காலம் மாறிப்போச்சு

வினாயகர்தான் என் இஷ்ட தெய்வம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்கு அறுபது வயது நெருங்க உள்ளது.

அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். என் வீட்டருகில் களிமண்ணைக் குழைத்து வினாயகர் சிலைகளை அச்சில் வடித்து வினாயக சதுர்த்திக்கு ஒரு வாரம் முன்பே விற்பனைக்குத் தயாராக வைப்பார்கள். ஓரணா முதல் நாலு அணா வரை பலவித சைஸ்களில் வினாயகர் கிடைப்பார். மிகச்சிறிய பிள்ளையார் ஒரு அணா, முரட்டு சைஸ் பிள்ளையார் நாலு அணா. விலை மதிப்பில்லா அந்தப் பிள்ளையாருக்கும் ஒரு விலையா என நான் ஆச்சர்யப்பட்டதுண்டு. நாம் தரும் அந்த விலை, அந்த வினாயகருக்கு இல்லை என்பதையும், அதை வடிவமைத்துத்தரும் ஏழைத் தொழிலாளிகளின் உற்சாகமான உழைப்பிற்கே என்பதையும் எனக்கு வயதாக வயதாக உணர்ந்து கொள்ள முடிந்தது. அந்தச் சிறிய வயதில் களிமண்ணை வைத்து அழகாக அச்சில் வினாயகரை வரவழைக்கும் அவர்களின் திறமையை பல மணி நேரம் அவர்கள் அருகிலேயே நின்று பார்த்து நான் வியந்ததுண்டு. என் அப்பா சாங்ஷன் செய்யும் ஓரணா அல்லது ஒண்ணரையணா நாணயத்தை எடுத்துக் கொண்டு என் வீட்டுப் பூஜைக்கு பிள்ளையார் வாங்க கோலம் போடப்பட்ட ஒரு பலகையை எடுத்துக் கொண்டு, சேதாரம் எதுவும் இல்லாத ஓரளவு நல்ல பினிஷிங் உள்ள சற்று நிதான சைஸ் வினாயகரைப் பேரம் பேசி, சர்வ ஜாக்கிரதையாக உடையாமல் வாங்கி வருவேன்.

அப்போதெல்லாம் எந்தச் சாமான்கள் வாங்கினாலும் கொசுறு கொஞ்சம் வாங்கி வருவோம். மளிகைக் கடைகளில் சாமான்கள் வாங்கும் போது கடைக்காரரே பொட்டுக்கடலை தருவார். அதுபோலவே வினாயகர் வாங்கி வரும் போது கொசுறாக கொஞ்சம் ஈரப்பதமான களிமண் கேட்டு வாங்கி வருவதுண்டு. பலகையில் அமர்ந்துள்ள வினாயகர் அசையாமல் இருக்க அந்த ஈரக் களிமண்ணை அண்டக் கொடுப்பதுண்டு. அச்சில் வார்த்த வினாயகரில் ஏதும் விரிசலோ வெடிப்போ ஏற்பட்டால் அந்தக் கொசுறுக் களிமண்ணால் ‘டச்-அப்’ செய்யவும் அது உதவும். பூஜை முடிந்த ஓரிரு நாட்களில் அந்த வினாயகரை குளத்திலோ கிணற்றிலோ போட்டு விடச் சொல்லும்போது எனக்கு அழுகையே வந்து விடும். நம்மைக் காக்கும் கடவுளை நாம் காக்க வேண்டாமா? அவரை நீரில் மூழ்கடிக்கலாமா என்பது என் சந்தேகம். ஆனால் யாரும் என் சந்தேகத்தைத் தீர்க்காமல் "அதுதான் சம்ப்ரதாயம், சொன்னதைச் செய்" என்பார்கள்.

