<<<<சென்ற வாரம்
தூரத்தில்
எதோ வண்டியின் சத்தம் காற்றில் சிதறிக் கேட்டது.
நினைவுச் சின்னமாய் நிற்கும் சிலையைத் தாண்டி காலம்
நகர்ந்து செல்கிறாப் போலிருந்தது அவளைப் பார்க்க.
அந்தி மயங்கி இரவு வந்தது. மேஜைமேல் மூணு தட்டுகள்,
ஒரு நாளைக்கு ஒண்ணு. ''நான் கூட இருக்கேண்டி''
என்றபடி ஐதா அறைக்குள் நுழைந்தாள். படுக்கையின் ஓரம்
நெளம்பி உட்கார்ந்திருந்தாள். மற்றவர்களின் அமைதி
தாளாமல் அவள் உள்ளே ஓடி வந்திருந்தாள். ''நீ மனசில்
போட்டுக்காதே இவளே'' என்றாள் ஐதா. ''உன் அவஸ்தை
எல்லாப் பொண்ணுக்கும் இங்க உண்டு. அது நல்ல விஷயம்
இல்லதான். இனியும் காக்க வைக்க மாட்டாருன்னுதான்
தோணுது இவளே...''
உதட்டைக் கடித்தபடி முகம் பளபளக்க நெளம்பி நிமிர்ந்து
பார்த்தாள். அவள் எதுவும் பேசும் நிலையில் இல்லை
என்று ஐதா உணர்ந்தாள்.
அவள் அறைக்கதவு சாத்திக் கிடக்கிறது. எல்லாமே இருள்
போர்த்திக் கிடக்கிறது. இராச்சாப்பாடு கழிந்து
குழந்தைகள் கூட சத்தமாய் விளையாடுவதை
நிறுத்தியிருந்தன. பெரியவர்கள் தூக்கக் கலக்கத்தில்
படுக்கையைப் போட நினைக்கிற நேரம் முஸ்தபா ரெண்டு
கூட்டாளிகளுடன் காம்பவுண்டுக்குள் நுழைந்தார். வெளேர்
உடையில் இருந்தார். தயங்கி நின்ற மத்தாளுகளை உள்ளே
வரச்சொல்லியபடியே நெளம்பியின் குடிசைக்குள்
நுழைந்தார். அவள் அசையவேயில்லை.
''அடியே
என்னா விளக்கேத்தல்லியா?'' ''காலைலியே கிளம்பினவரு
எங்க போயிட்டு வரீரு?'' என்று கேட்டாள் நெளம்பி. ''எப்பிடி
இருக்கே பீவி?'' என்று கேட்டபடி அவரே விளக்கை
ஏற்றினார். போய்ப் படுக்கையில் உட்கார்ந்தபடியே
மத்தாளுகளை பெஞ்சில் அமரச் சொன்னார். ''இன்ஷா அல்லா...''
என்றாள் நெளம்பி, கோபம் அடங்கிச் சுவாசம்
வந்திருந்தது மெலிந்த முகத்தில்.
''பிள்ளைங்க?''
''நல்லாருக்காங்க, இன்ஷா அல்லா...''
''அத்தனை
சுரத்த இல்லியே பீவி பேச்சு...'' என்றான்
வந்தாளுகளில் ஒருத்தன். ''எல்லாம் நல்லாத்தான்
இருக்கு'' என்றாள் நெளம்பி. ''நெஞ்சுத் துடிப்பு,
எப்படி இருக்கு இப்பல்லாம்?'' என்று அனுசரணையாய்க்
கேட்டார் முஸ்தபா.
''சரியாத்தான்
ஓடிட்டிருக்கு”.
''இன்ஷா
அல்லா, நாங்க கிளம்பறோம்'' என்றான் ஒருத்தன் அவளது
உதாசீனம் தாளாமல்.
''இரு'' என்று கையமர்த்தினார் முஸ்தபா. ''ஏம்மா!
இப்ப சாப்பிடலாமா, காலைல பாத்துக்கிறலாமா?''
''காலைல போறச்ச எதும் குடுத்தும் போனீங்களா என்ட்ட?''
என்றாள் நெளம்பி.
''என்ன பேசற நீ? உன் பேச்சே சரியில்லையே...''
''இல்ல மாமா! சும்மாதான் கேக்கறேன். நான் கேட்டது
தப்பா?''
முஸ்தபாவுக்கு மத்தாளுகள் முன்னால் அவரை எகத்தாளம்
பண்ணுகிறாள் என்று புரிந்தது. ''உனக்கும் வேடிக்கை
பண்ணத் தெரியுது... இது உன்னோட மூணு நாள், தெரியலியா?''
''மாமா மறந்திட்டேன். மன்னிக்கணும். எத்தனை
தகுதியில்லாத மனைவியாயிட்டேன் இல்லே?'' என்று அவர்
முகத்தை நேரே பார்த்தாள்.
''என்னடி கிண்டல் பண்ணறியா?''
''மாமா! நான் பண்ண முடியுமா? யார் என்னை
சொர்க்கத்துக்கு அனுப்பி வைப்பா. உருப்படியான ஒரு
கணவனைத் தவிர? இந்த உலகத்திலும், அடுத்த
பிறவியிலுங்கூட நான் உங்களைக் கேலி பேசலாமா?'' ''எல்லாரும்
அப்பிடி நினைக்கறதுதான்...''
''யாரு
எல்லாரும்?'' ''நான் உள்ள வர்றப்ப, எழுந்து கூட
உன்னால நிற்க முடியல, அதைச் சொல்லு முதல்ல''.
