 |
இதழ் 334 |
 |
அக்டோபர் 15 2007
|

|
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
 | Home
>> | Story |
| வசீகரப் பொய்கள் (1)
- எஸ்.ஷங்கரநாராயணன் |
| | கானகம் மரங்களின் மொத்தம். வசீகரத்தின் ஒட்டு மொத்தம். பகலிலும் அதன் மெத்தென்ற குளுமை. இரையெடுத்த பாம்பாய் மனசில் பெரும் திருப்தியும் சுவாசமுமான கணங்கள். நான் கானகத்தை விரும்புகிறேன்.
1. நான் உடல் நீ சிறகு இது கவிதை
2. வார்த்தைகளோடு மிதக்கிறது எழுத்தாளனின் பிணம்
3. இறந்த பறவையின் ஆவி சுற்றி வருகிறது பூமியை
4. கனவு கண்டுகொண்டிருக்கிறபோதே தூங்கிவிட்டேன்
5. கல்லறை நிழலில் சீட்டாடுகிறார்கள்
6. மரங்களை எனக்குப் பிடிக்கும். மர நிழலில் ஓய்வு கொள்ள முடிந்தாலும் சற்று நிமிர்ந்தால் காயபாத்யதை தனி அனுபவம். விருட்சங்களில் காலம் தங்கி ஓய்வு கொள்கிறது. நான் விருட்சங்களை நேசிக்கிறேன்.
கானகம் மரங்களின் மொத்தம். வசீகரத்தின் ஒட்டு மொத்தம். பகலிலும் அதன் மெத்தென்ற குளுமை. இரையெடுத்த பாம்பாய் மனசில் பெரும் திருப்தியும் சுவாசமுமான கணங்கள். நான் கானகத்தை விரும்புகிறேன்.
ஆனால் வழிதவறி விட்டதாக நினைத்த கணம் எல்லாம் கெட்டுப் போனது. அதிலும் சிறு குழப்பம். நான் வழி தவறிவிட்டேனா, புதிய பாதையொன்றில் புதிய அனுபவம் தேடிச்சென்று கொண்டிருக்கிறேனா என மனம் மயங்கியது. அதுகூடச் சரியல்ல. அந்தப் பகுதிகள் ஏற்கனவே எனக்கு எப்படியோ தெரிந்த பகுதிகளே என மனம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. சரி, தெரிந்த பகுதிகளில் வளைய வருவதில் உள்ள சந்தோஷம், அதன் பாதுகாப்புத் தன்மை, தாய்மடி எனக்கு ஏன் வாய்க்கவில்லை?
மனசின் கேள்விகளைப் பிடுங்கியெறிய முயன்றேன். அது கேள்விகளுக்கான நேரங்கூட அல்ல. சில விடைகள் எனக்குத் தரப்படக் காத்திருக்கின்றன என்கிறது சூட்சுமம். அதுவே என் ஆர்வத்தை, எதிர்பார்ப்பை, பயத்தைத் தூண்டுகிறது. உள்ளே ஒரு விநோதப் பூவின் வாசனை, கண்ணில் எங்கிலும் தட்டுப்படாததோர் பூவாசனை, இந்திரியங்களைத் தாண்டி புலன்களில் மாத்திரம் எட்டுகிறது. எனக்குள் என்னவோ ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை உணர்கிறேன். அதை முன்கணிக்க முடியவில்லை.
கால்கள் தன் பாட்டுக்கு நடந்து செல்கின்றன. எங்கே என்கிற குறி இல்லை. அவை அறியமாட்டா. நான் அங்கே, அந்நேரம், அப்படி மயங்கித் தடுமாறி நடந்து போவதேகூட எற்கனவே எப்படியோ தீர்மானிக்கப்பட்ட விஷயமாய் இருந்தது. சோறு கொதிக்கும் பானைபோல எனக்குள் குமிழிகள்! 'களக் புளக்'கென்ற அதன் சதுப்புக்காடு போன்ற மூச்செடுப்பு! நான் எனக்குள் பார்த்தபடியே நடந்து கொண்டிருப்பதை உணர்கிறேன்!
அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். வெளியே என்னுடன் துணைக்கு நடந்து வர யாருமில்லை. நானே எனக்குத் துணை. ஆகவே என்னை நானே வேடிக்கை பார்ப்பது தவிர்க்க இயலாததாகிறது. அது வேண்டியும் இருக்கிறது. வெகு அபூர்வமாகவே இத்தருணங்கள் அமைகின்றன. ஒருவன் தன்னையே வேடிக்கை பார்க்க முடியுமா? உற்றுக் கவனிக்க முடியுமா? அப்போதுதான் உணர்ந்தேன். அப்படி வாய்த்தால் வெளியே சப்தங்கள் எதுவும் இல்லை என்பது பொருள் என நினைத்த கணம் பெரும் திகில் என்னைச் சூழ்ந்தது. ஆமாம்! அமைதியில் மூர்ச்சையாகிக் கிடந்தது காடு.
பொட்டுச் சத்தம் இல்லை. புள்ளிச் சத்தங் கூட இல்லை. நான் சப்தங்களை கிரகிப்பதில் சமர்த்தன். கடும் பயிற்சிகள் அதற்கென மேற்கொண்டவன். நல்லிரவில் வெளிப் பெரும் நிசப்தத்தில் இயற்கை சில பிரத்யேகச் சப்தங்களை அடையாளப் படுத்தும். மூச்சொலிகள் போன்ற கீச்சொலிகள். உனக்கு மாத்திரமேயான குரல் அது. இயற்கையின், இரவின் அந்தரங்கக் குரல். அது இயற்கையின் கனவு. ஏக்கமான சிறு ஆலம்பாடிப் பாடல் போன்றது அது. கிசுகிசுப்பாகவே அது உன்னோடு, உன் அந்தரங்கத்தோடு, காதோடு காதாய்ப் பரிமாறப்படும். அதன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? இயற்கையின் ரகசியத்தை?
'அது சரி' இது அது அல்ல. இது இரவும் அல்ல. பகல். வெளிச்சம் நெல்லடிக் களத்துக் கதிர்களாய்ப் பரந்து விரிந்து உலர்த்திக் கிடக்கிற உச்சிவேளை. மேலே வானம் மறைத்த உள்வெளியில் நான் நடமாடிக் கொண்டிருந்தேன். மன பெல்ட் நெகிழ்ந்து கிடக்கிறது. இந்நேரம் இப்பெரும் அமைதி! எப்படி? அதுவும் காட்டில். அந்தப் பொழுதே ஒரு புதிய, விநோத, மறக்க முடியாத அனுபவத்தை எனக்குத் தருவதற்காக சில முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது. சாப்பாட்டு இலையில் இடம் ஒதுக்கிக் கொண்டாற்போல.
என்ன சேதி? என்ன ரகசியம்? பகலில் கூட ஒரு ரகசியம் அதன் புனிதத் தன்மை கெடாமல் பரிமாறப்படக் கூடுமா? இயற்கையின் பெரும் மெளனம். அதுவே பெரும் செய்தியாக, அதன் கனமே தள்ளாட்டமாக இருக்கிறது. இப்படி நினைத்த கணம் கால்கள் தாமாகக் கனத்துப் போகின்றன. மேலே நடக்க முடியாதபடி அவை கனத்துக் கொண்டே வருவதைத் திடீரென உணர்ந்தேன். அதுவும் என் கட்டுப் பாட்டில் இல்லை என உணர்ந்தேன். அதுகுறித்து நான் எச்சரிக்கையடைந்தால் மனம் பேதலித்து விடும். மேலும் பலவீனப்பட்டுவிடும். ஒருவேளை கால்கள் நின்றால் அந்த மகத்தான கணத்தில் இயற்கை தன் மடிபிரித்து ஒரு இரகசியக் கனியை எனக்கு ருசிக்கத் தருமாய் இருக்கும். நிகழ்வுகள் என் கட்டுப்பாட்டில் இல்லை. ஒலியற்ற காடு என்பதுதான் புரியவில்லை. அந்தப் பகலில் அத்தனை வெளிச்சப் போதில் ஒரு சிற்றொலி கூடவா இராது? இயற்கையின் வியர்வைத் துளிகளை நான் இரவில் நுகர்திறன் கொண்டவன். இக்கணங்கள் எனக்கு ஏதேனும் சவாலை உள்ளடக்கியதாய் அமையுமா? அப்படியா? மனமே மனமே! பரபரப்படையாதே! பயந்து விடாதே! பயந்து பரபரத்து இந்தக் கணங்களை அசுத்தப்படுத்தி விடாதே. என்னை மாளாத சோகத்தைப் பிற்பாடு சுமந்து திரியுமாறு ஆக்கி விடாதே!