நாளடைவில் கலர் கலராக வினாயகர் சிலைகள் வரத் தொடங்கின. ஆரம்ப காலத்தில் ஒரே கலராக நீலம் அல்லது ரோஸ் கலரில் வினாயகர் விற்பனைக்கு வந்தார். அதன் பிறகு மல்டி கலரில் ஆயில் பெயிண்ட் அடித்து அழகிய பட்டுப் புடவைகள் போல ஜொலிக்கும் வினாயகர்கள் விற்பனைக்கு வரத் தொடங்கினர். பார்க்கவே வெகு அழகாக இருக்கும். எனக்கு அந்த கலர் பிள்ளையாரில் ஒன்று வாங்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை இருந்தது. களிமண் பிள்ளையாரை விட கலர் பிள்ளையார் பல மடங்கு விலை இருந்ததாலும், அதனை வாங்கித் தர என் தந்தைக்கு பட்ஜெட் பற்றாக்குறையாக இருந்ததாலும் என் ஆசை நிராசையாகி விட்டது. ஆயிரம் கலர் பிள்ளையார்கள் விற்பனைக்கு வந்தாலும் களிமண்ணில் வடித்த (ப்ளாக் & ஒயிட்) பிள்ளையார் தான் அபிஷேகத்திற்கும், பூஜைக்கும் வைத்து வழிபட சாஸ்திரப்படி சிறந்தது என ஒரே போடாகப் போட்டு, என்னை சமாதானப்படுத்திவிட்டனர் என் பெற்றோர்கள். ஆனால் வசதியுள்ள என் நண்பர்கள் விதவிதமான கலர் பிள்ளையார்களுடன் விளையாட வந்த போது என் மனம் மட்டும் வருந்தியது உண்டு.

ஒரு நாள் வினாயக சதுர்த்திக்கு என் மாமனார் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அது ஒரு குக்கிராமம். அருகில் வினாயகர் சிலை செய்து விற்கும் எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. அவ்வாறு எதுவும் வாங்கி வர வேண்டுமென்றால் பல மைல் தொலைவில் உள்ள தாலூகா பஜாருக்குப்போய் வரவேண்டுமாம். வினாயகர் பொம்மை இல்லாமல் எப்படி பூஜை செய்வீர்கள் என்று என் மனைவியிடம் வினா எழுப்பினேன். ‘குளத்திற்கு குளிக்கப் போயிருக்கும் உங்கள் மாமனார் வரும் போது களிமண்ணுடன் தான் வருவார். வந்ததும் அவரே ஜோராக பிள்ளையார் பிடித்து விடுவார்’ என்றாள்.

இதைக் கேட்டதும் எனக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய் விட்டது. பிள்ளையார் செய்யும் அச்சு உள்ளதா என அப்பாவித்தனமாக அவளிடம் கேட்டேன். அவள் களுக்கென்று சிரித்து விட்டாள். அதற்குள் என் மாமனார் தன் ஈர காசித் துண்டில் களிமண்ணுடன் வாசலில் வந்து தொப்பென்று அதைத் திண்ணையில் வீசிவிட்டு தானும் திண்ணையில் அமர்ந்தார். வேறு ஒரு வஸ்திரத்தில் அருகம்புல்லும் வெள்ளெருக்கம் பூக்களும் மாவிலையும் வேறு சில புஷ்பங்களும் பறித்து வந்திருந்தார். நான் அவர் பிள்ளையார் பிடிக்கப்போவதை ஆவலுடன் காண அவர் அருகில் அமரப்போனேன். "மாப்பிள்ளை, நீர் பல் துலக்கினீரா, ஸ்நானம் செய்தீரா, மடியா விழுப்பா என் மேலே பட்டுவிடாதீர்" என்று முறைத்துப் பார்த்தார். சிவப்பழமாக குளத்தில் குளித்து விட்டு, உடம்பு பூராவும் பட்டை பட்டையாக விபூதி குழைத்து இட்டுக் கொண்டு, ஈர வஸ்த்ரங்களுடன் பிள்ளையார் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்போகும் அவர் சொல்வதும் நியாயம்தான் என்று உணர்ந்த நான், குளியல் முடிக்கக் கொல்லைப்புற கிணற்றடிக்குச் சென்றேன். கொல்லைப்புறக் கோட்டை அடுப்பில், குப்பை சத்தைகளையும், மரக்குச்சிகளையும் திணித்து ஒரே புகையுடன் வெந்நீர் போட்டுக் கொண்டிருந்த என் மாமியார், என்னவளிடம் "மாப்பிள்ளை குளிக்க சூடாக ஒரு அடுக்கு வெந்நீர் கொண்டு போய் கொடு" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

