<<<<சென்ற வாரம்
சின்னச்
சின்ன பதார்த்தங்கள் முஸ்தபாவுக்குப் பிடிக்கிற
மாதிரிச் செய்ய அறிந்தவள் அவள். அவருக்கு இதில்
அதிகச் செலவும் கிடையாது. அவரிடம் காசு என்று அவள்
கேட்டதும் இல்லை. அவருக்காக அவள் கடன் வாங்கக் கூட
அஞ்சவில்லை. அவர் வாய்க்கு ருசியாகப் போட வேண்டும்.
சில சமயம் திடுதிப்பென்று வந்து நிற்பார். அவளைப்
புதுக்கல்யாணம் முடித்த காலம் அது. அப்பக்கூடச்
சுறுசுறுப்பாக அவரை, அவர் வயிற்றைக் கவனித்துக்
கொள்ளவில்லையா? அவர் சகாக்களே இதை அறிந்தவர்கள்.
மனசை இப்படி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தூக்கம்
சொக்கியது. சாயந்தரத்துக்குள் அவர் வந்தாக வேண்டும்
என நினைத்துக் கொண்டாள். ஒரேடியா நம்ம ஒதுக்கிருவாரோ,
என்று திடுதிப்பென்று ஓர் எண்ணம். மூழ்கும் மனுசனைக்
கல்லைக் கட்டிப் போட்டாப் போலிருந்தது. எல்லாம்
புதுத்தண்ணியில் கசடுகளாக மனசில் ஒதுங்கியபின்,
உற்சாகத்துக்கு அவள் மீண்டும்சிநேகிதிகளோடு கலந்து
கொண்டாள். குழந்தைத்தனமான ஆர்ப்பரிப்பு. நம்பிக்கை
சார்ந்த எளிய திருப்தி. பொட்டலத்தில் அவளுடைய சாமான்.
எல்லாரும் பார்க்கிறார்கள், உள்ளே என்ன இருக்கும்
அவர்களுக்குத் தெரியாது. அவளுக்கு மாத்திரமே தெரிந்த
விஷயம் அது! அவள் கலகலப்பாக எல்லாருடனும் பேசிக்
கொண்டிருந்தாள். முஸ்தபா பசியோடு வருவார்! முழுக்க
அவளுக்கேயான முஸ்தபா! தூரத்தில் மர உச்சிக்கு மேலாகச்
செந்தூரம் பூசிக் கொண்டு மேகங்கள் சூரியனை மறைத்தன.
மாலை நமாஸ் பண்ண நேரம் கிட்ட வந்தது. பெண்கள்
அறைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். மர நிழல்கள் பரந்து
விரிந்து இருண்டு படர்ந்தன. இரவு இறங்கியது. இருண்ட,
நட்சத்திர இரவு.
குழந்தைகளுக்காக நெளம்பி கொஞ்சம் சோறாக்கினாள்.
கறிக்காகக் குழந்தைகள் கூச்சலிட்டன. ''அது
வாப்பாவுக்கு. பகல்ல அவர் சாப்பிடலயில்லா'' என்றாள்
நெளம்பி விடாப்பிடியாக. குழந்தைகள் சாப்பிட்டு
முடித்ததும் சமையல் நெடி போக ஒருமுறை உடலைச் சுத்தம்
செய்து கொண்டாள். கைகால் பாதம் என்று எண்ணெய்பூசி
ஹென்னாவைப் பளபளவெனப் பொலியச் செய்தாள். வாசல் பக்கம்
பெஞ்சு போட்டு உட்கார்ந்து கொண்டாள். அவளது சென்ட்
வாசனை அறைமுழுதும் மணத்தது. மத்த பெண்களின் கணவர்கள்
வர ஆரம்பித்திருந்தார்கள்.
அவள் மாமாவைக் காணவில்லை. திரும்ப அலுப்பாக
உணர்ந்தாள். நெஞ்சு வலித்து. இருமல் வந்தது.
உள்ளெல்லாம் எரிந்தது. அவளது மூணு நாள், ஆஸ்பத்திரிச்
செலவு கட்டப்படியாகாத நிலை, கொஞ்சம் மரப்பட்டை பஸ்பம்
வாங்கித் தண்ணீரில் கலந்து குடித்துக் கொண்டாள்.
