சரவணனுக்கு
நினைவு திரும்பியபோது தொடைவரை காலை வெட்டியெடுத்திருந்தார்கள்.
வேறு வழியில்லை.
வலதுகால் அவ்வளவு சேதமாகியிருந்தது. அவனே தடுமாறி நடந்து
உருண்டு தவழ்ந்து எப்படியெல்லாம் முடியுமோ அத்தனை
போராட்டங்களுக்குப் பின், அரைமயக்க நிலையில் கண்டெடுக்கப்
பட்டிருந்தான். மீட்பு ஹெலி பார்த்ததும் அடடா! அவனுக்குத்தான்
என்ன ஆவேசமான உற்சாகம்.
காலில் குண்டு
பாய்ந்த இடம் அதற்குள் நீலம் பாரித்து அழுக ஆரம்பித்திருந்தது.
ஒரு கெட்ட வாசனை வந்தது. வாந்திவரும் போலிருந்தது. பன்னிரண்டு
நாட்களாய் அவன் சாப்பிட்டிருக்கவில்லை. அதனால் வாந்தி
எடுக்கவும் தெம்பு இல்லை. திணறலாய் இருந்தது. கையிருப்பு உணவு
தீர்ந்து ஒருவாரம் ஆகியிருந்தது. ஒரு கடி கடித்து அப்படியே
பத்திரப்படுத்திக் கொள்வான். தண்ணீர் கிடையாது. தொண்டையில்
உணவு சிக்கிச் செருமும். பனியே தண்ணீர். குளிரோ உடலை வாட்டி
யெடுக்கிறது. கடுமையான ஜுரம். உடலே வெடவெடவென்று நடுங்கியது.
கண்ணையே திறக்க முடியாமல் அப்படியே பாதி மயக்கம் பாதி
நினைவாய்க் கிடந்தான். தானறியாமல் கண்ணயர்ந்து விடுவான்.
பிறகு தானாகவே விழிப்பும் வரும். பதட்டமாய் இருக்கும்.
ஜுரவேகத்தில் முனங்கிக்கொண்டு கிடந்தான்.
மேலே ஹெலி! -
சக்தி மொத்தத்தையும் திரட்டி அந்தப் பிரதேசமே அதிர
சத்தமெடுத்தான். கிறுக்குப் பிடித்த நிலை அது. உன்மத்த நிலை.
ஹெலி வந்திறங்கி அவனைத் தொட்டுத் துதூக்கிய நேரம்
அவனிடமிருந்து பயங்கரப் பிளிறல். துதூக்கியவனின் எலும்புக்
குருத்தை நடுக்கியது அது. சரவணன் மயக்கமாகி விட்டான்.
கால்
வெட்டியெடுக்கப் பட்டது அவனுக்குத் தெரியாது. வலி மெல்ல
உள்ளிருந்து குக்கர் ஆவிபோல விநாடிக்கு விநாடி உச்சம்கொண்டு
வெடித்துவிடுவது போல அவனைப் பாடாய்ப் படுத்தியது. உடம்பையே
பாம்பாய்ச் சுருட்டி விரித்தது வலி. படுக்கையை, கால்
கட்டுகளைப் பிய்த்தெறிய ஆவேசம் கொண்டான். அலறினான்.
நர்ஸ் வந்து, வலி
வரும்போது அலறாமல் கடித்துக் கொள்ள ரப்பர் துண்டு தந்தாள்.
தாளமுடியாத வலி இருப்பது நல்லது. நரம்புகள் வேலை செய்வதின்
அடையாளம் அது... புன்னகை செய்கிற அவளை ஓங்கி அறையவேண்டும்
போல இருந்தது.
கொந்தளிப்பு
அடங்க ஐந்து நாளானது. வலியைப் பொறுத்துக் கொள்கிற கட்டுப்பாடு
வந்தது மெல்ல. மனசில் மெதுவாய் நிஜம் உறைத்தது. அடடா, இங்கே
வந்துசேர்ந்த நாள்முதல் நான் ஒரு மிருகம் போலல்லவா நடந்து
கொண்டிருந்திருக்கிறேன். என் காலைச் சரியான நேரத்தில்
வெட்டியெறிந்து என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள்
இவர்கள்... இவர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறேன்.
வெட்கமாய்ப் போயிற்று. மறுமுறை நர்ஸ் வந்தபோது அவள் கையைப்
பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டான். அப்போதும்
புன்னகைத்தாள் அவள். காயத்தினைப் பஞ்சால் ஒற்றுவது போன்ற
புன்னகை.
உலகம்,
ஆயுதங்களால் அல்ல - புன்னகைகளால் ஆளப்படுகிறது. இதுநாள்வரை
என்னைப் பற்றியே கவலைப்பட்டு, என் பிரச்சனையையே பெரிதுபடுத்தி,
அழுது அரற்றிக் கொண்டிருந்தேன். என் இழப்பையே நான் உணர்ந்து
திகைத்துக் கொண்டிருந்தேன். நடந்தவை எதிர்பாராதவையே.