குளித்து முடித்து விபூதிப் பட்டைகளுடன் நான் வாசலுக்கு வருவதற்குள், என் மாமனார் பூஜை செய்யத் தயாராகிவிட்டார். பிள்ளையாரைக் கண்டேன். அதில் ஒரு அழகு இல்லை. ஆனால் ஒரு வித அமைப்பு மட்டும் இருந்தது. சாத்துக்குடி அளவுக்கு ஒரு களிமண் உருண்டை. அது தான் தொந்தியாம். அதன் மேல் எலுமிச்சை அளவுக்கு ஒரு உருண்டை அது தான் முகமாம். அதன் மேல் தீபாவளிக் கலசம் போல் முக்கோண வடிவில் ஒரு களிமண் அமைப்பு அது தான் கிரீடமாம். தொந்திக்குக் கீழே இரு புறமும் ஓவல் ஷேப்பில் இரு உருண்டைகள். அவை இரண்டு கால்களாம். எலுமிச்சை உருண்டையிலிருந்து தொந்தி முடிவு வரை மண் புழு போல ஒரு களிமண் படரவிட்டிருந்தார். அது துதிக்கையாகத்தான் இருக்கவேண்டும். இரு புறமும் அதுபோல இரு கைகளுக்கு களிமண் அட்டாச்மெண்ட் கொடுத்திருந்தார். "என்ன மாமா, சொல்லியிருந்தால் வரும்போது நானே அழகாக ஒரு பிள்ளையார் பொம்மை வாங்கி வந்திருப்பேனே" என்றேன். என்னைப் பார்த்து முறைத்த அவர், "அனாவஸ்யமாக காசைக் களிமண்ணாக்கக் கூடாது. களிமண்ணில் நாமே வினாயகரை வடித்து பூஜிப்பதே சாஸ்திரப்படி சாலச் சிறந்தது" என்றார். என் அப்பாவே தேவலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

சமீபத்தில் என் ஐம்பத்தாறாவது வயதில், என் மகன் அழைப்பின் பேரில் துபாய் சென்று ஒரு மாதம் தங்க நேர்ந்தது. அதனிடையில் வினாயக சதுர்த்தி பண்டிகையும் வந்தது. நம் ஊராக இருந்தால் களிமண் பிள்ளையார் செய்து கொண்டு ஒரே அமர்க்களப்படும் என்று என் மகனிடன் முதல் நாள் சாயங்காலம் கூறினேன். ‘இங்கேயும் கிடைக்கும் அப்பா’ என்று சொல்லி, உடனே யாருக்கோ போன் செய்தான். "அப்படியா, ஓ.கே. என்ன விலையானாலும் பரவாயில்லை. அந்த ஒரே ஒரு பிள்ளையாரை யாருக்கும் கொடுத்து விடாதீர்கள், இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் நேரில் வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு, என்னையும் அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டான். நீண்ட பயணத்திற்குப் பின் கார் ஒரே இடத்தை பலமுறை சுற்றிச்சுற்றி வருவதுபோல எனக்குத் தோன்றியது. பிறகு தான் புரிந்தது கார் பார்க் செய்ய இடமில்லாமல் என் மகன் கஷ்டப்படுகிறான் என்று. ஒரு வழியாக காரை ஒரு இடத்தில் பார்க் செய்துவிட்டு, அங்குள்ள மிஷினில் பணம் போட்டு, அதற்கான டோக்கன் ஒன்றை காரின் முன்புறக் கண்ணாடியில் வெளியிலிருந்து பார்த்தால் தெரிவது போல வைத்துவிட்டு, ரிமோட் மூலம் கார் கண்ணாடிகளையும், கதவுகளையும் தானாகவே மூடச்செய்து விட்டு, ஒரு சந்தின் குறுக்கே நுழைந்து அந்தக் கடைக்குக் கூட்டி சென்றான்.