மருந்தின் ருசி இதில் இல்லை, என்றாலும் உள் எரிச்சல்
மட்டுப்பட்டது கொஞ்சம். மனசு கலவரப்பட்டது. எங்க
இருப்பாரு? முதல் சம்சாரம் கூடயா? ஐய! அவள் கிழவி.
ரெண்டாமத்தவள்? ஐய! அவரு அவளைத் திரும்பிப்
பாக்கறதேயில்லை, எல்லாருக்கும் தெரிந்த விஷயம் அது.
மூணாவது நாந்தான். ஆக நாலாமத்தவள் வீட்லதான்
இருக்கணும். என்னென்னவோ யூகங்கள். பதில் தனக்கே
நிச்சயமில்லாதிருந்தது. படுக்கைக்குப் போக
முடியவில்லை அவளால். நேரம் எப்பவோ தாண்டியிருந்தது.
வரேன்னு சொன்ன காதலனுக்காகக் காத்திருக்கிறாப் போல.
இன்னும் பாக்கலாம், இப்ப வந்திருவார்.
அவநம்பிக்கையும், அசட்டுத்தனமுமாய் ஆனால்
காத்திருந்தாள். தன்னைத்தானே வருத்திக் கொண்டாள்.
மனசு பூரா அவளது சக்களத்தி வீடுகள், உள்ளே கூட
நுழைந்து தேடுகிறாள்!
அவரை அவள் அலட்சியப் படுத்துவதாக நினைத்துவிடக்
கூடாது என்ற கவனத்துடன் அப்படியே நல்ல உடையும்,
அலங்காரமுமாய்ப் படுக்கையில் படுத்துக்
காத்திருந்தாள். பெரு விளக்குகளை அணைத்து விட்டாள்.
மங்கலான விடிவிளக்கு. அவருக்காக விழித்திருக்க
விரும்பியும் தானறியாமல் கண்ணயர்ந்து விட்டாள்.
கதவருகே அவர் வரும்போது வரவேற்க அவள் தயார் என்கிறாப்
போல, கதவை நாதங்கியிட்டு எதிர்பார்த்துக்
காத்திருந்தாள். அவரது கடமை தவறாத மனைவி நான்.
எப்போதும் என் கடன் அவர் பணி செய்து கிடப்பதே. பகலோ
இரவோ, எந்த நேரமும் அவரைப் பார்த்துக் கொள்ள முழு
ஈடுபாடு காட்டுகிறேன். வருகையில் என் கையை இடுப்பில்
அழுத்தி ஒயிலாய் இடுப்பு மணிகளை அசைப்பேன். சட்டென்று
அவர் திரும்பி தலைமுதல் கால்வரை என்னைப் பார்ப்பார்.
வந்தது
காலை. வரவில்லை முஸ்தபா. பிள்ளைகள் எழுந்ததும்
வாப்பாவைக் கேட்டார்கள். மூத்தவன் மக்டர். அவனை அவள்
மலைபோல் நம்பியிருந்தாள். வாப்பாவுக்காகப் படுக்கை
விரிக்கப் படவில்லை என்று கவனித்து விட்டான்.
சாப்பாட்டுக் கிண்ணமும், ரொட்டியும் தொடப்படவில்லை.
குழந்தைகளை எரிச்சலுடன் விரட்டினாள் நெளம்பி. இளையவளை,
அமதெள அவள் பெயர், ''கண்ணாடி பாத்தது போதுண்டி.
லைத்தி கடைக்குப் போயி அஞ்சு பிராங்க் காபிப்பொடி
வாங்கியா'' காலைப்பாட்டுக்குப் பிள்ளைகளுக்குப் பழைய
சோற்றைச் சூடு பண்ணி நேற்றைய வெஞ்சனத்தை ஆளுக்குக்
கொஞ்சமாய்ப் பரிமாறினாள். இளையவளை வைத்துக் கொண்டு
மத்தவர்களை வெளியே விளையாட அனுப்பி விட்டாள்.
