட்சேபணை பண்ணாம வீடு கொடுத்துட்டார். என்ன இன்னும் மாஸ்டர் மாதிரி டீ போட வரலை. பழகணும்."
"இந்தாங்க காப்பி" என்று கொடுத்தான். "இன்னும் உங்க மானேஜர் கஷ்டப் படுத்தறாரா?"
"ஆமாண்டா. பேசாம வேலையை விட்டுறலாமான்னு பாக்கறேன்.. "
"விட்டுட்டு?"
"தனிக் கம்பனி தான். பேசாம ஊருக்குப் போய்த் தனிக் கம்பனி ஆரம்பிக்கலாம். இன்னொருத்தருக்கு வேலை செய்யறத விட. உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் இந்தக் கம்பனில இந்த மானேஜருக்குக் கீழ குப்பை கொட்டறதுக்கு ஒரு டீக்கடை வச்சுப் பொழைக்கலாம்னு தோணிடுச்சு."
சொல்லும்போது என் மனதினுள் ஒரு நம்பிக்கையும் நிம்மதியும் படர்வதை உணர்ந்தேன்.
******