அட ஆமாம். அந்தக் காட்டில் ஒரு பறவைகூட இல்லை. வாழ்விடம் அல்ல அது. பாழிடம். அடர்ந்த அமைதியான காடு எனினும் அங்கே பூக்களே இல்லை. பூச்சிகளே இல்லை. பறவையொலிகளே இல்லை. அங்கே வர, அங்கே வாழ ஏனோ பறவைகள் பயந்திருக்க வேண்டும் என நினைத்த கணம் எனக்கு உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஒரு திகைப்பு ஓடுகிறது. பறவை என்று கூட இல்லை. ஓசையின்றி வறண்டு காய்ந்து கிடந்தது காட்டின் வெளிகள். உயிரின் வாடையே அற்ற உள்வெளி அது. இயற்கைகூட பச்சை வாசனையற்று நுகர ஏதுமற்று, இரக்கமற்று, ஈரமற்றிருந்தது. எனில் வியர்வை சார்ந்த வெக்கை, சூடும் இல்லை. சந்தடிகள் அற்ற, உயிர் ஊடாட்டமற்ற வெளி. சாபவெளி.
திடீரென்று நான் தனிமையில் இல்லை, நிச்சயமாக இல்லை என்கிற உணர்வு பாறையலையாக என்னை முட்டியது. யாரோ பார்க்கிறார்கள். உற்று நோக்குகிறார்கள். நான் கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டதில் கண்ணெல்லாம் எரிந்தது. கானல் நீர் போலும்! தூரத்தில் அந்தக் கரியநாய், வேட்டைநாயின் வாட்டசட்டத்துடன் நாவைத் தொங்க விட்டபடி என்னையே அது உற்றுப் பார்க்கிறது. எழுந்து எந்நேரமும் அது என்னை நோக்கி ஓடிவந்து என்னைத் தாக்கலாம்.
இப்படி நினைத்த கணம் என் பயம் அதிகரிக்கிறது. கால்களை முடிந்தவரை எட்டிப்போடு. முடிந்தவரை அந்த இடத்தை விட்டு வெளியேறு. ஓடு. ஜுட்! கால்கள் அவை எப்போதோ சொன்னபடி கேட்கும் திறத்தை இழந்திருந்தன. தாமதிக்கிற ஒவ்வொரு கணமும் பெரும் ஆபத்துக் காத்திருக்கிறது என்கிறது சூட்சுமம். அலற ஆரம்பித்து விட்டது அது. எனக்கு வெளியேறும் வழி தெரியாது. தாகமாய் இருந்தது எனக்கு. என் தெம்பு வற்றிக் கொண்டே வந்தாற் போல. நின்று இளைக்க இளைக்க சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நுரையீரல் வலிக்கிறது. கரிய நாயைக் காணவில்லை. காட்டுக்குள் ஓடியிருக்குமா?
உடனே குடிக்க ஏதாவது வேண்டியிருந்தது. காட்டில் தண்ணீர் கிடைப்பது அத்தனை சிரமமான விஷயமா என்ன? எனக்கு காடுகளைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். சிலவகை மரங்கள், நதிப்படுகை அருகிருப்பதை அறிவித்துவிடும். காற்றில் தண்ணீரின் சிறு சலசலப்போசை. தண்ணீரின் குளிர்ந்த ஓசை. அதை நான் 'நுகர்கிற' கிரகிக்கிற வல்லமை கொண்டவன். எந்த ஒலியையும் காட்டாமல், தன் ரகசியப் பெட்டகத்தை கனத்த சாவி கொண்டு பூட்டி வைத்துக் கொண்டிருந்தது காடு. வாயை மூடிக் கொண்டிருந்தது அது பிடிவாதமாய்.
என் தாகம் அதிகரித்தது.
அதுவரைக் காட்டை ஊடறுத்துச் செடி கொடிகளை மிதித்தபடி வழியொதுக்கிக் கொண்டே நான் முன்னே நகர்ந்தேன். கொள்கையின்றிப் போய்க் கொண்டேயிருப்பது தவிர நான் செய்யக் கூடியது எதுவும் இல்லைதான். உடனே மிக உடனே நான் வெளியேறிவிட உந்தப் பட்டேன். எப்படி? அதுதான் புரிபடவில்லை. காட்டின் விரிந்த பெருவலைக்குள் நான். நான் என்ன செய்யப் போகிறேன்? என்ன செய்ய வேண்டும்? என நினைக்கையில்தான் சிறு கதவு திறந்தாற்போல, ஆமாம்! காடு சற்று நெகிழ்ந்து கொடுத்தது.
ஒரு பாதை தட்டுப்பட்டது (மீதி அடுத்த இதழில்)
மேலும் பல.....
|
|
|
|
|
Source: suratha.com
|
|