பிள்ளைகளுக்கு உற்சாகத்துக்குக் குறைவில்லை.
மருந்துக் குப்பியில் இன்னும் மூணு தேக்கரண்டி அளவே
மருந்து மிச்சமிருந்தது. முந்தைய நாளே நிறையக்
குடித்திருந்தாள். ம்.. என்று அரைக் கரண்டி மாத்திரம்
இப்போது குடித்தாள். மீதிக்கு பஸ்பம் போதும். வலி
சிறிது அடங்கியது.
''இன்னாடி நெளம்பி! காலங்காத்தாலயே ஜம்னு சீக்கிரமா
எழுந்து துணியும் மணியும்! எங்கியாச்சும் ஊருக்குப்
போறாப்லியா?'' பக்கத்து வீட்டு ஐதா. மூணு நாள்
என்றாலும் இந்த அலங்காரம் ஆளை அயர்த்தியது. இது
நேற்று பண்ணிக்கொண்ட அலங்காரம், என நினைவு தட்டியதும்
பேச்சை மாற்றினாள். ''அட அவரு வர்லியா இன்னும்?
எல்லாரும் ஒண்ணுதாம்ப்பா இந்த ஆம்பளைங்க...''
''காலைல வந்துருவாரு ஐதா'' என்றாள் நெளம்பி கணவனை
விட்டுக்கொடுக்காமல். ஆனால் அது உண்மையில் சுய
கெளரவப் பிரச்னையாய் இருந்தது. தன் நேற்றைய பாடுகள்!
சரியான தூக்கமில்லை. சத்தம் எதும் கேட்டப்பல்லாம்
முஸ்தபா வருவது போலிருந்தது. கிழட்டு முகத்தில் அசதி
தெரிந்தது.
’'நிச்சயமா, நிச்சயமா...'' என்றாள் ஐதா. எல்லாப்
பெண்களும் இந்த வேடிக்கையை நடிக்கத்தானே செய்கிறோம்!
''முஸ்தபா நல்ல மனுசர். பண்பானவர்...'' என்றாள்
இன்னொரு பெண் கூடவே. ''அப்பிடி அவர் இல்லாட்டி நான்
அவரைக் கட்டியிருப்பேனா?'' என்றாள் நெளம்பி. அதுவும்
சமாளிப்பாகவே இருந்தது.
நெளம்பியின் மூணு நாளில் முஸ்தபா வேறு வீட்டில்
இரவைக் கழித்த விவரம் காம்பவுண்டுக்குள் பரவிவிட்டது.
இது தப்பில்லையா? என்று மற்ற பெண்கள் அவளிடம் இரக்கப்
பட்டார்கள். பலதார மணம், அதற்குரிய ஒழுங்குகள் உடையது,
அதை மதிக்க வேண்டும். அவளவள் மூணு நாள் அவளவளுக்கே
சொந்தமாக வேண்டும், அதுவே நாசூக்கு மற்றும் மரியாதை.
ஆனால் இதில் வரப்புத் தாண்டல்கள் இல்லாமல் இல்லைதான்.
உதாரணமாக அந்த ஆம்பளையை முழுதும் சக்தியுறிஞ்சிக்
கொண்டு, அடுத்தவள் வீட்டுக்கு அனுப்பும்போது
ஒண்ணுக்கும் லாயக்கத்த சோப்ளாங்கியாய் அனுப்பி
வைப்பது. பலதார மணம் பற்றிப் பேசும் பொம்பளையாள்கள்,
மனைவிகளையே குறை சொல்கிறார்கள். புருஷனை அவர்கள்
எப்படி வசியம் பண்ணி மடியில் போட்டுக் கொள்கிறார்கள்
என்று ஏசிப் பேசினார்கள். ஆம்பளைகள் பற்றி எதும்
பேசுவதில்லை. அவன் அப்பிராணி, ஒருத்தி மாத்தி
இன்னொருத்தி வலையில் அவன் விழுந்து சிக்கிக்
கிடக்கிறான். எல்லாரும் நெளம்பியின் நாலாம்
சக்களத்தியை ஏசிப் பேசினார்கள்.
(தொடரும்)