தளர்ந்த
முகத்தை உயர்த்தித் தூரம் வரை பார்த்தாள்.
கும்பலாய்க் கூரைகள். ஓலையிட்டவை, தகரம், சில ஓடு
போட்டிருந்தன. பனைமரத்தின் விரிந்த தோகைகள் சிறு
காற்றுக்கு ஆடுகின்றன. அந்த சலசலப்பை மனதில்
உணர்ந்தாள். நெளம்பி தனக்குச் சொந்தமான அந்த மூணு
நாளை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கேயான அந்த மூணு நாளில், கணவர் முஸ்தபா அவள்
கூடவே இருப்பார். மனம் படபடத்தது. எத்தனை காலமாயிற்று!
மனசுக்கு இதமான நினைவுகள். நெஞ்சுவலிக்காரி.
இப்பக்கூட வலி இருக்கிறது. ரெண்டு நாளாய் கூடுதல்
மருந்து எடுத்துக் கொண்டாள். குடிக்கும்போதே சுவாசம்
தருகிற மருந்து.
சட்டைபட்டன்போலக் கண்கள். எம்பிராய்டரி வேலை செய்தாப்
போல இமைகள். தந்தம் போன்ற விழிவெண்மை. ''என்னா
விஷயம்டி நெளம்பி?'' பக்கத்து வீட்டுக்காரி ஐதா.
வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறாள். ''ஒண்ணில்ல''
கடைசிப் பெண்ணின் ஒத்தாசையுடன் மாமிசத்தை நறுக்கிக்
கொண்டே நெளம்பி பதில் சொன்னாள். '' இது உன்னோட மூணு
நாளாக்கும்?'' உணர்ச்சியுடன் ஐதா சொன்னாள்.
நெளம்பியின் பெண் குழந்தையைப் பக்கத்தில்
வைத்துக்கொண்டபடி விலாவாரியாய் அதைக் கொண்டாட
முடியவில்லை. ''அந்த மனுசனை நமாஸ் பண்ண விடமாட்ட
போலுக்கே!!'' என்று தமாஷ் பண்ணினாள்.
''ஏய் பாத்துடி...'' என்றாள் நெளம்பி சங்கடத்துடன்.
ஆனால் அவள் சொன்னது நிஜம்தான். கூந்தலைச் சீராய்
முடித்திருந்தாள் நெளம்பி. கைகால்களில் ஹென்னா.
குழந்தைகளைக் காலையிலேயே எழுப்பிவிட்டு தன் அறையைப்
பெருக்கிச் சுத்தம் பண்ணினாள். அவள் வயசாளி ஒண்ணும்
அல்ல, என்றாலும் பிரசவம் மாத்தி பிரசவம். அஞ்சு
குழந்தைகள். நெஞ்சுவலி. மூப்பு வந்திருந்தது. ''லைத்தி
கடையில் இருபது பிராங்க் எண்ணெயும், அஞ்சு பிராங்க்
உப்பும் வாங்கிட்டு வா'' பெண்ணிடம் நெளம்பி சொன்னாள்.
''மதியவாக்கில் வாப்பா வந்ததும் பணத்தைக்
குடுத்துறலாம்'' மாமிசப் பாத்திரத்தைப் பார்க்க முகம்
திருப்பிக் கொண்டாள் மகள். போய்க் கேட்க சங்கடம்.
குழந்தை
பாட்டிலுடன் வெளியேறினாள். நெளம்பி எழுந்து கொண்டாள்.
சராசரி உயரம். ஒல்லி உருவம். ஒற்றை உள்ளறையில் சாமான்
என்று அதிகம் இல்லை. வெள்ளையுறையுடன் ஒரு படுக்கை.
