ஆண்டாள் !

சங்கத் தமிழ்மாலை என்றுபறை சாற்றினாள்
சங்கிடம் உரையாடினாள்
சக்கரத் தான் கமலக் கைத்தலம் பற்றவே
சபதமேற் கொண்ட பாவை

சிங்கத்தின் எழுச்சியைச் சித்திரம் போற்காட்டி
சிகரமாய் நின்ற கவிஞர்
சிற்றஞ்சிறுகாலே சிறுமிகள் நோன்பினை
செவ்வனே செயச்சொன்னவள்

வல்லவன் திருமலைப் பெருமானை வரச்சொல்லி
வான்மேகம் தூதாக்கினாள்
வடிவழகு நாச்சியார் கோதை ஆண்டாளை
வளர்த்தவர் பெரியாழ்வாராம்

வில்லிபுத்தூர் திரு வரங்கத்தைக் கைப்பற்றி
விண்ணளவு புகழ் கொண்டதாம்
வியக்கலாம் திருப்பாவை நாச்சியார் திருமொழியில்
வெல்தமிழின் உள்ளழகினை!

About The Author