ரயில்
புறப்படத் தயாராக இருந்தது. ''என்ன கலா! புரியாமப்
பேசற, எனக்கு முக்கியமான ஆடிட்டிங் இருக்கு'' என்றான்
வாசு.
''பாஷை தெரியாத ஊர், அவ்வளவு தூரம், இவன வேற
வச்சுகிட்டு'' இரண்டு வயது மகனைக் காட்டிய
கலாவுக்குச் சற்றுக் கலக்கமாய் இருந்தது.
''கண்ணனுக்குப் போன் பண்ணிட்டேன்! ஸ்டேஷன்ல வெய்ட்
பண்ணுவான். ஏதாவதுன்னா என் செல்லுக்குக் கூப்பிடு!
சரி எனக்கு ஆபிஸுக்கு நேரமாச்சு'' சென்றுவிட்டான்.
வாசு மீட்டிங்கில் பேசிக்கொண்டிருந்தான், செல்
அதிர்ந்தது இருமுறை. வாசு கண்டுகொள்ளவில்லை. மீட்டிங்
முடிந்ததும் அதை மறந்தும் போனான்.
மீண்டும் செல் அழைத்தது. கண்ணன்
''ம்ம்.. சொல்லுடா'' வாசு.
''அண்ணா!
S1
கூபேல அண்ணி வரலியே ஒருமணி நேரமா எல்லா பெட்டியும்
தேடிட்டேன்'' கண்ணன்.
''என்னது?'' லேசாக அதிர்ந்தான். ரயில்வே ஸ்டேஷனுக்கு
விரைந்த வாசு பயணிகள் பட்டியலைப் பார்த்தான்.
S1
கூபேயில் தன் மனைவி, மகன் தவிர வேறு ஒரு பெயர் ''பாலசுப்ரமணியன்''
- ஆங்கிலத்தில் தெளிவாக இருந்தது. அலுவலக ஊழியரிடம்
விசாரித்தான்.
ஒரு முடிவுக்கு வந்தவனாய் ரயில்வே அலுவலகத்தில்
விசாரித்தான்.
எப்படியோ அந்த ''பாலசுப்ரமணியன்'' போன் நம்பர்
கிடைத்தது.
தொடர்புகொண்டபோது மறுமுனையில் பெண்குரல் ''அவுங்க
இன்னும் வீட்டுக்கு வரலீங்க'' முடித்துக்கொண்டாள்
வேலைக்காரப் பெண்.
பேசாமல் ஒரு புகார் கொடுத்துடலாமா? என்னவென்று
கொடுப்பது? மனைவியைக் காணவில்லை என்றா?
பாலசுப்ரமணியன் மேல் சந்தேகம் என்றா?
போன் அடித்தது. அவசரமாக ஹலோ என்றவனுக்கு உயிர் வந்தது.
கலாதான் ''என்னங்க நான்.... " தடுமாறினாள். ''நீங்க
இந்த ஆஸ்பிடல் வாங்க சொல்றேன்'' ஏதோ ஒரு ஊர் சொன்னாள்.
போன் கட்டானது.
அவசரமாக டாக்ஸி பிடித்து மருத்துவமனை அடைந்தபோது ஒரு
வசதியும் இல்லாத பொட்டல் காடு அந்த ஊர். வாசலில் கலா
''என்னங்க நம்ம ராஜாவுக்கு திடீர்ன்னு
வாந்தி, பேச்சு மூச்சே இல்ல. மயங்கிட்டான், அப்புறம்
பாதியிலே இறங்கி இங்க சேர்த்தோம். இவங்கதான் என்
கூடவே இருந்தாங்க. ''
அந்தப் பெண்மணியைக் காட்டினாள்.
''ஹலோ! இங்கேர்ந்து என் செல்லுக்கு சரியா சிக்னல்
கிடைக்கல, உங்களுக்கு ரெண்டு மூனு தடவ பண்ணினேன்
நீங்க எடுக்கல 'பை தி வே, ஐயாம் பாலா சுப்ரமணியன்''
தலை சுற்றி மயக்கம் வருவதுபோல் இருந்தது வாசுவிற்கு.
*******