வருத்தத்திற்குரியவையே... என்றாலும் - வாழ இன்னும் ஏராளமாய்,
நிறையவே மிச்சம் இருக்கிறது.
குனிந்து தன்
வெட்டப்பட்ட காலைப் பார்த்தான். கால் வெட்டப்பட்ட உணர்வே
இல்லை. கால் இருப்பதாகவும், விரல்கள்வரை வலிக்கிறதாகவுமே
உணர்வுகள் மூளையில் பதிவு பெற்றன. இன்னும் மனம் காலை
எடுத்ததைப் பதவுசெய்ய மறுத்தது.
முதுகுப்பக்கம்
படுக்கையைச் சற்று உயரவாக்கில் சாய்த்து வசதிசெய்து
தந்திருந்தாள் நர்ஸ் ஜுலி. இதென்னமோ கிறித்தவர்களும்
மலையாளிகளுமே எங்கும் எங்கெங்கிலும் நர்ஸ் வேலைக்கு
வருகிறார்கள். அதற்கான அபரிமிதமான பொறுமை அவர்களிடம்
இருக்கிறது. அவர்களிடம் மாத்திரம்.
படுக்கையோடு
கட்டிக்கிடந்தான். நர்ஸால் ஆட்டுவிக்கப்படும் குழந்தை. ஒரே
வாரத்தில் அவனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் நர்ஸ் ஜுலிக்கும்,
மருத்துவருக்கும் திருப்தியளித்தன. டாக்டர் தாராகூட கொஞ்சம்
கவலையுடன், ''அத்தனை சிரமத்துடன் வலியைப் பொறுத்துக் கொள்ள
வேண்டியதில்லை'' என்று மென்மையாய்ச் சொன்னாள். ''நான் ஏற்கனவே
உங்களையெல்லாம் பாடாய்ப் படுத்திவிட்டேன்!' என்றான் மெலிதான
புன்னகையுடன். பிறகு அவன் துதூக்கத்தில்கூட அரற்றவே இல்லை.
ஆ! இதுதான் சண்டை,
என்று நினைத்துக் கொண்டான். சண்டையில் அவன் முதல் அனுபவம் இது.
டேராடூனில் பயிற்சி முடிந்து ஆறேழு மாதத்தில் அவன்
எல்லைக்குத் தேவைப்பட்டான். மற்றெந்தச் சிப்பாயையும் விட
அதில் அவனுக்குத் தனி உற்சாகம் இருந்தது. இந்த ஒரு
தேவைக்காகவே அல்லவா நான் தயார் செய்யப்பட்டேன் - என்று
தனக்குள் பெருமிதமாய்ச் சொல்லிக் கொண்டான்.
யுத்தத்தில்
அத்தனைத் தினவு-ஊக்கம் அவசியம் இல்லைதான் என்று இப்போது
தாடியைச் சொறிந்தபடி யோசிக்கிறான்.!
இளமையின்
காட்டாற்று வேகம். ஆவேசம். சரி, நாம் நிரூபிப்போம்..
சிங்காரிக்கு அவன் எழுதிய கடிதத்தில் அந்தத் தினவு, பரபரப்பு
இருந்தது. நம்மை அவர்கள் வம்புக்கு இழுக்கிறார்களே. நம்மை
அவர்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டார்களே. நம் பொறுமையைத்
தவறாகக் கணித்து விட்டார்களே... உள்ளே உலையாய்க் கொதித்தது
எல்லாம்... வேடிக்கை.
சிங்காரிக்குத்
தகவல் தெரிந்திருக்கும். அவளிடமிருந்து கடிதம் இந்தவாரம்
வரலாம். எல்லைப்பகுதியில் வாரம் ஒருநாள் கடிதம் வரும். எத்தனை
உற்சாகமான நாள் அது. காத்திருத்தலும், எதிர்பார்த்திருத்தலும்.
தினவெடுத்த நிமிடங்கள். கடிதம் வருமுன்னாலேயே அந்தந்த
உலகங்களில், அவரவர் உலகங்களில், தத்தம் வீட்டில்
சஞ்சரித்தாகிறது. மனைவி பிள்ளைகளுடன், அருமைத் தாய்
தந்தையருடன் கனவும் நினைவு மயக்கமுமாய் உல்லாச உலாவல் உலவி-
கலவி! -யாகிறது. எத்தனை தடவை தன் மனைவிக்கு மனசார முத்தங்களை
ஈந்தானோ! அந்த உதட்டு ஈரம் இதோ நம்மாள் மனசில் வாசனை
தட்டியாச்சு! கடிதங்கள் கிடைத்தவர்களின் உற்சாகம் ஒருபுறம்
என்றால், கிடைக்காதவர் முகங்கள் சகிக்கவொண்ணாதவை. அட…
கிடைத்தவனும் நல்லசேதி என்றால்தான் அத்தனை சிரிப்பும்
உற்சாகமும். கவலையான மனித உணர்வுக் கொந்தளிப்புகளைக் கண்ட
கணங்கள். அழுகையும் சிரிப்புமாய் ஆளாளுக்குத் திரிகிறதைப்
பார்க்க அலுக்காது. உணர்ச்சிகள் பட்டதிவ் வுலகு. அந்தக்
கடிதங்களை சிலசமயம் அவர்கள் சகாக்களுடன் ஒரு புன்னகையுடன்
பகிர்ந்துகொள்வதும் உண்டு. அது அவனுக்குப் பிடிப்பதில்லை.
