முன்
பக்கம்
அது சரிதான்
என்று தலையாட்டிக் கொண்டான். போர்விதவைகள் நல்வாழ்வுச்
சங்கத்தில் இருந்து மலர்க்கொத்து தந்து பார்த்துவிட்டுப்
போனார்கள். நிறையப் பேர் சின்னவயசுப் பெண்கள், என்று பார்க்க
மனசுக்குக் கஷ்டமாய் இருந்தது. விரைவில் அவன் குணமடைய அவர்கள்
வாழ்த்துச்சொல்லிச் சிரித்தபோது, அந்தச் சிரிப்புக்குள்ளும்
ஆழமாய் ஒரு சோகம், வடு இராதா என்ன.. அவனுக்கு வருத்தமாய்
இருந்தது.
''நீங்கள்
விரும்பினால் உங்கள் மனைவியை எங்கள் செலவில் அழைத்து வந்து
ஆறுதலாய் உங்களருகில் இருக்கச்செய்ய முடியும்...'' என்று
ஒருத்தி இந்தியில் சொன்னாள்.
''நல்லது,
வேண்டாம்'' என்றான் அவசரமாக. சாதாரணமாகவே சிங்காரிக்கு
ஆஸ்பத்திரி என்றால் தலைசுற்றும். அவள் அதிர்ச்சிகளுக்கு
ஏற்றவளே அல்ல.
அதிலும் இங்கே...
அவன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். எங்கும் காயம்பட்ட
வீரர்கள். கட்டில்கள் நிரம்பி வழிகின்றன. கை போனவர்கள். கால்
இழந்தவர்கள்... ஐயோ ஒருவனின் கண்களைச் சுற்றிக் கட்டு
போட்டிருக்கிறது. கண் திரும்பக் கிடைக்குமா? நேற்றுத்தான்
வந்தான் அவன். அவனுக்கு என் நிலை எவ்வளவோ மேல் அல்லவா?
இந்தக் காட்சிகளை
சிங்காரி தாளமாட்டாள். தினம் தினம் புதுசு புதுசாய் ஆட்கள்
வந்திறங்கிக்கொண்டே யிருக்கிற இந்தப் பரபரப்பில், பேரும்
ஊரும் பாஷையும் தெரியாமல்... இங்கு வந்து அழுதழுது என்னையும்
பயமுறுத்தி விடுவாள். ''ரொம்ப நன்றி. அவளுக்கு இங்க
வசதிப்படாது'' என்றான் அந்த இளம் விதவையிடம்.
''ஏன்? நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம். இடவசதிகூட எங்கள் பொறுப்பு''
என்கிறாள் அவள்.
''நீங்கள் ரொம்ப
அருமையானவர். நன்றி!'' என்று கைகூப்பினான்.
சிங்காரிக்கு ஒரு
கடிதம் போட்டான். எழுத அவனால் முடியவில்லை. கையெங்கும்
சிராய்ப்புகள் இன்னும் குறையவில்லை. இங்கே கவந்து பத்து
நாட்களுக்குமேல் ஆகிவிட்டது. சிராய்ப்புகள் காயவே
நாட்களெடுக்கும் போலிருந்தது. இனி கால் குணமாக.... பல
மாதங்கள் எடுக்கலாம்.
அந்த விதவைகளில்
ஒருத்தி, ஈஸ்வரியாம்... அவள் கணவன் கேப்டன் என்றும்,
போனவாரம்தான் போரில் இறந்துபோனான் என்றும் சரவணன் அறிந்தான்.
அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு, போர்த்தளவாடத்துக்கே சேவை
என்று வந்திருந்தாள். அவன் சொல்லச்சொல்ல குனிந்து அவள் எழுதத்
தயாராய்க் காத்திருக்கிறாள். தமிழ் அறிந்தவள். எனக்கு
இப்படியரு மரணம் நிகழ்ந்தால், சிங்காரியால் தாளமுடியுமா?
இப்படி அமைதியாய், தன்னை, தன்மனசைத் தேற்றுமுகமாக உதவி
ஒத்தாசை என்று வெளியிறங்க முடியுமா? எத்தனை சுருக்காய் இவள்
மீண்டு, பிற ஜவான்களுக்கு உதவ, என்று தன்னைப் பெருங்கண்ணியில்
இணைத்துப் பிணைத்துக் கொண்டுவிட்டாள். பிரமிப்பாய் இருந்தது.
மனைவிக்கான
கடித்தை இன்னொரு பெண் - அதுவும் இளம் பெண் - விதவை...
அவள்மூலம் எழுதுவது எத்தனை சங்கடமானது. துயரகரமானது.
கேப்டனுடன் தன் நினைவுகளை மீட்டிக்கொண்டே ஒருவேளை அவள்
எழுதுவாளோ? அடிவயிற்றில் வேதனை தடவியது அவனுக்கு. அவள்
அதுபற்றி அலட்டிக்கொள்ளாதது அவள் பெருந்தன்மை.
