<<<சென்ற வாரம்
நெளம்பி
கணவனுக்காக காபி போட்டாள். நெஞ்சுவலி என்று அவள் காபி
குடிக்கிறதில்லை. ரொட்டி பழசாயிட்டது. வந்தவுடன் காபி
தரலாம். வேற ரொட்டி அவர் வந்தவுடன் வாங்கிக்
கொள்ளலாம். நீண்ட நெடிய பொழுதுகள் கடந்து போகிறது
மேலும் மேலும் கஷ்டப்படுத்தியது. இந்தாளு
எங்கருக்காரு தெரியலையே என்றிருந்தது. கண்ணில் அந்தத்
தேடல் பளபளத்தது. எந்த ஆம்பிளைக் குரலுக்கும் அவள்
விரைத்து நிமிர்ந்து பார்த்தாள். நெஞ்சுவலி
அதிகரித்திருந்தது. உடம்பில் மட்டுமல்ல மனசே வலித்தது.
உடம்பு சுவாசப்பட்டால் மனசில் வலி கிளம்பியது.
ரெட்டைக் குதிரைச் சவாரி போல ரெட்டை வலி.
மணி நாலு. நெளம்பி எதிர்பாராமல் அவளது ரெண்டாவது
சக்களத்தி வந்து சேர்ந்தாள். நெளம்பியின் மூணுநாள்
இது என அறிந்து அவள் முஸ்தபாவைத் தேடி வந்திருந்தாள்.
என்ன விஷயம் என்று அழுத்திக் கேட்டும் காரணத்தை அவள்
சொல்லவேயில்லை. பொறாமை பிடிச்சவள், பார்க்க
வந்திருக்கிறாள் என நெளம்பி நினைத்துக் கொண்டாள். 'வீட்டை
எப்பிடி சுத்தபத்தமா வெச்சிருக்கேன்' நான் பாரடி பார்.
'என்னென்ன சாமான்லாம் அடுக்கி வெச்சிருக்கிறேன்' பார்.
முஸ்தபா இவளிடம் அதிக மையலுடன் இருப்பதாக அவள்
நினைக்க வேண்டும் என நெளம்பி நினைத்தாள். என்னென்னவோ
பேசிக் கொண்டார்கள். நெஞ்சு வலி
அதிகமாகியிருந்ததுஎன்றாலும் அவள் மருந்தைத் தொடவில்லை.
நெளம்பி
கல்யாணம் முடித்தபோது, நல்லா ஞாபகம் இருக்கு,
இவளுடைய மூணு நாளை 'லபக்'கி விட்டாள் அப்போ இவளே ஆக
இளையவள்! நாள் தவறாமல் முஸ்தபா வந்து போவார். ஒருவேளை
இவளோட மூணாமத்த குழந்தை, ரெண்டாவது சக்களத்தியின்
மூணு நாளில் கருத்தரித்திருக்கலாம். ஆனால் அவள்
வந்ததும் அவர்கள் பேசிக் கொண்டதுமாக, ஒரு விஷயம்
தெரிந்தது, நெளம்பி இப்போது முஸ்தபாவின் ஆசைநாயகி
அல்ல! அது மனசில் தட்டிய கணத்தில், இவளையும்
குழந்தைகளையும் பற்றிய அவளது நல விசாரிப்பும், வீட்டை
இவள் வைத்துக் கொள்கிற நேர்த்தி பற்றிய பாராட்டும்,
இவளது உடையலங்காரம், அடடா அந்த சென்ட் எல்லாம்
பற்றிய பேச்சுமே நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சியது.
எதிரிகள் இருவரின் வஞ்சனையான பேச்சு வார்த்தை அது.
ஐயோ! இதெல்லாம் விட்டு ஓடிட்டாத் தாவல என்றிருந்தது.
நாம எல்லாரும் ஏன் இப்பிடி ஒரே ஆம்பளையின் பகடைக்காயா
ஆகணும்?