"பெருமாள் பிள்ளை பூக்கடை" என்று தமிழில் எழுதியிருந்தது. அருகிலேயே ஒரு சிவன் கோயில். அர்ச்சனை சாமான்கள் முதல் அனைத்து பூஜை சாமன்களும் விற்கும் அருமையான கடை அது. கடையில் உள்ள அனைவரும் தமிழில் பேசினர். தமிழ் நாட்டுக்கே வந்து விட்டது போல சந்தோஷப்பட்டேன். கடைக்காரர் வரவேற்றதும் என் மகன், தான் புக் செய்திருந்த பிள்ளையாரைக் கேட்டான். "பல பேர் வேண்டி விரும்பிக் கேட்டும் ஸ்டாக் தீர்ந்து விட்டது என்று சொல்லி உங்களுக்காகவே ரிஸர்வ் செய்து வைத்துவிட்டேன்" என்று சொல்லி அந்த மிகச் சிறிய களிமண் பிள்ளையாரை எடுத்துக் கொடுத்தார். என்ன விலை என்று என் மகனிடம் கேட்டேன். இருபது திர்ஹாம்தான் என்று சொன்னான். நம் ஊர் மதிப்பிற்கு 250 ரூபாய் என்று மனதுக்குள் கணக்குப்போட்டுக் கொண்டேன். தேங்காய், வாழைப்பழம், பூக்கள் முதலிய பூஜை சாமான்கள் அனைத்தும் வாங்கிக் கொண்டு, சிவன் கோவிலுக்குப் போய் சிவனையும் தரிஸித்து விட்டுக் காரில் வீடு வந்து சேர இரவு வெகு நேரம் ஆனது. "நம் ஊரில் ஐந்து அல்லது பத்து ரூபாய் விற்கும் களிமண் பிள்ளையார் இங்கு இவ்வளவு விலை விற்கிறது, அதுவும் அதை வாங்கி வர காருக்குப் பெட்ரோல் முதல் கணக்கிட்டால்..அப்பாடா" என்றேன்.

"நீ முதன் முதலில் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறாய். நாளைக்கு வினாயகர் பூஜை என் வீட்டில் செய்யப் போகிறாய். அந்த சந்தோஷத்திற்கு முன்னால் இந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை அப்பா. காசு கொடுத்தாலும் நமக்கு வேண்டிய பொருள் கிடைக்கிறதே! அதுவே பெரிய விஷயம். மேலும் நம் நாட்டிலிருந்து துபாய் வரை, ஆகாய விமானத்தில் பறந்து வந்துள்ள பிள்ளையார் அல்லவா இவர்? அதையெல்லாம் கணக்குப்பார்த்தால் நாம் கொடுத்துள்ளது மிகவும் சொற்பத் தொகையாகும்" என்றான்.

இவனின் இந்தப் பேச்சுகளைக் கேட்க இன்று என் தகப்பனாரும் இல்லை என் மாமனாரும் இல்லை. என் பேரனிடம் களிமண் பிள்ளையாரை பூஜையில் வைத்து புஷ்பங்களால் அலங்கரித்து காட்டி மகிழ்ந்தேன். பூஜை முடிந்ததும் உன்னிடம் தருகிறேன். நீ விளையாடலாம் என்றேன். "நோ…தாத்தா, ஐ டோண்ட் வாண்ட் திஸ். ஐ ஹாவ் ப்ளெண்டி ஆப் டாய்ஸ்" என்று சொல்லி தன்னுடைய விளையாட்டுச் சாமான்கள் உள்ள அறைக்குக் கூட்டிச் சென்றான். பல்வேறு வகையான கார்கள், விமானங்கள், கீ கொடுத்தால் ஓடும் பொம்மைகள், ஆடும் பொம்மைகள், விளக்கு எரியும் பொம்மைகள், ஒலி எழுப்பும் மிருக பொம்மைகள் எனக்காட்டி என்னை பிரமிக்கச் செய்தான். புதிதாக நேற்று அப்பா வாங்கி வந்தது என ஒரு பெரிய பார்ஸலைப் பிரித்தான். உள்ளே ஒரு ரோபோ பொம்மை – பலவிதமான வேலைகள் செய்யுமாம். அட்டைப் பெட்டியில் விலையைப் பார்த்தேன். எழு நூறு தர்ஹாம் என ஒட்டப்பட்டிருந்தது. நம்மூர் விலையில் எட்டாயிரமோ பத்தாயிரமோ இருக்கும். என்னுடைய ஏழு வயதில் கலர் பிள்ளையார் ஒன்றுக்கு ஆசைப்பட்டு அதுவும் நிராசையான எனக்கு என் பேரன் விளையாடும் பொம்மைகளைப் பார்த்து பிரமிப்பு ஏற்பட்டது. இந்தப் பேரனிடம் போய் களிமண் பிள்ளையாரை விளையாடத் தருகிறேன் என்று சொன்னோமே என மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டேன்.

காலம் மாற மாற காட்சிகளும், கலாசாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவை. தலைமுறை இடைவெளியால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நம் மனம் தயாராகவேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே.

*** 

About The Author

1 Comment

Comments are closed.