அது ஒரு
சம்பிரதாயக் கடிதம் - அலுவலக அளவில் உனக்குத் தந்தி
கொடுத்திருப்பார்கள். எனது வலதுகாலைத் தொடைவரை நீக்கி
விட்டார்கள். என்ன செய்வது. ஆரம்பத்தில் எனக்கும்
திகைப்பாய்த்தான் இருந்தது. அதுபற்றி வருந்த வேண்டாம். நீ
தைரியமாய் இருக்க வேண்டும். விரைவில் நான் திரும்பி
வந்துவிடுவேன். இங்கே எனக்கு நன்றாக வைத்தியம்
பார்க்கிறார்கள். நல்லபடியாக கவனித்துக் கொள்கிறார்கள்... 'பிரத்யேக
நல விசாரிப்புகள்' என்றெல்லாம் எழுதக் கூச்சமாய் இருந்தது.
''அவ்வளவுதான்''
என்றான் தயக்கமாய். ''உங்கள் உதவி மகத்தானது.''
''நீங்கள்
தேவையான உதவிகளைக் கேட்கலாம். அமைதியாய் ஒய்வு எடுத்துக்
கொள்ளுங்கள். விரைவில் பூரண குணம் அடைந்து விடுவீர்கள்.
வாழ்த்துக்கள்...'' என்றபடி அவள் போய்விட்டாள். வேறு நபர்
யாருக்கேனும் அவள் உதவி தேவைப்படலாம்.
நாலைந்துநாளில்
அவனை 'ஐசியூ'வில் இருந்து வெளிப்படுக்கைக்கு
மாற்றிவிட்டார்கள். ஐசியூ, அவர்களுக்குத் தேவைப்பட்டுக்
கொண்டேயிருந்தது. இருபத்திநாலு மணிநேரமும் அந்த ஆஸ்பத்திரி
பரபரப்பாகவே இருந்தது. பெரிய ஆஸ்பத்திரி. சாதாரண நாளில்கூட
பரபரத்துக் கிடக்கும். நிலைமையை இன்னும் உக்கிரமாக்கி
யிருந்தது போர். சாவுகள் சகஜமாகி யிருந்தன. போரில் தப்பிப்
பிழைத்து, இங்கே வந்து போராடி அவர்கள் செத்துப் போனார்கள்.
போரின் வெற்றி தோல்வி தவிர, வாழ்க்கையே வெற்றியா தோல்வியா,
அதென்ன கணக்கு புரியவில்லை. நிகழ்ந்த சாவைவிட, பக்கத்துப்
படுக்கைக்காரன், அவனைவிட முக்கியமாய் அவனது உறவினர்கள்...
அவர்கள் பயம் அதிகரித்தாப் போலிருந்தது. அப்போதே நிச்சமாய்
சிங்காரி வரவேண்டாம் என்று உறுதிபட சொல்லிக்கொண்டான்.
எல்லைப்டையினருக்கு என்று, சிறப்பு நிகழ்ச்சிகள்... வானொலிப்
பாடல்கள் ஒலிபரப்பியது. எல்லா மொழிகளிலும் பாடல்கள் இருந்தன.
அவனுக்கு ர•ஃபி பிடிக்கும். இடையிடையே போர் நிலவரம் பற்றி
உற்சாகமான செய்திகள் சொன்னார்கள். பாதிப்பகுதிக்கு மேல்,
ஆக்கிரமிக்கப் பட்ட இடங்களை, மீட்டாகி விட்டதாகச் சொன்னார்கள்.
காதடியில் டிரான்சிஸ்டர் வைத்துக் கொண்டு படுத்திருப்பது
ஓரளவு இதமாய் இருந்தது.
செ ய் தி க ள் -
வாசிக்கையில் அந்த வார்டே பரபரத்துக் கிடந்தது. சிப்பாய்களும்
அவர்களின் உறவினர்களும் பரபரப்பானார்கள். கூடிக் கூடி
முடிச்சு விழுந்தாப்போல நின்று கொண்டார்கள். காணாமல்
போனவர்கள், காயம் பட்டவர்களின் பெயர்கள், உயிரிழந்த
ஜவான்களின் பட்டியல், என்று வாசிக்கும்தோறும் அங்கே பெரும்
அமைதி நிலவியது. தனக்குத் தெரிந்தவர்கள் பெயர் வருகிற
போதெல்லாம் அந்த உறவினர்களிடையே விதவிதமான உணர்ச்சிகள்
அலையோடின. இப்படித்தான் ஊரிலும் இருக்கும், என நினைத்துக்
கொண்டான்.