''மாமா
மன்னிச்சிருங்க. உங்களைப் பார்த்த சந்தோஷத்தில்
எனக்கு எதுவும் ஓடல்ல. அப்பிடின்னாலும் அது யாரு
தப்பு மாமா?''
''என்னா
இது மூணு தட்டு, எதுக்கு?'' என்று சங்கடத்துடன் அவர்
கேட்டார்.
''இந்த
மூணு தட்டா? உமக்கு சுவாரஸ்யமில்லாத விஷயம். இது
என்னோட மூணு நாள்! அதுல உமக்கு என்ன சுவாரஸ்யம்
இருக்கு மாமா?'' அந்த மூணு பேரும் சுதாரித்து ஒரே
சமயம் எழுந்து கொண்டார்கள். நெளம்பி வேணுமென்றே ஒரு
தட்டை எறிந்தாள். '' மன்னிச்சுக்கங்க மாமா'' மற்ற
இரண்டு தட்டுகளையும் நொறுக்கினாள். கண்
சிவந்திருந்தது. நெஞ்சில் திடீரென்று வலி. அப்படியே
பாதியாக மடிந்து தரையில் விழுந்தபோது அவள் அலறிய
அலறல் முழுக்காம்பவுண்டுக்கும் கேட்டது.
சில
பெண்கள் அவசரமாய் ஓடி வந்தார்கள். ''என்னாச்சி
அவளுக்கு?''
''ஒண்ணில்ல!
நெஞ்சு வலி...'' என்றார் முஸ்தபா. ''கிறுக்குப்
பொம்பள, என்ன காரியம் பண்ணிருக்கா பாருங்க. மூதேவி
பொறாமையிலேயே மூச்சு முட்டிச் சாகப் போறா. நான்
ரெண்டு நாள் வரல்ல அவ்ளதான்... ஆ..வூ..ன்னு கத்தறா
கதர்றா. கொஞ்சம் பஸ்பப்பொடி குடுங்க சரியாயிருவா...''
என்று உளறியபடி முஸ்தபா வெளியேறினார். ''இந்த
அம்மணிகளுக்கெல்லாம் இப்ப சங்கம் கிங்கம்னு வந்தாச்சி.
இவங்க இனி நாட்டை ஆளப் போறாங்களாம்ல?'' என்றான் கூட
வந்தவனில் ஒருவன்.
''பமகோல
(பமகோ - ஓர் ஆப்பிரிக்க நகரம்) கேள்விப்பட்டீங்களா?
பலதார மணத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டாங்களாமே?''
என்றான் அடுத்தவன். ''ஆண்டவரே ஒரே மனைவியிடமிருந்து
எங்களைக் காப்பாற்று''
''பின்ன
அவங்களே வெளிய இறங்கி வேலை கீலை பார்க்கட்டும்''
என்றார் முஸ்தபா காம்பவுண்டை விட்டு வெளியேறியபடியே.
ஐதாவும் கூட சில பெண்களும் நெளம்பியை எழுப்பி
படுக்கையில் படுக்க வைத்தார்கள். இன்னமும் அவள்
முனகிக் கொண்டிருந்தாள். ஒருத்தி பஸ்பப்பொடியையும்
தண்ணீரையும் எடுத்து வந்தாள்...
(நிறைவு பெற்றது)
Her
Three Days
by Sembene Ousmane
translated in English by Len Ortzen
எழுத்தாளராகவும் திரைப்பட இயக்குனராகவும் ஒளஸ்மேன்
பரவலான புகழ் பெற்றவர். ''பண அஞ்சல்'' (The
Money Order)
என்ற அவரது திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில்
பரிசு பெற்றது.
ஒளஸ்மேன் கதையை விலாவாரியாக விவரங்கள் எதையும்
விடாமல் தானே வாசகனுக்கு அளிக்க முன்வருகிறார்.
அந்தச் சமூகச் சூழல், வாசகச் சூழல் என்று பார்த்தால்
அது முறையாகவும் இருக்கலாம். தமிழ்ச் சிறுகதை உலகம்
மற்றும் வாசகர் வட்டம் மேலும் ஆழமான புரிதல்களில்
இயங்கி வருகிறது என்று இதை வாசிக்கையில் உணர முடியும்.
முக்கியமான கதை என்று உணர்ந்தேன். அந்த வாழ்க்கைச்
சூழல், இதுவரை தமிழ் எழுத்து அறியாதது அல்லவா?
குழந்தைகளுக்கே நல்ல உணவு தராமல், கணவனுக்கு என்று
எடுத்து வைக்கும் தாய். பலதாரக் கணவனைத் தன்னுடன்
இறுத்திக் கொள்ள படுக்கையிலும் அடிமைப்படத் தயாராகி,
வெளி கெளரவத்துக்கு ஏங்கி, உள்ளே கேவலப்பட்டுச்
சுருளும் பெண்மை. அடிமைத்தனத்தின் உச்சங்களை
விரித்துக் காட்டியிருக்கிறது கதை. அந்த மூணு தட்டை
மேஜையில் வைத்து, எடுத்து உடைப்பது, கொஞ்சம்
அதிகப்படியான அலட்டலாய்த் தோன்றியது. சரி! திரைப்பட
உத்தி, கதையில் வைத்து விட்டார். இந்த பலதாரக் கணவன்,
ஓசிச் சாப்பாடு என்று தான் மட்டும் வராமல் கூட
ஆட்களையும் விருந்துக்கு அழைத்து வருகிறான்!
கூட்டாளிகளின் தாரங்களின் வீட்டுக்கு இவனும் தின்னப்
போவான் என்றிருக்கிறது.
*******