ஆனா ஒண்ணு. அந்தச் சக்களத்தி நெளம்பியிடம் தன்
பிள்ளைகளுடன் விளையாட இவள் குழந்தைகளை அனுப்பி
வைக்கும்படி மனசாரச் சொன்னாள். ஒரு தோரணையுடன்
நெளம்பி தலையாட்டினாள். தன்னைத் தாழ்த்திக் கொள்ளாத,
விட்டுக் கொடுக்காத பந்தா அது. சகஜபாவனையில் அந்த
சக்களத்தி, தான் முஸ்தபாவைத் தேடி வந்ததைத்
தெரிவிக்கச் சொன்னாள். நெளம்பியின் மூணு நாளை அவள்
எடுத்துக் கொண்டதாக வேறெவளாவது போட்டுக் கொடுத்தால்,
நெளம்பி அதை நம்பக் கூடாது, அவளேகூட அவரைப்
பார்த்துப் பேச வேண்டியிருப்பதால்தான் வந்தாள்!
முஸ்தபாவைக் கடைசியா எப்ப பார்த்தே என்று நெளம்பி
அவளைக் கேட்க நினைத்து, தவிர்த்து விட்டாள். அவள்
சிரித்தபடி ''என்னோட மூணு நாளின் கடைசி நாள்லதான்!
இப்ப ஒரு அவசரம், அதான் வந்தேன்'' என்றிருப்பாள்! 'ஒய்யாரக்
கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும்
பேனும்'. அதற்கு நெளம்பியும் அப்பிராணி பாவனையில்,
''அதில்ல, இடையில சந்தர்ப்பவசமா எங்கியும்
பார்த்திருக்கலாம்லியா, அதான்'' என்பாள். 'குடிக்கிறது
கூழ், கொப்புளிக்கிறது பன்னீர்'னு பழமொழி!
யாருமே இதில் அடிபட்டு விடவில்லை. அவரவர் யோசனையில்
பேசினார்கள் அவ்வளவுதான். எல்லாருமே புருஷன்
மோகவயப்பட்டதில் வாழ்க்கைப்பட்டு, அவர்களின்
தாம்பத்தியம் அனுபவித்து விசிறியடிக்கப்
பட்டவர்கள்தாம். அந்த ஆம்பளை, சதைகொத்திக் கழுகாட்டம்,
ஏமாற்றம் என்னும் விஷத்தைப் பீய்ச்சி அவர்களை
விளையாட்டு பொம்மையாய் வீசியெறிந்து போய்விட்டான்.
அவர்கள் எல்லாவளுக்கும் தெரியும், நல்லாத் தெரியும்,
இதைவிட அவர்கள் கேவலப்பட முடியாது. மிச்ச சொச்சக்
கெளரவத்தை அவர்கள் வாய்ச்சவடாலில் காப்பாற்றிக்
கொள்ள முனைந்தார்கள். இதை அவர்களே பிடிக்காமல்தான்
செய்தார்கள். மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள
வேண்டியிருந்தது. பொய் என்பது, கேட்கிறவளுக்கும்
தெரியும், சொல்கிறவளுக்கும் தெரியும். ஆனால் அதை
உடைத்து விட முடியாது. உடைத்தால் அவர்களே உடைந்து
போவார்கள்.
சக்களத்தி கிளம்பிப் போனாள். சடாரென்று வாசல்வரை
வந்து பார்த்தாள் நெளம்பி. இவள் எதற்கு
வந்திருக்கிறாள் தெரிந்து விட்டது அவளுக்கு. முஸ்தபா
இங்கே இல்லை என்றதில் ஒரு அல்ப சந்தோஷம். என்னை
மட்டுமா அவரு த்ராட்டில் விட்டாரு, இதோ இன்னொருத்தி!