5120 மீட்டர்
சிகரத்தைப் பிடிக்கிற முயற்சியில்தான் சரவணன் காயம்
பட்டிருந்தான். சிகரம் மீட்கப்பட்டு விட்ட விவரத்தை அவன்
கேட்டு அறிந்து கொண்டான். மன ஆறுதலாய் இருந்தது
போர் அநேக
அபத்தங்கள் கொண்டது. இத்தனைப் பிரயத்தனப்பட்டு, எத்தனையோ
ஜவான்கள் இன்னுயிர் நீத்துப் பிடித்த பகுதிகளை, போர்
நிறுத்தம் என்றும் உடன்பாடு என்றும், சில சமயங்களில்
அரசாங்கம் திருப்பித் தநதிருக்கிறது. அப்போதெல்லாம்
உயிரிழந்த ஜவான்களின் உறவினர்கள் - கை கால்கள் என்று
பறிகொடுத்த ஜவான்களின் மனநிலை, அவர்களின் துயரம்
விவரித்தலுக்கு அப்பாற் பட்டது. சில ஜவான்கள் குடித்துவிட்டு
பிதற்றித் திரிவார்கள், என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறான்...
இப்போது, எதிரி ஆக்கிரமித்த இடத்தை நாங்கள் திரும்பப் பெற்று
விட்டோம். ஆனால் ஒரு ஆணையின் பேரில் வந்து
ஆக்கிரமித்தவர்களில் எத்தனைபேர் உயிர் பலியாகி யிருக்கிறது!...
உயிரை விரயமாக்குதல் எத்தனை பேதைமை.!
‘ஓஹ்….." - என்று
கொட்டாவி விட்டான். எப்போதும் படுத்துக் கிடப்பது அலுப்பாய்
இருந்தது. கால் செயலிழந்தது பரவாயில்லை... அது முடிந்துபோன
கதை. இப்போது வெறுமனே படுத்துக் கிடத்தல். கைக்கும்
வேலையில்லை. மூளையும் சோம்பிக் கிடக்கிறது. எழுந்து நடமாட,
எழுத, வாசிக்க... எதுவும் கூடாத நிலை. யாரிடமும் கலகலப்பாகச்
சிரித்துப் பேசிப் பழகியவனும் அல்ல அவன்.
கண்ணைமூடி
என்னவாவது யோசித்துக்கொண்டு கிடப்பான். ஊரில் இப்படி
ஆசுவாசமாய்க் கிடக்க முடியாது. யாராவது வந்து
பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அட இவள் அழுகையைச் சமாளிப்பது
எப்படி, என்று திகைப்பாகி விடும்.... பூரணமாய்க்
குணமானபின்தான் ஊருக்குப் போகவேண்டும், என நினைத்துக்
கொண்டான்.
அந்தவாரம்
சிங்காரியின் அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது. செய்திகேட்டு
சிங்காரி துடித்துப்போனதாகவும், உண்ணாமல் உறங்காமல்
தவிக்கிறதாகவும் எழுதியிருந்தார். பாவம் இந்த வயதான காலத்தில்
அவர்தான் இதையெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
பெண்ணை நினைத்தாலே அவர் மனம் கசிந்தது.. எந்த விசயத்தையும்
அவள் தன் அப்பாவிடம் மறைத்ததேயில்லை. எதொண்ணுத்துக்கும் எந்த
விஷயத்திற்கும் அவரிடம்தான் யோசனை கேட்பாள்.
அவர் கடிதம்
ரொம்ப வருத்தப்பட வைத்துவிட்டது. காயம் பற்றிய நிலவரத்தை, 'உண்மையச்
சொல்லுங்க மாமா. உங்களை நம்பித்தான் நாங்க இங்க இருக்கறோம்...'
என அவளும் கூடச் சேர்ந்து எழுதியிருந்தாள். அவனையே நேரில்
கேட்பதுபோல இருந்தது கடிதம்.
உணர்வுபூர்வமான
சிறு உலகம் அது. அதுவும் அவனுக்கு வேண்டித்தான் இருந்தது.
போர்க்களத்தில் பொங்கியெழும் துதூசியில், திடும் திடும் என
வந்துவிழும் குண்டுகளின் உலகம் அவள் அறியாதது. கரப்பான்
பூச்சிக்கே அவள் திகிலடைவாந்தாள். தவளைக்குப் பயப்படடுவா்டாள்.
ஹா ஹா, அவளுக்குப் பேய் பிசாசு கதைகளிலும் பயம் அதிகம்...
அவனுக்குச் சிரிப்பாய் இருக்கும்.
எல்லைவெளியில்
கிலோமீட்டருக்கு ஒருத்தர். பனியோ பனி கொட்டோ கொட்டென்று
கொட்டும் இரவில், பைனாகுலரில் வேவு பார்க்கிற, ராப்பகலற்ற
வேலை. வயர்லெஸ் கருவி. ஒரு அசட்டு டிரான்சிஸ்டர். உணவு
கொண்டுவரும், கடிதங்கள் கொண்டுவரும் வாராந்திர ராணுவ வாகனம்.