மூலையில் மேஜை. சில பீங்கான் பொம்மைகள். சுவரில்
சட்டமிட்ட பெரிய படங்கள். நண்பர்களின், புதியவர்களின்
புகைப்படங்கள். மண்ணெண்ணெய் அடுப்பை வெளியே எடுத்து
வந்து பற்ற வைக்க ஆரம்பித்தாள். அதற்குள் சாமான்களைப்
பெண் வாங்கி வந்திருந்தாள். இன்னொரு வீட்டுக்காரி,
அவள் வாசல் பக்கமாய் வந்து ''சமையல் ஜமாய்க்கிறே
போலுக்கு?'' என்றாள். ''ஆமாம்'' என்றாள் நெளம்பி. ''அப்பிடியே
அவர் அடிநாக்கில் இருக்கண்டாமா? அப்பதானே மத்த
சம்சாரங்களோட சமையலை மறப்பார்!'' ''ஹாஹா, அவர் நாக்கு
இதுக்கெல்லாம் காத்திட்டிருக்குன்றே'' சமையலில்
என்னென்ன சேர்க்கிறாள் என்று நோட்டம் விட்டாள் அவள்.
''இப்ப உடம்பு பரவால்ல'' தனக்கே பெருமிதத்துடன்
நெளம்பி அவள் கையைப் பற்றி வருடியபடியே சொன்னாள். ''ஏய்
நாளைக்கும் இப்பிடிச் சொல்லுவியாம்!'' அந்தப் பெண்
கைகொட்ட, கூட நிறையப் பெண்கள் சேர்ந்து கொண்டார்கள்.
ஒருத்தி கையில் ஜாடி. இன்னொருத்தியிடம் கரண்டி. தாளம்
தட்டியபடி ஆட ஆரம்பித்தார்கள்.
''வணக்கோம்
வணக்கோம்
உன் அழகுக்கல்லடி பெண்ணே
முதுகெலும்புக்கு''.
சேர்ந்து எல்லாரும் பாடி ஆட நிகழ்ச்சிகள் சூடு
பிடித்தன. வேகம், விறுவிறுப்பு, அயர்ந்துபோய்
மேமூச்சு கீமூச்சு வாங்க எல்லாரும் ஹோவென்று
கும்மாளமிட்டார்கள். ஒருத்தி நெளம்பியின் அறைக்குள்
புகுந்து அடுத்தவளை அழைத்தாள். ''ஏய் இந்தக் கட்டிலை
வெளிய போடுங்கடி. ராத்திரி இது உடைஞ்சிறப் போவுது!''
''மாமா, நாளை இதே அறை!''
ஆளாளுக்குக் கிண்டலும் கூத்துமாய் ஒரே சிரிப்பு.
பிறகு எல்லாருக்கும் வீடும், காத்திருக்கும்
வேலைகளும் ஞாபகம் வர கலைந்து போனார்கள்.
நெளம்பியும் அந்தக் கேலியில் சிரிப்புடன் கலந்து
கொண்டாள். அந்த காம்பவுண்டில் இது சகஜம். யாரும்
கழட்டிக்கிட முடியாது. தவிர, அவர்களில் அவள் தனி
மாதிரி, எல்லாருக்கும் அது தெரியும். அவளுக்கு
நெஞ்சுவலி, கணவர் சீந்துவதேயில்லை. ரெண்டு வாரமாய்
அவர் வந்து அவளைப் பார்க்கவேயில்லை. வந்து எட்டியாவது
பார்ப்பார் என்றிருந்தாள் நெளம்பி. தாய்சேய் நல
விடுதிவரை அவள் போய்வந்தபோதுகூட கடைசிப் பெண்ணை
வீட்டில் இறுத்திவிட்டுப் போனாள். ஒருவேளை அவர்
வந்தால், பெண்ணுடன் பேசியபடி அவர் காத்திருப்பார்.
இன்னிக்கு திரும்ப ஆஸ்பத்திரி வரை போக வேண்டும்.
இருந்த சொச்ச பணத்தை முஸ்தபாவுக்கு என்று சமையல்
செய்ய வேண்டியிருந்தது. மத்த பெண்டாட்டியை விட அவள்
ஒண்ணும் சோடையில்லை. தரம் தாழ்ந்தவளும் இல்லை. பெத்த
தாயாக அவள் கடமைகளை ஒதுக்கி விடவில்லை. ஆனால்
சந்தர்ப்பங்களில் மனைவி என்கிற ஸ்தானம் முன்னுரிமை
பெற்றுவிடுகிறது.
