ஆண்டவனே கண்ணுறங்கு (2)

லாட்டரிக்குப் பத்து ரூபா
உண்டியலில் ஒத்தை ரூபா
ஆண்டவனே உன்னிடத்தில்
வேண்டுதலோ பலகோடி

எனக்கேநீ தாவென்று
எழுநூறு குரல்கேட்க
யாருக்காய்க் கொடுப்பாயோ
எப்பவும்போல் இருப்பாயோ

உண்டியலின் சில்லறைக்கு
உழைத்துத்தான் களைப்பாயோ
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு

***

கோழியா முட்டையான்ன
கேள்விக்கோ பதிலில்லை
அறிவியலில் சொன்னதிலும்
அவ்வளவாத் தெளிவில்லை

கணக்குக்கு எட்டவில்லை
கற்பனைக்குச் சிக்கவில்லை
இறந்தவனும் சொன்னதில்லை
இருப்பவனும் கண்டதில்லை

ஆத்திகனோ துதிக்கின்றான்
நாத்திகனோ சிரிக்கின்றான்
பார்த்தவனே இல்லாமல்
பலகாலம் வாழ்கின்றாய்

***

எனக்குள்ளே நீ இருக்க
உனக்குள்ளே யார் இருக்கா
உனக்குள்ளே நான் இருந்தா
எனக்குள்ளே யார் இருக்கா

பூமிக்கோ வயசிருக்கு
சூரியனின் வயசிருக்கு
உனக்குமொரு வயசிருக்கா
உசுருன்னு ஒண்ணுருக்கா

அத்தனைபேர் சொந்தத்தில்
அனுதினமும் திண்டாட
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு

***

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author