அந்த ஒருவாரத்துக்கு என்று எப்படிக் காத்திருக்க
வேண்டியிருக்கிறது... ''சிங்கம், பேர்லதான் நீ சிங்கம். இப்டி
பயந்து நடுங்கறே,'' என்பான். ''அந்த அத்துவான வெளியில்,
இருளில், கடும்பனியில், தனி ஆள்... ஒற்றை ஆள்... பேய்க்கு
பயந்தா என்னாவறது?'' என்று சிரிப்பான்.
இத்தனைக்கும்
எத்தனையோ சண்டையில் எத்தனையோ பேர் செத்துப் போன யுத்த வளாகம்...
சிலருக்கு
சும்மாவாச்சும் அழுது அரற்றுவது பிடிக்கிறது. அம்மையார் அந்த
ரகம். எப்படியாயினும், நிலைமை சாதாரணமானது அல்ல. இப்போது
அவளைச் சமாளிக்க முடியாது. என்னை நேரில், அதுவும்
செயற்கைக்காலோடு, அல்லது தோள்கட்டைகளோடு பார்த்தால்... அவனால்
அதை யோசித்தே பார்க்க முடியவில்லை.
அவர்களுக்கு ஒரு
குழந்தை இருந்திருக்கலாம். அவள் மனசு சற்று அதில் திரும்பும்.
எதற்கும் வழியில்லாமல் இந்த சோகத்தை அவள் வாழ்நாள்
முழுவதுமாய்ச் சுமந்து திரிய வேண்டியிருந்தது.
இப்போது கையால்
பிடித்து எழுத ஓரளவு முடிந்தது. தான் தெம்பாய் இருப்பதாகவும்,
விரைந்து குணமாகி வருவதாகவும் சரவணன் எழுதினான். என்னைப்பற்றி
நினைத்து நினைத்து வருத்தப்படக் கூடாது என்றும், உடம்பை
பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டான்.
சற்று வெட்கத்துடன், அன்பு முத்தங்கள், என்று எழுதியபோது
தனக்கே சிரிப்பு வந்துவிட்டது.
அகில இந்திய
வானொலியில், ஊரிலானால் நேயர் விருப்பம், செவ்வாய் இரவுகள்
போல, இரவு பத்து முதல் பதினொன்று - திரைப்படப் பாடல்கள்...
விரும்பிக்கேட்ட நேயர்கள் பேர் சொல்வார்கள் வரிசையாய்.
எப்பவாவது அதில் ராஜசிங்கமங்கலம் குமார், வண்ணை தேவசகாயம்,
ஸ்ரீபுரம் அரவிந்தன், கிழக்குத்துறை பூவழகி, ராஜேஸ்வரி
மற்றும் குடும்பத்தினர்... என்று பெயர் வரிசையில் விராலிமலை
சரவணன், என்று ஊடே பேர் சொன்னால், சிங்காரி சிரிப்பாள். ''நீங்களா
எழுதிப்போட்டது?'' என்று கிண்டலடிப்பாள். அவளது சிரிப்பு
அவனுக்கே ஆச்சர்யமாய் இருக்கும். இப்போது அவன் எதிர்பாராத ஒரு
விஷயம் நடந்தது.
செய்திகளில்,
இறந்துவிட்ட வீரர்களில் ஒரு பெயராக 'விராலிமலை சரவணன்' என்று
ஒரு பெயர் சொன்னார்கள். எந்தப்படை தெரியவில்லை. அவனுக்கு
ஆச்சர்யமாய் இருந்தது.
அன்றிரவு அவன்
நன்றாய்த் துதூங்கிக் கொண்டிருந்தபோது ஊரிலிருந்து தந்தி
வந்தது. எழுப்பிக் கொடுத்தார்கள்.
''தந்தியா,
எனக்கா?'' என்று பதட்டத்துடன் வாங்கினான். சிங்காரியின் அப்பா
தந்திருந்தார்.
உங்கள் கடிதம்
இப்போது தாமதமாக வந்தது. அதற்குள் வானொலிச் செய்தி கேட்டு
சிங்காரி பதறிப் போனாள். நேற்றிரவு சிங்காரி மண்ணெண்ணெய்
ஊற்றித் தற்கொலை செய்துகொண்டாள்.
அது ஆஸ்பத்திரி
வார்டு. அவனால் பெரிதாய் வாய்விட்டுக் கதறி அழ முடியவில்லை.
வலதுகால் தொடைப்பகுதியைப் பார்த்தபடியே, அவன் அவசரமாய்
ரப்பர்த்துண்டை எடுத்துக் கடித்தான்.
****