வரும் மூணு நாட்கள்! மனசு பூராவும் அதே நினைப்பு.
உடம்புப் பிரச்னையே மறந்திருந்தது. விதவிதமாய் ஆயிரம்
யோசனைகள். திங்கள்கிழமை காலைவரை அவளை அவர்
பிரியமாட்டார்! அந்த அறையில் முஸ்தபா. அவர் சகாக்கள்.
ரெட்டை அர்த்த நகைச்சுவை. 'கணவருக்கு சரியான மனைவியா
ஒருத்தி அமைஞ்சால்...' என நினைத்துக் கொண்டாள். சில
பொம்பளையாளுக்கு ஏனோ அமையாமல் போகுது, 'ஒருவனுக்கு
ஒருத்தி'ன்றா மாதிரி... வழக்கமான நியதியாய்க் காலை.
பனை நிழலும் மனுசாள் நிழலும் நீண்டு சுருங்க
ஆரம்பித்தன. உச்சிவேளை நெருங்கப் பெண்கள் சமையல்
மும்முரத்தில் இருந்தார்கள். காம்பவுண்டு வாசலில்
ஒவ்வொருத்தியும் தன் கணவனை வரவேற்க வந்து நின்றார்கள்.
குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு
குழந்தையை அம்மா கூப்பிடும் ஒலி. நெளம்பி
குழந்தைகளைச் சாப்பிட அவசரப்படுத்திவிட்டு வெளியே
அனுப்பினாள் ஜரூராக. காத்திருந்தாள், எப்ப வேணாலும்
முஸ்தபா வருவார்.
ஒரு மணி கழிந்து விட்டது, வந்த ஆம்பிளைகள் திரும்ப
வேலைக்குப் போனார்கள். காம்பவுண்டில் இப்போது ஆம்பிளை
என்று யாருமே இல்லை. பெண்களும் ஒரு தூக்கம்
முடித்துவிட்டு வெளியே மரத்தடியில் கூடினார்கள்.
நேரமாக ஆக அவர்களின் அரட்டைச் சத்தம் அதிகரித்தது.
அலுத்துப்
போனது அவளுக்கு. தேடுவதை விட்டு விட்டாள். வெளிர்
வெல்வெட் உடையில் முற்பகலில் இருந்தே அவள் சுவர்க்
கடிகாரம் பார்ப்பதும் வாசலைப் பார்ப்பதுமாய்
இருந்தாள். ஒரு கவளங்கூட அவள் சாப்பிட்டிருக்கவில்லை,
இப்ப வந்திருவார், இப்ப வந்திருவார் என்று தன்னையே
சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். பசி உள்ளே இரைய
ஆரம்பித்தது. முன்பும் அவர் தாமதமா வந்திருக்கிறாரே.
அப்பல்லாம் காத்திருக்கிறது இனிமையாய் இருக்கும்.
உள்ளே துடித்துக் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பை அவை
நீட்டிக்க வல்லதாய் இருந்தன. பயமும் சந்தேகமும்
அவ்வப்போது ஊடறுக்கும்தான். அடிக்கடி, ரொம்ப அடிக்கடி
அந்த எண்ணம் அவளை முகத்தில் அறையும், முஸ்தபா
அவளுக்குமுன் இருமுறை கல்யாணம் முடித்தவர். இவளைத்
தவிர புதிதாய் இன்னொருத்தியையும் கட்டியவர். ஆகவே
காத்திருப்பதை அவள் சகித்துக் கொண்டாள். முஸ்தபா வர
அந்தக் காத்திருத்தல், பொறுமை அவசியம் என அவள்
உணர்ந்தாள். அப்போது மற்ற பெண்டாட்டிகளைப் பற்றி
மோசமாய்க் கற்பனை பண்ணிக் கொண்டாள். ஒருத்தி
இன்னொருத்திக்கு உரிமையான நாளில் அவரது ஆண்குறியைச்
சீராட்டிக் கொண்டிருக்கிறாள். மெல்ல ராத்திரிவரை
ஆக்கி விடுகிறாள். அல்லது அவரைக் கட்டிக்கொண்டு
நாள்பூரா விடுகிறதேயில்லை. அவளுக்கு அது
இன்னொருத்திக்கான நேரம் என்று தெரியாதா?