முஸ்தபா நாலாவது சம்சாரத்துடன்தான் இருந்தாகணும் என
நினைத்துக் கொண்டாள் அவள். சக்களத்தி
நினைத்திருப்பாள், என்னைவிட இளையாளா, எங்க
கிட்டேர்ந்து பறிச்சிக்கினியே? இப்ப பார்! உனக்கு
இளையாளா உன்னைத் தண்ணி காட்டறா ஒருத்தி. இப்ப
எங்ககூட நீ சேர்ந்து இதைச் சமாளிச்சாகணும் பாத்தியா!
அட எழவெடுத்த கிழமே! அவன் உன்னைவிட்டு இன்னொருத்தி
கூடப் படுத்துக் கிடக்கான். நாளைக்கும் அப்படித்தான்
ஆகப் போவுது.
ரெண்டாம் நாளும் கடந்தது. இப்போது அதிக உக்கிரமாய்க்
கழிந்தது இந்த நாள். அவள் சரியாகச் சாப்பிடவில்லை.
பசிக்கு என்று ஏதோ சாப்பிட்டதாய்ப் பேர் பண்ண
வேண்டியிருந்தது.
அந்த ஞாயிற்றுக்கிழமை. எல்லா ஆம்பிளைகளும் வீட்டில்.
சிலர் குழந்தைகளைத் தூக்கிவைத்துத் திரிகிறார்கள்.
சிலர் பெரிய பிள்ளைகளுடன் விளையாடிக்
கொண்டிருந்தார்கள். அறைகள் கலகலப்பாய் இருந்தன.
சதுரங்கமும், சீட்டாட்டமுமாய் ஜமா சேர்ந்திருந்தது.
காம்பவுண்டே சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தது.
சிரிப்பும் எக்காளமுமாய் வீடுகள் நிறைந்தன. பெண்கள்
வீட்டு வேலைகளில் மும்முரப் பட்டார்கள்.
ஐதா
நெளம்பியிடம் வந்து, ''சில ஆம்பளைகள் கடைசி
நிமிடத்தில்தான் வேறு காரியம் இழுத்துப் போட்டுக்
கொள்கிறார்கள். இன்னிக்கு ஞாயிறுதானே, இன்னிக்கு
வருவார்'' என்றாள் ஆறுதலாய். ''ஐதா, இந்தாளு வேலை
வெட்டிக்கு எதுவும் போகலியே'' என்றாள் நெளம்பி. கண்
வெறிக்கப் பேசினாள். இருமல் வந்தது. ''ரெண்டு
முழுநாள், ரெண்டு ராத்திரி நான் காத்திருக்கேன். இது
என்னோட மூணு நாள். அட பகல்ல இல்லாட்டியும் ராத்திரி
வரலாமில்ல? பாத்துப் பாத்து கண்ணே பூத்திட்டது''
''நா
வேணாப் போயிப் பாத்திட்டு வரட்டா?''
''இல்ல
வேணாம்'' என்றவள், மனதில் 'சரி' என்று நினைத்தாள்.
எதையாவது சொல்லிச் சங்கடப் படுத்தி விடுகிறாள் இவள்.
ஆனால் அவளுக்கு ஐதாவைப் பிடிக்கும். நேற்றைக்கு
ராத்திரி நிஜத்தில் அவள் வீட்டைவிட்டு வெளியிறங்கிச்
சிறிது தூரம் வரை போய்விட்டாள். பிறகு
கேவலப்படக்கூடாது என்று அடக்கிக் கொண்டு திரும்பினாள்.
தன்னைப் பார்க்க விருப்பம் இல்லாத ஒருத்தனைப் போய்ப்
பார்த்து இன்னும் தன்னைத் தரம் தாழ்த்திக் கொள்வதா?
என்றிருந்தது. விடிகிறவரை என்னென்னவோ யோசனைகள்.
முஸ்தபாவுடனான கல்யாண உறவு முடிந்து விட்டது. தலாக்
சொல்லப் போகிறார். காலையில் திரும்ப நம்பிக்கை
வெளிச்சம். இன்றைக்கு வருவார். இது என் 'கடைசி' இரவு!