தன்னளவில் அவன் மிக அமைதியானவன். பவித்ரம் காக்கிறவன்.
புகைப்படம் கூட பர்சில் வைத்துக்கொள்ள மாட்டான். அதான்
நெஞ்சிலேயே இருக்கிறாளே, பிறகென்ன, என்றிருக்கும்.
அவன்மேல் அவள்
உயிரையே வைத்திருந்தாள். அவன் ஊருக்குத் திரும்பும்போதெல்லாம்
எத்தனை வக்கணையாய்ச் சமைத்துப் போடுவாள். சிங்காரித்துக்
கொள்வாள். எங்காவது வெளியே போனால் ஊரே அவர்களைப் பார்த்துக்
கண் விரித்தது. வீடு திரும்பியதும் முதல் காரியமாகக் கணவனை
உட்காரவைத்துச் சுற்றிப் போட்டாள். ''உங்க நடையே தனி அழகு.
மிலிட்டரி நடை. அதான் அவ அவ கண்ணு போடறாளுக.'' அவன்
சிரிப்பான்.
கால்
எடுக்கப்பட்டு விட்டது. துரதிர்ஷ்டவசமான விஷயந்தான். இப்போது
இப்படி ஊர் திரும்பவே யோசனையாய் இருந்தது. அட இதை அவள்
எப்படித் தாங்கிக்கொள்வாள் என அனுமானிக்க முடியவில்லை.
பரிதவித்து, தந்தி வந்த நாள்முதல் அழுது கொண்டிருப்பாள்.
உடனே ஊர்
திரும்ப வேட்கையாய் இருந்தது. ''அழாதே பெண்ணே. நான்தான் ஆகா
பிழைத்துவிட்டேனனே்!'' என்று கண்ணைத் துடைத்துவிட வேண்டும்
போலிருந்தது. எனக்குக் கால்போய்விட்டது. இருந்தாலும் என்ன,
உதவிக்கு நீ இருக்கிறாய்! உன்னைவிட இந்தக் கால் பெரிதல்ல...
என்றெல்லாம் மனசுக்குள் பேசிக்கொண்டு, என்னென்னவோ
யோசித்துக்கொண்டு படுத்திருந்தான்.
ஊரில்
அந்தச்செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும். சண்டையில்
அவன் காணாமல்போன விவரம் அறிந்தபோதே, அந்தத் தந்தி வந்தபோதே
அவள் மயக்கம்போட்டு விழுந்திருப்பாள். எப்படி அவளைச் சமாதானப்
படுத்தினார்களோ. அவனுக்கு உடம்பு சரியில்லை என்றாலேகூட அவள்
படும்பாடு சகிக்கவொண்ணாதது.
ஒவ்வொரு முறையும்
விடுமுறை முடிந்து பிரிகிற அந்தக் கணங்கள்... எத்தனை
துயரமானவை அவை. மழைக்காலத்தில் உடைப்பெடுக்கத் தயாராய் சளப்
சளப்னெறு ததும்பும் கம்மாயாய்க் கண்கள். அவனுக்கும் என்னவோ
போலிருக்கும் அது. நெஞ்சைப் பிசைகிறாப்போல. லீவைக்கூட
நீட்டித்து விடலாமா என்று படபடப்பாய் இருக்கும்.
''எப்ப நான் ஊர்
திரும்ப முடியும் டாக்டர்?'' என ஆர்வமாய் அவள் முகத்தைப்
பார்க்கிறான்.
''அதுக்குள்ளியா?
காயமே ஆறல்ல இன்னும்...'' என்று டாக்டர் தாரா சிரிக்கிறாள்.
''பெண்டாட்டி
ஞாபகம் வந்திட்டதா?'' சிரிக்கும்போது அவள் கண்கள் என்னமாய்
மலர்கின்றன. அடிக்கடி அவளைச் சிரிக்கவைக்க வேண்டும்
போலிருந்தது.
''அந்தமட்டுக்குத்
தப்பிச்சிட்டீங்க, உயிருக்கு ஆபத்து இல்லாம. அதைப் பாருங்க,''
என்றாள் தாரா. ''இனி புண் பூரணமா ஆறி, செயற்கைக்கால் பொருத்தி,
உங்களுக்கு நடக்கச் சொல்லிக் கொடுத்து, பழக்கி அனுப்பணும்.''
அடுத்த பக்கம்