ரெண்டு வாரமா மனுசனைக் காணவேயில்லை. அந்த நிஜம் மனசை
இம்சித்தது. முஸ்தபா நாலு மாசம் முன்னால் இவளைவிட
இளம் பெண்ணொருத்தியைக் கல்யாணம் முடித்தார். அந்த
நினைப்பே சட்டென்று உள்ளே ஆழமான வலி எற்படுத்தியது.
ஓய்வு கொள்ள, உறங்கக் கொள்ள முடியாத வலி. தானறியாமல்
தூங்கினாலும் எழுந்தவுடன் தொடரும் வலி. மருந்து தேட
வேண்டியதாகிவிடும். வழக்கமாய் ரெண்டு தேக்கரண்டி
எடுத்துக்கொள்கிறவள், மூன்றாய் ஊற்றிக் கொண்டாள்.
கடைசிப் பெண்ணைக் கூப்பிட்டு, பெரியண்ணன் மக்டரை உடனே
அழைத்துவரச் சொன்னாள். ''போய் வாப்பாவைக் கூட்டிவாடா''
என்றாள்.
''எங்கருந்தும்மா?''
''நாலுமுக்குல பார். இல்லாட்டி உன்னோட மத்த உம்மாமார்
வீட்ல இருப்பாரு''
''நான் நாலுமுக்குலதாம்மா இருந்தேன். வரல்லியே''
''அட இப்ப வந்திருக்கலாம்டா, போய்ப்பாரு''
உம்மாவை நிமிர்ந்து பார்த்துவிட்டு, தலையைத் தொங்கப்
போட்டான். மனமில்லாமல் கிளம்பினான் அவன்.
''வாப்பா சாப்பிட்டதும் என்ன இருக்கோ உனக்குத்
தரேண்டா. வீட்ல கறிச்சோறு, ஜல்தி மக்டர்'' என்றாள்.
கடுங்கோடை. உயரமோ உயரத்தில் மேகம். மக்டர் ஒருமணி
நேரங்கழித்துத் திரும்பி வந்தான். வாப்பாவைக்
கண்டுபிடிக்க முடியவில்லை. நெளம்பி வெளியே வந்து
மத்த பொம்பளைகளோடு கலந்து கொண்டாள். எல்லாரும் வம்பு
பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு மரியாதைக்காக ஒருத்தி
''மாமா வந்துட்டாப்லியா?'' என்றாள். ''இன்னும் இல்ல''
என்றாள் நெளம்பி. பின் அவசரமாக, ''ரொம்ப நேரமாக்க
மாட்டாரு. அவருக்கு என்னோட மூணு நாள்னு தெரியும்''
என்றாள். மத்த மூணு பெண்டாட்டிகளைப் பத்தி அவர்கள்
பேசக் கூடும் என்று அவள் வேறுபேச்சை எடுத்தாள். தானே
போய் முஸ்தபாவைத் தேட மனசு அடித்துக் கொண்டது. என்
மூணு நாளை யாரோ திருடிக் கொள்கிறார்கள்! மத்த மூணு
சம்சாரங்களுக்கும் இது தெரியும். என்னிடமிருந்து
அவர்கள் பறித்துக் கொள்கிறார்கள் முஸ்தபாவை. நல்லா
சாப்பாடு போட்டு இடுப்புத் துணியை அவிழ்க்கிறார்கள்,
அவள் செய்யவேண்டிய முறை அது. நான் பேசாம இருக்க
வேண்டியிருக்கு. என்னால் செய்யக் கூடுவது எதுவும்
இல்லை. ஆஸ்பத்திரில சேத்துருப்பாங்கன்னோ, போலிஸ்ல
அவர் மாட்டிருப்பாருன்னோ அவளுக்கு உதிக்கவேயில்லை!
(தொடரும்)