ஒரு ஆயிரம் பிராங்க் என்று கடன் கேட்டபோது ஐதா உடனே
உதவினாள். அவள் சொல்படி குழந்தைகளை நாலாமத்தவள்
வீட்டுக்கு அனுப்பினாள். ''அம்மாவுக்கு மேலுக்குச்
சுகமில்லை, உடனே பாக்கணும்னு சொன்னேன்-னு
வாப்பாகிட்டச் சொல்லுங்க''.
பக்கத்துச் சந்து பஜாரில் கோழியும், மசாலா
சாமான்களும் வாங்கி வந்தாள் அவசரமாக. மணக்க மணக்கக்
கோழிக்கறி சமைக்கும்போது முகம் பூரித்துக் களித்தது.
நாக்கில் தண்ணியூற வைக்கும் சமையல் வாசம்
காம்பவுண்டையே தூக்கியடித்தது. ஞாயிற்றுக் கிழமை வேறு!
அறையைப் பெருக்கி, சுத்தம் பண்ணிக் கதவை, ஜன்னல்களைச்
சாத்தினாள். ஆனாலும் கீறல்கள் வழியாக அறையில்
தெளித்த சென்ட் வாசனை வெளியே பரவியது!
பசங்கள்
திரும்பி வந்தார்கள். ''அப்பாருக்கு உடம்பு
சரியில்லையா?'' என்று கேட்டாள். ''அதெல்லா ஒண்ணில்ல.
வந்திட்டே இருக்கார். வெளலிமதா (நாலாம் மனைவி பெயர்)
வீட்டில் கூட்டுக்காராளோட இருந்தார். உங்களைக்
கேட்டாரு''
''அவ்ளதான் பேசினாரா?''
''ஆமாத்தா.''
''இந்தாங்க, பத்து பிராங்க் இருக்கு, வெளிய போய்
விளையாடிட்டிருங்க.''
வருகிறார்
என நினைக்க கதகதப்பான உணர்வு வந்தது. வந்தா அவரைக்
கன்னாபின்னான்னு திட்டணும்னு வார்த்தை வார்த்தையாச்
சேத்து வைத்திருந்தாள். போட்டுச் சாத்துவார் என்னை,
அது பரவால்ல. ஆனா அந்த வார்த்தையெல்லாம் இப்ப
பிரயோஜனமில்லை. விட்ட நாளுக்கு இப்ப நம்மால முடிஞ்ச
நிறைவு செஞ்சனுப்பணும். அவரைப் பத்திய பிராதுகள்
இப்ப வேணாம். கூட்டுக்காராளோட வர்ற வழில
இருப்பாராயிருக்கும். அபாரமான ஒரு சாப்பாடு அவரைப்
படுக்கைக்கு இறுத்தி விடும்!
சாப்பாட்டுக்கடை முடித்தாள். ஒரு குளியல் போட்டாள்.
மீதி ஒப்பனைகளிலும் இறங்கினாள். தலை வாரி, புருவம்,
உதடு மெருகேற்றிக் கொண்டாள். கஞ்சி போட்ட வெள்ளை
இரவிக்கை. கைத்தறி ஆடை இடுப்புக்கு. கை கால்களை
நோட்டம் விட்டாள். திருப்தியாய் இருந்தது. நேரம்
ஓடிக் கொண்டிருந்தது. ஆளைக் காணவில்லை. காம்பவுண்டில்
யாருமே அவளுடன் பேசப் பயந்தார்கள். அவளை
நோகடித்துவிடக் கூடாது என்றிருந்தார்கள். வாசலில்
வந்து அவள் உட்கார்ந்து கொண்டாள். மற்ற ஜனங்கள் அவள்
முகத்தைச் சந்திப்பதைத் தவிர்த்தார்கள். உதட்டைக்
கடித்து அழுகையை அமுக்க முயன்றாள் என்றாலும் நிறைந்த
குளமாய் கண்ணில் கண்ணீர் தளும்பியது.
(தொடரும்)